சர்வதேசப் பெண்கள் தினக் கட்டுரை.மார்ச் 8ஆம் தேதியை சர்வதேசப் பெண்கள் தினமாக கொண்டாடுகிறோம். சாதாரணப் பெண்களின் சாதனைகளைப் பற்றி பேப்பர்களிலும், பத்திரிகைகளிலும் படித்துத் தெரிந்து கொள்கிறோம். குறிப்பாக கிராமத்துப் பெண்களின் சாதனைகளைப் பற்றியும், அவர்களுடைய மனஉறுதி, விடாமுயற்சி ஆகியவைகளைப் பற்றியும், பெண்களைத் தழுவிய எண்ணங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள் என்று அன்றைய தினப் பேப்பர்கள் பெண்களைச் சார்ந்த பேப்பர்களாகவே  அச்சிடப்படுகின்றன. இதைக் கேட்பதற்கு பெருமிதமாகத் தான் இருக்கிறது. வாழுகின்ற இந்தப் புவியை “பூமித்தாய்” என்று அழைக்கிறோம், நம்முடைய நாட்டை எதிரிகள் படையெடுக்கும்போது நமது படைவீரர்கள் “பாரத் மாதா கி ஜய்” அதாவது “பாரத அன்னைக்கு வெற்றி” என்ற முழக்கத்தோடு போர்க்களத்துக்கு செல்லுகிறார்கள், அதே களத்தில் ஒரு வீரன், உயிர்போகும் தருணத்தில, தாய்மண்ணுக்கு சலாம் போட்டுட்டு உயிரிழக்கிறான். வாழுகின்ற கிரகத்தையும், குடியிருக்கும் நாட்டையும் பெற்ற தாய்க்கு சமமாக கருதுகிறோம், போற்றுகிறோம், பூஜிக்கிறோம்.

ஒவ்வொரு பள்ளியிலும் வருடாந்திர தினவிழாவொன்று (Annual Day function) நடைபெறுவது வழக்கமாகும். இந்த விழாவையொட்டி பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன, மாணவமாணவிகள் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள். இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவமாணவிகள் தேசப்பற்று பாடலோடு கைகோர்த்த வண்ணம் வரிசை வரிசையாக நின்று இந்திய வரைப்படத்தை வரைந்து காட்டும் காட்சியும், அதனடுவே My Country, Mother India”  அதாவது “என் நாடு, பாரத அன்னை”  என்கிற எழுத்துக்கள் மின்மினுக்கும் விளக்குகளில் தோன்றித் தோன்றி மறைகிற காட்சியைப் பார்த்த ஒவ்வொரு பெற்றோரின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தாமலிருப்பதில்லை. நாட்டை அன்னையாக மதிக்கிற நம்முடைய படைவீரர்கள் அதற்கு எவ்வித களங்கமும் ஏற்படாமலிருக்க வேண்டுமென்று  நாட்டினுடைய எல்லைகளில், வெய்யிலையும், பனியையும் பொருட்படுத்தாமல், கண்கொட்டாமல் பாதுகாக்கிறார்கள். பெற்றதாயை எப்படி பாதுகாக்கப்பட வேண்டுமோ அப்படி நாட்டையும் பாதுகாக்கிறார்கள்.

இத்தகைய உயரிய எண்ணங்களுக்கிடையில் பெண்களுடைய வாழ்க்கை ஒரு போராட்டமாகதான் இருக்கிறது. ஒரு பெண் குழந்தை பிறப்பெடுத்தவுடன் இருப்பவர்கள் பெண்குழந்தையை வீட்டுக்கு வந்த மகாலட்சுமியென்று கொண்டாடி மகிழ்கிறார்கள், இல்லாதப்பட்டவர்கள் ஒரு சாபமாக எடுத்துக் கொள்கிறார்கள், நொந்து கொள்கிறார்கள். ஒரு பெண்குழந்தையின் பிறப்பிலே இருதரப்பட்ட நிலைகளை உணர்கிறோம். பெண்கள் வதைக்கப்படுவதும், கொடுமைக்குள்ளாகுவதும், அவர்களை சந்தேகப்படுவதும், வீட்டுக்குள்ளே அடைத்து வைக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவதும், வெளிவட்டாரத்தில் வன்முறைகள் நிகழ்வதும், சுயமரியாதை இழக்கப்படுவதும் போன்ற பெண்களை தழுவிய தகவல்களை நாம் கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். பெண்களுடைய வாழ்க்கையை மையமாக வைத்து தொலைக்காட்சி சீரியல்கள் எடுக்கப்படுகிறது, பெண்கள் போராடுவதுமாக, கொடுமைப்படுத்தப்படுவதுமாக போலதொரு காட்சிகள் அதிகபட்சமாக சீரியல்களில் இடம்பெறுகின்றன. பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்கிற பாணியில் தொலைக்காட்சிச் சீரியல்கள் தாயாராகுகிறது. பெண் என்பவள் போராடுவதற்காக பிறப்பெடுத்திருக்கிறாளா?

அழகு குறிப்புகள், சிகையலங்காரம், உடையலங்காரம், ஆபுஷண ஆபரணங்கள், வத்தல் வடாமிடுதல், சமையல் குறிப்புகள் அதனுடன் 48 Nப் வகைகள், 54 கார உணவு வகைகளென்று குட்டி புத்தக இணைப்புகள், பூiஜஅறை அலங்காரம்,  உப்புசப்பில்லாத  சமாசாரங்கள் போன்றவைகளைத்தான் பெணகளைச்சார்ந்த பத்திரிகைகளில் பார்க்கலாம், படிக்கலாம்…… ஏதோ பொழுதை போக்க வேண்டுமென்று இருபது ரூபாய்க்கு பத்திரிகையை வாங்குகிறோம், பக்ககளைப் புரட்டுகிறோம்……. இன்னும் எத்தனை காலங்களுக்குதான் இம்மாதிரி செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பதும் ……படித்தப்படித்து புளித்துப் போய்விட்டது…….  கொஞ்சமாவது மாற்றம் தேவைப்படுகிறது, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பத்திரிகைகளை கொண்டு வரவேண்டுமல்லவா?

இரண்டாந்தர பிரசைகளாகத்தான் பெண்கள் நிலைநிறுத்தப்படுகிறார்கள். குடும்பத்தலைவனுடைய எண்ணங்கள், கருத்துக்கள், முடிவுகள், செயல்கள் அனைத்துக்கும் ஆதரவு கொடுப்பதும், ஆமோதிப்பதும் ஒரு வாயில்லா பூச்சியைப் போல குடும்பத்தலைவி நடந்து கொள்வது ஏதோ பெயருக்கு குடும்பத் தலைவியாகயிருப்பது போலிருக்கிறது. இதற்கு அப்பாற்பட்டு செயல்படுகிற பெண்கள், அடங்காபிடாரிகளென்று அவதூறை வாங்கிக் கட்டிக்கொள்ளுகிறார்கள். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாமென்றும் பெண்கள் பேசாமலிருந்து விடுகிறார்கள். பெண்களுடைய இந்தப் போக்கை பலவீனமென்று எடுத்துக் கொள்வதும் தவறு. அவர்களுடைய பொறுமையை சோதிக்கிற ஒவ்வொரு ஆணும், சாது மிரண்டால் காடு அலறும் என்ற பழமொழியை ஒருகணம் நினைத்துப்பார்க்க வேண்டும். பெண்ணின் மிரட்சியும், கோபமும் ஒரு காட்டுத்தியைப்போலவும், கொந்தளிக்கும் கடலைப்போலவும் அவ்வளவு தீவிரமானது. எதையும் நின்று, நிதானித்து, யோசித்து செயல்படுவது மிகவும் அவசியமானது.

அண்மையில் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும், பேப்பர்களிலும் (Aruna Shaunbagh) கருணைக்கொலை மனுவைப் பற்றிய விவாதங்களும், சர்ச்சைகளும் விமர்சிக்கப்பட்டன. இதுபோல இன்னும் எத்தனையோ அருணாக்களை மருத்துவமனைகளில் பார்க்கலாம்.  அவர்களைப் பற்றி நாம் அறியாமலும் இருக்கலாம். புதுதில்லியிலுள்ள மருத்துவமனையின் டிரௌமா சென்டரில் (Trauma Centre)  நடந்த நிகழ்வைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுனிதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) கால் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு 22 வயதிருக்கும். பனி கொட்டுகிற 2010 ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுமார் 10 மணிக்கு தன்னுடைய வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுனிதாவை இரண்டிரண்டாக நபர்களை ஏந்தியபடி நான்கு மோட்டர்சைக்கிள்கள் வழிமறித்தது. காருக்குள்ளேயே சுனிதாவை கற்பழித்தார்கள். அந்தப்பக்கமாக வந்து கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை கண்டவுடன் நபர்கள் மோட்டார்சைக்கிளகளில் பறந்து மாயமாக மறைந்து விட்டார்கள். அரைகுறை பிணமாக கிடந்த சுனிதாவை காவலாளிகள் மருத்துவமனையில் சேர்த்து அவளுடைய பெற்றோர்களுக்கு தெரிவித்தார்கள். எம்.பி.ஏ பட்டதாரி, நல்ல பண்புள்ள பெண் இன்று தன்னையே மறந்து வாழுகிறாள்,  பரிசோதிக்க வருகிற ஆண் டாக்டரைப் பார்த்து கூச்சல் போடுகிறாள், அங்குமிங்கும் ஓடுகிறாள், கைகளில் கிடைத்த பொருள்களை வீசி எறிகிறாள். இந்தக் காட்சியைப் பார்த்தும் நம்மடைய கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டுகிறது. உடலுறவு கொள்ளுவதற்கு மட்டும்தான் பெண் என்று எண்ணம் கொள்வது முற்றிலும் தவறு...... பெண்கள் சுவைப்பதற்கும், சுமப்பதற்கும் மட்டுமல்ல……  அவர்கள் சயமரியாதையை இழக்க விரும்பவில்லை, சுதந்திரமாக சுவாசிக்க விரும்புகிறார்கள்.

sandhya giridhar <sandhya_giridhar@yahoo