கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -இலக்கிய நேசங்களே...
உங்கள்
இதயப் பூமியிலே
தூவப்பட்ட இலட்சிய விதைகள்
மானுடம் செழிப்பதற்காய்
தூவப்படட்டும்..!!
தேச பக்தர்கள் என்று இங்கே
திரிகின்ற-
போலி மனிதர்களை
உங்கள் பேனா இணங்காட்டட்டும்!!புதிய
மானுடச் செழிப்பிலே
மகிழ்ச்சி கொள்வோம்!!

எங்களுக்குள்-
எங்களோடு வாழும்
மானுடங்களின்
குறிக்கோளில்லாக்
கும்மாளங்களைக் கூட
நமது பேனாக்கள் எழுதி எழுதிக்
காட்டட்டும்...

பொறாமைத் தீ வைத்துப்
பொசுக்க நினைக்கின்ற
உங்களின் சிலரின்
எண்ணக் கருவூலங்களை
மண்ணுக்குள் புதையுங்கள்...

புதிய சமூகம் பூக்கட்டும்..
அங்கே-
மானுடப்பூக்கள் செழித்து மணக்கட்டும்..!!

எழுச்சிக் குரல் எழுப்ப
நினைக்கின்றோர்-
எங்களின் மத்தியிலே
இருக்கின்றார்களா???
இருக்கலாம்! அவர்கள்
வெறும் எழுத்துக்களோடு
இங்கே நின்றுவிட்டால்...

வருகின்ற எதிர்காலங்கள்
வறட்சிக்குள் வாடும்..
ஒரு-புதிய சகாப்தம்...ஜனனத்திலேயே
மரணவாயிலை நோக்கும்!!

ஓ!...பிரியங்களே...
நாங்கள் தேடுவது...

நல்ல எதிர் பார்ப்புக்கள்!!
நாங்கள் கேட்க நினைப்பது
நன்மையான வார்த்தைகளை
நாங்கள் பார்க்க எண்ணுவது
நல்ல நல்ல செயல்கள் தான்...

எத்தனையோ-ஆத்மாக்களின்
அழு குரல்களுக்கு
எங்கள் செவிகள் சாய்க்கப்படுகின்றன..!!
நாம் என்ன செய்தோம்?-ஆமாம்
நாம் என்ன செய்தோம்???

இன்னும் இன்னுமாய்
மடமைகள் மண்ணை ஆக்கிரமித்தால்
உங்கள் கரங்கள்
அதற்காய் போராட வேண்டும்..
ஓ...
நவீன புத்திரர்களே...
நாங்கள் சேர்வோம்!
நன்மை சேர்ப்போம்!

மானுடம் செழிக்க...
மனங்களை-
ஆரோக்கியமாக வளர்த்து
வளங் காண்போம்...
எழுதி எழுதியே
காகிதங்களைச் சேர்த்து விடுவது போல..
இங்கே,
எழுதப்பட்டவைகளையும்
செயலிலே காட்ட...
ப்ரிய நேசங்களே..
வருக!!வருக!!

இன்றைய-
இலக்கியங்களின் மூலமாய்
யதார்த்தங்களைத்
தரிசிக்கும் நாம்-
நிச்சயமாய்
மடமைகளுக்கு விலங்கிடவேண்டும்..

மானுடச் செழிப்பே
உங்கள் குரலாகட்டும்...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.