மே 2013 கவிதைகள்!

நவீன தோட்டிகள்!

-  விஜய நந்தன பெரேரா; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -

'இங்கும் அதே தமிழன்தான்
அங்கும் இதே தமிழன்தான்'
கூரிய பார்வைகளும்
குற்றச்சாட்டுகளும்
குத்தும் ஊசிமுனைகளும்
முடிவற்றவை

தலைக்கு மேலே சூரியனும்
நோயுற்ற தீக் காற்றும்
கொதிக்கச் செய்கிறது குருதியை.
பரம்பரை வழித் திண்ணையும்
செந்தணலாய்ச் சுடுகிறது.

காகங்கள் வரிசையாக எச்சமிடுகின்றன
எச்சங்களை விற்றும் பிழைப்பவர்கள்
'இங்கும் அதே தமிழன்தான்
அங்கும் இதே தமிழன்தான்'
என்கின்றனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


எலிபொரிக்கும் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்.

- கவிஞர் அஸ்மின் -

மே 2013 கவிதைகள்!

வணக்கம்
இது எலிபொரிக்கும்
கூட்டுத்தாபனத்தின் செய்திகள்.
செய்தி ஆசிரியர்
பெருச்சாளி
... செய்திகள் வாசிப்பது
சு.சுண்டெலி.....

முதலில்
முதன்மை செய்திகள்.

விலங்குகளுக்கு இன்று
விடுமுறை நாளாகும்.

அடிமை விலங்குகளுக்கு
ஆளும் விலங்குகள்
விடுதலை வழங்கி
விருந்தளித்து
விருது வழங்கும்
விசேட நிகழ்வு
இன்று காலை பத்துமணியளவில்
சிங்க ராஜவனத்தில்
சிறப்பாக இடம்பெற்றது.

மாடுகளுக்கு
மாலைபோட்டு
மாநாடு நடத்த
கசாப்புக் கடைக்காரர்கள்
கைகோர்க்கும் நிகழ்வென்று
இந்நிகழ்வை
நீர்யாணைகள் விசனித்தாலும்

மான்கள்தான் இக்காட்டின்
மன்னர்கள் என்று
சிங்கமும் புலியும்
சிறப்புரையாற்றி
சிலாகித்தன
இதனைக்கேட்ட
கழுதைகள் கைதட்டின.

இன்றைய மேதினத்தில்
அப்பாவி
ஆடுகளுக்கு
அநீதி நடப்பதாகும்
இடையர்கள் கட்டிவைத்து
அவைகளது
சுதந்திரத்தை பறிப்பதாக கூறி
ஓநாய்கள்
ஊளையிட்டு
ஊர்வலமாய் சென்றன...

மேலும்
இன்றைய நிகழ்வில்
மாங்காய்களின்
மறுமலர்ச்சி நிதிக்காக
குரங்குகளின் குத்தாட்டமும்
மாம்பிஞ்சுகளுக்காய்
வண்டுகள் வழங்கிய
இன்னிசை கச்சேரியும்
இடம்பெற்றது.

'பாட்டிகளிடம் இருந்து
வடைகளை பாதுகாப்போம்'
என்ற தொனியில்
காகம் கத்தித் திரிய....

'காகங்களிடம் இருந்து
வடைகளை காப்பாற்றுவோம்'
என்ற வாசகத்தை
ஏந்திப்பிடித்தபடி
நரிகள் சேர்ந்து
நடைபவனி சென்றதாகவும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்து
வெளி நாட்டு
செய்திகள்

வளைகுடாவில்
அலைகளின்
ஆபத்தில் இருந்து
மீன்களை மீட்பதற்காய்
வலைகளும் தோணிகளும்
நடத்திய
உண்ணாவிரதம்
இன்று இரண்டாவது நாளாகவும்
வெற்றிகரமாக நடைபெற்றது.

கோழிக்குஞ்சுகளுக்கான
விசேட காப்புறுதி திட்டத்தை
பருந்துகள்
பாராளுமன்றத்தில்
நேற்று
நிறைவேற்றியுள்ளன.

இதற்கு கடுவன் பூனைகளும்
கீரிப்பிள்ளைகளும்
கடந்தகால கசப்புணர்வை மறந்து
இணைந்து
வாக்களித்ததாக தெரிவிக்கபடுகிறது.

இத்தோடு
இன்றைய செய்திகள்
நிறைவு பெறுகின்றன..

அடுத்த செய்தி
அடுத்த வருடம்
மே மாதம்
முதலாம் திகதி
வழமைபோல் இடம்பெறும்
வணக்கம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஓட்டும் வேட்டும்      

- வே.ம.அருச்சுணன்  -                                                 
                                               
மே 2013 கவிதைகள்!

முருகா.....!
தமிழ்க்கடவுளே......!
திக்குத் தெரியாமல் தவிக்கிறோமே
பத்துமலையில் வீற்றிருக்கும் முருகனே
விரைவில் மனமிறங்கி வாருமையா
எங்களுக்கு நல்லறிவைத் தாருமையா........!
 
ஐம்பத்தாறு ஆண்டுகள் மாற்றானை
நம்பி  கெட்டதுதான் மிச்சம்
நம்பிக்கை.....நம்பிக்கை
என்றார் நாட்டுப் பிரதமர்.......!
 
இந்த தேர்தல் மூலம்
இந்தியர் வாழ்வு சிறந்திடுமென்றே
நம்பிக்கை வைத்தோம்
இன்பமாய் அன்பளிப்புகள் பெற்றோம்
வயிறு முட்ட உண்டு மகிழ்ந்தோம்.......!
 
வேட்பாளர் பட்டியலில்
சுல்கிப்லி தலை நிமிர்ந்து நிற்கிறான்
அருகில் பிரதமர் முகம் மலர்ந்து நிற்கிறார்
துரோகிகளுக்கு இத்தனை  முகங்களா........?
தமிழ் இனத்தையும் சமயத்தையும்
கொச்சைப் படுத்தியவனுக்குச்  சிம்மாசனம்.......!
 
நம்பிக்கெட்டது போதும்
ஓரணியில் திரண்டிடுவோம்
நாம் யாரென்பதைப் புரிய வைப்போம்
நல்லாட்சி மலர்வதற்கு
துணிந்து நிற்போம்
யாருக்கும் சோரம் போவாமல்
சத்திய வாக்கைச் சரியாகச் செலுத்திடுவோம்......!
 
நம் சந்ததி அமைதியில்
வாழ்வதற்குப் போடுவோம் ஓட்டு
வஞ்சகருக்கு  வைப்போம் வேட்டு......!
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


நாம் இந்நாட்டு மன்னர்கள்    
              
-  வே.ம.அருச்சுணன் -
 
மே 2013 கவிதைகள்!

வரலாற்றைத் தொலைத்துவிட்டோம்
வாழ்ந்ததை மறந்துவிட்டோம்
ஏமாளியாய் இருந்துவிட்டோம்
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
பொறுப்பற்றத்  தலைவர்களால்
படுகுழியில் தள்ளப்பட்டோம்.....!
 
கல்வி பெறத்தவறியதால்
முட்டாளாய் ஆகிவிட்டோம்
பல காலம் இருளிலே இருந்ததாலே
கருத்துக் குருடர்களாய் வாழ்ந்து விட்டோம்
படுமோசமாய் வாழ்வில் வீழ்ந்து விட்டோம்
தன்னிலை மறந்து
உண்ணும் சோற்றிலே மண்ணை
வாரிப் போட்டுக் கொண்டோம்......!
 
வஞ்சகத் தலைவர்களால்
வாழ்வைத் தொலைத்து விட்டோம்
சந்ததிகள் கருகிக் காணாமல் போய்விட்டோம்
நயவஞ்சகர்களின் கால் பிடித்து ஏமாந்து விட்டோம்
பிறரிடம் குட்டு வாங்கினோம் 
பிறர் ஏளனப் பேச்சால் உடல் குறுகினோம்
போதும் போதும் போதும்
இனி ஏமாந்ததுப் போதும்.....!
 
இனி மனிதனாய் வாழக்கற்றுக் கொள்
தலைவன் உனக்கு  இனி எவருமில்லை
உனக்கு நீயே தலைவன்
எவருக்கும் நீ அடிமையில்லை
சுயமாய்  வாழ உறுதிக்கொள்
வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றுக் கொள்
சேர்ந்து வாழக் கற்றுக்கொள்
அனுபவம் உனக்குச் செங்கோல்
அது வாழ்வு தரும் மந்திரக் கோல்.....!
 
நல்லாட்சி  மலர்வதற்கு
சொல்லாட்சி தந்திடுக
 
நீதியான ஆட்சிதனைத்
துணிவாய்த் தேர்ந்திடுக
கபட நாடகம் போடுவோரை
வேரோடுச் சாய்த்திடு……!
 
அரை நூற்றாண்டு
கண்ணீரில் மிதந்தது போதும்
தமிழர்கள் இரண்டும் கெட்டவர்கள் என்ற
கெட்டப் பெயரைப் போக்கி
அறிவார்ந்த சமூகமாக
ஓட்டு மூலம் காட்டிடுக.....!
 
பொன்னான ஆட்சிக்குப்  போடு ஓட்டு
பொல்லாத  ஆட்சிக்கு  வைத்திடு வேட்டு
நம்மை கிள்ளுக்கீரையாக எண்ணுவோரை 
புறம் தள்ளுவோம்
வஞ்ச எண்ணத்தை விதைக்கும்
மகா துரோகிகளைத் தூக்கி எறிவோம்
மலேசிய மக்களின் ஒற்றுமைக்கு
குந்தகம் விளைவிக்கும்
ஊழல் பேர்வழிகளைக் களையெடுப்போம்.....!
 
நாட்டின் வளங்களைக் கையப்படுத்தி
இனங்களிடையே பிரிவை ஊட்டும்
சுயநலப் பேர்வழிகளை ஒழித்திடுவோம்
நம் நாடு அமைதிப் பூங்காவாக
மீண்டும் உருமாற்றம் பெறுவதற்கு
அணிதிரள்வோம் அரக்கர்களை அழிப்போம்.....!
 
விவேகமாக வாக்களிப்போம்
வளமான நாட்டை உருவாக்குவோம்
இனியாவது தமிழர்கள் இங்கு
இனமானத்துடன் வாழ்வோம்......!  

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.