இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2008 இதழ் 98  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
நினைவுகளின் தடத்தில் - (3)
- வெங்கட் சாமிநாதன் -

வெங்கட் சாமிநாதன் எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன் பாட்டி இத்தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது அது பற்றி என் சிந்தனைகள் சென்றதில்லை. பின்னாட்களில், கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, பாட்டியின் வைதவ்ய கோலம் மிகப் பெரிய சோகமாக நினைப்புகளில் கவிழும். அவ்வப்போது பாட்டி தன் மனம் நொந்து போன வேளைகளில் தனக்குள் சொல்லிக்கொள்வாள். தனக்கு விதிக்கப்பட்ட விதியை எண்ணி, இப்போது வாழும் வறுமையை எண்ணி. 'ஒண்ணா ரெண்டா, ஒண்ணொணா குழிலேண்ணாடா போட்டேன்" என்று சொல்லிச் சொல்லி புலம்புவாள், மாய்ந்து போவாள். மாமாவுக்கு அடுத்து என் அம்மா, பின் ஒரு பெரிய இடைவெளி. கடைசிகுழந்தை என் சின்ன மாமா. என் அம்மாவுக்கும் சின்ன மாமாவுக்கு இடையே பிறந்த குழந்தைகள் குழந்தைகளாகவே இறந்து விட்டன. அதைத் தான் நினைத்து நினைத்து பாட்டி புலம்பிக் கொண்டிருப்பாள். மாமா கும்பகோணம் காலேஜில் FA பரிட்சை எழுதப் போயிருக்கிறார். தாத்தா இங்கு சுவாமி மலையில் இறந்து விட்டார்,. உடனே கூட்டிக்கொண்டு வா என்று காலேஜுக்கு ஆள் அனுப்பி, மாமா வந்தவர் தான். பின் படிப்பைத் தொடரும் வசதி இல்லை. இதெல்லாம் பாட்டி அவ்வப்போது தன் விதியை நொந்து புலம்பும் போது சொன்ன விவரங்கள். படிப்பை நிறுத்திய பிறகு, குடும்பம் எப்படி நடந்தது, ஆசிரியப் பயிற்சி மாமா பெற்றது எங்கே, எப்படி, என்பதெல்லாம் தெரியாது. தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம் எப்படி நடந்தது என்பதும் தெரியவில்லை. மறைந்த தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் ஆணோ, பெண்ணோ யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. விவரம் தெரிந்த பிறகு, உமையாள்புரம், பாபுராஜபுரம், சுவாமி மலை என்று அடுத்தடுத்து இருக்கும் ஊர்களில், தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒன்று விட்ட சகோதரர்கள், சகோதரிகள் என்று தான் இருந்தார்கள். அவரவர் குடும்பம், வாழ்க்கை அவரவர்க்கு என்றாகியிருக்க வேண்டும். மாமா பிறந்த வருடம் 1910. அவர் FA பரிட்சை எழுதிக் கொண்டிருந்த போது தாத்தா இறந்தார் என்றால், அனேகமாக அது 1927-28 வருட வாக்கில் இருக்க வேண்டும்.

ஆசிரியப் பயிற்சி பெற்று மாமா பெற்ற முதல் உத்தியோகம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக. 60-வது வயதில் ஓய்வு பெற்றதும் அப்பள்ளியிலிருந்து தான். மாமாவின் ஆசிரிய சேவைக்குக் கிடைத்த ஒரே அங்கீகாரம், அரசு தரப்பிலிருந்து, ராஷ்டிரபதி வழங்கும் சிறந்த ஆசிரியர் விருது. அந்த விருது வாங்க மாமா தில்லி வந்திருந்தார், 1969-ம் வருடம். என்று என் நினைப்பு. மாமா பள்ளிக்கூட வாத்தியார். நான் நிலக்கொட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் போது மாமா ஏழாம் வகுப்பு ஆசிரியர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் வாங்கிய சம்பளம் ரூ 25 அணா 4. அனேகம் மற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் ரு 19 ஆக இருந்தது. இடைநிலையில் பலர் இருந்தனர். வீட்டு வாடகை நான் அங்கிருந்த கடைசி வருடங்களில் (1945-46) ரூ 6. மிகுந்த பணத்தில் தான், மாமா எங்கள் எல்லோரையும் சம்ரக்ஷ¢த்தார். நாங்கள் மாமா. மாமி, இரண்டு குழந்தைகள், நான், சின்ன மாமா பின் பாட்டி, ஆக மொத்தம் ஏழு பேர் மிகுந்த 19 ருபாயில் தான் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. பாட்டி எப்போதும் மாமாவிடம் புகார் செய்து கொண்டிருப்பாள். மாமாவுக்கு பதில் சொல்ல ஏதும் இராது. 'நான் என்னதான் செய்யறது சொல்லேம்மா' என்று தன் இயலாமையில் கதறுவார். நான் மாமாவை அறிந்த நாட்களில், அவர் முகம் மலர்ந்து பார்த்ததில்லை. பள்ளிக்கூடத்திற்கு நான் மேல்சட்டையில்லாமல் போன நாட்களும் உண்டு. மாமா ஆசிரியர் ஆதலால், எனக்கு சம்பளம் கிடையாது. புத்தகங்களும் விலைக்கு வாங்க வேண்டாம். ஆனால் சிலேட் நோட்புக் எல்லாம் வாங்கித் தான் ஆகவேண்டும்.

நான் மாமா பற்றியும், அம்மா பாட்டி பற்றியும் தான் எழுதிவருகிறேன். ஏனெனில், அந்த வயதில் அந்நாட்களில் நான் அறிந்தவர்கள் மாமாவும் பாட்டியும் தான். முதலில் தெரிந்த ஊர், மதுரை ஜில்லாவின் ஒரு சின்ன ஊரான நிலக்கோட்டை தான். இப்போது அது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும். நான் படித்த காலத்தில் மதராஸ் மாகாணத்தில் மொத்தம் எட்டு ஜில்லாக்கள் தாம். இப்போது நாம் வாழ்வது தமிழ் நாடு சரித்திரத்தின் பொற்காலம் என்று சொல்லப்படுவதால், அத்தகைய வளத்தில் 27-ஓ 28-ஓ மாவட்டங்களாக தமிழ் நாடு வளம் பெற்றுள்ளது. நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் என் பெற்றோர்கள், நிலக்கொட்டையில் இருக்கும் மாமாவும் பாட்டியும் இல்லை, அவர்கள் தஞ்சை ஜில்லாவின் ஒரு குக்கிராமத்தில், உடையாளுரில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தது, எனக்கு ஏழோ எட்டோ வயதிருக்கும் போது, எனக்கு பூணூல் போடவேண்டுமென்று மாமா எல்லோரையும் உடையாளுருக்கு அழைத்துச் சென்றார். அப்போது தான் உடையாளூரிலிருக்கும் என் அப்பா அம்மா, ஒரு தங்கை எல்லோரையும் தெரிந்து கொண்டேன்.

நான் குழந்தையாக இருந்த போதே பாட்டி என்னைத் தன்னோடு அழைத்துக்கொண்டு நிலக்கோட்டைக்கு வந்து விட்டாள். மாமாவும் பாட்டியும் தான் என்னை வளர்த்தார்கள். படிக்க வைத்தார்கள். பாட்டியை நான் அம்மா என்று தான் கூப்பிடுவேன். ஏனெனெல், வீட்டில் எல்லோரும், மாமா, மாமி, சின்ன மாமா எல்லோரும் பாட்டியை அம்மா என்று தானே கூப்பிடுவார்கள். பூணூல் போட உடையாளூருக்கு அழைத்துச் சென்றபோது, அம்மாவை அம்மா என்று அழைக்க எனக்கு வரவில்லை. இயல்பாக இல்லை. பாட்டிதானே எனக்கு அம்மா.

பாட்டிக்கு நான் மிகவும் செல்லம். தன் பிள்ளைகள் இருவரில், சின்ன மாமாவிடம் பாட்டிக்கு மிருந்த கரிசனம். சின்ன மாமா என்ன செய்தாலும் பரிந்து பேசுவாள். இடி படுவது மாமா தான். அவர் எதற்குத் தான் பதில் சொல்வார், எதைத்தான், எப்படித்தான் சமாளிப்பார், என்பதெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனம் மிகவும் நொந்து போகிறது. அவருக்கு எல்லாப் பக்கங்களிலும் இடி. அவர் சாது. அதே சமயம் முன் கோபியும் கூட. இப்போது நினத்துப் பார்க்கும் போது, அவருக்கு இருக்கும் வேதனைகள் போதாதென, நானும் அவரை மிகவும் வருத்தியிருக்கிறேன்.

பாட்டிக்குத் தெரிந்த, கிடைத்த மன நிம்மதி தரும் பொழுது போக்கு சினிமா தான். அதுவும் டூரிங் டாக்கீஸ் முகாமிடும் மூன்று மாத காலம். அதிலும் வருவது புராணப்படமாக இருந்தால். நிலக்கோட்டையில் ஒரு பிராமண விதவைக்கு வேறு ஏது போக்கிடம்? கதா காலட்சேபமா, பஜனையா, ஏதும் இல்லை. எந்த சுப காரியங்களிலும் பாட்டிக்கு இடம் இல்லை. பெண்கள் கூடிப் பேசும் வழக்கம் இன்னும் வரவில்லை. வந்தாலும், பாட்டி அந்த வயதைத் தாண்டியவள். புராணக் கதைகள் சொல்லும் தமிழ் படங்கள் தான் பாட்டியின் பக்தி சிந்தனை அறிந்த ஒரே மார்க்கம். நான் பாட்டிக்குச் செல்லமாதலால் என்னையும் சினிமாவுக்கு பழக்கி விட்டு விட்டாள். நாடகங்களும் அப்படித்தான். எத்தனையோ பாய்ஸ் கம்பெனிகள், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்று ஒரு பெயர் நினைவில் தங்கியிருக்கிறது. அது தவிர சில சமயம் ஸ்பெஷல் நாடகங்கள் என்று வேறு போடுவார்கள். அக்கால சூப்பர் ஸ்டார்கள் சிறப்பு வருகை தருவார்கள். V.A. செல்லப்பா என்று தான் நினைக்கிறேன். அல்ல்து V.S செல்லப்பாவா, தெரியவில்லை. பின் எஸ். பி. தனலெக்ஷமி என்று ஞாபகம். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடக்கும். எல்லாம் வீட்டுக்கு எதிரிலேயே, நிலக்கோட்டை- பெரியகுளம் ரோடுக்கு ஒரு புறம் சினிமா கொட்டகை. மறுபுறம் எங்கள் வீடு. அந்த நாடகங்களிலும் வள்ளியும், முருகனும், தெய்வயானையும் வருவார்களாதலால், பாட்டி அவற்றையும் பார்த்து விடுவாள். செல்லப்பா- தனலக்ஷ¢மி ஜோடி மிகப் பிராபல்யம் பெற்ற ஜோடி. நன்றாக பாடுவார்கள். என்ன நாடகம் என்று சொல்லி விட்டாள் போதும். கதை தெரியும். பாத்திரங்கள் தெரியும். வசனங்கள் அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் கற்பனை செய்து பேசிவிடுவார்கள். பாட்டுக்களும் தெரிந்தது தான். அவர்களுக்கு எந்த ஒத்திகையும் தேவையில்லை. எந்த நாடகத்தில், எந்த சந்தர்ப்பத்தில் எந்த பாட்டு என்பதெல்லாம் ஏதும் கட்டுப்பாடுகள் கிடையாது. ஜனங்கள் கேட்டு ரசித்த எந்தப் பாட்டானாலும், எந்த நாடகமானாலும், பாடிவிடுவார்கள். கைதட்டலும் பெற்று விடுவார்கள்.

ஒரு சமயம் சிவராத்திரி அன்று இரவு முழுதும் விழித்திருக்க ஏதுவாக ஒரு படம் போட்டார்கள். படத்தின் பெயர் ஞாபகமில்லை. ஒரே பாட்டாக இருந்ததால், வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்ததால், பாட்டுக்களை எண்ண ஆரம்பித்தேன். 45-46 பாட்டுக்களை எண்ணியதாக ஞாபகம். இதற்கிடையில். ஒரு சீன் முடிந்து இன்னொரு சீன் ஆரம்பிக்கும் முன் திரை விழும் அந்நாட்களில். அப்போதெல்லாம். அந்த சிவராத்திரி தினத்திற்கென்று ஒரு டான்ஸ் ஷோவும் ஏற்பாடாகியிருந்தது. ஒரு பெண் பாவாடையும், குட்டையான சட்டையும் அணிந்து, லம்பாடிப் பெண் போன்ற தோற்றத்தில் ஒரு டோலக்கோ தம்பொரீனோ என்னவோ ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதை மற்றொரு கையால் தட்டியோ, அல்லது ஆடிக்கொண்டே தொடையில் அல்லது தூக்கிய முட்டியில் அடித்தோ சல் சல் என்ற தாள சப்தமெழுப்பிக்கொண்டு ஆடினாள். சிவராத்திரிக்கு சிவனின் நாமத்தை இரவு முழுதும் ஜபிக்க இதுதான் சரியான வழியென்று நினைத்தார்களோ என்னவோ. இம்மாதிரியான மசாலாக்கள் சேர்த்து மக்களுக்குக் கலைத்தொண்டும் ஆற்றி அத்தோடு பக்தி பாவத்தையும் இணைத்துவிடும் சாமர்த்தியம் அன்று ஒருவருக்கு அந்த சினிமாக் கொட்டகை முதலாளிக்கு இருந்தது.

ஒரு சமயம் ஒரு ஸ்பெஷல் ஷோவுக்கு வரவிருந்த ஒரு நல்ல அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற பாடகர்/நடிகர் வரவில்லை. 'நான் இல்லாமல் நீ எப்படி நாடகம் போடப்போகிறாய், பார்த்துவிடுகிறேன்" என்று கருவிக்கொண்டு கழுத்தறுத்தாரோ என்னவோ. இன்னொருவரை உடன் எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்துவிட்டார் நாடக சபா முதலாளி. புதிதாக வந்தவர் எமகாதகர். கறுப்பும் ஒல்லியுமான சரீரம். ஆனால் சாரீரமல்லவா நாடகத்திற்குத் தேவை. தினம் ஒரு பாத்திரம், சில சமயம் ஒன்றுக்கு மேல். எந்தப் பாட்டு, எந்த நாடகத்திற்கான பாட்டு என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. கருவிக்கொண்டு போன ஸ்டார் கருவிக்கொண்டு போனது நல்லதாயிற்று. இந்த புதிய கறுப்பு ஒல்லி வித்வான் தன் பாட்டால், சாரீரத்தால் எல்லோரையும் மயக்கி விட்டான்,. எத்தகைய திறன்களெல்லாம் அந்நாட்களில் எந்த பட்டி தொட்டிகளில் எல்லாம் காணக் கிடைத்தன என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதோடு கொஞ்சம் துக்கமாகவும் இருக்கிறது. அவர்கள் பிறந்த, காலம் அவர்களை அப்படி ஆக்கிவிட்டிருந்தது. இப்போதோ அவர்கள் எவ்வளவு லக்ஷக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு, தமிழ் நாடு முழுதும் எவ்வளவு பிரபலமாகியிருப்பார்கள் என்று எண்ணித் திகைக்கத் தோன்றுகிறது. சம்பாத்தியமும் பிராபல்யமும் கிடைத்திருக்கலாம். ஆனால் இதைப் பெற அவர்கள் அன்று பெற்றிருந்த சங்கீதத் திறனைக் கொண்டவர்களாக இன்றிருந்திருப்பார்களா என்று நினைத்தால், பதில் அவ்வளவு சுலபமும் இல்லை. கிடைக்கும் பதில் மகிழ்ச்சி தருவதாகவும் இராது என்று தான் எண்ணுகிறேன்.

நினைவுகளின் தடத்தில் - (4)

நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும் உள்ளிருந்து சதா கொதித்துக் கொண்டு இருக்கும் மூடியை உதறித் தள்ளிக்கொண்டு வெளியே பீறிடும் ஏதும் ஆன்மீக, கலைப் பசி என்கிற சமாச்சாரங்கள் ஏதும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். விதவைப் பாட்டிக்கு புராணப்படங்களே தஞ்சம் எனவாகிப் போனதும், வீட்டுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு அந்தப் புறம் சினிமாக் கொட்டகை என்று ஆகிப் போனதும் சந்தர்ப்பங்கள் தான். நிலக்கோட்டையில் தங்கியிருந்த வீடு ஊருக்குள்ளே இருந்திருந்தால் பாட்டிக்கு இதெல்லாம் சாத்தியமாகியிராது. எனக்கும் அந்த சந்தர்ப்பங்கள் கொசுராகக் கிடைத்திராது. பாட்டிக்கு இது புண்ணியம் சம்பாதிக்கும் நவீன மார்க்கமாகிப் போனது. எனக்கு விளையாடுவது போல, சோளக்கொல்லியில் புகுந்து சோளக் கொண்டை திருடித் தின்பது போல, கல்லெறிந்து மாங்காய் அடித்துத் தின்பது போல, வேறு ஒருவிதமான பொழுது போக்கு. இப்போது என் சொந்த கிராமம் என்றும், நான் பிறந்த இடம் என்றும் சொல்லிக்கொள்ளும், (அது பிறந்த இடமும் இல்லை, சொந்தமும் இல்லை) உடையாளூரில் இருந்திருந்தால், சினிமா, நாடகம், சோளக்கொண்டை திருடித் தின்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முதலில் ஊடையாளூரில் அப்போதிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி மேற்சென்றிருப்பேனா என்பதே சந்தேகம். என் பாட்டிக்கு நான் பிரியமாகிப் போனது, தன் பேரப்பிள்ளையைத் தானே வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் என் நிலக்கோட்டை வாசத் திற்குக் காரணமாகிப் போயின. பாட்டி ஆசைப்பட்டது இருக்கட்டும், அம்மாவுக்கு எப்படி தன் முதல் குழந்தையை அதன் இரண்டு வயதில் விட்டுப் பிரிய மனம் வந்தது என்று சில சமயம் யோசிப்பேன். பதில் கிடைக்காது. அத்தோடு அந்தக் கேள்வி மறைந்து விடும்.

மாமாவால் அவருக்கு வந்த சம்பளத்தில் எங்களையெல்லாம் ரக்ஷ¢ப்பது என்பது சாத்தியமாக இருக்கவில்லை. என் சின்ன வயதில் பாட்டி கொடுத்த செல்லத்தில், ஒரு சில சமயங்களில் நான் மாமாவை மிகவும் வருத்தியிருக்கிறேன் என்பதை பின்னர் வடக்கே வேலையில் சேர்ந்து என் பிழைப்பை நானே பார்த்துக்கொள்ள ஆரம்பித்த போது உணர ஆரம்பித்தேன். அன்றைய நிலையில் வரம்புக்கு மீறி நான் எதற்கும் ஆசைப்பட்டேன் என்று சொல்வதற்கில்லை. அப்படி ஆசைப்பட ஒரு உலகம் என்பதே என் பிரக்ஞையில் இல்லாதது. நான் தான் முன்னாலேயே சொல்லியிருக்கிறேனே. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை எதிரிலிருக்கும் கீற்றுக் கொட்டைகயில் படம் மாறும் என்று. அவற்றில் வரும் எல்லா புராணக்கதைப் படங்களையும் பாட்டி பார்த்து விடுவாள். மாமா ஒன்றும் சொல்ல மாட்டார். பாட்டிக்கு மாத்திரம் தானே டிக்கட் வாங்கவேண்டும். அந்நாட்களில், தரை டிக்கட் முக்கால் அணாதான். அணா என்றால் இன்றுள்ளவர் எத்தனை பேருக்குப் புரியும் எனபது தெரியவில்லை. ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு பன்னிரண்டு காசுகள். ஒரு காசுக்கு விலைக்கு வாங்கக் கூடிய பொருடகள் அன்று இருந்தன. ஒரு கூறு கடலையோ, இலந்தைப் பழமோ, சின்ன கொய்யாப் பழமோ ஒரு காசுக்குக் கிடைத்து விடும். முக்காலணா கொடுத்தால் நானும் பாட்டியும் ஒரு சினிமா பார்த்து விடுவோம். தான் பார்ப்பது மட்டுமல்லாமல், பாட்டிக்கு சில படங்கள் ரொம்பவும் பிடித்து விட்டால், எல்லோரிடமும் அதை மிகவும் சிலாகித்து நிறைய பேசுவாள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அனேகமாக, ஹரிச்சந்திரா என்று நினக்கிறேன். பி.யு.சின்னப்பாவம் கண்ணாம்பாவும் நடித்த படம். அதில் கண்ணாம்பா நிறைய வசனம் பேசி நெடு நேரம் பாடி கதறி அழும் கட்டம் உண்டு. மயானத்தில் தன் பிள்ளை லோகிதாசனின் சடலத்தை வைத்துக் கொண்டு, அவனைப் பெற்று வளர்த்த கஷ்டத்தையெல்லாம் சொல்லி ஒப்பாரி வைப்பாள். ஒன்றாம் மாதம், இரண்டாம் மாதம், என்று ஒவ்வொரு மாத கஷ்டத்திற்கும் ஒரு வேதனை வர்ணணை, பாட்டு இப்படி. பாட்டி மனம் உருகிவிட்டது. வீட்டுக்கு பத்து பாத்திரம் தேய்க்க ஒரு கிழவி வருவாள். அவளுக்கு மாதம் சம்பளம் ஒன்றே கால் ரூபாய். அந்தக் கிழவியிடம் கண்ணாம்பாவின் உருக்கமான புலம்பலைச் சொல்லிச் சொல்லி அந்தக் கிழவியும், அவ்வப்போது, 'ஆமாம்மா இருக்காதா அம்மா, சும்மாவா இருக்கு ஒரு பிளையைப் பெத்து வளக்கறது, அதே செத்துப் போய், அதப் புரிஞ்சுக்காத புருஷன் முன்னாலேயே கொள்ளி வைக்கறதுன்னா,' என்று அவ்வப்போது சந்தர்ப்பத்தை ஒட்டி குரல் கொடுத்துக் கொண்டிருப்பாள். கடைசியில் கிழவிக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பாட்டிக்கு மனம் இளகி விட்டது. தன் கதையைக் கேட்க இப்படி ஒரு ரசிகை கிடைத்த சந்தோஷம். 'இந்தா கிழவி, நான் காசு தரேன். நீயும் போய்ப் பாரு' என்று சொல்லி விட்டாள் அந்த உணர்ச்சி வசத்தில். கிழவிக்கு எப்படி முக்காலணா கொடுத்தாள் என்று எனக்கு ஞாபகமில்லை. கட்டாயம் கொடுத்திருப்பாள். ஆனால் காசு மாமாவிடமிருந்து தான் வாங்க வேண்டும். நான் கொஞ்சம் பெரியவனாகி விட்ட காலத்தில், எப்போதாவது மாமா எனக்கு காலணா கொடுப்பார், 'பாவம் பசங்க ஒண்ணுமே கேக்கறதில்ல, ரொம்ப ஏங்கிப் போயிட்டதுக" என்று பாட்டியிடம் சொல்லுவார். நான் அந்த காலணாவுக்கு மூன்று கொய்யாப் பழங்கள் வாங்கி, நான், என் மாமா பெண், பையன் மூன்று பேறும் ஆளுக்கு ஒன்றாக வாங்கிக் கொள்வோம்.

ஒரு சமயம் ஏதோ ஒரு படம் வந்திருந்தது கொட்டகையில். அது நிச்சயமாகப் புராணப் படமாக இல்லாதிருந்தக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பாட்டி அழைத்துச் சென்றிருப்பாளே. நான் தனித்து விடப்பட்டேன். படம் பார்க்கவேண்டும், காசு வேணும் என்று மாமாவை நச்சரித்துக் கொண்டிருந்தேன் இரண்டு நாட்களாக. பாக்கலாம்டா என்று சொல்லி மாமா தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார். காசு பெயரும் வழியாக இல்லை. அன்று தான் கடைசி நாள். எனக்கோ வாழ்க்கையில் ஏதோ ஒன்று மகத்தான ஒன்று என்றென்றைக்குமா இழக்கப்போகிறோம் என்ற துக்கம். இந்த சினிமா பார்க்க முடியவில்லை என்றால் வாழ்க்கைக்குத் தான் என்ன அர்த்தம்? நம் வாழ்க்கை ஏன் இப்படி ஒரு சுகமும் ஒருசந்தோஷமும் இல்லாமல் ஆகிவிட்டது? எத்தனை பேர் மூன்று நாட்களாக சினிமாவுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்? எனக்கு என்று ஏன் இத்தனை துரதிர்ஷ்டம்? கடைசியாக, 'அடி பின்னிப் பிடுவேன் ராஸ்கல், ரொம்பத்தான் அடம் பிடிக்கிறே? எத்தனை சினிமா பாத்திருக்கே, ஒண்ணு பாக்காட்ட என்ன குடி முழுகிப் போறது?' என்று சீறினார். இன்னம் அதிகம் முரண்டு பிடித்தால் நாலு சாத்து சாத்திவிடுவார் என்று தோன்றியது. துக்கமோ, என் துரதிர்ஷ்டத்தை நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் பீறிட்டுக் கொண்டு வந்தது. அஸ்தமனம் ஆயிற்று. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. எங்கெங்கோ மனம் போனபடி சுற்றிக் கொண்டிருந்தேன். வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. இப்படியும் ஒரு வீடு, ஒரு மாமா, ஒரு பாட்டி, ஒரு சினிமா பாக்க காசு கொடுக்காதா மாமாவும் பாட்டியும். சே. நினைக்க நினைக்க மனம் கொதிப்படைந்து கொண்டு வந்தது. ஓடையைத் தாண்டியதும், ஒரு பார்க் இருக்கும். அதில் தான் ஒரு வாசக சாலை, ஒரு ரேடியோப் பெட்டி; கூட ஒரு ஒலிபெருக்கியும் இருக்கும். . திருச்சி வானொலியை அதில் கேட்கலாம். திருச்சி மாத்திரமே. செய்திகள், பாட்டுக்கள், நாடகங்கள், இத்யாதி. நல்ல பார்க் அது. மாலை நேர பொழுது போக்குக்கு நிலக்கோட்டை வாசிகளுக்கு அது உகந்த இடம். நிலக்கோட்டை பஞ்சாயத்தின் பொறுப்பில் இருந்தது. பார்க்கில் இருக்கும் மரங்கள் கொடி செடிகள், நிறைய க்ரோட்டன்கள் எல்லாவற்றுக்கும் ஒரு கிணறும் ஏற்றமும் உண்டு. அந்த வாசக சாலையில் நிறைய பத்திரிகைகள், யுத்த செய்திப் படங்கள் நிறைந்த பத்திரிகைகள் இருக்கும். அந்த பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இனி வீட்டுக்குப் போவதில் அர்த்தமில்லை. இவ்வளவு அநியாயம் நடக்கும் வீட்டுக்கு யார் போவார்கள்? பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். இருட்டியது. என்ன செய்யலாம்? எங்காவது மாமா கண்டு பிடிக்க முடியாத ஊருக்குப் போய்விடலாம். ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம். வேலை கிடைகாதா என்ன? கிளப்பில், பஸ்ஸில் எத்தனை என் வயதுக் கார சின்ன பசங்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் சினிமா பார்க்க யாரிடம் காசு கேட்க வேண்டும்? எவ்வளவு அதிர்ஷ்டம் அவர்களுக்கு? ரேடியோவில் ஒலி பரப்பு முடிந்தது. விளக்கை அணைத்தும் விட்டார்கள். பார்க்கைச் சேர்ந்த ரீடிங்க் ரூம் வட்ட வடிவில் இருக்கும். அதைச் சுற்றிய ஒரு வராண்டா. அந்த வராண்டாவில் யார் யாரோ படுத்திருப்பார்கள். நானும் அங்கேயே படுத்து விட்டேன். எப்போது தூங்கினேன் என்பது தெரியாது.

vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner