| 
  எழுத்தாளர் உடுவை தில்லைநடராசாவின் வலைப்பதிவு: 
  நிர்வாணம் - எல்லாமே வெளிப்படையாக....
 
   'நிர்வாணம்' 
  என்னும் சிறுகதைத் தொகுதியின் மூலம் அறியப்பட்ட எழுத்தாளர் உடுவை தில்லைநடராசா 
  'நிர்வாணம்: எல்லாமே வெளிப்படையாக...' என்னும் பெயரிலொரு வலைப்பதிவினையும் 
  தொடங்கியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான “நிர்வாணம்” 1991 இல் 
  கொழும்பில் வெளியானது. இதனைத் திருகோணமலை தாகம் கலை இலக்கிய வட்டம் 
  வெளியீட்டிருந்தது. 1967 தொடக்கம் 1975 வெளியான இவரது பன்னிரன்டு கதைகளின் 
  தொகுப்பே மேற்படி 'நிர்வாணம்' சிறுகதைத் தொகுப்பாகும். இந்த நூலுக்கு 1993 கோவை 
  லில்லி தேவசிகாமணி பரிசுத்திட்டத்தின் கீழ் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.  
  இந்நூலின் இரண்டாம் , மூன்றாம் பதிப்புகள் முறையே தமிழகத்தில் நியூ செஞ்சரி புக் 
  ஹவுஸ் மற்றும் கலைஞன் பதிப்பகங்களால் வெளியிடப்பட்டன. அத்துடன் சிங்கள மொழியிலும் 
  “காதல் யாத்திரைகள்” “தமிழ்ச் சிறுகதைகள்” என்னும் பெயர்களில் மேலுமிரு 
  பதிப்புகளாக வெளிவந்துள்ளன. இத்தொகுப்பிலுள்ள இச்சிறுகதைகள் யாவும் தினகரன் , 
  ஈழநாடு , ராதா, கலைமலர், மல்லிகை மற்றும் மாணிக்கம் ஆகிய பத்திரிகைகளிலும், 
  சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளதுடன் இவற்றில் பல இலங்கை வானொலியிலும் அன்றைய 
  காலப்பகுதியில் ஒலிப்பரப்பட்டுள்ளன. தனது புகழ்பெற்ற 'நிர்வாணம்' என்னும் 
  தொகுப்பின் பெயரிலேயே தனது வலைப்பதிவினையும் தொடங்கி 'எல்லாவற்றையும் 
  வெளிப்படையாக'ப் பேச ஆரம்பித்திருக்கும் உடுவை தில்லைநடராசாவின் வலைப்பதிவினை 
  இம்மாத அறிமுக வலைத்தளமாகப் 'பதிவுகள்' அறிமுகப்படுத்துகிறது. வலைப்பதிவின் 
  முகவரி: 
  www.uduvai.blogspot.com. மேற்படி வலைப்பதிவிலுள்ள அவரது 'நிர்வாணம்' 
  சிறுகதையினையும் மீள்பிரசும் செய்கிறது.. - 
 சிறுகதை: 'நிர்வாணம்'!
 
 - உடுவை தில்லைநடராசா -
 
 
  வேலையை 
  முடித்துக்கொண்டு காரியாலயத்திலிருந்து வெளியேறிய சந்திரன் யோர்க் வீதி வழியாக 
  நடந்து வந்து கொண்டிருந்தான். யோர்க் வீதியின் இரண்டு பக்கங்களிலும் நிறுத்தி 
  வைக்கப்பட்டிருந்த கார்கள் சந்திரனின் கண்களைக் கவர்ந்தன. ‘பென்ஸ்’ ‘ஹம்பர்’ 
  ‘பிளைமவுத்’ ஒவ்வொரு காரின் பெயரையும் வாசித்துக்கொண்டு வந்த சந்திரனின் மனம், 
  “சீ..ஒரு சுவீப் விழுந்துதெண்டாலும் என்ன சுதியாக ஓடித்திரியலாம்” என்று 
  எண்ணியது. 
 “பெரிய கார்தான் இல்லாட்டிலும் ஒரு மொரிஸ் மைனர் இருந்தாலும் காணும்” என 
  யோசித்துக்கொண்டு வந்த சந்திரனின் தோளை உரிமையுடன் ஒரு கரம் பற்றியது. அந்தக் 
  கரத்துக்குரிய பாலன், “ஹலோ” என்றான்.
 
 “ஐ சே...நீயா?” சந்திரனின் குரலில் அலட்சியம் நிறைந்திருந்தது.
 
 “ஓ..நான் தான். என்ன கார்களைப் பார்த்துக் கொண்டு போறாய்? உந்தக்கார்கள் விலைக்கு 
  விக்கிறயில்லை” பாலன் பகிடியாகச் சொன்னான்.
 
 “வித்தாலும் நான் வாங்க மாட்டன். எங்கடை இரு நூறு ரூபாச் சம்பளத்திலை ஒரு 
  சைக்கிளை வாங்க முடியாமலிருக்கு. பிறகு எப்படிக் கார் வாங்க முடியும்?” சொல்லிக் 
  கொண்டே வந்த சந்திரன் ஒரு காருக்குப் பக்கத்தில் நின்ற சிறுமியைக் காட்டி “சீ தற் 
  கேர்ள்” என்றான்.
 
 காருக்குப் பக்கத்தில் நின்ற சிறுமியின் மேல் பாலனின் பார்வை பதிந்தது. அடுத்த 
  நிமிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டே, “பெரிய கன்றாவியாக இருக்கு: 
  அன்சகிக்கெபிள்” என அருவருத்தான். சிறுமி ஆடையெதுமின்றிப் பிறந்த மேனியுடன் 
  நின்று கொண்டிருந்ததைப் பார்ப்பதற்கு சந்திரக்கும் பாலனுக்கும் அருவருப்பாக 
  இருந்தது.
 
 நாலு அல்லது ஐந்து வயது தான் இருக்கும் அச்சிறுமிக்கு.
 
 நிர்வாணமாக நின்ற சிறுமியைப் பார்ப்பதற்கு மற்றவர்கள் விரும்பாவிட்டாலும், 
  மற்றவர்களைப் பார்ப்பதற்கு சிறுமி அருவருக்கவில்லை. ஓடிவந்து சந்திரனின் காலைத் 
  தனது சிறு கையால் சுரண்டிக் கொண்டே, “ஐயா...ஐயா ஒரு அஞ்சு சதம் தாங்கோ” என்றாள்.
 
 சந்திரன் தன் கைகளால் சிறுமியின் கையைத்தட்டிவிட்டு ‘சீ அங்காலை போ” எனத் 
  தள்ளினான்.
 
 சந்திரனால் தள்ளி விடப்பட்ட சிறுமி, ஐயா ஐயா வென்று பாலனின் காலைப் 
  பிடித்துக்கொண்டு கையை நீட்டினாள்.
 
 “என்னட்டைக் காசில்லை...சும்மா கரைச்சல் படுத்தாதை” பாலனும் சின்னப் பெண்ணைத் 
  தள்ளிவிட்ட போது அவள் நிலத்தில் விழுந்து விட்டாள்.
 
 நிலத்தில் விழுந்தவளுக்கு எங்கிருந்துதான் துணிச்சலும் அறிவும் வந்ததோ 
  தெரியவில்லை.
 
 “ஐயா காசுதர விருப்பமில்லையெண்டால் விருப்பமில்லையெண்டு சொல்லுங்கோ. ஏன் 
  காசில்லையெண்டு பொய் சொல்றீங்க?” துடுக்காகக் கேட்டுக்கொண்டே நிலத்திலிருந்து 
  எழும்பியவள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள்.
 
 “ஏன் காசில்லையெண்டு பொய் சொல்லுறீங்க” சிறுமி சொன்னது பாலனுக்கும், 
  சந்திரனுக்கும் முகத்திலடித்ததைப் போலிருந்தது.
 
 “பார்த்தியா மைச்சான்! அந்தப் பிச்சைக்கார நாய் சொல்லுறதை..” – தன்னை ஒரு சிறுமி 
  அவமானப்படுத்திவிட்டாளே என்ற வேதனை பாலனுக்கு,
 
 “உதுகள் உப்படித்தான் சில தாய் தகப்பன் தங்கடை விருப்பப்படி பெத்துத்தள்ளி 
  விடுகிறது. பிள்ளையளின்ர சாப்பாட்டைப் பற்றியோ, உடுப்பைப் பற்றியோ, படிப்பைப் 
  பற்றியோ அவைக்கு அக்கறையில்லை. பெத்தால் போதும் என்ற நினைப்பு சில பேருக்கு 
  பிள்ளையளைச் சரியானபடி வளத்தால் அதுகள் ஏன் இப்படி றோட்டு வழிய வாறவை, 
  போறவையட்டைக் கையேந்திக்கொண்டு திரியப்போகினம்? இதுகளைப்பற்றிக் பெத்தவை 
  யோசிக்கிறயில்லை?” – நாலும் தெரிந்தவன் போலப் பேசினான் சந்திரன்.
 
 “அவை பெத்தாலென்ன- விட்டாலென்ன- அவள் நிலத்திலை கிடந்து கொண்டு சொன்னதைக் 
  கேட்டியா? முளைக்கக்கு முந்தி அந்தச்சின்னன் விண்ணானிச்சதைப் பார்க்க எனக்கு ஏதோ 
  மாதிரிக் கிடக்கு” வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் பாலனின் மனதைப் 
  பிரதிபலித்தன.
 
 “அந்தப் பெட்டைக்கு அப்படிச் சொல்லச் சொல்லித் தாய் தகப்பன் சொல்லிக் 
  குடுத்திருப்பினம். அதைப்பற்றி வொறி பண்ணாதை” என்றான் சந்திரன்.
 
 சிறுமியைப் பற்றிய சிந்தனையோடு நடந்து கொண்டிருந்த சந்திரனையும், பாலனையும் 
  கடைச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஆங்கில சினிமாப்பட நோட்டீஸ் தன் பக்கம் 
  திருப்பியது.
 
 “மைச்சான் நல்லவேளை. நான் இந்த இங்கிலிஸ் படத்துக்குப் போகவெணுமெண்டு யோசித்துக் 
  கொண்டு வெளிகிட்ட நான் அதுக்கிடையில் உடுப்பில்லாமல் நிண்ட பெட்டையைக் கண்ட உடனை 
  மறந்து போனேன்” ஆங்கிலப் படத்திற்கு போக வேண்டுமென்றான் சந்திரன்.
 
 “எப்பிடி மச்சான், நல்ல படமா?” பாலன் படத்தைப்பற்றி அறியத் துடித்தான்.
 
 “பைன் சோவா இருக்கும் மச்சான். யூ னோ வை? லாஸ்ற் வீக் நான் ஒரு இங்கிலிஸ் படம் 
  பார்த்தபோது சோர்ட்ஸ் போட்டுக் காடடினவங்கள். ஹீரோயின் புல் நேக்கட்டிலை ஒரு 
  டான்ஸ், பைன் மச்சான் பைன்.” ஆங்கிலப் படங்களைப் பற்றிக் கதைப்பதே தனக்குப் 
  பெருமை என நினைப்பவன் சந்திரன். அதனால் தான் படங்களைப் பற்றி பேசும் போது தன்னால் 
  முடிந்தளவுக்கு இடையே ஆங்கிலச் சொற்களைப் புகுத்திக் கதைப்பான்.
 
 பாலனுக்கும் அந்தப் படத்தின் மேல் விருப்பம் பிறக்கவே, “நானும் வரலாம்தான்: 
  வேறையொரு அப்பொயின்மென்ற இருக்கு” என்றான்.
 
 சந்திரன் அலட்சியமாக, அதைக் கான்ஸல் பண்ணிப் போட்டு வா மைச்சான். முந்த நாள் 
  எங்கடை கிறிஸ்ரி பாத்தவர் பைன் ஸ்றிப்ரீஸ் டான்ஸ்ஸாம்...நேற்றும் மிஸ் 
  பண்ணியிட்டன். இண்டைக்கு எப்படியும் பார்க்க வேணும்” என்றான்.
 
 “சரி மைச்சான்: ரையுமாகுது. கெதியாக நட: இல்லாட்டி டிக்கட் எடுக்கேலாது” சந்திரனை 
  விரைவாக நடக்கச் சொல்லிக் கொண்டு , தானும் நடந்தான் பாலன்.
 
 “போன மாதமும் அவளின்ர படமொண்டு பார்த்தனான். அவளின்ர நேக்கட் டான்ஸ் பார்த்தாலே 
  போது அதுக்கே காசு குடுக்கலாம். அவளைப் போலை ஒருத்தரும் டான்ஸ் ஆடமுடியாது. 
  பார்த்த படங்களின் பெயரும் தெரியாது. பார்க்கப்போகும் படத்தின் பெயரும் புரியாது. 
  நடனமாடுபவளின் பெயரும் சரியாக உச்சரிக்க முடியாததால் அவள் என்றே குறிப்பிட்டான் 
  சந்திரன். ஒருவரிடம் வெறுக்கும் காட்சியை இன்னொருவரிடம் காணத்துடிப்பதுதானே மனித 
  மனம். வறுமையினால் நிர்வாணத்துடன் நின்ற சிறுமியை “ஆபாசம், அன்சகிக்கேபிள்” என்று 
  அருவருத்த சந்திரனும், பாலனும் எவளோ ஒருத்தி நிர்வாணமாக நடனமாடுகிறாளாம் அதைப் 
  பார்க்க ஓடுகிறார்கள், என்ன விபரிதமான உலகம் இது?
 
 கலைமலர் 1969; மறுபிரசுரம்ஈழநாடு 1974; இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.
 
 uduvai@gmail.com
 |