நவஜோதி ஜோகரட்னம்., லண்டன். 'நாங்கள் லண்டனுக்கு கப்பலால்தான் பயணம் செய்து வந்தோம். கறிக்குப் போடுகிற மிளகாய்த்தூள், சமைக்கிறதுக்கு கருவாடு, கோப்பி போன்ற  சாமான்களை யாழ்ப்பாணத்திலிருந்துதான் கொண்டு வருவோம். அப்படிக் கொண்டு வந்தால்தான் எங்கட சாப்பாட்டை கொஞ்சம் சுவைபடச் சாப்பிடலாம். இலங்கையிலிருந்து மேற்படிப்புக்கென்று வருகிறவர்கள் எல்லோரும்; கட்டிக் காவிக் கொண்டுதான் வருவோம். யாழ்ப்பாணத்தை இறக்குமதி செய்தது போலல்லவோ இப்போது லண்டனில் எல்லாப் பொருட்களும் இருக்குது.  

என்னுடைய பிள்ளைகள் லண்டனில் படித்துப் பட்டம் பெற்றார்கள். ஆனால் திருமணம் என்பதில் நாட்டம் கொள்ளாது இருந்துவிட்டார்கள். இப்ப துயர உணர்வில் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். திருமணத்தை விரும்பாது சுதந்திரமாக வாழவேண்டும்  என்று தனிமையில் வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களில் மோகங்கொண்டு கல்யாணம் செய்தவர்களும் உண்டு. சிலர் சிறப்பாக இருக்கிறார்கள். சிலரின் வாழ்க்கை இடையில் முறிந்தும், சீர்கெட்டுப்போயும்; இருக்குது. நவீன உலகில் திருமண வாழ்வும் புதுப்புது உருவம் பெற்றுக்கொண்டுதான் வருகின்றது. என்ன இருந்தாலும் என்ர பிள்ளைகள் தனித்து வாழ்வது என் சிந்தனையை எந்த நேரமும் அரித்துக்கொண்டுதான்; இருக்குது’ என்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்ரி எப்போதும் தான் படிக்க வந்த பெருமையையும்;, தனது பிள்ளைகளின் கவலையையும் கூறிக்;கொண்டே இருப்பார்.

ஷாலினியுடன் அன்ரியின்; ஆதங்கத்தைக் கதைத்துக் கொண்டிருந்தேன். திருமணங்கள் பற்றித் திரும்பியது பேச்சு.

இலங்கையில் பெற்றோர் விருப்பத்தின்படி திருமணம் முடித்து வந்தவள் ஷாலினி. லண்டனில் பிறந்து வளர்ந்தவர்தான் மாப்பிள்ளை. தற்போது ஷாலினி லண்டனில் தனியார் வைத்தியசாலையில் தாதியாக வேலை பார்க்கிறாள். பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டும் இருக்கின்றாள் ஷாலினி.

‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிர்ச்சயிக்கப்படுகின்றன’ என்று எமது முன்னோர்கள் கூறியதை சொன்னபோது ஷாலினி பக்கென்று சிரித்தாள்.  

‘ஏன் சிர்க்கிறீர்கள் ஷாலினி?’ 

‘எனக்கும் திருமணம் சொர்க்கத்தில் இப்படிதான் என்று எழுதப்பட்டு இருந்திருக்கிறது போல் தெரிகிறது’

ஷாலினி அன்பே வடிவம் கொண்ட இளம் தாதியாகப் வவுனியா ஆஸ்;ப்பத்திரியில் பணிபுரிந்தவள். அவளின் மகிழ்வான காலங்கள், அவளைப் பாராட்டிய நிகழ்ச்சிகள் எல்லாமே நேற்று நடந்தது போல் இருக்கிறது.

‘பிள்ளை நல்ல ஒரு சம்பந்தம் லண்டனில் இருந்து வந்திருக்கிறது. எம்மைப்போன்று கத்தோலிக்க சமயமாம். லண்டனில் நல்ல வேலை செய்கின்றாராம். அந்தப் பையனின் தந்தையும் நல்ல உத்தியோகத்தில்தான் இருக்கிறாராம்;. அத்தோடு நல்ல இறை பக்தியுள்ள குடும்பமாம். ஞாயிறு பூசைகளுக்கு தவறாமல் சென்று வருபவர்களாம். அத்தோடு சோலி சுரட்டு எதுவுமின்றி தாமும் தமது குடும்பமும் என்று வாழ்பவர்களாம் பிள்ளை. லண்டனிலுள்ள குருவானவர் ஒருவர்தான் இத்திருமண ஒழுங்குகளைச் செய்கின்றார். நீயும் இங்கு படித்து தாதியாகப்பணி புரிந்து கொண்டுதானே இருக்கின்றாய் பிள்ளை. உனக்கும் திருமணம் செய்யும் வயது வந்து விட்டதுதானேயம்மா! குடும்பத்தில் மூத்தபிள்ளை கொஞ்சம் தலையெடுத்தால்தானே உனக்குப் பின்னால் இருக்கிற தம்பி தங்கச்சியின் எதிர்காலம் நன்றாக அமையும்’ தான் பணியாற்றும் ஆசிரியப்பாணியில் மகள் ஷாலினிக்கு விளக்குகின்றாள் அம்மா.

‘லண்டனில் பிறந்து வளர்ந்தவர் என்கிறீர்கள் அம்மா. அவர் என்ன தமிழ் கதைக்கமாட்டார் தானே! அப்போ எப்படித் திருமணம் செய்வது?’

ஷாலினியின்; வீட்டைச் சுற்றியுள்ள அழகிய பூக்களின் மெலிந்த குமுறல் ஆழ்ந்துகொண்டே போகிறது. லண்டனில் பிறந்த மாப்பிளைக்கு ஏன் இலங்கையில் பெண் பார்க்கிறார்கள்? இன்றைய நவீன உலகில் இது என்ன பேச்சுக் கலியாணம்? மனமும் உணர்வும் சங்கமித்து மனஅரங்கில் உரசிக்கொள்ளும் நிச்சயதார்த்தம்தானே காதல். ஒருவரைக் காதலிக்காமல் எப்படிக் கல்யாணம் பண்ண முடியும்?; மத்தளம் போல் ஷாலினியின் மனதில் எண்ணங்கள் அடித்துக்கொள்கிறது.

‘லண்டன் மாப்பிளை. தமிழ் கதைக்கத்தெரியாதவராம். அவரோடு எப்படி அன்பு என்ற உணர்வை வெளிப்படுத்த முடியும்? ஒரு ஆசிரியையாக இருந்தும் ஏன் எனது அம்மாவால் புரிந்து கொள்ளமுடியவில்லை? மலரினும் மெல்லிய காமத்தின்பால் சிலர் மட்டும் தலைப்படுவது எதற்காக?  ஆசையையும், அன்பையும் ஒருமுகப்படுத்தி மனமிழக்க ஏன் மனிதர்களால் முடியவில்லை?’ ஷாலினியின் மனதில் பல கேள்விகள் உதிர்ந்துகொண்டே இருந்தன.

மனதில் வருத்தமும், குமுறலும் இருந்தாலும், சமூகத்தில் தம் பிள்ளைகளை நல்லவனாக்க வேண்டுமென, தம் பிள்ளைகளின் நன்மை கருதித்தானே பெற்றோர்கள் செயற்படுவார்கள். இருந்தும் எம்முடைய ஆதி உணர்வுகளைத்தானே பல வகைகளில் எமது சமூகம் இன்னும் தக்கவைத்துக்  கொண்டிருக்கிறது. இவ்விதம் எண்ணிய ஷாலினி, கிறிஸ்த்தவப்போதனை செய்யும் குருமார்கள் மூலமாகவே இத்திருமணம் ஒழங்கு செய்யப்படுகின்றதே! இறை அன்பில் நம்பிக்கை கொண்ட ஷாலினி ஏதோ கடவுள்சித்தம் என்று ஆறுதல் கொள்கின்றாள். ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக..’ எனத் தான் வணங்கும் இறைவனை வேண்டிக் கொள்கின்றாள் ஷாலினி.

லண்டனில் இருந்து மாப்பிளை குடும்பம் வருகின்றார்களாம். நேரடியாகவே வந்து பெண் பார்க்கப் போகிறார்களாம். பெண்ணைப்பிடித்தால் திருமணம் செய்துகொண்டு பெண்ணையும் தம்முடன் லண்டனுக்கு அழைத்துச் செல்லப் போகிறார்களாம். மாப்பிளையின் உறவு மாமனார் மூலம் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இடைத்தரமான வாழ்க்கையைக் கொண்ட சாதாரண குடும்பம் நாங்கள். ஷாலினியின் மனம் அங்கலாய்க்கிறது. என்னுடைய பெற்றோர் ஏன் எனக்காக   இவ்வளவு கஸ்டப்படுகிறார்களோ தெரியவில்லை. நான் வணங்கும் யேசு என்னை வழி நடத்துவார். குடு;ம்பங்கள் சேர்ந்து ஆரவாரப்பட்டு பெண்பார்க்கும் நாளை வரவேற்று அலங்கரிக்கின்றார்கள்.

லண்டனில் இருந்து வந்த மாப்பிளை வீட்டார் பெண்வீட்டுக்கு வருகின்ற நாள். மாப்பிளையோடு; அவரின் தாய், தந்தையும் பெண்பார்க்க வருகின்றார்கள்.

லண்டனில் ஆங்கிலம் பேசும் தமிழர்கள்; அல்லவா? ‘ரைற் ஸ்கேட்’  போட்டுக்கொண்டு வந்திருந்த மாப்பிளையின் தாயாரைப் பார்த்ததும்      ஷாலினியின் அம்மம்மா ரகசியமாகப் புறுபுறுக்கிறார். ‘பெண் பார்க்க வாறகோலத்தைப் பாருங்கோ! இதென்ன கோதாரி உடுப்பெடி போட்டிருக்கு இந்தப் பொம்பிளை’

‘லண்டனில் இருக்கிறவர்கள் சாறி உடுத்திக்கொண்டா திரிவார்கள்? அவர்களுக்குப் உந்தமாதிரி உடுப்புப் போட்டுத்தான் பழக்கமாக்கும் அம்மா. ‘கொஞ்சம் சும்மா இருங்கோ’ என்று அம்மம்மாவிற்கு அமைதியாகக் காரணம் கற்பிக்கின்றாள ஷாலினியின் அம்மா.

‘சரி பிள்ளை. நான் சும்மா இருக்கிறேன். ஷாலினி என்ர மூத்த பேரப்பிள்ளை. என்னுடைய சின்ன யேசுவே! எல்லாம் நல்ல படியாக நடக்கவேணுமென்று உம்மைப் பிராத்திக்கிறேன்’ அம்மம்மா இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கின்றார்.

‘மாப்பிளைக்குப் பெண்ணைப் பிடிச்சிட்டுதாம்’ அம்மம்மாவுக்கும் மிகப்பெரிய மகிழ்வான செய்தியாகிவிட்டது.

‘கலியாணத்தைக்  கொழும்பில நடத்த வேண்டும். எங்களுக்குச் சீதனம் என்று ஒன்றும் தரவேண்டாம். அந்தக் காசைச் செலவு செய்து உங்கள் மகளின் திருமணத்தை கொழும்பில் பிரமாதமாக நடத்துவோம். பெரிய ஹொட்டலில்;தான் திருமணக் கொண்டாட்டத்தை செய்ய வேண்டும். லண்டனில் இருக்கும் எமது உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் திருமணக்காட்சியின் புகைப்படங்கள், வீடியோக்கள் காட்டவேண்டும். ஃபேஸ் புக்கிலும் எல்லாம் போடவேண்டும்’ மாப்பிளையின் தாயின் வேண்டுகோள்.

ஷாலினியும், லண்டன் மாப்பிளையும் ஒருவரையொருவர் முதன்முதலாகப் பார்த்துக் கொள்ள நேர்ந்தபோது புன்சிரிப்புக்கொண்டனர். ஓருவர் மற்றவரின் இனிய பாதியாக மாறிப்போகின்ற உறவில் ஒன்றுபடுகின்றார்கள். காதல் உருவாகும் ஒரு குருட்டுத்தனமான சந்தோஷம். அகம் சார்ந்த ஒரு பரிதாபம். உணர்ச்சிபூர்வமான வாழ்க்கைக்கு அத்தகைய காதல் அவசியமென்பது அவர்களுள் ர்Pங்கரித்துக்கொண்டிருந்த வேளை அது.

மாப்பிளை கொஞ்சம் கட்டையானவர்தான் என்றாலும் அழகானவர்;. சுருள்முடி. நல்ல நிறமானவர். மனதில் முகிழ்ந்து வரும் எல்லா உணர்வுகளுமே ஒரு பொறி போலத்தானே!  ஷாலினி கற்பனையில் மிதக்கிறாள். 

ஒரு சொந்தமும் இல்லை. அவருடன் எனக்குப் பழக்கமும் இல்லை. பேச்சும் இல்லை. மொழியும் இல்லை. அவருக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த அந்தப் பரீட்சயத்திற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. காதல் ? செக்ஸ்? அந்த ஸ்பரிசம்? அதுபோன்ற அனுபவம், அந்த உணர்க்கை எனக்கு அதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. இருவர் கைகளும் இணைந்தும் இறுக்கியும் இருட்டில் அவர் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டு...அமைதியில் ஷாலினி தன் முதற் சந்திப்பை எண்ணும்போதே அவள் நெஞ்சு கலங்கி சிவந்து குழம்பின... நெஞ்சில் எல்லாவற்றையும் தேக்கிக் கொண்டே...  அவளின் அழகிய முகம் தேம்பி அழுவது போல் சுய நிலைக்கு வருகின்றாள்.

திருமணச் செலவிற்காக வீட்டில் சொத்துக்கள் எனப் பேணப்பட்டு வந்த முதிசக்காணிகள் விற்க்கப்படுகின்றன. லண்டன் மாப்பிளை அல்லவா? பெண் வீட்டாரின் அத்தனை செலவிலும்; கலியாணம் மிகவும் கோலாகலமாகக் கொழும்பில் நடந்தேறுகின்றது. ஆசையும், மோகமும் இணையும்; தோறணையில் மாப்பிளை வீட்டார் ஒரே குதூகலம்.

லண்டனில் நிரந்தர விசாவோடு வாழுகின்ற மாப்பிள்ளை. இலங்கையில் திருமணம் செய்து மனைவியுடன் லண்டன் திரும்புவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

லண்டனுக்குப் புறப்படும் வேளையும் வந்தது. ஷாலினிவீட்டார், உறவினர், நண்பர்கள் என்று பிரிவுபசாரக் கொண்டாங்களும் மிகச் சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டு;தான் இருக்கிறது. பார்வைக்குப் புலப்படாத ஷாலினியின் நெற்றியிலிருந்து மகிழ்ச்சிகரமான மெல்லிசையும், பளபளப்பான வார்த்தைகளின் பிரகாசமும் மாறி மாறி ஒலித்துக்கொண்டு; இருக்கிறது.

லண்டன் மாப்பிளை இலங்கைக்கு வந்து திருமணம் செய்து அழைத்துச் செல்லுகின்ற புதுப்பெண் அல்லவா? பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விமான நிலையத்தில் வைத்துச் சில பத்திரங்களை ஷாலினியால் நிரப்பவேண்யுள்ளது.  பத்திரங்களில் காணப்படும் சாதாரண விபரக்கொத்துக்கள்தான் அவை. சாதாரணமான பெயர் வடிவங்கள்;, இருப்பிடங்கள்;, வேலைவிடயங்கள், லண்டன் செல்வதற்கான நோக்கம் போன்றனதான். அடுத்த கேள்வி.

ஷாலினியைத் திருமணம் செய்து கூட்டிச் செல்லும் மாப்பிளை ஏலவே திருமணம் செய்தவரா? விவாகரத்துப் பெற்றுக்கொண்டவரா? ஷாலினி ‘நோ’ ‘நோ’ என்று போடுகின்றாள்;.    

மாப்பிளையோ நிரப்பிய பத்திரத்தை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு; அந்த இடத்தில் ‘ஜேஸ் ஜேஸ்’ என்று போடும்படி அமைதியாகச் சொல்கின்றார்.

ஷாலினி அதிர்ந்துபோனாள். அவி;க்கமுடியாத புதிராகி அழுத்துகிறது ஷாலினியின் மனம். ஏதோ இனந்தெரியாத உணர்ச்சிகளுக்கிடையில் ஊசலாடுகிறது அவளுடைய மனம்.

என்ன இவர் ஏலவே திருமணம் புரிந்தவரா? விவாகரத்துப் பெற்றுக்கொண்டவரா? நான் என்ன இரண்டாவது தாரமா? கடவுளே இது என்ன சோதனை? இத்தகைய குற்ற உணர்வுகளை வைத்துக்கொண்டு எப்படி என்னை, என்குடும்பத்தை, என் உறவுகளை ஏமாற்ற முடிந்தது? என் அம்மாவுக்கு இதனை எப்படிக் கூறுவேன்? அம்மம்மா உயிரையே விட்டு விடுவார்! ஐயோ கடவுளே இது என்ன சோதனை.... அருவருப்பாக இருக்கிறதே! ஷாலினி பைத்தியம் பிடித்தவள்போல் அலைகின்றாள். அவளின் உடலோ துயரங்களின் விகாரமான வடிவங்களைக் காட்டிக்கொண்டிருக்கின்றது.

ஷாலினியால் எதுவுமே செய்ய முடியவில்லை. எல்லாமே நடந்து முடிந்து விட்டதே!

மாப்பிளை ஷாலினியின் கையைப் பிடித்தபடி. ‘டோன்ற் வொறி ஷாலினி.  ஐ லவ் யு. யு ஆர் மை வைஃவ் நஃவ். யோசிக்காதே’ கட்டியணைத்து உடல்மீது முத்தமிட்டவாறே.

ஷாலினி பல்வேறு கோணங்களில் சிந்தனையில்மூழ்கியவாறு, மனதுள் போராடித் தான் தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொள்கிறாள். இன்னும் சில மணித்தியாலங்களில் விமானம் லண்டனுக்குப் புறப்பட இருக்கிறது

ஹீத்ரோ விமான நிலையத்தில் மாப்பிளை குடும்பத்தோடு வந்து இறங்கினாள் ஷாலினி. மாப்பிளை அவளை ஆசையோடு நெருங்கி கூட்டிச்சென்ற
விதத்தை நினைவிருத்திப் பார்க்கிறாள் ஷாலினி... லண்டன் கட்டிடங்கள் ஆச்சரியமாக இருக்கிறது அவளுக்கு. பிரமாண்டமான கட்டிடங்கள் பற்றிய விளக்கங்களை ஷாலினிக்கு அளிக்கிறார் மாப்பிளை. ஷாலினி கூர்ந்து கவனிப்பதுபோலிருந்தாள். ஆனால், அவளின் விழிகள் வெறித்துச் சுழன்றுகொண்டிருந்தன.

மாப்பிளை வீட்டை அடைந்தபோது புன்சிரிப்பை வரவழைக்கின்றாள். கண்கள் அகல விரிந்து ஒருமுறை சுழல்கின்றது. கவர்ச்சி, அலங்காரம், மாடிகள் கொண்ட பெரிய வீடுதான். வீட்டுக்கு முன்புறத்தில் விலையுயர்ந்த மோட்டார் வாகனங்கள் காட்சியளிக்கின்றன. புருவ விளிம்பு நெளிகிறது ஷாலினிக்கு.

ஷாலினி எதிர்பார்த்ததுபோல் உறவினர்கள் நண்பர்கள் என்று மாப்பிளை வீட்டிற்கு எவரும் வருவதாகத் தெரியவில்லை. லண்டனிலுள்ள விதம்விமான சாப்பாட்டுக் கடைகளில்; குடும்பமாகச்சென்று மாலைநேரங்களில் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டு வருகின்றார்கள்;. ஷாலினிக்கு குழப்பமாக இருக்கிறது. கலகலத்துச் சிரித்;துக்கொண்டு திரிந்த தன் வீட்டத்தோட்டம், அவளது கிராமத்தின் அழகிய ஓசைகள் அவளுள் எதிரொலிக்கின்றது. பிறந்து வளர்ந்த இடங்கள் சட்டெனக் காட்சிகளாகி அவள் கண்ணில் பைத்தியம் மின்னியது. 

‘தேன்நிலவைக் கழிப்பதற்காக மலேசியாவிற்குச் செல்லவேண்டும்’ இளமையும், கண்களில் மருட்சியியும், உடல் வாளிப்பும் மிளிரும் ஷாலினியைக் கட்டியணைத்தபடி மாப்பிளை கூறுகின்றார். மாப்பிளையே மின்னல் வேகத்தில்  கணணியில் விமானச் சீட்டுக்களைத் தயார் செய்கின்றார்.

ஷாலினியும் மாப்பிளையும் மலேசியாவுக்குப் பறக்கிறார்கள்.

ஆங்கிலேயர் பேசுவதுபோன்ற உச்சரிப்புகளோடு மாப்பிளை கதைத்தாலும் தற்போது ஷாலினிக்கு எல்லாமே புரிந்துகொள்ளும் ஆற்றல்; வந்துவிட்டது. அவளும் ஆங்கிலத்தில் மாப்பிளையோடு கதைக்கவும், கருத்துக்களைப் பரிமாறவும்;,  விவாதிக்கும்; திறமையும் கொஞ்சம் பெற்றுவிட்டாள். மாப்பிளை கொச்சைத் தமிழிலும் ஒன்று ரண்டு வார்த்தைகள் பேசுவார்.

மனித உடம்பில், மனித நாற்றத்தில் இப்படியான சுவையா என எண்ணுவதுபோலவும், ஓர் அழகிய தடாகத்தில் விழுந்து நீந்துவது போலவும்; பின்னிப் பிணைந்து மாப்பிளையும், ஷாலினியும் மூழ்கிப்போகின்றனர். மலேசியாவில் வித்தியாசமான கணங்கள் ஷாலினியின் எதிர்காலத்தை நம்பிக்கையூட்டி வருடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாப்பிளை ஷாலினிக்குப் புதுப்புது பரிசுப்பொருட்களும், புதியபுதிய உணவகங்களில் விதம் விதமான சாப்பாடுமாக தேன் நிலவு திணறிக் கழிந்தது.

மலேசியாவிலிருந்து லண்டன் திரும்பிய மாப்பிளை - ஷாலினியின் குடும்ப வாழ்வு ஆரம்பமாகின்றது. மாப்பிளை காலை வேலைக்குச்சென்று மாலை திரும்புவார். மாப்பிளையின் குடும்பத்தினருக்கும்; சேர்த்து பகலில் சமையல் வேலையில் மூழ்கியிருப்பாள் ஷாலினி. வேலையால் திரும்பும் மாப்பிளையுடன் ஷாலினியும் தொலைக்காட்சியுடன் இணைந்திருந்துவிட்டு, இருவரும் உடலால் மிக நெருக்கமாயும் கட்டில்தான் வாழ்வாகின்றது. கணவன் என்ற ஆத்மசுகம் அவளுக்குக் கிடைக்கவில்லை. பெற்றோர் சொன்ன பாவத்திற்காக  அவள் அவனையே கலியாணம் செய்து, இப்படியே வாழ்ந்து, செத்துப் போக வேண்டுமா? தன் மனதில் எழும் கேள்விகளை யாரிடமுமே சொல்ல முடியாமல் தன்னுள் தவிக்கிறாள் ஷாலினி. நாட்கள் இயந்திர மயமான வாழ்வாகின்றது.

சொந்தம், பந்தம், ஆத்மீக நண்பர்கள் என்று ஷாலினிக்கு லண்டனில் யாருமேயில்லை. மாப்பிளையையும் அவரது குடும்பத்தையும் நம்பி கற்பனைக் கோட்டையில் வந்தவள்தான் ஷாலினி. ஷாலினியின்  எதிர்பார்ப்பும், தவிப்பும் ஏக்கமும் அவளுக்கு ஏதோ ஒரு திரை கிழிந்தது மாதிரித்தான் இருந்தது. அவளுக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சியெல்லாம் ஒரு பாதுகாப்பிற்காக ஏற்பட்டது போலத்தான். பரிதாபகரமான ஒரு தனிமையின் வெறுமைதான் அதுவென தன்னுள் உணர்கின்றாள் ஷாலினி.

வீட்டில் இருக்கும்வேளைகளில் கணணியில் கவனம் செலுத்தும் ஷாலினியின் செயலை மாப்பிளை இப்போது விரும்புவது இல்லை. இலங்கைத்தாதியான ஷாலினி லண்டனில் அத்தாதித்தொழிலைத் தொடர விரும்பினாள். மாப்பிளை அதில்கூட அக்கறை செலுத்துவதில்லை.

கணனியில் அனுபவம் கொண்ட ஷாலினியால் தற்போது மாப்பிளையின் பல்வேறு நண்பிகளின் தொடர்புகளைக் கண்டறிய முடிந்தது. அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக ஏற்படும் அதிர்வுகளைக் காணும்போது ஏமாற்றப்பட்ட தன் பெற்றோரைத்தான் நினைந்து நொந்துகொள்கின்றாள் ஷாலினி.

மாப்பிளை மாலை வேலையால் திரும்பியதும் வழமையான களைப்பு, சாப்பாடு, படுக்கை.. ஷாலினியால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளும் ஒரு பெண்ணில்லையா? ஷாலினி நெஞ்சில் ஆத்திரமும்., துரோகம் இழைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஏமாற்ற வெறியும் தணலாய்த் தகித்துக்கொண்டிருந்தது. தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு மாப்பிளையின் செயலை அவதானித்துக்கொண்டே ‘எனக்கு ஏன் இவ்வளவு பெரிய துரோகம் செய்தீhகள்?’என்று கேட்டாள்.

வீட்டுக் கணணி தூக்கி எறியப்பட்டு சுக்கு நூறாக நொருக்கப்பட்டது. என்ன வேகம் கொண்டு அதனை மாப்பிளை செய்தார் என்பதை ஷாலினியால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்து, பெண் கேட்டுத் திருமணம் செய்து இங்கு வந்து என்ன நான் அடிமைச் சீவியமா  சீவிக்க வேண்டும்? ஷாலினியின் நினைவில்; மனசு என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது. கண்கள் கலங்கின. உடம்பு துடித்துப் பதைத்தது. அனாதை போல்; தவித்தாள் ஷாலினி;.

மாப்பிளை வீட்டாரின்; ஏதோ இரகசியமான பேச்சு வார்த்தைகளை, அவர்களின் மாற்றங்களை ஷாலினி அவதானிக்காமலில்லை.

வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பும் ஷாலினிக்கு வாழ்வின் இடி விழுந்தாற்போல் ஒரு சொல் காத்திருந்ததை அவள் அறிந்திருக்கவில்லை.

அன்று வேலையால் திரும்பிய மாப்பிளையின் அதட்டல் உடைந்த கண்;ணாடியில் இருந்து எழும்பும் ர்Pங்காரம்போல் சிதறுகிறது. அகல விரிந்த கண்களோடும், இறுகிய உதடுகளோடும் மாப்பிளை சொல்கிறார்:

‘எனது பெற்றோரின் விரும்பத்தினால்தான் இலங்;கைக்கு வந்து உம்மைத் திருமணம் செய்திருந்தேன். உம்மை விவாகரத்து எடுக்கப்போகிறேன். வீட்டைவிட்டு வெளியே போகவும்’ மாப்பிளையின் அதிரும் தொனியைக் கேட்டு திகைத்தே விட்டாள் ஷாலினி.

நிம்மதியில்லாமல் அலைந்த ஷாலினியின் மனம் மேலும் உளைந்தது. வேதனையை உருவாக்கியது. ஏதோவொரு பயமாகவும், அசௌகரியமாகவும் தோன்றியது அவளுக்கு.

ஐயோ கடவுளே! நான் வணங்கும் வியாகுல மாதாவே! இதென்ன இது? என்ன சோதனை? ஷாலினி அதிர்ச்சியில் மௌனித்துவிட்டாள்.  அவள் தனது ஆச்சரியத்தை அவசரமாக மறைக்க முனைகிறாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாப்பிளையின் குடும்பத்தினரின் செயற்பாடுகளும்; ஷாலினியின் இதயத்தைப் பிளக்க வைத்தது. உணவு இல்லை. கழிவறைகள்கூடப் பூட்டப்படுகின்றன. இவர்கள் என்ன மனிதப்பிறப்புகளா? இந்த நூற்றாண்டில் இப்படியான காட்டுமிராண்டித் தனமான மனிதர்களும் நாகரீகமானவர்களாக நடித்துக் கொண்டு வாழ்கிறார்களா? இனி இந்த வீட்டில் இருக்கமுடியாது. என்னென்னவோ எல்லாம் நினைந்து சபித்துக் கொண்டிருந்தது ஷாலினியின் மனம். ஷாலினி தன்னுடன் எடுத்துச் செல்லக்கூடிய முக்கியமான பொருட்களுடன் வீட்டைவிட்டே வெளியேறுகின்றாள்.

‘என்போன்ற பெண்களைப் பரிதவிக்கவிடும் படலம் என்னோடு முடிவடையப் போகிறதா? இன்னும் தொடரப்போகிறதா? காலத்துக்குக் காலம் ஆசையை வடித்து உறவுகளை மாற்றி, பெண்களின் வாழ்வைப் பாழாக்குகின்றவர்களா?p’ என்று லண்டன் மாப்பிளை பற்றிய கேவலமான கேள்விகளைத் தன்னுள் தொடுத்தபடி...’
ஷாலினியின் இளமையும், துணிவும், விடாமுயற்சியும், விவேகமான செயற்பாடுகளும், லண்டன் சட்டமும் அவளுக்குக் கைகொடுத்தது. இப்போது ஷாலினி லண்டனில் வதிவிட உரிமை பெற்றுவிட்டாள். தனியார் வைத்தியசாலையின் சிறப்பான தாதியாகவும் பணிபுரிய ஆரம்பித்துவிட்டாள். அத்;துறையின் பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டும் இருக்கின்றாள். நல்ல ஒரு எதிர்கால வாழ்வை எதிர் நோக்கியபடி. ஆனால்...

லண்டனுக்கு கல்யாணம் முடித்துப்போன என் பேத்தி ஷாலினிக்கு ஒரு பூச்சிபுழுவும் இல்லையோ எனக் கேட்கும் அம்மம்மாவின் கேள்வியும், தம்பி தங்கையின் வாழ்வும், உறவினர்களின் பரிகாசக் கேள்வியும்; ஷாலினியின் மனதை நெருடிக்கொண்டேயிருக்கின்றது...

ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவர்; ஏற்கனவே இறந்துபோனவர் என எண்ணும்படி வாழ்வு அமைந்துபோவது துரதிர்ஷ்ட வசமானது அல்லவா? அதிர்ஷ்டங்களுக்கு மட்டுமன்றி, துரதிர்ஷ்டங்களுக்கும் இடம் தந்தபடி இயங்குவதே வாழ்வின் இலக்கணம் போலும் என்ற மௌனியின் கருத்து  மனதை விரிய வைக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

12.2.2015