சு.குணேஸ்வரன்இப்பொழுதெல்லாம்
புனிதம் பற்றிப் பேசுகிறாய்
தூசுகளால் ஆன இந்த உலகு
தூ(ய்)மை நிறைந்ததுதான்

பட்டுப்போன மரக்கொட்டுக்கூட
உனக்குப் புனிதமென்றால்
எனக்கென்ன
இருந்து விட்டுப்போகட்டுமே!
குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல்
என் வாழ்வழித்து
புதிதுபுதிதாய் வரைகிறாயே
இதை என்னவென்பது?

முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும்
நாற்றத்தை மறைக்க
வாசனைத் திரவியம் பூசுவதும்
பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட
இருந்து விட்டுப்போகட்டும்.

 

தெப்புள்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை தீட்டாக இருக்கலாம்

உன் வீட்டுப் பூச்சாடியும்
நாய்க்குட்டியும்
உனக்குப் புனிதமென்றால்
என் பூர்வீகமும் நாமமும்
என்ன தூமைச் சீலையா?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.