பிரதேசங்கள், நாடுகள் என்ற எல்லையைத்தாண்டி தமிழின் ஈடிணையற்ற எழுத்தாளராக அங்கீகாரம் பெற்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய வானில் கருந்திரையைப் போர்த்தியிருக்கிறது. தெளிவத்தை என்ற தோட்டத்துப்பெயரைத் தன் பெயரோடு இணைத்து, தமிழ் இலக்கிய உலகில் அவர் அடைந்த வெற்றிச் சாதனைக்காக   மலையகம் பெருமிதம் கொள்கிறது.மலையக மக்களது  வாழ்வின் துயர்க்கோலங்களை, சுரண்டலின் அகோரத்தை, அவலப்பட்டுப்போன சமூகக்கூட்டத்தின் கதையை அழியாத கல்வெட்டாய் தமிழ் இலக்கிய உலகில் பொறித்துவைத்துவிட்டுப்போன பெருமகன் தெளிவத்தை ஜோசப்பிற்காக  இன்று தமிழ் இலக்கிய உலகம் கண்ணீர் சிந்தி நிற்கிறது. மலையக இலக்கியம் என்ற பச்சை மண்ணில் தெளிவத்தை ஜோசப்பின் தசைநார்கள் நெய்யப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அது சரியாய் இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகின் தனி சாம்ராட்டாக உலாவந்த இலக்கியத்தலைமகன் இன்றில்லை எனும் செய்தி நம் நெஞ்சில் துயர அலைகளை எழுப்பி நிற்கிறது.

தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு தமிழ்ச் சமூகம் எந்த அளவு துயரங்களை, அடிமைவாழ்வின் கூறுகளைக் கொண்டியங்கியது என்பதை ஜோசப் அவர்களைப்போல கலாநேர்த்தியுடன் சித்திரித்த பெரும் எழுத்தாளன் யாருமில்லை. மனித ஜீவிகளாகவே கருதப்படாத ஒரு சனக்கூட்டத்தின் தீனக்குரலை தீவிர மூர்ச்சனையோடு எழுத்தியக்கத்தில் பதிவு செய்த பெரும் இலக்கிய வியக்தி அவர்.மலையக சமுதாயத்தின் நிதர்சனத்தை, அதன் வெம்மையின் தவிப்பை, சிறுமையின் இழிவை, சுரண்டலின் சூக்குமத்தை, இனவாதத்தின் நச்சுக்கொடுக்குகளை, உணர்வுகளின் இடத்தை தந்திரமும் வக்கிரமும் அபகரித்து விட்ட அவலத்தை தனது கதைகளிலே அவர் மீட்டியிருக்கிறார்.சிறுமை கண்டு பொங்கிய கலகக்காரனின் எழுத்துகளாக அவரது கதைகள் சிறப்புப்பெறுகின்றன. மனிதன் சிறுமைப்படுத்தப்பட்ட கொடுமையை அவரைப்போல எழுத்திலே சித்திரித்தவர்கள் யாருமில்லை.

அவர் எழுதிய மொத்தம் அறுபத்து நான்கு கதைகளில் எங்கள் கைவசமிருந்த 56 கதைகளைத் தொகுத்து பெருந்தொகுதியாக ஒரு நூலை அவரின் கைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற பேராவலில் நானும் எச்.எச்.விக்ரமசிங்கவும் பெரும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். அச்சிலிருந்த கதைகளை அவரே மொய்ப்புப்பார்த்துகொண்டிருந்த நேரத்தில் இந்தத் துயரம் கவிந்தது பெருஞ் சோதனை. அவர் ஏறத்தாழ தொலைந்து போனதாகவே கருதியிருந்த 'காட்டுப்பூ'  என்ற சிறுகதையை எனது சேகரத்திலிருந்து கடைசியாகச் சேர்த்து அச்சேற்றி அனுப்பியபோது அக்கதையை ஆர்வத்தோடு வாசித்துக்கொண்டிருந்த நிலையில் அப்பெருமகன் இறுதி மூச்சை விட்டிருக்கிறார் என்று அவரது இனிய மகள் சியாமளா சொன்னபோது நான் நெஞ்சிழந்தேன். அவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக அந்த இலக்கியத் தலைமகனின் கரங்களில் சேர்த்துவிடவேண்டும்  என்ற என் கனவு நனவாவதற்கிடையில்  அவர் தலை சரிந்து போன செய்தி என் நெஞ்சில் துயரக்கனலை  மூட்டியது. இறுதிவரை என்னுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தவர், தனது பெருந் தொகுதிக்காக  தனது முன்னுரையை உற்சாகமாக  எழுதிக்கொண்டிருந்தவர் அந்த நூலை ப்பார்க்காமலே கண்களை மூடிக்கொண்டுவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது. அவரே தனது கதை ஒன்றில் தலைப்பிட்டதுபோல், அதற்குள் 'பழம் விழுந்து விட்டது' . சென்னையில் இந்நூலைப் பதிப்பிப்பதில் அயராது உழைத்த ஒளிவண்ணன் ஜோசப்பின் மறைவு கேட்டு அதிர்ந்து போனார். அவரது நூலை வெளிக்கொணர்வதுதான் நாம் அவருக்குச் செய்யும் கடமை என்று எழுதியிருக்கிறார.

அவரின் முழுக்கதைகளையும் தொகுத்துப்படிக்கிறபோது , அந்த மனிதரின் நெஞ்சமெல்லாம் மலையக மக்கள் நிறைந்து போய்க் கிடந்திருக்கிறார்கள் என்பதைப்பூரணமாக உணரமுடிகிறது.அந்த அவல வாழ்வின் மீது அவர் கொண்டிருந்த ரெளத்திரம் தெரிகிறது. சிறுமை கண்டு பொங்கும் அவரது சீற்றம் தெரிகிறது. மனிதன் அற்பஜீவியாக வாழும் சிறுமை அவரது நெஞ்சிலே தணல் மூட்டியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தனது கதை மாந்தர்களுக்காக தனது படைப்புகளை அவர் சமர்ப்பணம் செய்திருப்பதின் அர்த்தம் புரிகிறது. 'எங்கே தேயிலைச் செடிகள் விளைகின்றதோ, அந்த இடம் மலைமுகடாக இருந்தாலென்ன,சமவெளியாக இருந்தாலென்ன அந்த இடம் பெரும் புனிதம் பெறுகிறது' என்று 12 ஆம் நூற்றாண்டு ஜப்பானிய வாசகம் கூறுகின்றது. ஜோசப்பின் எழுத்தால் மலையக இலக்கியமும் புனிதம் பெற்றது! 

மலையகம் இருக்கும்வரை உங்கள் எழுத்து வாழும், பெருமகனே!  கண்ணீரோடு என் அஞ்சலி.  

* அனுப்பியவர் - எச்.எச்.விக்கிரமசிங்க