| 
  திருவனந்தபுரம்!-அழகியசிங்கர் -
 
 [எழுத்தாளரும் , 'நவீன விருட்சம்' ஆசிரியருமான் அழகியசிங்கர் தற்போது அதனை 
  வலைப்பதிவிலும் கொண்டுவந்துள்ளதாக
 அறிவித்துள்ளார். முகவரி: 
  
  http://navinavirutcham.blogspot.com . 
  பொதுவான தளமென்றும், அனைவரும் பங்கேற்கவென்றும், கருத்துகளைப் பகிரவேண்டுமென்றும் 
  கேட்டுக்கொண்டுள்ளார். அவரது மின்னஞ்சல் முகவரி: 
  navina.virutcham@gmail.com. அவரது 
  வலைப்பதிவிலிருந்து 'திருவன்ந்தபுரம்' என்னும் கட்டுரை இங்கு மீள்பிரசுரம் 
  செய்யப்பட்டுள்ளது. - பதிவுகள்]
 
 
  கடந்த 
  வாரம் முடிவில் (29 மே மாதத்திலிருந்து 2ஆம் தேதி ஜூன் வரை) சென்னையைவிட்டு, 
  குடும்பம் சகிதமாக கொச்சின் சென்றோம். சனிக்கிழமை (30.05.2008)அன்று 
  திருவனந்தபுரம் ஒருநாள் மட்டும் தங்கியிருந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகில் 
  ஒரு ஓட்டலில் அறை எடுத்திருந்தோம். சுற்றிப் பார்ப்பதோடல்லாமல், நீல பத்மனாபனை 
  பார்க்க நினைத்தேன். கூடவே அவரை அழைத்துக் கொண்டு நகுலன் வீட்டிற்கும் போக 
  உத்தேசம் இருந்தது. அவருக்கு நான் வந்திருப்பதைச் சொன்னவுடன், என் உற்சாகம் 
  ரொம்பவும் குறைந்துவிட்டது. அவரும் free ஆக இருக்கவில்லை. 
 அவரைப் பார்த்துவிட்டு, நகுலன் வீட்டைப் பார்க்கும் எண்ணத்தில், நான் மட்டும் ஒரு 
  ஆட்டோ வில் நகுலன் வீடை மட்டும் போய்ப்
 பார்த்தேன்.
 
 பொதுவாக ஒரு இடத்திற்கு வரும்போது, அங்கு எழுத்தாளர்கள் என்று யாராவது இருந்தால், 
  பார்க்க வருகிறேன் என்று
 சொன்னால்,உற்சாகம் குறைந்த உணர்வே ஏற்படுகிறது.
 
 பல ஆண்டுகளுக்கு முன்பு, நகுலனிடம், 'உங்களைப் பார்க்க திருவனந்தபுரம் 
  வருகிறேன்,' என்று குறிப்பிட்டேன். கேட்டவுடன்,
 'ஐய்யயோ..என் வீட்டில் தங்க முடியாது,' என்று பதறினா. எனக்கோ என்னடா இது என்று 
  தோன்றியது. நான் அவரைப் பார்க்க
 திருவனந்தபுரம் வருகிறேன் என்று சொன்னேனே தவிர, அவர் வீட்டில் தங்க வருவதாகச் 
  சொல்லவில்லை. அப்படியே வந்தாலும்,
 ஊரையும், அவரையும்தான் பார்க்க வருவதாகத்தான் அர்த்தம் ஆகும். ஒரு ஓட்டலில் அறை 
  எடுத்துக்கொண்டுதான் அவரைப் பார்க்க
 முடியும். அதுவும் ஒருசில மணி நேரங்கள் மட்டும்தான் பேசவும் முடியும்.அவருடனே 
  பேசிக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில்
 போரடிக்கத் தொடங்கிவிடும்.அவர் அப்படிச் சொன்னதாலோ என்னவோ நகுலனைப் பார்க்க 
  திருவனந்தபுரமே வரவில்லை.
 
 நானே எதிர்பார்க்காதபடிக்கு இந்த முறை வந்தபோது நகுலன் இல்லை.இறந்து விட்டார். 
  எனக்கோ அவர் வீட்டையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் இருந்து 
  கொண்டிருந்தது.
 
 நீல பத்மநாபன் சொன்னபடி அந்தத் தெருவின் முனையில் உள்ள கடையில் டி கே துரைசாமி 
  வீடு எங்கே என்று கேட்டவுடன், அந்த
 இடத்தைச் சுட்டிக் காட்டினார் கடையில் இருந்த பெண்மணி.
 
 நான் அவர் வீட்டிற்கு ஆட்டோ வில் போய்ப் பார்த்தபோது, இருட்டி 
  விட்டது.இறங்கியவுடன் மழை. நனைந்தபடி அவர் வீட்டு கேட்டைப்
 பிடித்தபடி அவர் வீட்டைப் பார்த்தேன். ஓட்டு வீடாக இருந்தது. ஆனால் பிரமாதமான 
  இடத்தில் இருந்தது. நான் புகைப்படம்
 எடுத்துக்கொண்டேன். ஆனால் இருட்டில் அது சரியாக விழவில்லை.
 
 கேரளம் முழுவதும் சுற்றிப் பார்த்த அனுபவம் சந்தோஷமாக இருந்தது. மழை. சுற்றிலும் 
  தண்ணீர். தண்ணீர். பல வீடுகள் தண்ணீர் ஓடும் கரையோரமாக இருந்தன.
 
 சென்னையில் குழாயைத் திறக்கும்போது, போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற 
  சந்தேகத்துடன் திறக்க வேண்டியிருக்கிறது. அங்கேயும் பரபரப்பு இருக்கிறது. இரவு 
  ஒன்பது மணிக்கெல்லாம் எல்லாக் கடைகளையும் மூடி விடுகிறார்கள். காலையில் 
  மெதுவாகத்தான் கடைகள் எல்லாம் திறக்கப்படுகின்றன.
 
 சென்னையோ இரவு முழுவதும் விழித்துக்கொண்டே இருக்கும். சந்தோஷமான பயணம்.
 
 navina.virutcham@gmail.com
 |