எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவு தினம் ஏப்ரில் 8. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை.  அறுபதுகள், எழுபதுகள் ஜெயகாந்தனின்  எழுத்துலகப் பொற்காலம்.  உண்மையில் வெகுசன இதழ்களான விகடன், கல்கி, தினமணிக்கதிர் ஆகியவை அவருக்குக் களமமைத்துக்கொடுத்தன என்பது வியப்புக்குரியது.  விகடனில் அவரது 'ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்' தொடராக வெளியானது. அத்துடன் அவரது மிகவும் புகழ்பெற்ற நாவலான 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'  கோபுலுவின்  உயிர்த்துடிப்பான சித்திரங்களுடன் தொடராக வெளியானது.  கோபுலுவின் ஓவியங்களுடன் அந்நாவலைப் படிப்பது அற்புதமானதோர் வாசிப்பனுபவம்.  நாவலின் பாத்திரங்களை உள்வாங்கி, அவற்றின் உளவியலை உள் வாங்கி மிகவும் சிறப்பாக அவ்வோவியங்களைப் படைத்திருப்பார் கோபுலு.

விகடனில் ஜெயகாந்தனின் மிகவும் புகழ்பெற்ற குறுநாவல்கள் பல வெளிவந்தன. 'யாருக்காக அழுதான்?", 'உன்னைப்போல் ஒருவன்', 'அக்கினிப் பிரவேசம்', 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செய்து விட்டாள்' , 'கருணையினால் அல்ல' போன்ற பல குறுநாவல்களை விகடன் பிரசுரித்தது. கூடவே பல முத்திரைச் சிறுகதைகளையும் பிரசுரித்தது. 'உன்னைப்போல் ஒருவ'னை அவர் திரைப்படமாகத் தயாரித்தார். வாங்க விநியோகஸ்தர்கள் இல்லாது போனாலும் சிறந்த மாநிலத் திரைப்படத்துக்கான குடியரசுத் தலைவரின் விருதினைப் பெற்ற திரைப்படமது. ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' குறுநாவல்  கல்கியில் வெளியானது. இதுவே பின்னர் 'காவல் தெய்வ'மாகத் திரைக்கு வந்தது. அதே பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும் வெளியானது. அப்பிரசுரம் 'கருணையினால் அல்ல' குறுநாவலையும் உள்ளடக்கியிருந்தது.

எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'தினமணிக்கதிர்' ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' சிறுகதைத்தொகுப்பிலிருந்த சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தது. அவருக்குச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுத்தந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கதிரில் முதலில் 'காலங்கள் மாறும்' என்னும் பெயரில் ஆரம்பமாகி பின்னர் 'சில நேரங்களில் சில மனிதர்களா'கத் தொடர்ந்தது. பின்னர் அதுவே 'கங்கை எங்கே போகின்றாள்' எனத்தொடர்ந்தது. கோபுலுவின் உயிர்த்துடிப்பான ஓவியங்களுடன் வெளியான நாவல்கள் அவை. விகடனில் அவர் எழுதிய 'அக்கினிப் பிரவேச'த்தின் தொடர்ச்சியான நாவல்களும் கூட. அக்காலகட்டத்தில்தான் ஜெயகாந்தனின் 'ரிஷி மூலம்' கதிரில் வெளியானது. மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியது.  இனிமேல் கதிரில் இதுபோன்ற கதைகளை வெளியிட மாட்டோமென்று ஆசிரியரை அறிவிக்கச் செய்த குறுநாவலது.