இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2010 இதழ் 126  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நினைவுகளின் தடத்தில் .. (49& 50 )
நினைவுகளின் தடத்தில் (49)

- வெங்கட் சாமிநாதன் -
-

வெங்கட் சாமிநாதன்அதிக தூரத்தில் இல்லை அந்த ஆர்ட் ஸ்கூல். கிட்டத்திலும் இல்லை. போனதும் மாமாவைப்பார்த்து வெளியே வந்தவர் கைகூப்பி "நமஸ்கார்" என்று சொல்லி வரவேற்றார். நீண்ட குர்த்தாவும் வங்காளிகள் போல பஞ்ச கச்சம் கட்டியிருந்தார் அவர். வங்காளிகள் கட்டும் அந்த குர்த்தாவுக்கு 'பஞ்சாபி' என்று வங்காளிகள் பெயர் வைத்திருக்கிறார்கள் எனபதை இரண்டு வருடங்கள் கழித்து நான் புர்லாவில் வேலை செய்யப் போனபோது என் அருமை வங்க நண்பன் ம்ருணால் காந்தி சக்கரவர்த்தி சொல்ல அறிந்துகொண்டேன். ஏன், பஞ்சாபி என்று பெயர்? இந்த ஸ்டைல் குர்த்தாவை பஞ்சாபிகள் அணிவதே கிடையாதே! அப்படியிருக்க, வங்காளிகளின் சுயகௌரவம் எங்கே போயிற்று என்று கேட்டதற்கு பலமாகச் சிரித்தானே தவிர பதில் இல்லை. அவனுக்கே தெரியாது போலும். போகட்டும். அந்த ஆசிரியர்/பொறுப்பாளர் வங்காளி தான். சாந்திநிகேதனில் படித்தவர் என்பதெல்லாம் மாமா சொல்லித் தெரிய வந்தது. மாமா என்னை அறிமுகப் படுத்தினார். நான் கைகூப்பி வணங்கினேன். பின் நான் வரைந்ததை அவருக்குக் காட்டச் சொன்னார் மாமா. அவர் அதை வாங்கி சூரிய ஒளிக்கு எதிரே பிடித்துப் பார்த்தார். பின் பக்கம் திருப்பிப் பார்த்தார். ஒன்றும் சொல்ல வில்லை. மாமாவும் அவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். "சரி நாளையிலிருந்து காலையில் எப்போ சௌகரியமோ வரச்சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து காலையில் திரும்பியதும் ஆர்ட் ஸ்கூலுக்குப் போவதென்றும் அதன் பின் வீடு திரும்பி சாப்பிட்டுவிட்டு மாமாவின் அலுவலகத்திற்குப் போவதென்றும் தீர்மானமாயிற்று. மறு நாள் போனேன். ஒரு பெரிய அறை, ஹால் என்று சொல்லத்தக்க அளவு பெரிதல்ல. சுவற்றில் நிறைய சித்திரங்கள், வரைபடங்கள், பேஸ்டலில் வரைந்தவை, வாட்டர் கலரில் வரைந்தவை என. சில பெரிய வரைபடங்கள் தரையில் சுவற்றில் சாய்த்தவாறு வைக்கப்பட்டிருந்தன. ஐந்தாறு பேர் கீழே தரையில் உட்கார்ந்து அவற்றில் ஒன்றைப் பார்த்து பிரதி செய்துகொண்டிருந்தனர். முதலில் ஒரு பூனையின் சித்திரத்தைப் பார்த்து வரையத் தொடங்கலாம் என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்தார். நான் சுற்றிப் பார்த்தேன். பூனை நாய் என்று வரைவது ரொம்ப சின்னப் புள்ளை விவகாரமா இருக்கே என்று தோன்றிற்று. அப்படி ஒன்றும் அது சின்னப்புள்ளை விவகாரமில்லை. நிறைய மெல்லிய வளைந்த கோடுகள் கொண்ட சித்திரம். கோடுகளின் வளைவுகளும், மெல்லியதும், தடித்த கோடுகளும் பூணையின் சருமத்தின் வேறுபடும் மென்மையையும் குறிக்கும். நல்ல பயிற்சி தான். ஆனால் நான் தேர்ந்தெடுத்துக் கொண்டது குளித்துவிட்டு குளத்தினருகே ஒரு மரத்தடியின் கீழே இருக்கும் கரடுமுரடான பாறையின் மீது வந்து அமர்ந்திருக்கும் பெண். கரடு முரடானபாறை, மென்மையான சரீரம் என்ற நேரெதிர் தோற்றங்களை கோடுகள் சித்தரிக்கும். நான் வரைய ஆரம்பித்தேன் முதல் முயற்சியில் கால்களை வரைய இடமில்லாமல் போயிற்று. இன்னம் சிறிதாக முயன்றாலும் அப்போதும் முழு உருவமும் பேப்பருக்குள் அடங்கவில்லை. நான் என்னதான் செய்கிறேன் என்று பார்க்க வந்த ஆசிரியர், "முதலில் முழுசித்திரத்தின் அவுட்லைனை பேப்பருக்குள் அடங்கும்படி வரைந்து கொள்ளவேண்டும், பின்னர் விவரங்களுக்குப் போகலாம். என்று ஒரு அவுட்லைனை இரண்டு நிமிடங்களுக்குள் வரைந்து காண்பித்தார். 'சரி இன்றைக்கு இது போதும்." என்றார்.

இப்படி இரண்டு மூன்று நாட்கள் கடந்தபின் ஒரு நாள் நான் ஆர்ட் ஸ்கூலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது யாரோ என் பெயர் சொல்லித் தமிழில் கூப்பிட்ட குரல் கேட்டது. இங்கு என்னை பெயர் சொல்லி தமிழில் கூப்பிடுகிறவர் என்று குரல் வந்த திசையில் பார்த்த போது, தன் வீட்டு வெளி நடையில் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார், மாமா ஆ·பீஸைச் சேர்ந்த டைப்ரைட்டிங் செக்ஷன் இன்சார்ஜ். "இங்கே எங்கே போயிட்டு வரே?" என்று கேட்டார். சொன்னேன். உடனே, சந்தோஷத்தோடு, "அட உனக்கு அது கூட தெரியுமா? எங்கே நீ என்ன வரைஞ்சிருக்கே பாக்கலாம், காட்டு", என்றார். என் டிராயிங் நோட்புக்கைக் காட்டினேன். அதைப் பிரித்துப் பார்த்த அவருக்கு அதிர்ச்சியில் முகம் கோணலாகி, "என்னடா இது, ஒரே ஆபாசமான்னா இருக்கு. இதைத்தான் உன்னை வரயச் சொன்னாளா, இல்லே நீயே வரஞ்சியா?" என்று கேட்டார். "இல்லை நானே தான் வரைஞ்சேன்." என்றேன். அவருக்கு இன்னும் கோபம் அதிகமாயிற்று. " ஏண்டா, உன் வயசுப் பையன் வரையறதா இது? படம் வரையரதுன்னா லக்ஷ்மி, சரஸ்வதி, முருகன், விஷ்ணு, இப்படி வரையப்படாதோ, இப்படியாடா உனக்கு புத்தி போகணும்? என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். கடைசியில், "சரி இந்தா, இதை நீயே வச்சுக்கோ, போ, நான் உன் மாமாகிட்டே பேசிக்கறேன்." என்றார் வெறுப்போடு.

அன்று அவர் ஆ·பீசுக்கு வரவில்லை. மறு நாள்" எப்போதும் போல, முதலில் நான் டைப் செக்ஷனுக்குத் தான் போனேன். நான் உள்ளே நுழைவதைப் பார்த்ததும், அவர் சத்தம்போட்டு, "இதோ வரான் பாருங்கோ பிள்ளையாண்டான். ஊர்லே அப்பா அம்மா கஷ்டபடறாளேன்னு, இவனை மெனகெட்டு இங்கே வரவழைச்சு நாலு விஷயம் சொல்லிக்கொடுக்கலாம்னு அவர் பாவம் முனைஞ்சிண்டுருக்கார். இவன் என்னடான்னா, பொம்மனாட்டி படம் வரைஞ்சிண்டுருக்கான். பொட்டு துணி கிடையாது உடம்பிலே. எனக்குத் தான் தாங்கலே. விஷயத்தைச் சொல்லி, "சார், உங்க மருமானைக் கொஞ்சம் நன்னா கவனிச்சுக்கோங்கோன்னு சொல்லிட்டு வந்துட்டேன்." என்று சொல்லி முடித்தார். எல்லாரும் என்னையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். மாமா கூப்பிடுவார். கூப்பிட்டால் போகலாம் என்று என் பாட்டுக்கு இருந்தேன். மாமா கூப்பிடவில்லை. ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு செக்ஷனுக்கு. பின் வீட்டுக்குப் போனேன். மாமா இந்த விஷயம் பற்றி என்னை எதுவும் கேட்கவில்லை.

அன்றோ அல்லது ஒன்றிரண்டு நாள் கழித்து ஒரு நாள் மாமா ஆ·பீசிலிருந்து திரும்பியதும், மாமா சொன்னார், "இங்கெல்லாம் ஒண்ணும் பிரயோஜனமில்லை. உனக்கும் என்ன கேக்கணும்னு தெரியாது, அவாளும் தானே உனக்கு ஒண்ணும் சொல்லமாட்டா. நீ ஒண்ணு செய், கோல்மூரிலே ஒரு கண்டிராக்டர் கிட்டே சொல்லியிருக்கேன். மத்தியானமா சாப்டப்பறம் அங்கே அஞ்சு மணி வரை அவன் ஆ·பீஸிலே ஒரு க்ளர்க் இருக்கான் அவனுக்கு உதவியா இரு. சம்பளம் ஒண்ணும் கிடையாது. ஆனால் வேலை தருவான். கத்துக்கலாம்." என்று சொல்லி போகும் வழியையும் சொன்னார். அதுவும் நடக்கும் தூரம் தான். 40-45 நிமிஷத்தில் நடந்து போய்விடலாம் என்பது தெரிந்தது.

அந்த புதிய இடமும் எனக்கு சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. ஒன்று நடந்தே ஜெம்ஷெட்பூரின் புதிய இடங்களுக்கு தினமும் போய்வரலாம். புதிதாக ஏதோ கற்றுக்கொள்ளலாம். புதிய அனுபவங்கள்.அந்த கண்டிராக்டரின் அலுவலகத்தில் எப்போதாவது வந்து போகும் கண்டிராக்டரைத் தவிர ஒரு க்ளார்க் தான் இருந்தான். அவன் தான் எல்லா வேலைகளையும் செய்பவன். அங்கு இருக்கும் ·பைல்கள் என்னென்ன ஒவ்வொரு புதிய ·பைலும் எப்படி திறக்கப்படுகின்றன என்றெல்லாம் அவ்வப்போது சொல்லி வருவான். டைப் இப்போது தான் கற்று வருவதால் அந்த வேலை கூட எனக்குக் கொடுக்க முடியாது. ஆக, தினம் அங்கு போவேன். அந்த க்ளார்க்கோடு பேசிக்கொண்டிருப்பேன். பாதி ஆங்கிலமும், பாதி ஹிந்தியும். கும்பகோணம் பள்ளியில் படித்த ஹிந்தி அல்ல. அங்கு மற்றவர் பேசக் கேட்டுக் கற்றுக் கொண்ட ஹிந்தி. திரும்பி வரும்போது பழகிய ஒரே பாதையில் நடக்க மாட்டேன். இப்படி போய் பார்க்கலாமே என்று அடிக்கடி புதிய பாதைகளைத் தேடுவேன். இப்படியான தேடல் ஒரு நாளைக்கு ஒரு மைதானத்தில் ஜெயபிரகாஷ் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அங்கேயே அந்தக் கூட்டம் முடியும் வரை இருந்து விட்டேன். இன்னொரு நாள் எங்கேயே சுற்றிச் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய மாதிரியும் இருந்தது. ஆனால் என்னவானாலும் நேரே ஷார்ட் ஹாண்டு க்ளாஸ¤க்கு கொஞ்சம் முன்னே பின்னே போய்ச் சேர்ந்து விடுவேன். ஆகவே நான் ஊர் சுற்றியது மாமாவுக்குத் தெரியவராது.

வந்த புதிதில் ஒரு நாள் மாமா கேட்டார். "ஆமாம், இப்படி அலுக்காமல் சலிக்காமல் நடக்கறியே, சைக்கிளில் போகலாமே. சைக்கிள் விடத் தெரியுமில்லியா?" என்றார். "தெரியாது" என்றேன். பின், நான் தினமும் 11 மைல் கும்பகோணம் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போய் பழக்கம். அது போக, வயல்களைத் தாண்டி போக வேண்டியிருப்பதால், அங்கேயும் சைக்கிளில் போகமுடியாது. கிராமத்திலிருந்து யாரும் எங்கேயும் சைக்கிளில் போகமுடியாது." என்றேன். மாமா கொஞ்சம் யோசித்தார். "சரி, நீ சைக்கிள் ஓட்டக் கத்துக்கப் போறே. சனி, ஞாயிறு, வாரத்துக்கு ரண்டு நாள் காலம்பற சாக்சி போறே. அங்கே உன் அத்தை இருக்கா தெரியுமோல்யோ. அங்கே போ. சீனு (எனக்கு பெயர் மறந்து விட்டது. அத்தையின் மச்சினனைச் சொல்கிறார் மாமா) உனக்கு கத்துத் தருவான். என்ன, போறியா?" என்றார்.

ஒரு சனிக்கிழமை அவர் சாக்ஸிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் தங்கை, தங்கையின் புருஷன், மச்சினன் எல்லோரும் இருந்தனர். தங்கையின் புருஷன் டாடாவின் டின் ப்ளேட் தயாரிக்கும் பிரிவில் இருந்தார் என்று நினைவு. சனி ஞாயிறுகளில் காலை நேரத்தில் எனக்கு சைக்கிள் கற்றுத் தரச் சொல்லி ஏற்பாடு செய்தார். சீனுவும் நானும் சினேகமாகிவிட்டோம். எனக்கு சில வருஷங்கள் மூத்தவன். சைக்கிள் கற்றுக்கொண்டேன். இடையில் ஒரு நாள் ஒரு நீண்ட சரிவான பாதையில் என்னை மீறி சைக்கிள் வேகம் அதிகரித்து சரிவின் கடைசியில் குறுக்கே வரும் ரோடில் திருப்பத் தெரியாமல் ஒரு வேலியின் மீது மோதி விழுந்ததில் முள் கம்பி இடது கையில் நிறைய கீறிவிட்டது. சைக்கிள் பாரும் வளைந்து விட்டது. மாமா சொன்னது " அடி படாமல் யாரும் சைக்கிள் கத்துண்டது கிடையாது. டிங்சர் அயோடின் போட்டுக்கோ சரியாப் போயிடும். நீ நாளைக்கு மறுபடியும் சைக்கிள் ஒட்ட அங்கே போறே. என்ன போறியா?" என்றார். போனேன். ஒரு நாளைக்கு மச்சினன் சொன்னான். "சாமா, நீயும் நானும் இரண்டு சைக்கிள் எடுத்துண்டு சைக்கிளை ஓட்டீண்டே பிஸ்டுபூர் போறோம். மாமா கிட்டே நீ கத்துண்டாச்சுன்னு காமிக்கணும்." என்றான்.

மாமாவின் வீட்டின் முன் இருவரும் சைக்கிளிலிருந்து இறங்கினோம். மாமா சத்தம் கேட்டு வெளியே வந்தார். "உங்க மருமானுக்கு சைக்கிள் ஒட்டத் தெரிஞ்சுடுத்து. இனிமேல் கோல்மூரிக்கு அவன் சைக்கிளிலேயே போகலாம்." என்று சொல்லிக்கொண்டே வந்தான் சீனு. சாக்சியிலிருந்து பிஸ்டுபூர் வரை சைக்கிளில் சென்றது தான் எனக்கு சீனு நடத்திய அரங்கேற்றம். "அவனுக்கு தெரியாததையெல்லாம் சொல்லிக் கொடுக்கறது தான்பா என் வேலை. இனிமே போற இடத்திலே கஷ்டப்படமாட்டானோல்யோ? அது போறும் கத்துக் கொடுத்துட்டியே, ரொம்ப தாங்க்ஸ்." என்றார் மாமா. சீனுவுக்கு என்னிடம் ஒரு பற்றுதல். அது பின்னர் தெரிந்தது. 9.11.09

நினைவுகளின் சுவட்டில் - (50)

- வெங்கட் சாமிநாதன்
-

வெங்கட் சாமிநாதன்ஓன்றிரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் மாமா, "இனிமே நீ கோல்மூரி போகவேண்டம். சீனு வேலை செய்யற ஆ·பீஸிலே ஒரு டைபிஸ்ட் தேவையாம். உனக்குத் தான் இப்போ டைப் பண்ண வந்துடுத்தே. சீனு உன்னைப் பத்தி சொன்னானாம். கோல்மூரி போய்ட்டு வந்த மாதிரி மத்தியான சாப்டுட்டு நீ சீனு ஆ·பீசுக்கு போகலாம். சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும், பாதி நாள் வேலை பாத்தா போறும். ரொம்ப தூரம் கூட இல்லை. கோல்மூரிக்கு போற பாதி வழிலேயே இருக்கு. நீயும் ஒரு ஆ·பீஸிலே வேலை செய்யக் கத்துக்கலாம். அங்கே உனக்கு சம்பளமும் கிடைக்கும்." என்றார். எனக்கு சந்தோஷம் தான் முதல் தடவையா சம்பளம் கிடைக்கப் போறதே.

அதுவும் ஒரு கண்ட்ராக்டரின் ஆ·பீஸ் தான். ஒரு வங்காளி தான் கிட்டத்தட்ட பாகவதர் மாதிரி க்ராப். வங்காளிகள் பாணியில் பஞ்சகச்சம். வேஷ்டியின் கொசுவம் நீளமாகத் தொங்கி தரையை வருடிக் கொடுக்கும். அதை அள்ளிச் சுருட்டி தன் பஞ்சாபி குர்தாவின் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்வான். அவன் இஷ்டம் போல் வருவான். வந்ததும் இரு கால்களையும் தூக்கி நாற்காலியில் வைத்து சாய்ந்துகொள்வான். ஏதும் எழுதும்போது மேஜையின் மீது தலை குனிந்திருக்குமே தவிர கால்களை நாற்காலியை விட்டு எடுக்கமாட்டான். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவன் இல்லாத போது அப்படி உட்கார்ந்து பார்க்க முயல்வேன். முடியாது. என் தவிப்பைப் பார்த்து சீனுவுக்கு சிரிப்பு தாங்காது. ஆனால் அந்த வங்காளி என்னிடம் அதிகம் வேலை வாங்கியதும் கிடையாது. தன் அதிகாரத்தைக் காட்டியதும் கிடையாது. சீனுவிடம் வேலையைக் கொடுத்துவிட்டு எனக்கு வேலை கொடுப்பதை சீனுவிடம் விட்டுவிடுவான். சீனுவும் வேலை பழகட்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பான். அனேக நேரம் வங்காளி இல்லாத போது சீனு வுடன் வம்பு பேசியே பொழுது கழிந்து விடும்.

முதல் தடவையாக அந்த ஆ·பீசில் வேலைக்குச் சேர்ந்த பிறகு தான் தூரத்தில் தெரியும் ஒரு சினிமா ஹாலைப் பார்த்தேன். அந்த சினிமா ஹாலின் போஸ்டரில் தான் சுரையா என்ற ஹிந்தி நடிகையின் பெயரும் தெரியவந்தது. இதற்கு முன் மதுரையில் பார்த்த அன்மோல் கடி என்ற படத்தில் அவள் துணை நடிகையாக அறிமுகமாயிருந்தாள். அன்மோல் கடியில் ஹீரோயின் நூர்ஜஹான். அவள் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டாள். இப்போது சுரையா தான் பிரமாதப் பட்டுக்கொண்டிருந்தாள். பாடவும் தெரிந்த கடைசி ஹிந்தி ஹீரோயின். அப்போது தான் தேவ் ஆனந்தும் ஹிந்தி பட உலகில் ஹீரோ வாக அறிமுகமாகிறார்.

இதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது சினிமா பார்த்து அல்ல. ஜெம்ஷெட்பூரில் இருந்த ஆறு மாத காலத்தில் நானோ, மாமாவோ அல்லது யாருமோ ஒரு சினிமா கூட பார்க்கப் போனதில்லை. அவர்களுக்கு அதில் ஏதும் பிடித்தம் இருக்கவில்லை. முன்னர் சினிமா பைத்தியமாக இருந்த எனக்கும் சினிமா பார்க்காத இந்த ஆறுமாத காலம் ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை.

பிஸ்டுபூரில் மாமாவின் வீட்டுக்கு முன் ஒரு திறந்த புல்வெளி. அந்த புல்வெளியைச் சுற்றி நான்கு புறங்களிலும் வீடுகள். ஆனால் வலது புறத் திருப்பத்தின் முனையில் ஒரு பெரிய கட்டடம். அந்தக் கட்டடம் தான் பிஸ்டுபூர் வாசிகளுக்கான ரெக்ரியேஷன் க்ளப். அதில் பில்லியர்ஸ் டேபிள் இருக்கும். டேபிள் டென்னிஸ் ஒரு புறத்தில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஒரு ரீடிங்க் ரூமும் உண்டு. அதில் தினசரி வாரப் பத்திரிகைகள் என நிறைய ஒரு நீண்ட பெரிய மேஜையில் பரவிக்கிடக்கும். அங்கு எனக்கு தமிழ் பத்திரிகைகளும் கிடைத்தன. அங்கு வழக்கமான ஆனந்த விகடன், கல்கி தவிர அமுதசுரபி என்ற பத்திரிகையும் இருந்தது. அமுத சுரபி என்ற தமிழ் பத்திரிகையை நான் அங்கு தான் முதலில் பார்த்தேன். அந்த பத்திரிகை தான் எனக்கு சாண்டில்யன் என்ற தமிழ் எழுத்தாளரையும் எனக்கு அறிமுகம் செய்தது. அப்போது அவர் அதில் ஜீவபூமி (என் ஞாபகம் சரிதானா?) என்ற ஒரு சரித்திர தொடர்கதை எழுதி வந்தார். ராஜஸ்தான அரசர்களைப் பற்றியது. பின்னர் நமக்கு குமுதம் பத்திரிகையில் தெரியவந்த சாண்டில்யனின் எழுத்துச் சிறப்புகள் அற்ற சரித்திரக் கதை அது. இங்கு கிடைத்த அமுதசுரபி அறிமுகம் தான் பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு நான் ஹிராகுட்டுக்குப் போனபோது அங்கும் தொடர்ந்த அமுதசுரபியில் தான் லா.ச.ராமாம்ருதம் எழுத்து எனக்கு அறிமுகம் ஆனதை முக்கியப்படுத்திச் சொல்லவேண்டும். சனி, ஞாயிறு திங்களிலும் மற்ற நாட்கள் மாலையில் எனக்குக் கிடைக்கும் நேரத்தை, வீட்டுக்கு வெகு அருகாமையில் இருந்த அந்த கட்டிட ரீடிங்க் ரூமில் தான் செலவழித்தேன் என்று சொல்லவேண்டும்.

வீட்டுக்கு எதிரான அந்த மைதானம் தான் பிஸ்டுபூரின் பெரியார் திடல். அல்லது தில்லியின் ராம் லீலா மைதான். அல்லது மதுரையின் தமுக்கம் மைதானம். ஒரு நாள் அங்கு அந்த மைதானத்தையே நிறைத்த ஒரு பெரிய கூட்டம். டாடா இரும்பாலைத் தொழிலாளர்களின் கூட்டம். அங்கு அன்று ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஜான். மலையாளி. அவர் தான் அந்த பெரிய தொழிற்சங்கத்தின் செயலாளர். மிக சரளமாக, தெளிவாக ஹிந்தியில் பேசியதாகச் சொன்னார்கள். மாமாவும் இன்னும் அவரது அண்டை விட்டு நண்பர்களும் ஜானின் பேச்சைக் கேட்டுக்கொண்டே தங்களுக்குள்ளும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஜானுக்கு தொழிலாளர்களிடையே மாத்திரம் அல்ல, பீஹார் மாநில முதல் மந்திரியும்ம் (அனு கிரஹ நாராயண் சின்ஹா என்று நினைக்கிறேன்) தொழில் மந்திரியும் அவரைப் பொருட்படுத்தும் செல்வாக்கில் இருந்தவர் என்று அவர்கள் பேச்சில் தெரிந்தது.

புதிய இடத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆனதும், அந்த வங்காளி, "உனக்கு சம்பளம் கொடுக்கணுமே, எவ்வளவு வேணும்?" என்று கேட்டான். நான் பதில் சொல்லவில்லை. என்னையும் சீனுவையும் மாறி மாறிப்பார்த்தான். "சரி இப்போ 75 ரூபா கொடுக்கறேன். அப்பறம் உனக்கு நல்ல அனுபவம் வந்த பிறகு கூடக் கொடுக்கறேன். சரியா?" என்றான். எனக்கு அதுவே பெரிய தொகையாகப் பட்டது. பேசாமல் வாங்கிக் கொண்டேன். வீடு திரும்பியதும் மாமாவிடம் பணத்தைக் கொடுத்து இன்று சம்பளம் கிடைத்தது ரூ 75. என்று சொன்னேன். "நீ சம்பாதிச்சது. நீயே வச்சுக்கோ. சந்தோஷம். ஸ்வாமி முன்னாலே வச்சு நமஸ்காரம் பண்ணு. நாளைக்கு அப்பாக்கு 50 ரூபாய் மணி ஆர்டர் பண்ணு. அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார். மணி ஆர்டர் பண்ணத் தெரியுமோ உனக்கு?" என்று கேட்டார். "சீனு பக்கத்திலே இருக்கானே" என்றேன். அப்பாவுக்கு பணமும் அனுப்பி கடிதமும் எழுதினேன். முதல் சம்பளம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சந்தோஷமாக இருக்கும்.

பிஸ்டுபூரிலேயே, டைப் ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட் இருந்த திசையில் இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு கோயில், இருந்தது. அதற்குப் போயிருந்தோம். கணேஷ் மந்திர் என்று தான் சொன்ன ஞாபகம். கற்பக்கிரஹம் சின்னது தான். ஆனால் அதற்கு எதிரே இருந்த கூடம் மிகப் பெரியது. மிக அமைதியான, புனிதம் தோற்றும் இடம். வயிற்றுப் பிழைப்புக்காக எந்த பரதேசம் சென்றாலும் அங்கு தமக்கு என ஒரு கோவிலைத் தமிழர் கட்டிக்கொள்வதில் தவறுவதில்லை. அதோடு அந்தக் கோவில் தமிழ் நாட்டை விட புனிதமாகவும் சுத்தமாகவும் இருப்பது ஒரு சிறப்பான அம்சம். எந்த விசேஷம் காரணமாக கோவிலுக்குச் சென்றோம் என்று ஞாபகமில்லை. நான் ஜெம்ஷெட்பூருக்கு வந்த ஒரு வாரம் பத்து நாடகளுக்குள்ளேயே அந்தக் கோவிலுக்குப்போகும் முகாந்திரம் கிடைத்துவிட்டது. வேஷ்டியும் மேலே போர்த்திய துண்டுமாகத்தான் நாங்கள் சென்றோம். மாமா எதைச் செய்தாலும் மிகுந்த சிரத்தையும் ஒழுங்குமாகச் செய்பவர். அர்ச்சனை, பூஜை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, என் பக்கம் திரும்பி, " உனக்குத் தெரிந்த ஸ்லோகம் ஏதாவது சொல்லேன்" என்றார் மாமா. அப்பா மிக வைதீகர் என்ற காரணத்தால் எனக்கும் அதெல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைத்தார் போலும். அதெல்லாம் நான் படித்ததில்லை. எனக்கு சமஸ்கிருதமும் தெரியாது, அப்பா படிக்கும் க்ரந்த எழுத்தும் தெரியாது. தன் பிள்ளைக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று அப்பா விரும்பியதும் கிடையாது. 'தெரியாது,' என்று சொல்ல அந்த சூழலில் மிகவும் கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தெரியாது தானே. 'தெரியாது' என்று பலஹீனமாகச் சொன்னதும், அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. இப்படி ஒன்றுமே தெரியாத ஒரு பிள்ளைக்கு என்ன என்னதான் சொல்லிக்கொடுத்து கரையேற்றுவது என்று அலுத்துக்கொண்டாரோ என்னவோ.

நான் அங்கிருந்த ஆறு மாதகாலத்தில் நடந்த சில வேடிக்கையான சம்பவங்களைச் சொல்ல வேண்டும். அப்பு மாமவுக்கு இரண்டு தம்பிகள். ஒரு தம்பி, சதாசிவமோ, சாம்பசிவமோ, பம்பாயில் இருப்பவர். கடைசித் தம்பி, குழந்தை என்று தான் கூப்பிடுவார்கள் அவரை, எங்களுக்கு அவர் குழந்தை மாமா. அப்போது உமையாள்புரத்திலோ பாபுராஜபுரத்திலோ கணக்குப் பிள்ளையாகவோ என்னவோ இருந்தார். நல்ல திடகாத்திரமான மனிதர். இடுப்பில் பஞ்சகச்சமும் கட்டுக்குடுமியோடும் தான் காட்சியளிப்பார். அவ்வளவாக வசதியில்லாதவர். ஆனால் அது வெளித்தெரியாது. எப்போதும் தமாஷாகப் பேசிக்கொண்டிருப்பார். அவர் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகத்தான் இருக்கும். அவர் அண்ணாவைப் பார்க்க ஜெம்ஷெபூர் வந்திருந்தார். ஊரிலிருந்து மாமவுக்குக்கொடுக்க நிறைய சாமான்கள் கொண்டு வந்திருந்தார். அதாவது அண்ணா வடக்கே இருந்துகொண்டு வாய்க்கு ருசியாக சாப்பிடமுடியாமல் என்ன கஷ்டப்படுகிறாரோ என்ற நினைப்பில் கொண்டுவந்தது. அது அப்பு மாமாவுக்குப் பிடிக்காத விஷயம். அதோடு குழந்தை மாமா கொண்டுவந்த ஐட்டங்களில் ஒன்று கொல்லையில் இருந்த இரண்டு மூன்று புளிய மரங்களிலிருந்து இறக்கிய புளி. "ஏண்டா இதையெல்லாம் தூக்கிண்டு வந்தே? இங்கே என்ன புளியும் அப்பளமும் கிடைக்காது உனக்கு யாருடா சொன்னா?" என்று கோபித்துக்கொண்டார். அதை குழந்தை மாமா எங்கே காதில் போட்டுக்கொண்டார்? "இதெல்லாம் ஒரு பாரமா? வரப்போ பாக்கறவா எல்லாம் இந்தக் குடுமியைப் பாத்து, "இன்னமுமா குடுமியோட இருக்கேள்? ஆச்சரியா இருக்கே?" ன்னு கேக்காதவா இல்லை. பாக்கறவா எல்லாம் கேக்கறா, பாக்கறப்போல்லாம் கேக்கறா? என்னமாடா இந்தக் குடுமிக்கு ஒரு ஆபத்துமில்லாமே பத்திரமா ஊர் போய்ச் சேரப்போறோம்னு கவலையா இருக்கு எனக்கு?" என்று அவர் பாணியில் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு சொன்னபோது எல்லோரின் சிரிப்பும் அடங்க வெகுநேரமாயிற்று. மாமாவும் தான். அந்தச் சிரிப்பில் அவர் கோபம் எல்லாம் எங்கோ போயிற்று.

ஒரு நாள் ஏதோ பெண்களுக்கான விசேஷ நாள் போலும். பிஸ்டுபூரிலேயே வேறோர் வீட்டில் எல்லா வீட்டுப் பெண்களும் கூடி நடத்தும் பூஜையோ என்னவோ, சரியாக ஞாபகமில்லை. மாமியை அழைத்துப் போக வந்தார்கள். குழந்தையைத் தான் எங்கே விட்டுப் போறதுன்னு தெரியலைன்னு ஒவ்வொர்த்தரும் சொல்ல, "ஏன்? எங்க சாமா இருக்கானே அவர் பாத்துப்பான். என்ன அதிகம் போன இரண்டு மூணு மணிதானே. அதுக்குள்ளே வந்துடுவோமே, அவனுக்கும் குழந்தைகள்னா கொள்ளைப் பிரியம்," என்று மாமி சொல்லவே, இதைத் தான் எதிர்பார்த்தது போல, அக்கம் பக்கத்திலிருந்த வீட்டு மாமிகள் எல்லாம் ஒவ்வொருவராக தம் குழந்தைகளை என்னிடம் விட்டுச் சென்றார்கள். மாமியிடம் அந்த மாதிரி ஒரு புகழ்மாலை கிடைத்தது சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் அதன் விளைவுகள் அவ்வளவு சந்தோஷகரமாக இருக்காது என்பது பின்னர் தெரியவந்தது. நாலைந்து குழந்தைகள். எல்லாம் மூன்று வயது நான்கு வயதுக் குழந்தைகள். கொஞ்ச நேரம் அவற்றோடு விளையாடிக்கொண்டிருந்ததும், அதுகளின் சிரிப்பும் எல்லாம் சுகமாகத்தான் இருந்தது. சுகமான தருணங்களுக்கு எப்போதுமே ஆயுள் கம்மி ஆயிற்றே. ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடித்துவிட்டதோ என்னவோ அது அழ ஆரம்பித்து விட்டது. உடனே அதை சமாதானப்படுத்த கொஞ்ச நேரம் பிடித்தது. அதை சமாதானப் படுத்தும் முயற்சியில் மடியில் வைத்து விளையாடவே இன்னொன்றுக்கு அது பொறுக்காமல் மடியில் இருந்ததை அடிக்க ஆரம்பித்தது. இதற்குள் இன்னொன்று மற்றொன்றை என்னமோ சீண்டி விட அதுவும் அழ ஆரம்பித்தது. இப்படி ஒன்றை சமாதானப் படுத்த இன்னொன்று ஆரம்பிக்க....ஒரு கட்டத்தில் இரண்டு மூன்று அழ, நாலாவது அம்மாவை நினைத்துக்கொள்ள...... இரண்டு மணி நேரம் நான் பட்ட பாடு.... குழந்தைகள்னா சாமாவுக்கு கொள்ளைப் பிரியம் என்று ஏன் பெயர் வாங்கினேன், அதை ஏன் மாமி ஊர் அறிய தண்டோரா போடவேண்டும் என்று நொந்துகொண்டேன். இதன் பிறகு என் வாழ்க்கையிலேயே ஒரு குழந்தைக்கு மேல் baby sitting பொறுப்பு எனக்கு வந்ததில்லை என்பது நிம்மதி அளிக்கும் விஷயம். எல்லா மாமிகளும் திரும்பி வந்த போது, புயல் வீசி ஓய்ந்து அமைதி நிலவிய கட்டம். சில குழந்தைகள் தூங்கி விட்டன. ஒன்று என் மடியில். இன்னும் ஒன்று ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தது. "பரவாயில்லையே உங்க சாமா நன்னா பாத்துக்கறானே. இனிமே எங்கியாவது போகணும்னா சாமா கிட்டயே விட்டுட்டுப் போகலாமே, " என்றாள் ஒரு மாமி.

vswaminathan.venkat@gmail.com.


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்