இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2009 இதழ் 115  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
நினைவுகளின் தடத்தில் - (31 & 32)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்அந்த டவுன் ஹைஸ்கூலில் தான் தி.ஜானகிராமன் ஆசிரியராக வேலை பார்த்தார். அப்போது அவர் அங்கு வேலை பார்த்தாரா என்பது
எனக்குத் தெரியாது. அவரையே நான் பின்னால் தான் தெரிந்து கொள்ள இருந்தேன். டவுன் ஹைஸ்கூலில் அவரிடம் படித்த மாணவராக தன்னை தி.ஜானகிராமனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார் இந்திரா பார்த்த சாரதி. இது தி.ஜானகிராமன் தில்லி வானொலி நிலையத்திற்கு சென்னையிலிருந்து இட மாற்றலாகி வந்த புதிதில். 1947-48 ல் அவர் அங்கு ஆசிரியராக இருந்திருக்கக் கூடும். கும்பகோணம் மண்ணில் அடியெடுத்து வைத்தாலே, இப்போதெல்லாம் ஜானகிராமன் நினைவு வராமல் போகாது. அவரது மிகச் சிறந்த சிருஷ்டி, magnum opus, மோகமுள் கும்பகோணத்தைத் தான் மையமாகக் கொண்டிருக்கிறது. நான் தாற்காலிகமாக படிப்பதற்காக குடி வந்த இடம் மகாமகம் மேற்குத் தெரு. தினம் அந்தக் குளத்தைத் தான் தரிசனம் செய்துகொண்டிருந்தேன். அந்த குளத்தின் மகாத்மியத்தோடு தான் மோகமுள்ளே தொடங்குகிறது.

"அன்யே தேசே க்ருதம் பாபம் வாரணாச்யாம் விநச்யதி
வாரணாஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி"

உலகத்திலே எந்த மூலையிலே செய்யற பாபம் எல்லாம் காசிக்குப் போய் முழுகினால் தீர்ந்துடும். காசிலே செய்த பாபம் போக
கும்பகோணம் போய் முழுக்குப் போடணும். ஆனால் கும்பகோணத்திலே பண்ற பாபங்களுக்கு வேறு எங்கும் போய் அலைய வேண்டாம். கும்பகோணத்திலேயே அதுக்கு விமோசனம் என்று இதற்கு வெத்திலை போட வந்தவர் பாஷ்யம் சொல்ல, வெத்திலைக் கடைக்காரர், "இந்த மகா மகக் கும்பிலேயா?" என்று கேட்கிறான்.

மகா மகக் குளம் கும்பியாகத் தான் நிரம்பி யிருந்தது. பச்சைப் பசேலென்று. பாசி பிடித்து. அதில் யாரும் குளித்துப் பார்த்ததில்லை. 12
வருஷத்திற்கொரு தடவை அந்த பாசியை இறைத்துக் கொட்டி, புதிதாக லாரிகளில் நீர் நிரப்பித் தான் குளியல் நடக்கும் என்பார்கள். நான் ஒரு தடவை கூட அந்தக் காட்சியைக் கண்டதில்லை. 1948-லேயே அது பாசி பிடித்த குளமாக இருந்தது என்றால் அது ஆச்சரியம் தான். உடையாளூரில் சிவன் கோவிலுக்கு எதிரே இரண்டு குளங்கள் அடுத்தடுத்து. ஒன்று மாடு கன்று குளிப்பாட்ட. மற்றது மனிதர்கள் குளிக்க. அந்த நாளில் அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டுதான் இருந்தார்கள். உடையாளுரிலிருந்து ஒரு ·பர்லாங் தூரத்தில் ஓடும் ஆற்றில் நான் குளித்திருக்கிறேன். படி இறங்கினால் மீன்கள் கடிக்கத் தொடங்கிவிடும். அதற்குப் பழக்கப் படுத்திக்கொள்ளவேண்டும். ஆற்று நீர் சுத்தமாகத் தான் இருந்தது. ஊரில் எல்லோரும் காவேரி என்று தான் சொல்வார்கள். ஆற்றில் தண்ணீர் வரும் நாட்களில் விடி காலையில் எழுந்து காவேரிக்குப் போய் குளித்துவிட்டு தண்ணீர் நிரப்பிய குடத்தில் இடுப்பில் வைத்துக்கொண்டு ஈரப் புடவையோடு வருவார்கள். ஆண்களும் ஈர வேட்டியோடு ஜபத்தை முணுமுணுத்துக்கொண்டே வருவதைப் பார்க்கலாம். அது ஒரு ரம்மியமான காட்சி. கடந்த ஒரு கால கட்டத்தை அடியாளப்படுத்தும் காட்சியது.

அந்தக் காலத்திலேயே மகா மகக் குளம் அப்படித் தான் இருந்தது என்றாலும், கும்பகோணத்தை அப்போதைய கால கட்டத்தில் நினைத்துப் பார்க்கும் போது, அதுவும் ஒரு விதத்தில் ரம்மியமாகத் தான் இருக்கிறது. "கும்மாணம் கைச்சீவல், ரவா தோசை, தேங்காய் சட்னி, பட்டுப் புடவை, பேச்சிலே கெட்டிக்காரத்தனம், ராமசாமி கோயில் தூண் சிற்பங்கள்" என்று வெத்திலைக் கடையில் கும்பகோணம் மகாத்மியம் பற்றி வாதாடுகிறவர் சொல்லிக்கொண்டே போகிறார். நம்மை முகம் சுளிக்க வைக்கும் விஷயங்களும் உண்டு. வியந்து மயங்க வைக்கும் விஷயங்களும் உண்டு தான். அந்தந்த சமயத்து அனுபவத்தைப் பொருத்தது. தினம் காலையில் பள்ளிக்கூடத்துக்கு உடையாளூரிலிருந்து வயல் வரப்புகளின் மீது நடந்து வரும்போது தூரத்திலிருந்தே கும்பகோணத்தின் கோயில் கோபுரங்கள் நம்மை அழைக்கும் தோற்றம் ஒரு வசீகரம். இப்போது ஒரு அரை நூற்றாண்டு காலம் கழிந்த பிறகும் அதை நினைத்துப் பார்க்கும் போது ஐந்தரை மைல் நடந்தது ஒரு சிரமாக நொந்து கொண்டதில்லை நான். அதுவும் சுகமான காரியமாகத் தான் எனக்கு இருந்தது. வானைத் தொட முயலும் அல்லது நம் கண்களுக்கு வானைச் சுட்டி உயரும் கோபுரங்கள் எனக்கு என்றும் ஒரு வசீகரமான காட்சி தான். இன்றும். ஒரு இடத்தில் கழித்த அனுபவங்களின் குணத்தை அந்த இடமும் பெற்று விடுகிறதோ என்னவோ. தி.ஜானகிராமனின் 'மோகமுள்" படித்த என் நண்பர்கள் பலர், "கும்பகோணம் போய் பார்க்கணும்டாலே, ஏண்டா எல்லாரும் ஜமுனாக்களா இருப்பாங்களோ அந்த ஊர்லே" என்று கண்கள் மலர் வியப்போடு கேட்பார்கள். அது ஜானகி ராமன் கண்ட கும்பகோணம். ஜமுனா இருந்த துக்காம்பாளயத் தெரு ஒரு இடுங்கின இரு புறமும் நீண்ட பலகட்டுகள் கொண்ட வீடுகள் நிறைந்த தெரு. தெருவா, சந்தா என்பது நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டியது. ஒன்றிரண்டு வீடுகளுக்குள் போய்ப் பார்த்திருக்கிறேன். ஜானகிராமன் ஜமுனாவின் வீட்டை வர்ணித்தது போலத் தான் இருக்கும். அவை ஒரு நாகரீகத்தின் பாரம்பரியத்தின், சொத்து, அடையாளங்கள் என பராமரிக்கப்பட வேண்டும். நம் பழங்கால கட்டிடத் தொழில் நுட்பத்தின்
சாட்சியங்கள். சுற்றுப்புறத்திற்கேற்ப வாழ, கட்டிடம் கட்டிக்கொள்ள நாம் கற்று அழகாக வாழ்ந்ததன் அடையாளங்கள். கோடையில்
எத்தனை சுட்டிரிக்கும் பகலிலும் உள்ளே வெப்பமோ புழுக்கமோ இராது. நான் இருந்த காலத்தில் உடையாளூரில் மின் இணைப்பு
இருந்ததில்லை. எந்தக் கோடையிலும் வீட்டினுள் மின் விசிறியின் தேவையை நாங்கள் உணர்ந்தது கிடையாது. ஜமுனா இருந்தது
போன்ற வீடுகள் அழகானவை. வாழ சுகம் தருபவை. ஆனால் கும்பகோணத்தில் ஒரு ஜமுனாவைத் தேடினால் ஏமாறத் தான்
வேண்டியிருக்கும். அது ஜானகிராமனின் எழுத்து தந்த கொடை. எது எப்படியாக இருந்தாலும், ஜானகிராமனின் பாத்திரங்கள் நடமாடிய
தெருக்களைப் பார்க்கலாம். பார்க்கப் போனால், கடைசியில் மோகமுள்ளே ஜானகிராமனது சுய சரிதையின் சில கூறுகளிலிருந்து எழுந்தது தானே. அங்கு நாமும் நடந்து மோகமுள்ளின் காட்சிகள் தரும் சுகத்தில் ஆழலாம். இப்போதும் துக்காம் பாளையத் தெருவும் சரி, பக்த புரி அக்ரஹாரமும் சரி, வெளித்தோற்றத்திலும், உள்கட்டமைப்பிலும் இந்த ஐம்பது வருஷங்களில் அதிகம் ஒன்றும் மாறியிராது. அதிகம் மின் இணைப்பும் அது கொண்டுவரும் சில சிறிய மாற்றங்களைத் தவிர. அவை அமைப்பின், வெளித் தோற்றத்தின் மாற்றங்கள் அல்ல.

ஜானகி ராமன் என்ன? உ.வே. சா வாழ்ந்து மறைந்து போன தமிழ்க் காப்பியங்களுக்கு புனர்வாழ்வு தந்த பக்தபுரி அக்ரஹாரம் கற்பனை
வாழ்வை அல்ல நடந்து முடிந்த ஒரு காலத்தை நமக்கு நினைவின் முன் நிறுத்தும். அவர் தமிழாசிரியராக இருந்த கல்லூரியே ஒரு
அழகு. காவேரியின் மற்ற கரையில். இடையில் ஒரு பாலம். மாணவர்கள் படகு ஓட்டிக்கொண்டிருந்ததையும் அந்நாட்களில் நான்
பார்த்திருக்கிறேன். இக்கரையில் பக்த புரி அக்கிரஹாரம் நீளும். முதலில் ஒரு சின்ன வீ ட்டில், 15' அடி அகலம் 40' அடி நீளம் கொண்ட
ஒரு சின்ன வீடு. மூன்றரை ரூபாய் வாடகை. பின்னர் அவர் ஆராய்ச்சிகள் பெருக, ஒரு பெரிய வீடு தேவைப்படுகிறது. அதே தெருவில் இன்னொரு வீடு. அந்த வீடுகளை இப்போது அடையாளம் காண முடியுமா தெரியாது. அப்போது நான் உ.வே.சா. பற்றி அறிந்தவனில்லை. நான் படித்த பாணாதுரை ஹைஸ்கூலின் ஹெட் மாஸ்டருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த ஏ. ராஜகோபலய்யங்கார் அங்கு தான் குடியிருந்தார். அந்த தெருவில் ஊரின் பெரிய மனிதர்கள் குடியிருந்தார்கள். என் கண்ணில் வக்கீல்கள் தான் அதிகம் தென்பட்டனர். காரணம், பக்த புரி அக்கிரஹாரத்தின் ஒரு முனை காலேஜுக்கு இட்டுச் செல்லும். மறு முனை கும்பகோணம் கோர்ட்டுகள் இருந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். உ.வே. சா.வின் தகப்பனார், காலேஜுக்குப் போவதற்கு சௌகரியமாக இருக்கட்டும் என்று தான் பக்த புரி அக்கிரஹாரம் பக்கத்தில் என்று அங்கு வீடு வாடகைக்கு எடுத்தார். இது 1890-ம் வருட ஆரம்பம். சென்னைப் பல்கலைக் கழகம் அழைக்கும் வரை அவரது வாசம் அங்குதான் தொடர்ந்தது. கும்பகோணம் கோர்ட்டில் திருவாடுதுறை ஆதீனம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று ஆதீனத்துக்கு சாதகமாக தீர்ப்பு ஆனதைச் சொல்ல ஆதீனத்தின் ஆள் ஒருவன் கோர்ட்டிலிருந்து ஓடோடி வந்து காவிரியை நீந்திக் கடந்து செல்வதை, தான் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாகப் பார்த்ததை ஆதீனத்திடம் உ.வே.சா. சொல்லி, அவனுக்கு ஆதீனத்திடமிருந்து முன்னர் கிடைக்காத சன்மானத்தை வாங்கித் தந்தது பற்றி உ.வே. சா தன் என் வரலாற்றில் சொல்கிறார்.

உ.வே.சா. என் வரலாறு என்றெல்லாம் கும்பகோணத்தின் சந்தர்ப்பத்தில் பேசும்போது, இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.
நினைவுக்குவரும் காரணத்தால் சொல்கிறேன். சொல்வது சரிதானா என்று சரி பார்ப்பதற்கு இப்போது நம் காலத்தில் இன்னொரு உவே.சா. இல்லை. கும்பகோணம் காந்தி பார்க் எதிரில் ஒரு பழைய கட்டிடம் உண்டு. அதை டவுன் ஹால் என்று சொல்லிக்
கேள்விப்பட்டிருக்கிறேன். டவுன் ஹால் என்றால் அப்படி ஒரு தோற்றம் கொண்ட கட்டிடம் தான். நான் உள்ளே சென்று பார்த்ததில்லை. பல பெரியவர்கள் சாயந்திர வேலைகளில் அங்கு போவதையும் சிலர் மேஜையைச் சுற்றி பேசிக்கொண்டி ருப்பதையும் கண்டிருக்கிறேன். இதெல்லாம் போக, மிக் முக்கியமான விஷயம், கோபால் ராவ் லைப்ரரி என்றும் ஒரு போர்டு அங்கு பார்த்த நினைவு. "இவர்கள் எல்லாம் யாரு? இங்கே என்ன நடக்குது?" என்று பேச்சு வாக்கில் என் பள்ளி நண்பர்களைக் கேட்டதுண்டு. "அவங்கள்ளாம் பெரிய மனுஷங்கடா. ஈவெனிங் வந்து இங்கே சீட்டாடுவாங்க" என்று ஒரு நண்பன் சோல்லக் கேட்டிருக்கிறேன். சரி, ஆனால் உ.வே.சா இங்கு எதற்காக வருகிறார்? உ.வே.சா தன் 'என் வரலாறு" புத்தகத்தில் 1882 லோ என்னவோ அவர் தமிழாசிரியாக இருந்த கும்பகோணம் கல்லூரி முதல்வர் (Principal) கோபால் ராவுக்கு மாற்றலாகி சென்னை ப்ரெசிடென்ஸி காலேஜில் சேர இருக்கிறார் என்று அவரைப் பிரியும்
துக்கத்தோடு சொல்லிச் செல்கிறார். அதற்கு முன் கும்பகோணம் என்னும் நகரத்திற்கு, நகரத்தின் பெரிய மனிதர்கள் மாலை நேரங்களில் கூடிப் பேசத் தக்க ஒரு நகர மண்டபம் இல்லையே என எண்ணி அதற்கான நிலம் வாங்கி கட்டிடம் கட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அன்றைய முதல்வரான கோபால் ராவ், முன்னாள் முதல்வரான போர்ட்டர் துரையின் பெயரில் அந்த நகர மண்டபம் இருக்கவேண்டும் என்று சொல்கிறார். கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருமே கோபால் ராவை மிகப் பெரிய ஸ்தானத்தில் வைத்து மரியாதை செய்தனர். பள்ளி ஆசிரியர்களிலே தலைமை ஆசிரியர் என்ற ரகம் இல்லை அந்த ஸ்தானம். கோபால் ராவ் நிறைந்த படிப்பாளி. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். ஆக ஒருவேளை அன்று அவர்கள் கலந்து பேசி உருவாக்க முயன்ற டவுன் ஹால் அது தானோ, ஒரு வேளை அதில் அமைந்த லைப்ரரிக்கு கோபால் ராவின் பெயரைச் சூட்டியுள்ளார்களோ என்று ஒரு எண்ணம். எப்படி ஒரு கல்லூரி ப்ரின்ஸிபல் என்று இன்று நாம் எண்னக்கூடும் ஒரு மனிதரின் பெயரும் பெருமையும் அவர் நினைக்காமலேயே அன்றும் இன்றும் தம் நிலை பெற்றுவிடுகிறது என்று நான் ஆச்சரியப்பட்டுப் போகிறேன்.

/4.11.08

நினைவுகளின் தடத்தில் - (32)

வெங்கட் சாமிநாதன்இவையெல்லாம் பின்னர் நான் தெரிந்து கொண்டவை. படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு பிரசித்தமான இடங்களாகத் தெரிய வந்தவை, உடையாளூர் வாசிகளுக்குச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ளக் கூடியவை சில உண்டு. ஒன்று, ஒரு காலத்தில் காஞ்சியிலிருந்து கும்பகோணத்துக்கு இடம் மாறிய சங்கர மடம். அது காவிரிக்குப் போகும் வழியில் இருந்தது. அந்த தெருவுக்குப் பெயரே மடத்தெரு தான். மற்றது, அத்தெருவிலிருந்து பாணாதுரை ஹைஸ்கூலுக்குப் போக வலது பக்கம் திரும்பினால் பட்டமங்கலத் தெருவைக் கடந்தால் பாணாதுரை ஸ்கூல் வந்து விடும். அந்தத் தெருவில் தான் ஹைஸ்கூலின் ஹெட்மாஸ்டர் சீனிவாச ஐயங்கார், அவர் பெயரை நான் நினைவில் சரியாகத் தான் வைத்திருக்கிறேன் என்றால், வீடு இருந்தது. அவர் தான் என் க்ளாஸ் ஆசிரியரும் கூட. நான் ஒரு முறை வகுப்பில் கவனமில்லாது இருந்த போது, "இந்த சாமிநாதன் இங்கே இருக்கவேண்டியவன் இல்லைடா. சங்கர மடத்தில் இருக்க வேண்டியவன். எப்போ பாரு, தியானம் தான்." என்று அவர் வகுப்பில் என்னைச் சுட்டி விரலை நீட்டிச் சொன்ன போது, வகுப்பில் எல்லோரும் சிரித்தார்கள். அவருக்கு என்னிடம் கொஞ்சம் கரிசனம் உண்டு. தினம் கிராமத்திலிருந்து வர போக 11 மைல் நடக்க வேண்டியவன் என்ற காரணத்தால். பின்னால் நான் மகா மகக் குளத்தெருவுக்கு வந்து விட்டேன் என்று அவரிடம் சொல்ல வில்லை. ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால், மறுபடியும் நடை தானே. எப்போ மகா மகக் குளத்தெரு வாசி, எப்போ உடையாளூர் வாசி என்று சொல்லிக்கொண்டா இருக்க முடியும்? பட்டமங்கலத்தெருவில் இருந்த ஒரு வி.ஐ.பி. டாக்டர் மகாலிங்கம். அவர் அந்த வட்டாரத்தில் மிகப் புகழ் பெற்றவர். கண் டாக்டர் என்று ஞாபகம். உடையாளூர் வரைக்கும் டாக்டர் மகாலிங்கத்தின் புகழ் பரவியிருந்தது.

இன்னொரு முக்கியமான தெரு டபீர் தெரு. யார் இந்த டபீர் என்று எனக்குத் தெரிந்ததில்லை. யாருக்கும் தெரிந்ததில்லை என்று
சொல்லவேண்டும். தெரிந்துகொள்ளுவது அவசியம் என்று யாரும் நினைக்கவில்லை. இது ஏதோ முஸ்லீமின் பெயராக ஒலித்தாலும்,
அந்த தெருக்கள் எதிலும் முஸ்லீம் யாரும் குடியிருந்ததாகத் தெரியவில்லை. இருந்தால் அது தனித்துத் தெரியும். உண்மையில் டபீர்
பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட தெருக்கள். டபீர் கிழ்க்குத் தெரு, டபீர் நடுத்தெரு இப்படி. நகரின் மத்தியில் உள்ளவை. நடுத்தர மக்களும்
அதற்குச் சற்று மேற்பட்ட மக்களும் வசிக்கும் இடம். நான் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் ஒரு சில தடவைகளே அந்தத்
தெருக்களுக்குள் நுழைந்திருக்கிறேன். கும்பகோணத்தில் முதல் அடி எடுத்து வைத்ததே டபீர் தெருவொன்றில் தான். பாணாதுரைப்
பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக மாமாவும் அப்பாவும் என்னை அழைத்துச் சென்றனர். யாரையோ முதலில் பார்த்து அவர் எங்களை
பாணாதுரை ஹெட் மாஸ்டரிடம் அழைத்துச் சென்றார். பின்னர் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நிலக்கோட்டையிலிருந்து
வந்திருந்த பாட்டியை அங்கு யாரோ ஒரு உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். பாட்டியை உள்ளே அழைத்துச் சென்று
உறவினர்களிடம் விட்டு விட்டு நான் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தேன். வீட்டில் இருந்த பெண்கள், ' பிள்ளையாண்டான் ரொம்ப வெக்கப்படறான் போலேருக்கே" என்று சொல்லிச் சிரித்துவிட்டு என்னை என் போக்கில் விட்டு விட்டார்கள்.

அந்தத் தெருக்கள் ஒன்றில் அடுத்தும், இது வரை கடைசியாகவும் காலடி வைத்தது, சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்.
அறுபது ஆண்டுகள் நிறைவை ஒட்டி சஷ்டி அப்த பூர்த்தி கொண்டாடுவதைப் போல, பீம ரத சாந்தி என்பது ஆயிரம் பிறை
பார்த்தவர்களுக்கானது என்பது அப்பாவின் பீமரத சாந்திக்கு வரும்படி எனக்கு அழைப்பு வந்த போது தெரிந்தது. இரண்டு நாட்கள்
கும்பகோணத்திற்கு வந்திருந்தேன். அப்போது கரிச்சான் குஞ்சு கும்பகோணத்தில் இருக்கிறார் என்பது தெரிய வந்தது. அவர் 1930-
40க்களின் கு.ப.ராவைக் குருவாகக் கொண்ட சிஷ்யகோடிகளில் ஒருவர். கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என தி.ஜானகிராமன்,
எம்.வி.வெங்கட் ராமோடு கரிச்சான் குஞ்சு மூன்றாமவர். இவர்களோடு சுவாமிநாதன் ஆத்ரேயனையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
தஞ்சையில் ஜவுளிக்கடையோ என்னவோ வைத்திருந்தார் என்று படித்த ஞாபகம். கரிச்சான் குஞ்சு, கு.ப.ராவிடம் கொண்டிருந்த அபார
சிஷ்ய பக்தியால், கரிச்சான் குஞ்சு என்று தன்னை இலக்கிய உலகம் அறிய விரும்பி அப்படி பெயர் வைத்துக்கொண்டார். கு.ப.ரா.வின்
புனைபெயர்களில் 'கரிச்சான்' என்பதும் ஒன்று. கரிச்சான் குஞ்சு பாண்டிச் சேரியில் இருந்தவர் கும்பகோணத்திற்கு வந்து டபீர் தெருவில் தங்கியிருக்கிறார் என்று தெரிந்தது. யார் சொன்னார்கள் என்பது எனக்கு நினைவில் இல்லை. அனேகமாக தஞ்சை பிரகாஷாக
இருக்கவேண்டும். அவரைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிற்று. அதுவும் இவ்வளவு கிட்ட கும்பகோணத்திற்கே வந்து விட்டதைக் கேட்ட பிறகு, நானும் விடுமுறையில் கும்பகோணத்தில் தங்கி இருக்கும்போது, அது இரண்டு நாட்களே ஆனாலும். ஜானகி ராமன் மறைந்தது அவரோடு பழகிய நினைவுகளைத் தொகுத்து யாத்ரா வில் ஒரு மலர் வெளியிட நினைத்து அதற்கு அவரோடு நெருங்கிப் பழகியவர்களை மாத்திரம் எழுதக் கேட்டிருந்தேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது கரிச்சான் குஞ்சு எழுதியது. மிகவும் நீளமானதும் கூட. நட்பின் அன்னியோன்னியத்தையும் ஆழத்தையும் அதில் காணலாம். மிகவும் ஆத்மார்த்தமாக, அனுபவித்து மனம் நெகிழ எழுதியிருந்தார் கரிச்சான் குஞ்சு.

அதிலிருந்து கரிச்சான் குஞ்சு எழுதியவற்றையெல்லாம் படித்தேன். அது வரை என் பாதையில் எதிர்ப்படாதவை அவை. தஞ்சை மண்,
சமஸ்கிருத புலமை, பழம் வாழ்முறைகளில் மதிப்பு, ஆசாரசீலம் எல்லாம் அவரைத் தனித்துக் காட்டின. ஸ்வாமிநாத ஆத்ரேயன்
கிருஷ்ண ப்ரேமியோடு பிற்காலத்தில் ஐக்கியமாகியதைப் போலல்லாது தன்னில் தன்னிறைவு காண்பவராக இருந்தார். நான் அவரைச் சந்தித்த பிறகு பின் வருடங்களில் தம் புரட்சிகரத்தை உரத்துக் கூச்சலிட்டுத் தெரிவிக்கும் இளைஞர் கூட்டம் அவரைச் சுற்றி வந்தது. பஞ்சக் கச்சமும் குடுமியும், மார்பின் குறுக்கே பூணூலும், சமஸ்கிருதப் புலமையும், தமிழ் காவியங்களில் ஆழ்ந்த ரசனையும் பழமை மதிப்புகளும் கொண்ட ஒரு ஜீவன், எப்படி இந்த இளைஞர் கூட்டத்தை எப்படிக் கவர்ந்தது என்பது எனக்குப் புரிந்ததில்லை. ஆனந்த வர்தனரின் த்வன்ய லோகத்தையும், தேவி ப்ரசாத் சட்டோபாத்யாயாவின் What is true and relevant in Indian Philosophy புத்தகத்தையும் அவர் மொழிபெயர்த்தார். இதெல்லாம் பின் நிகழ்வுகள். அவரை நான் டபீர் தெருவில் பார்க்கச் சென்ற போது, புதுச்சேரியிலிருந்து அவர் திரும்பியிருந்தார். ஒரு நீளமான இரண்டு கட்டு வீட்டின் இரண்டாம் பின் கட்டில், தாழ்வாரமும் அதை ஒட்டிய ஒரு அறையும் அவர் குடியிருப்பாக இருந்தது. கல்யாண வயதில் இரண்டு பெண்கள். அவர் காட்டிக் கொள்ளாவிட்டாலும் வறுமையும் அவரால் தாளமுடியாத பொறுப்புகளும் தெரிந்தாலும், அவர்கள் யாரும் அதனால் வாடியவர்களாகக் காட்டிக் கொள்ளவில்லை. எல்லோருமே மிக உற்சாகத்துடன் வெகு சகஜமாக, மலர்ந்த முகமும் சினேக பாவமும் பெருகப் பேசினார்கள். ஒரு மகரிஷி, ஒரு யோகி தன் பாட்டில், வெளி உலகை விட்டுத் தனித்து தன் ஏகாந்தத்தில் தன்னிறைவு கண்டு தன் ஆஸ்ரமத்தில் வாழ்வது போன்று ஒரு அமைதியுடன் அவர் உலகம் இருந்தது.

அந்த நாட்களில், நான் முன் சொன்னது போல, நான் விடுமுறையில் தெற்கே வருவது என்பது வருடாவருடம் நடப்பதில்லை.
சிலசமயங்களில் நான்கு வருடங்கள் கூட கடந்து விடும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என்று ரயில் பிரயாண சலுகை கிடைத்த
பின் தான் அந்த சலுகையை வீணாகக் கூடாது என்று கட்டாயம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கும்பகோணம் வருவது என்ற
பழக்கம் ஏற்பட்டது. கரிச்சான் குஞ்சு வைப்பற்றி, சாகித்ய அகாடமி வெளியிட்டு வந்த Encyclopaedia of India Literature-ல் எழுதினேன்.
அவருடைய பசித்த மானுடம் நாவலும், பாரதி பற்றி அவர் எழுதிய கண்டதும் கேட்டதும் புத்தகமும், ஏன் அவர் சிறுகதைத்
தொகுப்புகளும் தாம், என்னைப் பாதித்தன. என்னதான் எழுதியிருந்தாலும் அவர் அடக்கமும், தமிழ் விமர்சகர்களோ, வாசகர்களோ அவரைக் கண்டு கொள்ளாதது பற்றி எந்தக் கவலையும் அற்று இருந்த அவரது நிச்சலன மனம் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன. அந்த அமைதி ஒரு தவசியின் அமைதி.

ஆனால் இவையெல்லாம் பின்னைய சாமிநாதனின் உலகத்தைச் சேர்ந்தவை. டபீர் தெரு என்று சொன்னதும் அது இந்த கணத்தில்
எழுப்பபும் நினைவுகள் எல்லாம் பெருக்கெடுத்துவிட்டது தான் காரணம். அன்றைய 1947 சாமிநாதனுக்கு ஜானகி ராமனையும் தெரியாது. கரிச்சான் குஞ்சுவையும் தெரியாது. முன்னாலேயே சொன்னபடி என் வகுப்பு நண்பன் ஆர் ஷன்முகம் தயவில் ஓர் இரவு என்ற தடை செய்யப்பட்ட புத்தகம் வழியாக சிதம்பர ரகுநாதனைத் தெரியத் தொடங்கியிருந்தேன். பள்ளிக்கூட லைப்ரரியில் காலடி வைக்க எங்களுக்கு கொஞ்ச காலம் கிடைத்த சுதந்திரத்தில் கிடைத்த தமிழ் நாட்டுப் பெரியார்கள் என்ற புத்தகத்தின் மூலம் வ.ரா. அறிமுகமானார். அதில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து, சில மாதங்களுக்குப் பிறகு ஈ.வே.ரா பற்றி ஒரு சின்ன புத்தகமும் வ.ரா. எழுதியது வெளிவந்திருந்தது. இவற்றைத் தொடர்ந்து அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்ற தலைப்பில் சி.என். அண்ணாதுரை எழுதிய ஒரு சிறு புத்தகமும் வ.ராவைப் பாராட்டி வெளிவந்தது. ஈ.வே.ராவுக்கு இலக்கிய உலகத்திடமிருந்து கிடைத்த முதல் அங்கீகாரம் என்று வ.ரா. எழுதியதைச் சொல்ல வேண்டும். அதே போல வ.ரா. வின் திறந்த மனதுக்கும் பரந்த சிந்தனைக்கும் அவர் பிராம்மணர் என்பதையும் மீறிக் கழகத்தினரிடமிருந்து கிடைத்த முதலும் கடைசியுமான அங்கீகாரம், ஒரே அங்கீகாரம் அண்ணாவினது தான். கழகத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர் பிராம்மணர் என்பதையோ அதுகாரணமாகத் தாம் கொண்ட வெறுப்பையோ விடத் தயாராயில்லை.

அந்த நாட்களில் யோகி சுத்தானந்த பாரதியார் தமிழ் பற்றியும், தேச பக்தி பற்றியும் வெகு ஆவேசத்துடன் நிறைய எழுதி வந்தார். ஏழை
படும் பாடு என்ற தலைப்பில் Les Miserables- என்னும் ·ப்ரெஞ்சு நாவலையும் மொழிபெயர்த்திருந்தார். ரொமப தடி புத்தகம். பல
ஐரோப்பிய மொழிகளிலிருந்து புகழ் பெற்ற காவியங்களை அவர் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் புதுச்சேரி
வாசி. வை.மு.கோதை நாயகி அம்மாள் தன் நாவல்களை ஜகன் மோகினி என்ற மாதப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார். ஜகன்
மோகினி இதழ் ஒன்றில் யோகியார் கட்டுரை ஒன்றும் படித்த நினைவு இருக்கிறது. அது படிக்க சுய சரிதை போல இருந்தது. அவர் தமிழ் பற்றி ஆவேசத்துடன் எழுதிய எழுத்துக்கள் எல்லாவற்றையும் நானும் மிக ஆர்வத்துடன் மட்டுமல்ல ஆவேசத்துடன் படித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

வெங்கட் சாமிநாதன்/13.11.08 vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்