கருவறையில் குடியிருத்தி
குருதிதனைப் பாலாக்கி
பெற்றெடுக்கும் காலம்வரை
தன்விருப்பம் பாராது
கருவளரக் கருத்துடனே
காத்திருக்கும் திருவடிவம்
உண்டென்றால் உலகினிலே
உண்மையிலே தாயன்றோ  !

குடியிருந்த  கோவிலதை
கூடவே  வைத்திருந்தும்
கோடிகொண்டு கோவில்கட்டி
குடமுழுக்கும் செய்கின்றோம்
கருவறையை தாங்கிநிற்கும்
கற்கோயில் நாடுகிறோம்
அருகிருக்கும் கோவிலாம்
அம்மாவை மறக்கலாமா  !

அன்னதானம்  செய்கின்றோம்
அறப்பணிகள் ஆற்றுகிறோம்
ஆத்ம  திருப்தியுடன்
அநேகம்பேர் செய்வதில்லை
தம்பெருமை தம்புகளை
தானதனில் காட்டுகிறார்
தாயவளைத் தாங்கிநிற்க
தானவரும் நினைப்பதில்லை    !

பெற்றவளைப்  பேணிடுவார்
பெரும்பேறு  பெற்றிடுவார்
நற்றவமே  தாயெனவே
நமக்குவந்து  வாய்த்துளது
இப்புவியில் எம்மருகில்
இருக்கின்ற கோவிலாம்
எம்தாயை என்னாளும்
இதயமதில் வைத்திடுவோம்      !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.