புதினம்.காம்: 10 
              நவம்பர் 2006!
              வாகரை தாக்குதல்: அமெரிக்கா 
              ஆழ்ந்த வருத்தம்! 
              
              சிறிலங்கா இராணுவத்தினரால் இடம்பெயர்ந்த அகதிகள் மீது
              
              வாகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 
              உயிரிழந்தமைக்கு அமெரிக்கா ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. இது 
              தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளரின் அறிக்கையை 
              கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. 'அறிக்கை 
              விவரம்: இலங்கையின் கிழக்கில் வாகரை பிரதேசத்தில் நவம்பர் 8 ஆம் நாள் 
              உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய 
              எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தமைக்கு அமெரிக்கா 
              ஆழ்ந்த வருத்தம் கொள்கிறது. பொதுமக்களை மனித கேடயங்களாக்கி 
              எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு உயிரிழப்புக்கள் ஏற்படாத வகையில் உரிய 
              அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவுக்கு நாம் 
              அறிவுறுத்தியுள்ளோம். நவம்பர் 8 ஆம் நாள் சம்பவம் தொடர்பாக உடனடியாக, 
              சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதியின் முன் 
              தொடர்புபட்டோரை நிறுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்தை நாம் 
              கேட்டுக் கொள்கிறோம். மேலும் இலங்கையின் வடபகுதியில் பூநகரியில் அதே 
              நாளில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் 
              அவரது குழுவினர் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பிலும் நாம் 
              அதிருப்தியடைந்துள்ளோம். யுத்த நிறுத்தத்தை மதிப்பு கடைப்பிடிப்பதில் 
              உள்ள ஈடுபட்டை வெளிப்படுத்த வேண்டும், அனைத்து போர் நடவடிக்கைகளை 
              உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும், இனப்பிரச்சனைக்கு அமைதி 
              வழியில் தீர்வு காண பேச்சுக்களுக்குத் திரும்ப வேண்டும் என்று 
              சிறிலங்கா அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் நாம் 
              வலியுறுத்துகிறோம். இருதரப்பினரையும் பேச்சுக்களுக்கு அழைத்துவர 
              நோர்வே அமைதி அனுசரணையாளர்கள் மேற்கொண்டு வரும் தற்போதைய 
              முயற்சிகளுக்கு நாம் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறோம் என்று அந்த 
              அறிக்கையில் கூறப்பட்டுள்ளது'.
              
              வாகரைத் தாக்குதல்: சர்வதேச 
              செஞ்சிலுவைச் சங்கம் துயரம்! 
              
              சிறிலங்கா இராணுவத்தால் வாகரையில் நடத்தப்பட்ட கோர கொலை வெறியாட்டம் 
              தொடர்பில் சர்வதேச சங்கம் தனது துயரை வெளிப்படுத்தியுள்ளது.
              சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை: 'சர்வதேச செஞ்சிலுவைச் 
              சங்கத்தின் ஆறு நோயாளர் காவு வாகனங்கள், பேரூந்து, டிறக் மற்றும் 3 
              வாகனங்கள் வாகரையைச் சென்றடைந்துள்ளன. சிறிலங்கா இராணுவத் 
              தாக்குதலில் கொல்லப்பட்டோரையும் காயமடைந்தோரையும் கொண்டு 
              செல்வதற்கும் வாழைச்சேனை மருத்துவமனைக்குரவுக்கான போக்குவரவுக்கும் 
              இவை சென்றடைந்துள்ளன. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் 
              புலிகளுக்கும் இடையேயான மோதலில் சர்வதேச மனிதபிமான சட்டங்கள் 
              மதிக்கப்பட வேண்டும். அனைத்துச் சூழ்நிலைகளிலும் பொதுமக்களைப் 
              பாதுகாப்பதை இருதரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். இராணுவ நிலைகள் 
              மற்றும் பொதுமக்கள் இடையேயான வேறுபாட்டை உறுதி செய்து இத்தகையத் 
              தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் மோதலின் போது பொதுமக்கள் 
              பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்க 
              வேண்டும். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திர நடமாட்டத்துக்கு 
              இருதரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்று அதில் 
              தெரிவிக்கப்பட்டுள்ளது.
              
              வாகரைத் தாக்குதல்- இனி 
              எந்தக் காரணத்தைக் காட்டியும் மெளனம் சாதிக்கக் கூடாது: மருத்துவர் 
              இராமதாஸ்!
              
              உலகத்தின் பிற பகுதிகளில் இது போன்ற தாக்குதல்கள் நடக்கும் 
              போதெல்லாம் முதலில் கண்டனக் குரல் எழுப்பும் இந்திய அரசு, ஈழத் 
              தமிழர்கள் இப்படிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வரும் நேரத்தில் இனி 
              எந்தக் காரணத்தைக் காட்டியும் மெளனம் சாதிக்கக் கூடாது என்று 
              பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 
              வலியுறுத்தியுள்ளார். சென்னையில் அவர் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட 
              அறிக்கை: 'இலங்கையில் ஈழத் தமிழர்களின் நிலைமை நாளுக்கு நாள் 
              மோசமடைந்து வருகிறது. முப்படைகளின் தாக்குதல்களால் ஈழத் தமிழர்கள் 
              வீடு வாசல்களையும் உடமைகளையும் விட்டுவிட்டு உயிர் பிழைக்க தப்பி 
              ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று இலங்கையில் இருந்து வரும் செய்திகள் 
              நம்மை பதைபதைக்கச் செய்கின்றன. 2 தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு 
              மாவட்டம் வாகரையில் உள்ள பள்ளியில் அடைக்கலம் புகுந்திருந்த 
              தமிழர்கள் மீது ராணுவம் ஏவுகணைகளை வீசித் தாக்கி வரலாற்றில் இதுவரை 
              கண்டறியாத மனிதப் படுகொலைகளை நிகழ்த்தியிருக்கிறது. ஈழ யுத்தம் 
              தொடங்கிய 20 ஆண்டு காலத்தில் நடந்திராத மிகப் பெரிய கொடுமை என்று 
              இந்த தாக்குதலை சர்வதேச செய்தி நிறுவனங்களும் மனித உரிமை 
              அமைப்புகளும் வர்ணித்துள்ளன. அப்பாவி பொது மக்கள் அடைக்கலம் புகுந்த 
              இடங்களைத் தாக்கக் கூடாது என்பது சர்வதேச போர் மரபு. ஆனால் ஒரே நாடு 
              என்று சொல்லிக் கொண்டு, தமிழ் மக்களைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிற 
              சிங்கள இனவாத அரசு, அப்பாவித் தமிழர்கள் தஞ்சம் புகுந்துள்ள 
              பள்ளிக்கூடங்களையும், கோவில்களையும், தேவாலயங்களையும், 
              மருத்துவமனைகளையும் குறிவைத்து தாக்கி வருகிறது. உலகத்தின் பிற 
              பகுதிகளில் இது போன்ற தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் முதலில் 
              கண்டனக் குரல் எழுப்பும் இந்திய அரசு, ஈழத் தமிழர்கள் இப்படிக் 
              கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வரும் நேரத்தில் இனி எந்தக் காரணத்தைக் 
              காட்டியும் மெளனம் சாதிக்கக் கூடாது. இந்தியா தலையிட்டு வேகமாக 
              நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. எந்த விடயத்திலும் 
              ஒரு உச்சகட்ட நிலை என்பது இருக்கும். ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் 
              அந்த எல்லை எப்போதோ கடந்து விட்டது. இனியும் இந்திய அரசு தயக்கம் 
              காட்டினால், அந்தத் தயக்கத்தைப் போக்கி தலையிட வைக்க வேண்டிய கடமை 
              தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும், அவர்களின் பிரதிநிதியாக உள்ள 
              தமிழக அரசுக்கும் இருக்கிறது. தமிழக அரசும் தன்னுடைய பொறுப்பைத் 
              தட்டிக் கழிக்க கூடாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அங்கம் 
              வகிக்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக அழைத்துக் கொண்டு 
              முதல்வரோ, அல்லது அவரது பிரதிநிதியாக மூத்த அமைச்சரோ தலைமை ஏற்று 
              பிரதமரையும், மத்திய அரசுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் 
              தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு எதிரான 
              தாக்குதலை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கச் செய்ய 
              வேண்டும். அத்துடன் பிற கட்சித் தலைவர்களையும் சந்தித்து இதற்கு 
              ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்தத் தருணத்தை 
              கைவிட்டு விட்டால், ஈழத் தமிழர்கள் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு 
              விடுவார்கள். ஈழத் தமிழர்களின் அழிவைத் தடுத்திட விரைந்து நடவடிக்கை 
              எடுக்க வேண்டும் என்றார் அவர்.
              
              வாகரைத் தாக்குதல்: ஐ.நா. 
              கண்டனம்! 
              
              வாகரை தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. 
              கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
              வாகரை கதிரவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலையில் வாழ்ந்த 
              அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நியாயப்படுத்த முடியாது. மிகவும் 
              அடிப்படையான மனித உரிமைகளை மீறியதாககும். கதிரவெளி பாடசாலையில் 
              இருந்த மக்கள் திருகோணமலை மோதலால் இடம்பெயர்ந்து தங்கியிருந்தனர். 
              வாகரைத் தாக்குதலை கண்டிக்கிறோம். இத்தகைய கோரச்சம்பவங்கள் 
              எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணை 
              நடத்த வேண்டும். அனைத்துத் தரப்பினரும் மனித உரிமைகளையும் 
              சட்டங்களையும் பாதுகாக்க வேண்டும். 2 ஆயிரம் பொதுமக்கள் இடம்பெயர்வதை 
              விடுதலைப் புலிகள் தடுத்ததான வெளியான செய்திகள் குறித்து 
              அதிருப்தியடைகிறோம். பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்வதை 
              விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. அறிக்கையில் 
              தெரிவிக்கப்பட்டுள்ளது.
              
              வாகரையில் புலிகள் தாக்குதல் 
              நடத்தினர்: அமைச்சர்கள் கேகலிய, பிரியதர்சன!
              
              வாகரையில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் வலிந்த தாக்குதல் நடத்தியதாக 
              சிறிலங்காவின் அமைச்சர்கள் கேகலிய ரம்புக்வெல, அனுரா பிரியதர்சன 
              யாப்பா ஆகியோர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் 
              பேசிய ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா கூறியதாவது: 
              'விடுவிக்கப்படாத பிரதேசமான வெருகல் - வாகரை ஆகிய பகுதிகளுக்கிடையில் 
              சுமார் 20 கி.மீ. தூரம் உள்ளது. இங்கு சுமார் 45 ஆயிரம் மக்கள் 
              வாழ்கின்றனர். புலிகள் கடந்த புதன்கிழமை காலை 7.55 மணி முதல் 11.25 
              மணி வரை நடத்திய தாக்குதலுக்கு இராணுவம் உடனடியாக எந்தவிதமான பதில் 
              தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. பொது மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற 
              அரசின் நிலைப்பாடே இதற்குக் காரணமாகும். எமது பதில் இராணுவ 
              நடவடிக்கையும் கூட ராடர் மூலம் சரியாக உறுதி செய்யப்பட்ட பின்னரே 
              நடத்தப்பட்டது. பதில் தாக்குதலின் போது இராணுவம் 130 மி.மி. பல்குழல் 
              பீரங்கியைப் பாயன்படுத்தியது. இது வெடித்தால், அதன் தாக்கம் ஒரு 
              கி.மீ. தூரத்தைத் தாண்டிச் செல்லாது. இதுவும் பொதுமக்களின் நலனைக் 
              கருதியே பயன்படுத்தப்பட்டது. ஆனால், புலிகள் தமிழ் மக்களைப் 
              பலிக்கடாக்களாக பயன்படுத்தி வருகின்றனர்'.
              
              அதேபோல் பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல 
              கூறியதாவது: 'வாகரையில் எதிர்பாராமல் நடந்த சம்பவத்துக்கு அரசாங்கம் 
              வருந்துகிறது. ஆனால் இராணுவ நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது. 
              மகிந்தபுரம், கல்லாறு, சேருநுவர மற்றும் மாவிலாறு ஆகிய பகுதிகளை 
              இலக்கு வைத்துப் விடுதலைப் புலிகள் கடந்த புதன்கிழமை 
              பீரங்கித்தாக்குதல் நடத்தினர். புலிகளின் தாக்குதல் தொடுக்கப்பட்ட 
              திசையை ராடர் கருவி தெளிவாக அடையாளம் காட்டியது. கதிரவெளிப் 
              பகுதிக்கு சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்தே 
              இத்தாக்குதல் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து அரசாங்க 
              பாதுகாப்பு அதிகாரக் குழு பல முறை கூடித் இலக்கை உன்னிப்பாகத் 
              அவதானித்தது. இதன் பின்னரே இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. 
              இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினர் 
              மீது தாக்குதல்களை நடத்தி தமது நோக்கத்தினை அடைந்து கொள்ள விடுதலைப் 
              புலிகள் முயற்சிக்கின்றனர். தாங்கள் தாக்குதல் நடத்தும் போது 
              இராணுவம் பதில் தாக்குதல் நடத்துவதனை விடுதலைப் புலிகள் நன்கு 
              அறிந்து வைத்துள்ளனர். விடுதலைப் புலிகளை இலக்கு இராணுவத்தினர் 
              இலக்கு வைத்தே தாக்குதல் நடத்துகின்றனர். வாகரையில் நடந்த தாக்குதல் 
              சம்பவம் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக இணைத் தலைமை 
              நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கதிரவெளி வெருகல் 
              பிரதேசத்திலிருந்து சுமார் 600 பேர் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டுப் 
              பிரதேசங்களுக்கு வந்துள்ளனர். வாகரை சம்பவம் குறித்து போர் நிறுத்தக் 
              கண்காணிப்புக் குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சர்வதேச 
              செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் அறிக்கைகள்படி 
              23 பேரின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. 125 பேர் 
              படுகாயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை உயரக்கூடும்'.
              
              வாகரையில் விடுதலைப் புலிகள் 
              தாக்குதல் நடத்தவில்லை: கண்காணிப்புக் குழு!
              
              வாகரையில் சிறிலங்கா அரசாங்கம் தெரிவிப்பது போல் விடுதலைப் புலிகள் 
              தங்கள் முகாம்களிலிருந்து தாக்குதல் நடத்தவில்லை என்று இலங்கை போர் 
              நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக் குழுவின் 
              பேச்சாளர் ஹெலன் ஓல்ப்ஸ்டொட்டிர் கூறியுள்ளதாவது: 'சிறிலங்கா 
              இராணுவத்தினரால் நேற்று முன்தினம் புதன்கிழமை தாக்குதலுக்கு இலக்கான 
              இரு பாடசாலைகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ முகாம் 
              இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. உயிர்தப்பிய சிலரிடம் விசாரண 
              நடத்தினோம். அப்பகுதியில் போராளிகளின் இராணுவ முகாம் இருப்பதற்கான 
              எதுவித ஆதாரமும் இல்லை. சிறிலங்கா இராணுவம் பதில் தாக்குதல் 
              நடத்தியதாகக் கூறுகிறது. ஆனால் அப்பகுதியிலிருந்து இராணுவத்தினரை 
              நோக்கி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதற்கான 
              அறிகுறிகளும் இல்லை. வாகரைத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டும் 600 
              பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியான போதும் 23 உடல்களை 
              கண்காணிப்புக் குழுவினர் பார்த்தனர். 137 பேர் மட்டக்களப்பு 
              மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்'. தமிழீழ விடுதலைப் 
              புலிகளே வலிந்த தாக்குதலை நடத்தினர் என்று சிறிலங்கா அரசாங்கத் 
              தரப்பு தொடர்ந்து கூறிவரும் நிலையில் கண்காணிப்புக் குழுவினர் 
              தெளிவாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
              
              
              வாகரைத் தாக்குதலுக்கு 
              இராணுவம்தான் பொறுப்பு: கொழும்பு அங்கிலிக்கன் ஆயர்! 
              
              
              வாகரைத் தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பு என்று கொழும்பு 
              அங்கிலிக்கன் ஆயர் துலீப் டி சிக்கெர குற்றம்சாட்டியுள்ளார். இது 
              தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: 'வாகரைத் தாக்குதலில் அதிக 
              எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டதும் 
              உள்ளதானது நாட்டை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தத் 
              தாக்குதலை கண்டிக்கிறோம். இத்தாக்குதல் குறித்து விவாதங்களும் 
              விளக்கங்களும் அனைத்துத் தரப்பில் வருகிறது. ஆனால் வெளியாகும் 
              செய்திகள் மூலமாக என்னதான் ஆத்திரமூட்டல் சம்பவங்கள் 
              நடைபெற்றிருந்தாலும் இந்த சம்பவத்துக்கு இராணுவம்தான் கட்டாயம் 
              பொறுப்பேற வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்டது 
              பொதுமக்கள். அவர்களில் பலர் சிறார்களும் முதியோரும். மூதூர் மற்றும் 
              சம்பூரில் சில மாதங்களுக்கு முன்னைய வன்முறைகளால் இடம்பெயர்ந்த 
              மக்கள் அவர்கள். போராலும் வன்முறையாலும் ஏழ்மையால் வாடுகின்றவர்கள். 
              தாக்குதலில் கொல்லப்பட்டோருக்காக இரங்கல் தெரிவிக்கிறோம். 
              காயமடைந்தோர் நலம் பெற பிரார்த்திக்கிறோம். வன்முறை அதிகரித்து 
              மக்கள் பாதிக்கப்படையும்போது வன்முறையற்ற வழியினூடாக பேச்சுக்கள் 
              நடத்தும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படக் கூடும். தமிழீழ விடுதலைப் 
              புலிகளும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் 
              துலீப் டி சிக்கெர. 
              
              நன்றி: புதினம்.காம்!
              
              தினமணி.காம்! 
              
இலங்கை விவகாரம்: 
              கருணாநிதியிடம் மன்மோகன் உறுதி
              
              புதுதில்லி, நவ.10} ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக விரைவில் 
              பாதுகாப்பு அமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக தமிழக முதல்வர் 
              கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். கடந்த இரு 
              நாட்களுக்கு முன்னர் இலங்கையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65 
              தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட கருணாநிதி 
              இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்று 
              குறிப்பிட்டிருந்தார். 
              இந்த அறிக்கையின் ஆங்கில நகலை தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் 
              மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 
              நேரில் வழங்கினார். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங் ''பாதுகாப்பு 
              அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசித்துவிட்டு விரைவில் இலங்கை 
              அரசுடன் தொடர்புகொள்வோம்'' என்றார். மேலும், மட்டக்களப்பு அகதிகள் 
              முகாமில் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது தனக்கு வருத்தமளிப்பதாகவும் 
              பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




