| 
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :
விம்பத்தின் பதிவுகள்
 
 'விம்பம்' கலாச்சார அமைப்பினர் நடத்திய, தமிழகத்தின் புகழ்வாய்ந்த இலக்கிய 
வெளியீட்டாளர்களான ‘உயிர்மை பதிப்பகம்' வெளியிட்ட,
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் குறித்த விமர்சன நிகழ்வு, கவிஞர். 
திரு.மு.புஷ்பராஜனின் தலைமையில், செப்டம்பர் இருபத்து 
எட்டாம் திகதி, இலண்டன் ‘லேய்ட்டன் ஸ்டோன் குவாக்கெர்ஸ் ஹவுஸ்' மண்டப அரங்கில் 
நடைபெற்றது. விமர்சன நிகழ்வு இரு 
அமர்வுகளாக நடைபெற்றது.
 
 
  இரு அமர்வுகளின் இடையில், திரு.நாகார்ஜூனன் மற்றும் திரு.பொன்னய்யா ஜெயஅழகி; 
அருணகிரிநாதர் ஆகியோர் பங்கு பற்றிய நூல் 
வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது. மாலை மூன்று மணி அளவில் துவங்கிய விமர்சன 
அரங்கின் முதல் நிகழ்வாக, ஈழத்தின் மூத்த
எழுத்தாளர் அகஸ்தியர் அவர்களின் புதல்வியும் தன்னளவிலேயே கவிஞரும் ஆகிய திருமதி. 
யோ.நவஜோதி விம்பம் அமைப்பினர் 
சார்பாக வரவேற்புரை நிகழ்த்தியதுடன், விமர்சன நிகழ்வில் பங்குபெற்ற விமர்சகர்கள் 
மற்றும் படைப்பாளிகள் குறித்தும், அவர்களது 
கலை இலக்கியப் பங்களிப்புகள் குறித்ததுமான விரிவான அறிமுகக் குறிப்புக்களை 
வழங்கினார். 
 
  நிகழ்வுக்குத் தலையேற்ற கவிஞர். திரு.மு.புஷ்பராஜன் (2) நிகழ்வில் விமர்சனத்துக்கு 
எடுத்துக் கொள்ளப்படும் யமுனா ராஜேந்திரனின்
ஆறு நூல்களும் மூன்று ‘வகை மாதிரிகளுக்குள்' அடங்கிவிடக் கூடியவை என விவரித்தார். 
திரைப்படம் குறித்த இரு நூல்களும்,
உலக-இந்திய-தமிழக திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறை மற்றும் பாலுறவுச் 
சித்திரிப்புகள் குறித்ததாக இருக்க, இரு கவிதை 
மொழியாக்க நூல்களும் தேசிய விடுதலைப் போராட்டமும், அது சார்ந்த வன்முறைகளும், மனித 
உரிமைகளும் குறித்ததாக இருக்க, 
பின்நவீனத்துவம் மற்றும் அரசியல் இஸ்லாம் குறித்த நூல்கள் பின்சோவியத் சமூகம் 
குறித்த பிரச்சினைகளைப் பேசுகிறது எனக்
குறிப்பிட்டார். 
 ஒரு வகையில், இந்த ஆறு நூல்களும் சோவியத் யூனியன் தகர்வின் பின்னான 
பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும்தான் பேசுகிறது 
என்றார் திரு.மு.புஷ்பராஜன். மார்க்சியத்தை, சமகால உலகில் நிகழ்ந்த மாற்றங்களுக்கு 
ஏற்பத் தகவமைத்துக் கொள்கிற தேடலே இந்த 
நூல்களில் விரவியிருக்கிறது என திரு.மு.புஷ்பராஜன் குறிப்பிட்டார். இந்த 
மார்க்சியப் பார்வையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 
தொழிற்சங்கத் தலைவராக இருந்து, சென்ற ஆண்டு மறைந்த அவரது தந்தையாரிடமிருந்து 
பிதுரார்ஜிதம் போலவே யமுனா ராஜேந்திரன் 
பெற்றிருக்கிறார் எனவும்; திரு.மு.புஷ்பராஜன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார.;
 
 
  முதல் அமர்வில் இலத்தீனமெரிக்கக் கவிதைகளின் மொழியாக்க நூலான ‘கடைசி உயிலும் கடைசி 
வாக்குமூலமும் குறித்து, 
இலண்டனிலிருந்து வெளியாகிய ‘பனிமலர்' அரசியல் கலை இலக்கிய இதழின் ஆசிரியர்களில் 
ஒருவரான திரு. ந.சபேசன் (3) தனது 
கருத்துக்களை முன்வைத்தார். 
விடுதலைப் போராட்டத்தில் மனித உரிமைகளும் வன்முறை அரசியலும் முக்கியத்துவம் 
வகிக்கும் காலத்தில் வெளியாகியிருக்கும் 
இக்கவிதைத் தொகுப்பு முக்கியத்துவமுடையது என அவர்; கூறினார். விடுதலைப் 
போராட்டத்தில் அல்லது இடதுசாரி இயக்கங்களில்
சுயவிமர்சனம் என்பது தற்கொலைக்குச் சமமாக இருக்கிறது என்பதனைக் குறிப்பிட்ட சபேசன் 
தொகுப்பிலிருந்து அரசியல் சுயவிமர்சனம் 
தொடர்பான எல் ஸால்வடோர் கவிஞன் ரோக் டால்டனின் ஒரு கவிதையையும் சான்றாக வாசித்துக் 
காட்டினார். 
 தமது ‘புதுசு' பதிப்பித்த சமகாலக் கவிதைகளின் தொகுப்பிலிருந்து மைத்ரேயி 
மொழியாக்கிய சிலி நாட்டுக் கவிஞர் ஆரியல் 
டோர்ப்மெனின் கவிதையொன்றினையும், அதே கவிதையின் யமுனா ராஜேந்திரனின் 
மொழியாக்கத்தையும் ஒப்பிட்டு வாசித்த சபேசன், 
இரண்டு மொழியாக்கக் கவிதைகளிலும் சொல்லாட்சிகள் தவிர, அர்த்தப்பாட்டில் இரு 
மொழிபெயர்ப்புகளும் ஒன்றாகவே இருப்பதாக
சபேசன் தெரிவித்தார். சேகுவேராவும் ரோக் டால்டனும் கவிஞர்களாகத் தமிழ் மொழிக்கு 
இத்தொகுப்பின் மூலமே அறிமுகமாகிறார்கள் 
எனவும் திரு.ந.சபேசன் குறிப்பிட்டார்.
 
 
  ‘மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை' குர்திஸ் கவிதை மொழியாக்க நூல் 
குறித்து, காலஞ்சென்ற மார்க்சியரான 
திரு.பரா.ராஜசிங்கம் அவர்களது புதல்வரும் தம்மளவிலேயே கவிஞரும் கட்டுரையாசிரியருமான 
திரு. ப. சந்துஷ் (4) தமது கருத்துக்களை 
முன்வைத்தார். 
குர்திஸ் பிரச்சினை குறித்து விரிவான வரலாற்றுக் குறிப்புக்களுடன் இந்நூலில் 
கவிதைகள் முன் வைக்கப்பட்டிருப்பதை திரு.சந்துஷ் 
அவதானித்தார். ஓவியங்களின் வழி ஓரு மக்கள் கூட்டத்தின் வலியையும் கொண்டாட்டத்தையும் 
அடர்ந்த நிறங்களில் முன்வைப்பதை
நூலின் அட்டைப் படம் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்;டார். மேற்கத்திய நாடுகள் 
குர்திஸ் மக்களின் துயர் குறித்து அக்கறையற்று
இருப்பதை ஒரு கவிதையை எடுத்துக் காட்டாகச் சுட்டுவதின் வழி அவர் எடுத்துக் 
காட்டினார். 
 நூலின் பிரதான கட்டுரையில் இடம்பெறும், மனித உரிமை குறித்த பொருளியலாளர் அமர்த்யா 
சென்னின் கருத்துக்கள் குறித்து, தனது 
கருத்து மாறுபாட்டை திரு.சந்துஷ் முன்வைத்தார். மனித உரிமை எனும் கருத்தாக்கம் 
என்பது, ‘இன்று போல' வரலாற்றில் முன்பு 
இருக்கவில்லை எனும் அமர்த்யாசென்னின்; கருத்தை சந்துஷ் மறுத்தார். மாறாக, வரலாறு 
நெடுகிலும் மனித உரிமை குறித்த
கருத்துக்கள் இருந்தே வந்திருக்கின்றன என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
 
 
  ‘வன்முறை திரைப்படம் பாலுறவு' எனும் திரைப்பட நூல் குறித்த தனது விமர்சனத்தை, 
ஓவியரும் நாடகக் கலைஞரும், விம்பம் 
அமைப்பின் முன்னோடிகளில் ஒருவருமான திரு.கே.கிருஷ்ணராஜா (5) முன் வைத்தார்.
புதின்மூன்று வருடங்களின் முன்பாக முதன் முதலாக இலண்டனிலிருந்து வெளிவந்த ‘தமிழோசை' 
பத்திரிக்கையில் வாசித்த யமுனா 
ராஜேந்திரனின் இறுக்கமான வார்த்தைப் பிரயோகங்களோடு ஒப்பிட, ‘வன்முறை - திரைப்படம் - 
பாலுறவு' நூலிலுள்ள எழுதுமொழி 
நேரடியாகவும் எளிமையாகவும் வாசிப்பில் இலகுத்தன்மையும்; கொண்டிருப்பதாக 
கே.கிருஷ்ணராஜா குறிப்பிட்டார். 
 பிரித்தானிய சமூகத்தில் உள்ளது போன்ற தணிக்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பான 
நெறிமுறைகள், தமிழ்ச் சூழலுக்குப் 
பொருந்தும் என்பது சந்தேகமே எனும் ஐயத்தை அவர் தனது விமர்சனத்தில் வெளியிட்டார். 
நூலில் தமிழக-இந்திய-உலகப் படங்கள் 
தொடர்பாக அடுத்தடுத்துச் சொல்லிச் செல்வது முதலில் தனக்கு தொடர்வதற்குச் சிரமமாக 
இருந்ததாகக் குறிப்பிட்ட கிருஷ்ணராஜா,
பிற்பாடாக ஒப்பீட்டு நோக்கம் கருதியே யமுனா ராஜேந்திரன் இவ்வாறான எழுதுமுறையைப் 
பாவிக்கிறார் என அறிந்தபோது தான் 
தெளிவுற விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது எனவும் திரு.கே.கிருஷ்ணராஜா தனது 
விமர்சனப் பேச்சில் குறிப்பிட்டார்.
 
 
  
தேநீர் இடைவேளையின் பின் இரண்டாவது அமர்வு துவங்கியது. இரண்டாவது அமர்வின் முன்பாக 
ஆறு நூல்களையும் தமிழகத்து
எழுத்தாளரும் கோட்பாட்டாசிரியரும், சர்வதேச மனித உரிமை அமைப்பில் பணியாற்றுபவருமான 
திரு.நாகார்ஜூனன் (6) வெளியிட, 
‘இசைக்குத் தேவாரத்தின் பங்களிப்பு' எனும் இருமொழி நூலை வெளியிட்டிருக்கும், 
தமிழிலும் ஆங்கிலத்திலும் சம அளவில் 
புலமையுடைய திரு.பொன்னய்யா ஜெயஅழகி அருணகிரிநாதர் நூல்களைப் பெற்றுக் கொண்டார். 
 திரு.நாகார்ஜூனன் தனது வெளியீட்டுரையில் யமுனா ராஜேந்திரனும் இருபது ஆண்டுகளுக்கு 
முன்பாகத் தானும் சந்தித்துக் கொண்ட, 
கோவை நகரின் மத்தியில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நடைபெற்ற, எழுத்தாளர் பாமரனது 
புத்தக வெளியீட்டு நிகழ்வை நினைவு 
கூர்ந்தார்.
 
 தானே ஏற்படுத்திக் கொண்ட தனிமையினால் இதுவரையிலும் எழுத்துச் செயல்பாட்டிலிருந்து 
ஒதுங்கியிருந்ததால் தன்னால் பல 
விடயங்களைத் தொடர்ந்திருக்க முடியவில்லை எனக் குறிப்பிட்ட நாகார்ஜுனன், தான் 
தற்போது மறுபடி மிகுந்த ஈடுபாட்டுடன் எழுதவும் 
செயல்படவும் நேர்ந்திருப்பதைப் பதிவு செய்தார். ரித்விக் கடக் பற்றிய 
எஸ்.ராமகிருஷ்ணன் அபிப்பிராயங்கள் குறித்த யமுனா 
ராஜேந்திரனின் கட்டுரையைக் குறிப்பிட்ட அவர், தமிழ் சினிமா என்பதும் அதனது 
இயக்குனர்களும் எந்தக் கலை மேதைமையையும் 
கொச்சைப்படுத்தக் கூடிய வியாபாரச் சூழலால் பீடிக்கப்பட்டிருக்கிறது – பீடிக்கப் 
பட்டிருக்கிறார்கள் - என தனது வெளியீட்டு உரையில் 
குறிப்பிட்டார்.
 
 அரசியல் இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியப் பண்பாடு தொடர்பாகவும் தமிழில் எழுதப்பட 
வேண்டிய தேவை இருப்பதாகவும், இதனது 
துவக்கமாக யமுனா ராஜேந்திரனின் நூல் இருக்கிறது எனவும், தொடர்ந்து எழுதப்பட 
வேண்டும் எனவும் நாகார்ஜூனன் தனது 
வெளியீட்டுரையில் குறிப்பிட்டார்.
 
 
  இரண்டாம் அமர்வு ‘அரசியல் இஸ்லாம்' நூல் குறித்த திரு. எஸ்.எம்.எம். பஸீர் (7) 
அவர்களது விமர்சனத்துடன் துவங்கியது.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தும், மிகுந்த ஆர்வத்துடன் இந்த நூல் வெளியீட்டு 
நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு அவர் 
மகிழ்ச்சி தெரிவித்தார். 
மிக விரிவாக நூலைக் குறித்துப் பேசிய அவர், மார்க்சிய அடிப்படையில் அரசியல் 
இஸ்லாமைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கும் யமுனா
ராஜேந்திரன், இஸ்லாமிய இறையியலாளர்கள் இது குறித்து என்ன விதமான கருத்துக்களைச் 
சொல்லியிருக்கிறார்கள் என்பதிலும் கவனம் 
செலுத்தியிருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டினார். 
 வஹாபிசம் பற்றிய எதிர்மறையான பார்வை நூலில் இருப்பதாகவும் அவர் அவதானித்தார். 
மேற்கத்திய அறிஞர் எல் பாஸிட்டோ, 
‘இஸ்லாமில் பன்முகத்துவம்' இருக்கிறது எனக் குறிப்பிடுவதை ஒரு செய்தியாகவே யமுனா 
ராஜேந்திரன் நூலில் சொல்கிராறேயொழிய, 
இது குறித்து அவர் விரிவாக நூலினுள் பேசவில்லை என்பதனையும் பஸீர் சுட்டிக் 
காட்டினார்.
 
 பாலஸ்தீனக் பெண்கவியான சுஹேர் ஹம்மத்தின், ‘செப்டம்பர் 11' குறித்த கவிதை தன்னை 
மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டதாகக் 
குறிப்பிட்ட பஸீர், அந்தக் கவிதை மொழியாக்கத்திற்காகவும் அதனது நேரடித் 
தன்மைக்காகவும் யமுனா ராஜேந்திரனுக்குத் தனது 
தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஈரானிய சினிமா பற்றிய விரிவான 
முழுக்கட்டுரை தனிப்பட்ட முறையில் தனக்கு 
மிகவும் பயனுள்ளதொன்றாக இருந்தது என்பதைனையும் அவர் குறிப்பிட்டார்.
 
 பரந்த வாசிப்புடன் இந்த நூலை இஸ்லாமிய மார்க்சியர்களின் துணையுடன், மார்க்சியப் 
பார்வையில், அரசியல் இஸ்லாமைப்
பாரத்திருக்கும் யமுனா ராஜேந்திரன், இன்னும் சமநிலையுடன் இஸ்லாமிய 
இறையிலாளர்களினதும், அதனோடு அதனது 
பன்முகத்தன்மையினை வெளிப்படுத்துமாறும் அடுத்து வரும் படைப்புக்களை எழுத வேண்டும் 
என பஸீர் தனது விமர்சனத்தில் கேட்டுக் 
கொண்டார்.
 
 
  ‘நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை' எனும் நூலைக் குறித்து இலக்கிய மற்றும் அரசியல் 
விமர்சகர் திரு. மு.நித்தியானந்தன் (8) 
பேசினார். புதிய சிந்தனை முறைகளை மார்க்சியர்கள் ஏற்பதா இல்லையா என்பது குறித்த 
பிரச்சினைகள் மார்க்சியர்களிடம் எப்போதுமே 
பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது எனக் குறிப்பிட்ட திரு. மு.நித்தியானந்தன், 
சிக்மன்ட பிராய்டை ஏற்பதில் மார்க்சியர்களுக்கு
இருந்த சிக்கலைச் சுட்டிக் காட்டினார். தமிழில் அரு. ராமநாதன் வெளியிட்ட பிரெடரிக் நீட்ஷே, சிக்மன்ட் பிராய்ட் நூல்கள் 
துவங்கி, ‘ஸ்டரக்சுரலிசம்' ஈராக ‘பிராங்க்பர்ட் 
மார்க்சியம்' வரையிலும் மாற்றுச் சிந்தனைகள் தமிழில் தொடர்ந்து அறிமுகம் 
செய்யப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார். ‘நான்
பின்வீனத்துவ நாடோடி இல்லை' எனும் நூல் நான்கு பிரிவுகளாகப் 
பிரிக்கப்பட்டிருப்பதாக் குறிப்பிட்ட மு.நித்தியானந்தன், இறுதி இரு 
அத்தியாயங்களின் தலித்தியம் மற்றும் தேசியம் தொடர்பான யமுனா ராஜேந்திரனின் 
கருத்துக்களுடன் தான் உடன்பாடு காட்டுவதாகக் 
குறிப்பிட்டார். அதே போது, சிங்களப் பெருந் தேசியத்திற்கு எதிராகவே தமிழ்த் தேசியம் 
தோன்றியது என்பதனையும், அதற்கான தேவை 
இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
 நூலின் முதல் பகுதி பின்நவீனத்துவத்தை மார்க்சிய வழியில் கோட்பாட்டுருவாக்கம் 
செய்கிறது எனக் குறிப்பிட்ட அவர், அதிகமாக
எழுதுகிறவர் எனும் அளவில், மூன்றாம் பகுதிக் கோட்பாட்டாளர்களின் மொழிபெயர்ப்புகளில் 
யமுனா ராஜேந்திரன் கூடுதல் அக்கறையைச் 
செலுத்த வேண்டும் என்றார். பிழைகள் அச்சில் வந்துவிட்ட பின்னால், அது பற்றி 
யோசிப்பது காலம் கடந்த செயல் எனவும் அவர் 
குறிப்பிட்டார். எடுத்துக் காட்டாக, பிரெடரிக் ஜேம்ஸனின் நேர்முகத்தில் 
'நவீனத்துவம்' என வரவேண்டிய இடத்தில் ‘பின்நவீனத்துவம்' 
என வந்திருப்பது பாரிய கருத்துப் பிறழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்றார். ‘கியூபெக் 
பல்கலைக் கழகம்' என்பது ‘கியூப அரசு' எனக் 
குறிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
 
 அறுதியாகச் சொல்கிறபோது, விரிவான வாசிப்புக் கொண்ட, பின்நவீனத்துவம்; குறித்து 
வாசிப்பதற்கான காத்திரமான நூல்களைச் சுட்டுகிற 
நூலாக, ‘நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை' நூல் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
 
 
  
திரு. யமுனா ராஜேந்திரன் (9), தனது குறுகிய ஏற்புரையில், அன்பு கனிந்து தனது 
நூல்கள் குறித்த விமர்சன அரங்கை ஏற்பாடு செய்த
‘விம்பம்' அமைப்பைச் சார்ந்த நண்பர்களான கே.கிருஷ்ணராஜா, புகைப்படக் கலைஞர் 
சாந்தகுணம், போல் ஆகியோருக்குத் தனது 
நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 
நூல்கள் குறித்த விமர்சனங்கள் பற்றி யமுனா ராஜேந்திரன் மிகச் சுருக்கமாகக் 
குறிப்பிடும் போது, பஸீர் குறிப்பிட்ட இஸ்லாமிய 
இறையிலாளர்கள் மற்றும் இஸ்லாமில் பன்முகத்துவம் பற்றிப் பேசிய எல் பாஸிட்டோ 
போன்றோரது கருத்துக்களுடன், நூலின் அடுத்த 
பதிப்பு வெளியாகும் எனக் குறிப்பிட்டார். 
 ‘நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை' நூல் பற்றிய திரு. மு.நித்தியானந்தனின் 
அவதானங்கள் பற்றிக் கவனம் கொண்டு, ‘கீயூபெக் 
அரசு'க்காக லியோதாரத் எழுதிய நூலே ‘பின்நவீனத்துவ நிலை' எனும் நூல் என்பது 
திட்டவட்டமாகத் தனக்குத் தெரிந்த நிலையிலும், 
தானே நான்கு முறை மெய்ப்புப் பார்த்த பின்னும், வந்துவிட்ட பிழைக்குத் தான் 
முழுமையாகப் பொறுப்பேற்பதாகக் குறிப்பிட்டார். 
எழுதப்பட்டதற்கும் நூல் வெளிவந்ததற்குமான எட்டாண்டு கால (2001-2008) இடைவெளியில் 
நேர்ந்திருக்கிற பிழைகள் பற்றி என்னதான் 
காரணி காரியத்துடன் விளக்க முனைந்தாலும், நூல் திருத்தமாக வெளிவரவேண்டும் 
என்பதற்கான, முழப் பொறுப்பையும் ஏற்க வேண்டிய 
கடப்பாடு தனக்கு இருப்பதை யமுனா ராஜேந்திரன் ஒப்புக் கொண்டார்.
 
 தமிழ்ச்சூழலில் எழுதுபவனுக்கும் பிரதி செப்பனிடுபவனுக்கும் ஆன உறவு, மேற்கத்திய 
சமூகம் போல தொழிற்முறையிலானதாக இன்னும் 
வளர்ச்சியடையவில்லை என்பதைனக் குறிப்பிட்ட யமுனா ராஜேந்திரன், அந்த உறவு 
இணக்கமானதாக, புரிந்துணர்வுடன் 
அமையவேண்டும் எனவும் குறிப்பிட்டதோடு, திரு.மு.நித்தியானந்தன் போன்றவர்கள் இதற்கு 
முன்வந்து உதவ முடியுமானால், நூற்களை 
இன்னும் செப்பமுடன் வெளியிட முடியும் எனவும் குறிப்பிட்டார்.
 
 
  
அன்பு கனிந்து தனது நூல்களை விமர்சித்த விமர்சக 
நண்பர்களுக்கும், நூல்களை வெளியிட்ட நண்பர் திரு.நாகார்ஜூனன் மற்றும் திரு. 
பொன்னய்யா ஜெய அழகி அருணகிரிநாதர் ஆகியோருக்கும் அவர் தனது மனமுவந்த நன்றியைத் 
தெரிவித்துக் கொண்டார். பல்வேறு சிரமங்களின் மத்தியிலும் நூல் விமர்சன அரங்கில் 
கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கும் (10), நூல் ஆசிரியன் எனும் அளவில் தனது அன்பையும் நன்றியையும் 
அவர் தெரிவித்துக் கொண்டார்.
 விமர்சன அரங்கின் இறுதி நிகழ்வாக, நன்றியுரையை விம்பம் கலாச்சார அமைப்பைச் சேர்ந்த 
திரு. போல் ஆற்றினார். முதலாக ஆறு 
நூல்கள் விமர்சன நிகழ்வுக்கான அரங்கிற்கு அன்புகனிந்து ‘ஸ்பொன்ஸர்' வழங்கிய 
வழக்குரைஞர். திரு. ரங்கன் தேவராஜனுக்குத் தமது 
அமைப்பின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
 
 
  புத்தகங்களை வெளியிட்டு வைத்த திரு.நாகார்ஜூனன், பெற்றுக் கொண்ட திரு.பொன்னய்யா 
ஜெயஅழகி அருணகிரிநாதர் ஆகிய 
இருவருக்கும் தமது அமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட போல் (11), 
நூல் விமர்சன அரங்கில் உரையாற்றிய 
விமர்சகர்களுக்கும், பங்கு பற்றிய பார்வையாளர்களுக்கும் தமது அமைப்பின் சார்பாக 
நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார்.  மிகுந்த நட்பார்ந்த சூழலில் நடைபெற்ற, 
விம்பம் அமைப்பினர் நடத்திய யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு, 
முன்னிரவு ஏழுமணிக்கு நிறைவெய்தியது. 
புன்முறுவலுடன், மறுபடி சந்திக்கவென நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். 
 புகைப் படங்களுக்காக நன்றி : புகைப் படக் கலைஞர் திரு. சாந்தகுணம்
 
 rajrosa@gmail.com
 |