| சங்ககால நடுகல் கோயிலாகவும் தெய்வமாகவும் 
எழுந்த வரலாறு
 
 - நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -
 
 
  எண்ணாயிரம் 
ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நடுகல், கோயில், தெய்வம், பறை ஆகியன இற்றைவரை நிலைத்து 
நிற்கும் விந்தை. சங்க இலக்கியங்கள் தமிழர்களின் நாகரிகப் பண்பாட்டு அடித்தளமாய் 
விளங்குகின்றன. அன்பும், ஆண்மையும், பண்பும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த 
பழந்தமிழரின் நல்லற வாழ்க்கையையும், இயற்கையோடு கலந்து மலர்ந்த வாழ்வியல் 
நெறிகளையும் எல்லா இலக்கியங்களிலும் காணலாம். தமிழரின் கலை, கலாசாரம், பண்பாடு, 
அவர் நீண்ட வரலாறு யாவையும் தமிழ் இலக்கியங்கள் இயம்பி நிற்கின்றன. சங்ககால நடுகல், 
கோயில், தெய்வம், பறை ஆகியவை இற்றைவரை எவ்வண்ணம் இலக்கியங்களில் பேசப்படுகின்றன 
என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கு. 
 தொல்காப்பியம்
 கி.மு. ஐயாயிரம் (5000) ஆண்டுகளுக்குமுன் தோன்றிய மூத்த நூல்களுள் ஒன்றான 
தொல்காப்பியம் என்னும் நூலில் பொருளதிகாரம் - புறத்திணையியலில் நடுகல், கோயில், 
தெய்வம், பறை ஆகியவை பற்றிக் கூறப்பட்ட ஒரு சூத்திரத்தைத் தொல்காப்பியர் அமைத்துத் 
தந்துள்ளார். வாட்போரில் எதிர்த்து நின்ற பகைவனை எதிர்த்து வெற்றிவாகை சூடிய 
அரசிளங்குமரனை அந்நாட்டு மக்கள் பாராட்டிப் பறை முழங்கி அவனுக்கு அரசைக் கொடுத்துக் 
கொண்டாடினர்.
 
 போர்க்களத்தில் வீரச்சாவெய்திய போர்வீரர்களின் நினைவாக நடுகல் நிறுத்தற் பொருட்டுச் 
சிறந்த கல்லைத் தேடி, அதை எடுத்து வந்து, நீரினால் கழுவிச் சுத்தம் செய்து, அக் 
கல்லினை ஓரிடத்தில் நட்டு, அதைக் கோயிலாக எழுப்பி, அதில் அவர் பீடுகளைத் தீட்டி, 
அக் கல்லிற்குப் பெருஞ் சீரும் சிறப்பும் செய்து, பின்னர் நடப்பட்ட கல்லினைத் 
தெய்வமாகப் போற்றி வணங்கி வாழ்த்தி வந்துள்ளனர்.
 
 "வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க
 நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டு;ம்
 காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
 சீர்த்த மரபில் பெரும்படை வாழ்த்தலென்று
 இருமூன்று மரபிற் கல்லொடு புணரச்…"-(தொல்.பொருள். 63-17-21)
 
 மேலும், பழந்தமிழ்ச் சான்றோர்கள் தம் வாழ்வியலை குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, 
பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல் திணை என ஐந்திணைகளாக வகுத்து, ஒவ்வொரு திணைக்கும் 
தனித்தனியே அவற்றின்கண் உள்ளனவான பதினான்கு (14)  கருப்பொருளான தெய்வம், 
உயர்ந்தோர், தாழ்ந்தோர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், 
பண், தொழில் ஆகியனவும்
 வகுத்து, இன்புற்று வாழ்ந்து காட்டினர்.
 
 இப் பதினான்கு கருப்பொருள்களில் தெய்வம், பறை ஆகிய இரண்டும் ஐந்திணைகளில் எவ்வண்ணம் 
பேசப்படுகின்றன என்பதையும்
 ஈண்டுக் காண்போம்.
 
 திணை. தெய்வம். பறை.
 
 1. குறிஞ்சி. - முருகக் கடவுள். - தொண்டகப் பறை.
 (சேயோன்) (முருகியம்)
 
 2. முல்லை. - மாயோன். - ஏறங்கோட் பறை.
 (திருமால், நெடுமால்) (ஏறுகோட் பறை)
 
 3. பாலை. - கன்னி. - துடி
 (துர்க்கை, கொற்றவை)
 
 4. மருதம். - இந்திரன். - நெல்லரிகிணை, மணமுழவு.
 (வேந்தன்)
 
 5. நெய்தல். - வருணன். - மீன் கோட்பறை, நாவாய்ப் பம்பை.
 
 ஐந்திணைகளிலும் வௌ;வேறு தெய்வங்களும், வேறுபட்ட பறைகளும் இருந்துள்ளமை காண்க. 
இன்னும், பண்டைத் தமிழர்கள் ~மணமுழவு| பறை அடித்துத் திருமணங்கள் 
நடாத்தியுள்ளமையும் புலனாகின்றது. இவை தொடர்பில் தொல்காப்பியனார் தரும் ஒரு 
சூத்திரம் இது.
 
 "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
 செய்தி யாழின் பகுதியொடு
 அவ்வகை பிறவும்; கருவென மொழிப. " - (தொல். பொருள். 20)
 
 திருமந்திரம்
 கி.மு. ஆறாயிரம் (6000) ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த திருமூலர் யாத்த திருமந்திரம் 
என்னும் நூல் காலத்தால் மூத்த முதல் நூலாகும். இந்நூலில் கோயிலைப் பற்றிப் பல 
மந்திரங்களிலும், பறை பற்றி ஒரு மந்திரத்திலும் அழகுறக் கூறப்பட்டுள்ளன.
 
 "கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி.."- (116)
 
 "செப்ப மதிள்உடைக் கோயில்உள் வாழ்பவர்
 செப்ப மதிள்உடைக் கோயில் சிதைந்தபின்.. " - (154)
 
 "உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
 ஊடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே." - (725)
 
 "கூய்ந்தறிந்து உள்உறை கோயிலும் ஆமே." - (810)
 
 "கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்.." - (811)
 
 "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்.. " - (1823)
 
 "படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில் .. " - (1857)
 
 "பறைஅறை யாது பணிந்து முடியே." - (748)
 
 திருக்குறள்
 கி.மு. முப்பத்து ஓராம் (31) ஆண்டில் தோன்றிக் கடைச்சங்க காலத்திலும் வாழ்ந்தவரான 
திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் நூலில் தெய்வம் பற்றியும், பறை பற்றியும் 
கூறப்பட்டுள்ள செய்திகளையும் காணலாம்.
 
 " தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
 பெய்யெனப் பெய்யும் மழை. " - (குறள். 55)
 
 " தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
 மெய்வருத்தக் கூலி தரும். " - (குறள் 619)
 
 " அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
 மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். " - (குறள். 1076)
 
 " அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
 நல்ல படாஅ பறை. " - (குறள். 1115)
 
 இனி, எட்டுத்தொகை நூல்களில் அகநானூறு, புறுநானூறு, குறுந்தொகை, கலித்தொகை ஆகிய 
நான்கு நூல்களிலும் எவ்வண்ணம் நடுகல், கோயில், தெய்வம், பறை ஆகியவை பேசப்படுகின்றன 
என்பதையும் காணலாம்.
 
 அகநானூறு
 போரில் இறந்துபட்ட கரந்தை வீரர்களின் பெயர், போர்ப் பெருமை, புகழ் யாவும் எழுதி, 
மயிற்பீலி சூட்டி, பாலை நிலந்தோறும் உயர்ந்த நிலையான நடுகற்கள் நாட்டப்பட்டு, அவர் 
பிடித்திருந்த வேலை அந் நடுகல்லிடத்து நாட்டி, கேடகங்களும் அதன்கண் 
சார்த்தப்பட்டிருந்தன. இது வேறு வேந்தரின் போர்முனைபோல் தோன்றி அச்சம் தரும் கானக் 
காட்சியாயிற்று. இவ்வாறு நடுகல் நட்டு நாட்டைக்காத்த
 போர்வீரரைப் போற்றும் பழந்தமிழர் மரபு காண்க.
 
 இவ்வாறு மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் பாடிய ஒரு பாடல் அகநானூறு நூலில் 
காணலாம்.
 " ஆடவர் பெயரும் பீடும் எழுதி 
அதர்தொறும்பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
 வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
 வெருவரு தகுந கானம் …. " - (131-10-13)
 
 புறநானூறு
 பகைவர் கவர்ந்த ஆநிரைகளைத் தனித்து நின்று மீட்டுக்கொணர்ந்த கரந்தை மறவன் இறந்து 
விட்டான். அவன் பெயர், மயிற்பீலி சூட்டி, புடைவையால் செய்த பந்தலின் கீழ் நடப்பட்ட 
நடுகல்லிற் பொறிக்கப்பட்டு விளங்குகின்றது. இச் செய்யுளை வடமோதங்கிழார் என்னும் 
புலவர் பாடியுள்ளார்.
 
 " மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
 இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
 படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே. " - (260-26-28)
 
 
 இன்னும் கரந்தை மறவர், பகைவர் கவர்ந்த ஆநிரைகளை மீட்டுத் தந்த போரில் மடிந்தனர். 
அவர் வீரம் போற்றி நடுகல்லும் எழுப்பினர். அதனால் அவரும் நடுகல்லாகினர். "களிற்றடி 
போன்ற பறை" என்ற கூற்றும் நோக்கற்பாலது.
 
 " நிரைஇவண் தந்து நடுகல் ஆகிய…" - (261-15)
 (பாடியவர் : ஆவூர் மூலங்கிழார்.)
 
 " பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
 இரும்பறை இரவல! .. .. " - (263-1-2)
 " கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே. " - (263-8)
 (பாடியவர் : தெரியாது)
 
 " அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து
 இனிநட் டனரே! கல்லும் .. .. " - (264-3-4)
 (பாடியவர் : உறையூர் இளம்பொன் வாணிகனார்)
 
 " பல்ஆன் கோவலர் படலை சூட்டக்
 கல்ஆ யினையே .. … " - (265-4-5)
 (பாடியவர் : சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்)
 
 குறுந்தொகை
 குறுந்தொகை நூலில் பறைகள் ஒலிக்கவும், சங்குகள் முழங்கவும் கடவுள் தன்மையுடைய 
முதிர்ந்த ஆலினைக் கொண்ட பொதியின்மலைக்
 கண்ணே என்று ஒளவையார் ஒரு பாடலைத் தந்துள்ளார்.
 
 " பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
 தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய .. " - (15-1-2)
 
 கலித்தொகை
 ஒலிமிக்க பல பறைகள் ஒலியார்ப்ப மாறிமாறிப் பல வடிவங்களும் காட்டி, நீ பயங்கரமான 
~கொட்டி| என்ற கூத்தினை ஆடுவாயே என்று கலித்தொகை நூலில் கடவுள் வாழ்த்துப் பாவில் 
காட்டப்பட்டமையும் காண்க.
 
 " படுபறை பலஇயம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
 கொடுகொட்டி யாடுங்கால் .. .. " - (5-6)
 
 சிலப்பதிகாரம்
 இனி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரம் என்னும் நூலில் இச் 
செய்திகள் எவ்வண்ணம் கூறப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம்.
 
 சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று எதிர்த்து வந்த ஆ.ரிய மன்னர்களை வென்று, 
இமயத்தில் பத்தினித் தெய்வத்துக்கு உருவெழுதக் கல்லெடுத்து, அதனைத் தோற்றுப் 
பிடிபட்ட கனகவிசயர் முடிமேல் ஏற்றி, கங்கையில் நீர்ப்படை செய்து, வஞ்சிமாநகருக்குக் 
கொணர்ந்து, படிமம் அமைத்து, சிறப்பு விழாவெடுத்து, தெய்வமாக நட்டு, கோயில் எழுப்பி, 
கொண்டாடி மகிழ்ந்தான் மக்களுடன். இவ்வாறு கண்ணகி நடுகல்லாய், கோயிலாய், 
தெய்வமாகின்றாள்.
 
 " பொற்கோட்டு இமயத்துப், பொருவறு பத்தினிக்
 கற்கால் கொண்டனன்;;; காவலன் ஆங்கு,என்." - (26-253-254)
 
 " கடவுள் பத்தினிக் கல்கால் கொண்டபின்.. " - (27-2)
 
 " பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆடப் .. " - (26-208)
 
 " வடித்தோல் கொடும்பறை வால்வளை நெடுவயிர்.." - (26-193)
 
 " இமய மால்வரைக் கல்கடவுள் ஆம்.. " - (29-23)
 
 " பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து.. " - (30-151)
 
 " தெய்வம் தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்! " - (30-187)
 
 கொன்றைவேந்தன்
 ஒளவையார் யாத்த நீதிநெறி நூலான கொன்றைவேந்தனில் கோயில், தெய்வம் ஆகியவற்றின் 
சிறப்பினை மிக அழகாக விபரித்துக் கூறியுள்ளார்.
 
 " அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்."
 
 " ஆலயம் தொழுவது சாலவும் நன்று. "
 
 " தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை. "
 
 " தெய்வம் சீறின் கைதவம் ஆகும். "
 
 இன்றைய பார்வையில்
 உற்சவ காலங்களில் மக்கள் கோயி;லில் கூடி, இராக் கூத்தாடி, தெய்வத்திற்கு மடை பரவி, 
பறை அடித்து, தெய்வம் உருக்கொண்டாடி, மக்கள் குறை கேட்டு, குறி சொல்லி, தெய்வ 
ஆட்டத்துடன் பறை முழங்கக் கடற்கரைநாடி, வழிவெட்டி, விழா நடாத்துவது நாம் இன்றும் 
காணும் காட்சிகளாம். நாட்டில் நோய் பரவி, மழை குன்றி, வறுமை ஏற்படுங்கால் தெய்வம் 
எழுந்தருளி வீதிவலம் வந்து மக்களையும்,
 நாட்டையும் காத்து அருள் வழங்குவதும் தெய்வச் செயலாம்.
 
 நாட்டைக் காக்கும் போராளி வீரச்சாவெய்தியவிடத்து அவர் நினைவாக நடுகல் நட்டு, கல்லறை 
சமைத்து, அவர் பெயர், புகழ், வீரம் தீட்டி, ஆண்டாண்டு தோறும் மலர் தூவி, அவரை 
நினைந்து உருகி நிற்கும் நிலை தமிழீழத்தின் ஒரு வரலாற்று நிகழ்வாகும். இக் 
கல்லறைகள் கோயில் ஒத்த புனித இடமாகும். எனவே இவையும் கோயில்களே.
 
 தமிழீழத்தில் பறை ஒரு மங்களகரமான வாத்தியக் கருவியாகும். மகளிரின் சுகப் பிரசவம் 
வேண்டிக் கோயில்களில் பறை முழக்குவிக்கும் நிகழ்வுகளை நாம் இன்றும் 
கிராமப்புறங்களில் காணலாம்.
 
 மேலும், வசதி குறைந்த கிராமங்களில் சில முக்கிய அரச அறிவித்தல்கள் மக்களைப் போய்ச் 
சேரும்படி, பறை அடித்து அறிவித்தலைக் கூவிவாசிக்கும் முறையும் உள்ளது.
 
 ஈமச்சடங்கு நடாத்தும் பொழுதும் இறந்தோரை நினைந்து, அழுது புலம்பி, கிரிகைகள் 
செய்து, பாடை கட்டி, பறை அடித்துச் சுடலைவரை சென்று, இறந்தாரைத் தீக்கிரையாக்கி 
வழியனுப்பும் வழக்கம் ஒரு நீண்ட வரலாற்றுச் செய்தியாம்.
 
 முடிவுரை
 பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்ட இடைச்சங்க, கடைச்சங்க காலத்தில் எழுந்த பண்டைத் 
தமிழ் நூல்களான திருமந்திரம், தொல்காப்பியம், திருக்குறள், குறுந்தொகை, அகநானூறு, 
புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், கொன்றைவேந்தன் ஆகிய நூல்களில் நடுகல், 
கோயில், தெய்வம், பறை ஆகியவை எவ்வாறு பேசப்பட்டுள்ளன என்பதை ஆதாரங்களுடன் பார்த்து 
மகிழ்ந்தோம்.
 
 ஒரு போர்வீரன் போரில் மடியுங்கால், அவன் நடுகல்லாய், கோயிலாய், தெய்வமாய் 
உயிர்த்தெழும் நிலை கண்டோம். மனிதப் பிறவிகளான இயேசுநாதர், புத்தர், கண்ணன், 
இராமர், கண்ணகி, திருமூலருடன் அறுபத்துமூன்று நாயன்மார்கள், திருஞானசம்பந்தர், 
திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார், மாணிக்கவாசகர் போன்றோர் தெய்வமாகிய 
நிலையும் நாம் அறிவோம். இவ்வண்ணம் சில அற்புத
 மனிதர் தெய்வமாகின்றனர். "உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்." என்றுரைப்பது 
திருமூலர் மந்திரம். அது தெய்வம் மனிதனாகும்
 நிலை.
 
 பாராண்ட மன்னர் போர்ப்பறை முழங்கிப் போர் தொடுத்து, வெற்றிவாகை சூடி, மக்களைக் 
காத்து, நல்லாட்சி புரிந்து வந்துள்ளனர். இப்பொழுது மன்னராட்சி மங்கி மறைந்து 
விட்டது. ஆனால் அவர்கள் பாவித்த பறை இன்றும் எம்முடன் நிலைத்து நின்று 
முழங்கிக்கொண்டிருக்கின்றது.
 
 இற்றைக்கு எண்ணாயிரம் (8000) ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நடுகல், கோயில், தெய்வம், 
பறை ஆகியவை அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் மத்தியில் நிலைத்து நின்று தமிழரின் 
பூர்வீகத்தையும், சிறப்பையும், பெருமையையும் பேசிக்கொண்டிருக்கின்றன என்பதை 
உணர்ந்து நாம் பூரிப்படைவோமாக.
 
 wijey@tiscali.co.uk
 |