ரா.கி.ரங்கராஜன்19, 2012- சென்னை:பிரபல பத்திரிகை ஆசிரியரும், நாவல் ஆசிரியரும், ஆயிரக்கணக்கான கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, வேடிக்கை கவிதைகள், நாடகம், திரைக்கதை படைத்தவரும், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக, குமுதம் ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி.,க்கு தோளாக, தளபதியின் வாளாக, நண்பராக திகழ்ந்த, ரா.கி.ரங்கராஜன், தனது, 85ம் வயதில், நேற்று காலமானார்.கதை எழுதும் கலையை இளைஞர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அவர், "எப்படி கதை எழுதுவது?' என்ற அமைப்பின் மூலம் எழுத்துக் கலையின் சூட்சுமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியவர். இவரது இறுதிச் சடங்கு, இன்று காலை, 9 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 80154-03491, 94442-69006. இவரது பல கதைகள், திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. "சுமைதாங்கி, இது சத்தியம், மகாநதி (ஆலோசகர்) வெளிவந்துள்ளன. இவரது இலக்கிய படைப்புகளில், "படகு வீடு, பட்டாம்பூச்சி' ஆகியவை, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு, இவர் புகழை பாடிக் கொண்டிருக்கும்.மனைவி கமலா, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் கொண்ட குடும்பம் இவருடையது. தன் கண்களை தானமாக வழங்க விருப்பப்பட்டார். அவர் விருப்பப்படியே, மறைவுக்கு பின், கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

தினமணி.காம்: ரா.கி.ரங்கராஜன் மறைவுக்கு வைகோ இரங்கல்

சென்னை, ஆக.19: எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ரா.கி.ரங்கராஜன் மறைவுக்கு மதிமுக தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

பத்திரிகையாளராக, ‘சக்தி’யில் பணியைத் தொடங்கி, தம் வித்தக எழுத்துகளால், தமிழ்மக்களின் இதயம் நிறைந்த ரா.கி.ரங்கராஜன், தம் பெயரை மறைத்துக் கொண்டு, தம் முகத்தையும் வெளிப்படுத்தாமல், 42 ஆண்டுகளாக, குமுதம் ஆசிரியர் குழுவில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணி ஆற்றியவர். அதில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், எழுத்தின் மேல் கொண்ட தணியாத காதலால், எழுதுவது எப்படி? என்று, இளம் எழுத்தாளர்களுக்கு, எழுத்துக்கலையைக் கற்றுத்தர நூல் எழுதியவர்.

குமுதத்தின் புகழ்பெற்ற அரசு பதில்களில், நடுநாயகமான ‘ர’ என்ற எழுத்துக்குச் சொந்தக்காரர்தான், நம்முடைய ரங்கராஜன். குடந்தையில் பிறந்து, தமிழ் அன்னையின் மீது தணியாத பற்றுக்கொண்டு, காலமெல்லாம் எழுதிக் குவித்தவர். இவருடைய எழுத்து ஓவியத்தில் புகழ் பெற்றவை திரைப்படமாக வந்த இது சத்தியம், சுமைதாங்கி, போன்ற காலத்தை வென்ற காவியங்கள் ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், அடையாறு புற்று நோய் மருத்துவமனையில், தாம் இறப்பதற்கு முன்பு கடைசியாக வாசித்துக் கொண்டு இருந்த, தி மாஸ்டர் கிறிஸ்டியன் என்ற மேரி கோரெல்லியின் நாவலை மொழிபெயர்த்து, அண்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில், குமுதம் இதழில் வெளியிட்டார். உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை வரலாறையும் எழுதினார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் எழுதி வந்தார். அவரது எழுத்தில் இழையோடும் நகைச்சுவை, வயிறு குலுங்க வைக்கும். 

தம் பெயரை மறைத்துக் கொள்வதற்காக, மோகினி, சுந்தர பாகவதர், சூர்யா, ஹம்சா, துரைச்சாமி, கிருஷ்ணகுமார், மாதவி, வினோத் என்று அவ்வப்போது தோன்றிய பெயர்களில் எல்லாம் தன் படைப்புகளை வெளியிட்ட ரங்கராஜன், தம்முடைய உண்மை முகத்தையும், பெயரையும் வெளிப்படுத்தியதே இல்லை. இப்படி புகழை விரும்பாத, ஒரு பற்று அற்ற ஞானியாக வாழ்ந்து மறைந்து உள்ள ரா.கி.ரங்கராஜன், தமிழ் எழுத்து உலகை அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேல் அழகுபடுத்திய பெருமகன் ஆவார்.

அன்னாரது மறைவு, தமிழ் எழுத்து உலகத்துக்குப் பேரிழப்பு. அவர் உடலால் மறைந்தாலும், தம்முடைய எழுத்துகளால் தமிழ் அவர் ஏற்றி வைத்த இலக்கியச்சுடர் என்றும் அணையாது.

அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், எழுத்து உலக நண்பர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தினமணி.காம்