அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் 'கமல் முதல் கமல் வரை' என்னுமொரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் வரும் பின்வரும் வரிகள் என் கவனத்தை ஈர்த்தன:

"இன்று நாம் காணும் இலக்கியம் சார்ந்த பொதுச்சித்திரம் என்பது மூன்று முன்னகர்வுகளால் உருவானது. ஒன்று, ஐராவதம் மகாதேவன் (தினமணி தமிழ் மணி) மாலன் (தமிழ் இந்தியா டுடே) வாஸந்தி (தமிழ் இந்தியா டுடே) கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா) ஆகிய ஆசிரியர்கள் உருவாக்கிய இடைநிலை இதழ்களும் அவற்றில் நிகழ்ந்த இலக்கிய அறிமுகமும்.

இரண்டு, 1999 முதல் தொடர்ச்சியாக இணைய ஊடகம் உருவாகி வந்ததும், அதன் வழியாக மலிவாக இலக்கியவாசகர்கள் தங்களை கண்டடைந்ததும், ஒருவரோடொருவர் உரையாடியதும். திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்களுக்கும், தமிழ்மணம் போன்ற வலைப்பதிவுத் திரட்டிகளுக்கும் அதில் பெரும்பங்களிப்பு உண்டு.

மூன்று, புதிய இதழ் மற்றும் ஊடக வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு விவாதங்கள், கட்டுரைகள் வழியாக இலக்கிய அறிமுகம் நிகழ்த்திய என்னை போன்ற இலக்கியவாதிகள். இன்று திரும்பிப் பார்க்கையில் நான், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன் ஆகிய மூவருமே அதில் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறோம் என்று படுகிறது. முப்பதாண்டுக்காலம் சலிக்காமல் அதில் உழைத்துள்ளோம்."

இணையத்தில் தமிழை ஏற்றுவதற்குப் பதிவுகள் இணைய இதழும்  முக்கிய பங்காற்றியுள்ளதை அவர் ஏற்று பதிவு செய்துள்ளார். அதற்குப் பதிவுகள் சார்பில் நன்றி.

பதிவுகளின் ஆரம்பத்தில் தமிழக எழுத்தாளர்கள் பலர் நடத்திய தர்க்கங்களை நினைத்துப் பார்க்கின்றோம். எழுத்தாளர்கள் ஜெயமோகன், நேசகுமார், பாவண்ணன், புதியமாதவி, திலகபாமா, யமுனா ராஜேந்திரன், சுப்ரபாரதிமணியன், மாலன், கி.பி.ராஜநாயஹெம்.. எனப் பலரின் ஆக்கங்கள் பதிவுகளில் வெளியானதை நினைத்துப் பார்க்கின்றோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆய்வு எனப் பதிவுகள் அளித்து வரும் இலக்கியப் பங்களிப்பை நினைத்துப் பார்க்கின்றோம்.

இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. அது திருப்தி அளிக்கக்கூடிய பங்களிப்பு.

அவரது கட்டுரையினை முழுமையாக வாசிக்க - https://www.jeyamohan.in/196333/