மீள்பிரசுரம்: கடும் விமர்சனத்தில் சிக்கியது டில்லியின் இலங்கைக் கொள்கை!விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரின் 12 வயதுடைய மகன் ஆகியோருக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பிரிட்டனின் ஆவணக்காணொளியில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதானது தனது அயலவர் தொடர்பான இந்தியாவின் நடு நிலைக் கொள்கைக்கு பரிசோதனையாக அமைந்திருக்கிறது என்று வோல்ஸ் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்திருக்கிறது.  இந்தப் பத்திரிகையில் ரொம் ரைட் என்பவர் "கடும் விமர்சனத்தின் கீழ் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை' என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியின் காணொளியானது புதன்கிழமை (இன்று) வெளியிடப்படவுள்ளது. இறந்தவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சன்னக் காயங்களைக் காண்பிக்கும் ஒளிநாடா பிரதிமையை இந்தக் காணொளி கொண்டுள்ளது. மிக சமீபகமாக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தக் காணொளி பிரதிமையைக் கொண்டுள்ளது. இறந்த பையனின் புகைப்படத்தை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.

 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் வலுவான உறவுகளைப் பேணும் நோக்கத்துடன் விடயங்களை சமநிலைப்படுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முயற்சித்து வருகிறார். அதேவேளை, அவரின் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள இந்தியாவிலுள்ள தமிழ்க் கட்சிகளின் அபிலாசைகளுக்கும் வளைந்துகொடுக்க வேண்டிய தேவை அவருக்குக் காணப்படுகிறது. இதுவரை இந்தியாவின் இந்த இயங்கியலானது டில்லி ஆட்சியாளர்களை அமைதியாக இருக்க வைத்திருக்கிறது. ஆனால், அமெரிக்கா உட்பட ஏனைய அரசாங்கங்கள் இலங்கை மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன. யுத்தத்தின் போதான உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை நம்பகரமான முறையில் விசாரிக்குமாறு அவை அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றன. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அடுத்த வாரம் அமெரிக்க அனுசரல்ணையுடனான தீர்மானமொன்று  விவாதிக்கப்படவுள்ளது. அரச படையினர் மற்றும் தமிழ்ப் புலிகளினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகளை உரிய முறையில் விசாரணை நடத்துமாறு இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாக அத்தீர்மானம் அமைந்திருக்கிறது. இந்த ஐ.நா. வாக்கெடுப்புத் தொடர்பாக இதுவரை இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை. ஆனால், செயற்படாத இந்தக் கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. இந்திய ஆளுங் கூட்டணியில் உள்ள தமிழ்க் கட்சியான தி.மு.க. ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு டில்லியைக் கேட்டிருக்கிறது. சனல்4 ஆவணப் படத்திலுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரித்துள்ளது. இந்த அறிக்கையானது எழுந்தமானதும் ஆதாரமற்றதும் உறுதிப்படுத்தப்பட முடியாததுமான குற்றச்சாட்டென டில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் பி.ரி.ஐ. செய்திச் ர் சவைக்குக் கூறியுள்ளார்.

முழுமையான விசாரணை நடத்துமாறு கடந்த மாதம் அமெரிக்காவின் வெளிவிவகார உதவிச் செயலாளர் மரியா ஒட்டேரியா வலியுறுத்தியிருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரும் தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென அவர் தெரிவித்திருந்தார். இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐ.நா. நிபுணர் குழு கேட்டிருந்தது. அந்த அறிக்கையை ராஜபக்ஷவின் அரசாங்கம் நிராகரித்திருந்தது. தனது சொந்த விசாரணையான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை வெளியிட்டிருந்தது. ஆனால், முழுமையான விசாரணை இதில் உள்ளடக்கப்படவில்லையெனற அமெரிக்காவும் மனித உரிமை குழுக்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விமர்சித்திருந்தன. கடந்த வருடம் ஐ.நா. நியமித்த நிபுணர் குழு அறிக்கை தொடர்பான புதுடில்லி கருத்துத் தெரிவித்திருக்கவில்லை. அத்துடன் தமிழர்களின் உரிமைகளுக்காக பேசுவதிலும் செயற்பாட்டுத் திறனற்ற குரலைக் கொண்டதாகவே டில்லி காணப்படுகிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து விடும் என்பதற்காக கொழும்பை டில்லி கண்டிக்காமல் இருப்பதாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ஷ செல்வாக்கைக் கொண்டிருக்கிறார். யுத்தத்தை முடித்துவைத்ததற்காக  செல்வாக்கை அவர் கொண்டுள்ள போதிலும் சர்வதேச ரீதியான அழுத்தங்களுக்கு இலங்கை முகம் கொடுத்துவருகிறது. யுத்தம் முடிவடைந்து சுமார் மூன்று வருடங்களை எட்டியுள்ள நிலையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட, கிழக்குப் பகுதிகள் தொடர்ந்தும் சிங்களவர்களை அதிகளவில் கொண்ட இராணுவமயப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகிறது.

ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானம் வெற்றியடையுமா என்பது குறித்து இதுவரை தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது. சர்வதேச விசாரணையொன்று ஏற்படுவது சாத்தியமற்றதாகக் காணப்படுகிறது. ஹேக்கிலுள்ள சர்வதெச குற்றவியல் நீதமின்றத்தின் உறுப்பு நாடாக இலங்கை இருக்கவில்லை. அதனால், போர்க்குற்றச்சாட்டுகள் அங்கு எழுப்பப்படும் சாத்தியம் காணப்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையால் மட்டுமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உத்தரவிட முடியும். அதாவது நீதிமன்றத்தின் பரிமாணத்திற்கு உள்ளடக்கப்படாத நாடொன்றின் மீது விசாரணை செய்யுமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபை மட்டுமே உத்தரவிட முடியும்.   ஆனால், பாதுகாப்புச் சபை இது நம்பகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறிவிட்டது. அதனால் இலங்கை விவகாரத்தில் இது இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடு இல்லாத தன்மையே காணப்படுகிறது.

இலங்கையில் தனது சம்பந்தத்தைக் கொண்ட நாட்டின் சொந்த தவறுகளுக்கான அடிப்படை அம்சங்களைக் கொண்டிருப்பதால் இந்த விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பானது முன்னெச்சரிக்கையுடன் கூடியதாக அமைந்திருக்கலாம். 1980 களில் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் புலிகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவியிருந்தது. அதன் பின்னர் இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு இந்தியா அனுப்பியிருந்தது. 1991 இல் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டிருந்தார்.

தமிழில்: தினக்குரல், தேனீ.காம்