எலி பொறியை மழையில் கிடத்திவிட்டது சட்டென  ஞாபகத்திற்கு வந்தது கிருஷ்ணனுக்கு .மழை சோ என்ற சப்தத்துடன் நீ கோடுகளாய் கீழே இறங்கிக் கொண்டிருந்தது .நெடு நேரமாய் மழை பெய்து கொண்டிருப்பதாக தோன்றியது இவ்வளவு நேரம் மழை பெய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று ஞாபகம் வந்தது .

எலி பொறியில் ஏதோ கிடப்பதே அவன் சலனத்தின் மூலம் அவன் அறிந்து கொண்டான்.கருவாடு ஒன்றை குத்தி வைத்தது சரியாகத்தான் பயன்பட்டது என்று நினைத்தான். வாழைப்பழம் இருக்கும் வரைக்கும் மசியாத எலி கருவாட்டுக்கு சரண் அடைந்து விட்டது. அதை எப்படி அடித்துக் கொல்வது என்பது அவனுடைய ஞாபகத்தில் வரவில்லை .

அம்மா சாக்குல போட்டு நாலு சாத்து சாத்து  என்றாள்.. அது  சும்மாவா இருக்கு டப்பா லிருந்து எல்லா பாத்திரத்தையும் ஓட்டை போடுது. பிளாஸ்டிக் டப்பாவேச் சொல்லவே வேண்டாம் . துணி ஒன்னும் வெளியே கிடக்கக்கூடாது. அதை குறிவைக்கிறது.கடுச்சு சேதம் பண்ணுது. இது மாதிரி எத்தனை இருக்கும்

  அப்படியே கொண்டு போய் வாசல் முற்றத்தில் வைத்தபோது மேகம் கருத்துத் தெரிந்தது. மழை வருமா என்பது சந்தேகமாக இருந்தது .

ஆனால் பத்து நிமிடங்களில் மேகங்கள் திரண்டு கொண்டது போல மழை பொழிய ஆரம்பித்தது. தொடர்ந்த மழை அவனை உடம்பை ஏதாவது ஸ்சொட்டர் போட்டு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று ஞாபகம் ஊட்டியது. அவன் உடம்பின்  கருப்பு நிறத்திற்கு எந்த ஸ்சொட்டர் போட்டாலும் அது ஒத்து வராது .கொஞ்சம் லைட்டான கலரிலும் இருக்க ஆசைப்பட்டிருக்கிறான்.  அப்படித்தான் அவனின் கருத்த உடம்புக்கு ஏதாவது இறுக்கத்தை சேர்க்கிற மாதிரி  இருந்தது. இந்த மழையில் தவிர்த்து விட முடியவில்லை பச்சை நிறத்தில் இருந்த்தை எடுத்து மாட்டிக்கொண்டான். அது இதயத்திற்கு அருகில் ஒரு ரோஜா பூவை சிவப்பு நிறத்தில் கொண்டு வந்திருந்தது. அந்த எம்பிராய்டரி அவனுக்கு பிடித்திருந்தது .பக்கத்தில்கூட எம்பிராய்டரி  சார்ந்து இயந்திரங்கள் இருப்பதை அவன் பார்த்திருக்கிறான் .ஆனால் அவை எல்லாம் ஒரே நொடியில் ஆயிரக்கணக்கான பூக்களை பூக்க வைத்து விடுகின்றன. நூற்றுக்கணக்கான மலர்களைத் துளிர்க்கச் செய்துவிடுகின்றன. ஆச்சரியமாக இருக்கிறது அவற்றிலிருந்து சாயப்பட்டறை வாசம் கிளம்புவதாக தான் அவனுக்கு தோன்றியது. ஆனாலும் அந்த பூக்கள் உடைய வாசனையை அவனால் மறுக்க முடியவில்லை .அதேபோலத்தான் வாசனை  சார்ந்த ஷர்மிலி  எண்ணங்களும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. வெளியில் போகிறபோது எங்காவது அவள் தட்டுப்பட்டு விடுகிறாள்.

  ஒரு பெண் ஆட்டோ ஓட்டுவது என்பது பலருக்கு அதிசயமாகத்தான் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் அதுவும் அவளின் தெளிவான முகத்தில் தென்படும் வெளிச்சமும் இன்னும் கூர்ந்து பார்க்க செய்திருக்கிறது. எங்காவது பார்க்கிறபோது போட்டோகிராபர் என்றபடி ஷர்மிலி அழைப்பாள் .அவனும் ஏதாவது வார்த்தைகள் பேசி கொண்டிருப்பான் .அவள் முகம் ஏனோ அவனை அலைக்கழித்துக் கொண்டிருப்பது அவளுக்கு சங்கடம் அளிக்க வழிசெய்தது.

அன்று அவள் வாகன நிறுத்துமிடத்தில் இருந்தபோது தனி அழகுடன் இருப்பதாக தோன்றியது அவனுக்கு. .சம்பந்தமில்லாமல் தான் அந்த மஞ்சள் கலர் சேலை உடுத்தி இருந்தா.ள் ஆனால் அந்த மஞ்சள் நிறத்திற்கும் உடம்பிற்கும் அவளை முழு உருவத்தையும் ஒரு பூரண நிலவுக்கு ஒத்ததாக கொண்டு வந்து நிறுத்தி இருந்தது .அவன் கொஞ்சம் தூரத்தில் இருந்து பார்த்த போது ஆட்டோவின் முன்பகுதியில் அவள் நின்றிருப்பதை ஒரு நல்ல கோணம் ஆக்கிக் கொண்டான். பக்கத்தில் போய் ஆட்டோவுடன் சேர்ந்து ஒரு படம் பிடிக்கலாமா என்று கேட்டான்.

ஏதாவது பத்திரிகைக்குக் கொடுக்க போறியா. இன்னிக்கு என்ன சண்டை எல்லாம் ஒன்னும் வரலையே .

அதெல்லாம் ஒன்னும் இல்ல இந்த புடவையும் இந்த ஆட்டோவும் ரொம்ப வித்தியாசமா காண்ட்ராஸ்ட் இருந்தது. அதுதான் ஒரு படம் பிடிக்கலாம் சரியா

பிடிச்சுக்கோ.

அவன் அதை அவளிடம் கூடக் காட்டினான்அழகாகத்தான் இருந்தது

 என்ன பண்ண போற

.ஒன்னும் பண்ணப் போறது இல்ல

சரி எனக்கு ரெண்டு காப்பி கொடுத்துடு .காசு கொடுத்தர்ரன்.

 அதனாலென்ன

 அவளின் அந்த புகைப்படம் ஒன்று அவன்வீட்டில் தங்கிவிட்டது

ஒருநாள் எதேச்சையாக ராஜஸ்தானி சப்பாத்தி கடையில் அவள் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள் . அந்த பக்கம் போன அவன் அவளைப் பார்த்ததும் உட்கார்ந்துவிட்டான்.

 ராஜஸ்தான் காரங்க கடை போட்டு இருக்காங்க .ஆமா இந்த பாம்பே வடக்கத்தியக்காரங்க  இந்த ஊருக்கு நிறைய வந்துட்டாங்க. அவங்க சாப்பாடு தனியே வேண்டி இருக்கு. அதுக்குன்னு ஆரம்பிச்சுட்டாங்க .வித்தியாசமா இருக்கு .கவனிச்சியா கிருஷ்ணா

ஆமாம் ஏதோ கிச்சடி என்று சொல்லிவிட்டு கெட்டியா  இல்லாமல் ஒரு உப்பூமா போடுறாங்க. சப்பாத்திக்கு  நாலு வகை காய்கறிகள் உருளைக் கிழங்கு கூட. ரொம்ப விலை கம்மியா இருக்கு. நிறைய பேர் வர்றாங்க.

 நீங்க சமைக்கறது  இல்லையா

நான் எங்க சமைக்கிறேன் ஏதாவது பொன்னு கூட சேர்ந்து ரூம்ல தங்கரது இதுல சமையலுக்கு எங்கே நேரம் கிடைக்குது. சமைக்கலாம் அதுதான் உடம்பைக் காப்பாத்தும் .

ஆமா அதை பண்ணுங்க உங்க சமையல் டேஸ்டை நானும் கூட ருசிச்சிப் பார்க்கணும்

அப்படியா சரி இப்போ இந்த ராஜஸ்தானி சப்பாத்தியை ருஷி பாருங்க

சப்பாத்தி வைத்தபோது முதலிலேயே ஒரு கரண்டி கேசரி வைத்துவிட்டார்கள். உருளைக்கிழங்கு மசியல் கீரை குழம்பு துவரம் பருப்பும் என்று தனித்தனியாக தந்தார்கள் .மிகுந்த பசி என்று இல்லாவிட்டாலும் கூட அது அவனின் பசியைக் கிளப்பிவிட்டது. மெல்லச் சாப்பிட ஆரம்பித்தான்

சப்பாத்தி எல்லாம் நல்லா பண்ணுவீங்களா

 பழகிப்போச்சு ஒரு ஓட்டலில் வேலை செய்துட்டு இருந்தப்போ இதெல்லாம் பண்ணியிருக்கேன். எவ்வளவு ஹோட்டல்ல வேலை பாத்தாச்சு. முதல்ல டேபிள் தொடைக்கிற மாதிரி ஒரு ஆறு மாசம் இருந்தேன். அப்புறம் சப்பாத்தி உருட்ட .அது ஒரு ஆறு மாசம் ..இப்படி மாறி மாறி பண்ணிட்டு ..என்ன சமையல் ..எல்லாம் ஒன்னும் விட்டு போகல

 அவள் பல சமயங்களில் பின்னலாடை கடைகளில் சரக்குகளை எடுத்துக் கொண்டு போகிறதைக் கண்டிருக்கிறான். பெரிய பெரிய துணிகளையும் ரோல்களையும்  எடுத்துக்கொண்டு போகிறவளாக இருந்திருக்கிறாள்..

அதெல்லாம் ரொம்ப எடையாக இருக்கும் போல. அத எப்படி தூக்க

அதுக்கு தனி ஆள் இருக்கா .அதனால் நானே தூக்கறேன் ஏதோ அதுக்கு போய் ஆள் தேட முடியுமா இங்கேதான் மாட்டு வண்டிக்காரர்கள் நிறைய இருக்காங்க கூட வருவாங்க ஒரு உதவி பண்ணுனா பண்ணுவாங்க

 மாட்டு வண்டிக்காரர் சம்பாதிக்கிறது கூட ஒரு போட்டோகிராபர் சம்பாதிக்க முடியாது .அப்படி எங்க பார்த்தாலும் பனியன் கம்பெனிகள் மாட்டு வண்டிகள் அதுக்கு ரொம்ப யூஸ் ஆகுது . கொஞ்ச நாளா இந்த சின்ன சின்ன டூவீலர்க வந்து இருக்கு. ஆனா என்னதான் இருந்தாலும் ஆட்டோக்காரன் கொள்ளை கொள்ள தான் .

எனக்கும் குறைக்க ஆசை ஆனா மத்தவங்க எல்லாம் அப்படியே அனுமதிக்கவில்லை .சத்தம் போடுகிறார்கள் , கூலி  கம்மியா வாங்காத அப்படின்னு  சொல்லிட்டு இருக்காங்க. .அதனால்தான் அப்படியே வாங்குறன்

 திருமணம் ஒன்றுக்கு சென்ற வாரம் சென்று இருந்தபோது அவன் வீடியோ எடுப்பவருக்கு உதவி செய்பவராக இருந்தான். வீடியோ மிகுந்த செலவு தரக்கூடிய விஷயமாக தான் இருந்தது. ஆனாலும் பலரும் விரும்பி இருந்தார்கள். போட்டோ புடிக்க கேட்டபோது அதற்கு இன்னொரு ஆள் வைத்திருக்கம். இந்த கல்யாண வீடியோக்களை பிடிக்கிறது உதவி பண்றது இதற்காக வாங்க .அடுத்த கல்யாணத்துக்கு போட்டோவுக்குப் பாக்கலாம்

சரி சார்..சார்

அவர் காமராஜர் சாலையில் கம்பன்  பெயரில் ஒரு பெரிய ஸ்டூடியோ வைத்திருந்தார். நான்கைந்து பேரை வேலைக்கு வைத்து இருந்தார். திருமண சமயங்களில் இப்படித்தான் ஆட்களை அனுப்பி கொண்டிருந்தார். அதுபோன்ற ஸ்டுடியோக்கள் எல்லாம் வைப்பதற்கு தன்னால் இயலாது என்பதைத் தான் அவனும் யோசித்து பார்த்திருக்கிறான். ஸ்டுடியோ வைத்தால் பாஸ்போர்ட் சைஸ் படங்களிலேயே நிறைய வேலை இருக்கும் .ஆனால் இப்படி கிடைக்கின்ற வேலையில்  வருமானம் குறைவுதான் .பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இருக்கிற வேலையை ஸ்டுடியோ இல்லாததால் தவிர்த்து வந்தான் .அதற்கு நல்ல; ஸ்டுடியோ வேண்டும்..கல்யாண வீடுகளில் செல்கிறபோது நடமாடும் பெண்களின் அழகும் வனப்பும் அவனைச் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது எப்படி அழகான உடையுடனும் கலகலப்பாயும்  தெளிவாக இவர்களால் நடமாட முடிகிறது என்று ஆச்சரியப்பட்டு போயிருக்கிறான்.அந்த ஸ்டியோவிலிருக்கிற டார்க் ரூம் பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்க உதவியிருக்கிறது என்று பல கிசுகிசுப்புகள் இருந்தன.

 அவனும் தன் திருமணம் பற்றி அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிக்கொண்டிருந்தான் .அம்மா பல இடங்களில் பிரஸ்தாபித்து சென்று பார்த்திருந்தாள்.  எதுவுமே அமையவில்லை அது அவனுக்கு உறுத்தலாக இருந்தது. தன் உடம்பின் நிறமா. தன்னுடைய நிரந்தரமில்லாத தொழிலா என்று தன்னை இப்படி அடக்கி வைத்திருக்கிறது என்பதை அவனால் தீர்மானிக்க முடியவில்லை க.ல்யாணத்திற்கு போக விருப்பம் இல்லாமல் ஆகிற மாதிரி அந்த மாதிரி சங்கடங்கள் அவனுக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஆனால் வருமானம் என்பதற்காகத்தான் அவன் கல்யாணத்திற்கு செல்ல வேண்டி இருந்தது அவனின் சித்தப்பா ஒருவருக்கு திருமணம் தாமதமாக தான்  நடந்த்து. வயது  ஆனாலும் அவன் அப்பா கவனிக்கவில்லை என்று ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார் பனியன் கம்பெனிக்கு போகிறவட் சித்தப்பா, .இரவுகளில் குடித்துவிட்டு தாமதமாக வருவார் எங்காவது உட்கார்ந்து நேரத்தை போக்கி விட்டு வீட்டுக்கு வருவதாக இருந்தார். .நான்  கையளவு போதுமான  அளவு சம்பதிக்கிறேன்.  யாரும் கண்டுக்க மாட்டாங்க .என்ன வேணும்  இந்த வயசு ..எந்த வயசு அவனின் அலைச்சலும்  குடியும் அதிகமாகிவிடும் என்று தெரிந்த போது அப்பா அவருக்கு திருமணம் வைத்துவிட்டு செய்து வைத்தார்.

அப்படித்தான் நானும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ற சிக்கல் அவனுக்கு இருந்தது. அதெல்லாம் சரி என்று அவளுக்கு படவில்லை ஆனாலும் அம்மா விசனப் பட்டு ஏதாவது வார்த்தைகள் சொல்லுவது அவளின் காதுகளில் கேட்டுக் கொண்டுதான் இருந்தன.

 நீயே ஏதாவது பார்த்து முடிவு பண்ணிக்கோ .நாங்க பார்க்க முடியுமான்னு தெரியலே அமையலே

 பரவாயில்லை அப்படியே அந்த முடிவுக்கு வந்துட்டீங்களா அம்மா ,

இல்ல அதையும் சொல்லி வைக்கிறேன் எங்களை நம்பி இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டாள். அந்த வார்த்தைகள் அவன் பண்ணவேண்டிய தீர்மானங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தன

மழையின் வேகம் குறைந்து கொண்டிருந்தது சற்று நேரத்தில் நின்றுவிடும் இன்றைக்கு எந்த வேலையும் இல்லாமல் இருந்தால் கூட தொலைபேசிநிலையம் பக்கம் சென்றால் யாரையாவதுசந்திக்கலாம். ஏதாவது திருமணத்திற்கு வேறு விஷயங்களுக்கும் யாராவது ஒரு வார்த்தை சொல்லக்கூடும் .அந்த வார்த்தையை பிடித்துக் கொண்டு மேலே ஏறி ஒரு நாள் வேலையை வாங்கிவிடலாம். அதுதான் அவனுடைய திட்டமாக எப்போதும் இருந்திருக்கிறது

மழை மெல்ல நின்றபோது அவன் எலிப்பொறி பெட்டியின் அருகில் சென்றான் உள்ளே அந்த எலி நிம்மதியாக உடம்பைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்று தான் நினைத்தான்  சிறு குச்சியை எடுத்து அதை குத்தி பார்த்தான். அது செத்து விட்டது தெரிந்தது தொடர்ந்த மழையில் அதைக் கடத்தியது அதன் உயிரைப் போக்கி விட்டது போலிருந்தது

என்ன சித்தப்பா..  .. உயிர் போய் கெடக்குது பாரு .  டக்குனு போயிடுச்சு போல சரி எங்க தூக்கி போடுவது .

அந்த டிச்சில போயி போட்டுரு. அதுபாட்டுக்கு  மழையிலெ போயிடும்.

வீசிப் போடலாமா

 போடலாம் பக்கத்தில் இருக்கும்  நொய்யல்லே  பார்த்தால் ஒரே சாயமாப் போகுதுப்பா ..போகுது இந்த ஒரு எலி என்ன ஆகப்போகுது போயி போட்டுரு

நொய்யல் ஆறு இருக்கிறதுக்கு இதுதான் பிரயோஜனமாக இருக்குமோ. முந்தி நிறைய நேரம் அது  பிரயோஜனமா இருந்தது.இப்போ ஒன்றுமில்லாமல் சாக்கடையா போச்சு என்றாள்  அம்மா, எலி மழையில் நனைந்துச் செத்துப் போனது போல அவன் மனதில் அவ்வப்போது கிளம்பும் காம கிளர்ச்சி அழிந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான் அவன்.

காமம் என்பதும் எலிப்பொறி என்று சொல்லிக்கொண்டான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.