| 
எனது குறிப்பேடு: ஆசிரியர் பக்கங்கள்..அமரர் 
பி.வி.ஆர்...சில நினைவுகள்... 
 - திருப்பூர் கிருஷ்ணன் -
 
 
  [தமிழ் 
வெகுசன இலக்கிய உலகில் முக்கியத்துவம் பெற்றிருந்த எழுத்தாளர்களில் ஒருவர் 
பி.வி.ஆர். கல்கி, குமுதம், விகடன் போன்ற சஞ்சிகைகளில் எழுதிப் புகழ்பெற்றவரிவர். 
இவரது 'மணக்கோலம்' என்னும் நாவல் கல்கி இதழின் வெள்ளிவிழா நாவல் போட்டியில் 
மூன்றாவது பரிசு பெற்ற நாவல். இவரது 'சென்ட்ரல்' என்னும் கல்கியில் வெளிவந்த நாவல் 
'சென்ட்ரல்' புகையிர நிலையத்தை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட நாவல். குமுதத்தில் 
வெளிவந்து புகழ்பெற்ற இவரது 'கூந்தலிலே ஒரு மலர்' நாவலை தமிழில் வெளிவந்த 
புகழ்பெற்ற வெகுசன நாவல்களிலொன்றாகப் பலர் கருதுவர். அண்மையில் எழுத்தாளர் 
பி.வி.ஆர் மறைந்த செய்தியைக் காலம் கடந்துதான் தற்செயலாக இணையத்தில் அமுதசுரபி 
ஆசிரியர் திருப்பூ கிருஷ்ணனின் கட்டுரை மூலம் அறிந்தோம். அவரது நினைவாக 
அக்கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்] 
 முதுபெரும் எழுத்தாளர் பி.வி.ஆர். (பி.வி.ராம கிருஷ்ணன்) தம் 79ம் வயதில் காலமானார் 
என்ற செய்தி நெஞ்சைப் பல நினைவுகளில் ஆழ்த்தியது. அவர் ஒரே நேரத்தில் ஆறு 
பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்த காலம் இருந்தது. ஒரு சரியான ஒழுங்கிற்கு 
ஆட்படாதிருந்தால் இந்த இமாலய சாதனை சாத்தியமல்ல.
 
 கள ஆய்வு செய்து எழுதிய எழுத்தாளர்கள் வரிசையில் பி.வி.ஆருக்கு நிச்சயமாக ஓர் இடம் 
உண்டு. விகடன், கல்கி, கதிர் போன்ற பல இதழ்கள் அவர் தொடர்களை வெளியிட்டன. அவர் 
தொடர் எழுதாத பத்திரிகையே இல்லை எனலாம். சென்ட்ரலை ஆய்வு செய்து சென்ட்ரல், 
கோர்ட்டை ஆய்வுசெய்து மிலாட், அரசு மருத்துவ மனையை மையமாக வைத்து ஜி.எச்., 
ரேஸ்கோர்�ஸ மையமாக வைத்து கிண்டி ஹோல்டான் என அவரது பல நாவல்கள் ஒரு களனை எடுத்துக் 
கொண்டு அதைப் பற்றிய முழுத்தகவல்களையும் திரட்டி எழுதியவை. வெறும் கற்பனையை மட்டுமே 
நம்பி எழுதியவை அல்ல.
 
 அவர் கையெழுத்து மிக அழகாக இல்லாவிட்டாலும் கூட மிகச் சீராக இருக்கும். 
வார்த்தைக்கு வார்த்தை இடம்விட்டும் வரிக்கு வரி இடம் விட்டும் தெளிவாக எழுதுவார். 
முழு வெள்ளைக் காகிதத்தில் எழுதாமல் நோட்டிலிருந்து கிழித்தது போன்ற அரை வெள்ளைத் 
தாளில் தான் எழுதுவார்.
 
 அது ஏன் என்று கேட்டேன். அதிகாலை எழுந்து ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டு ஏதாவது ஒரு 
தொடரின் ஓர் அத்தியாயத்தை சிரத்தையுடன் கைப்பட எழுதுவாராம். பிறகு வாக்கிங் 
போய்விட்டு வந்து குளித்த பிறகு தாம் எழுதியதை மறுபடி படித்துப் பார்ப்பாராம். 
அப்படிப் படிக்கும்போதே திருத்தங்கள் செய்வாராம். எந்தப் பக்கத்திலாவது 
திருத்தங்கள் மிக அதிகம் இருந்தால் அந்தப் பக்கத்தை மட்டும் பிரதி எடுப்பாராம். 
அரைக் காகிதம் என்றால் பிரதியெடுக்க வசதி, முழுக் காகிதம் என்றால் அது முழுவதையும் 
அல்லவா பிரதி எடுக்க வேண்டும் என்றார்!
 
 மிக அதிக அளவில் அவர் எழுதியதற்கான பல காரணங்களில் இத்தகைய தொழில் 
நுணுக்கங்களையெல்லாம் அனுசரித்து அவர் தம் உழைப்பைப் பிரதி எடுப்பதில் 
வீண்செய்யாமல் இருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். கணிப்பொறி வந்தபிறகு எழுத்தாளர் 
கள் எத்தனையோ சௌகரியங்களை அனுபவிக்கிறார்கள். அதெல்லாம் இல்லாத காலத்தில் எழுதிக் 
குவித்த அவர் உழைப்பு நினைத்தால் பிரமிக்க வைக்கிறது.
 
 பத்திரிகைகள் அவர் தொடர்கதைகளை விரும்பி வெளியிட்டதற்கு அவரது அபாரமான எழுத்தாற்றல் 
தவிர வேறொரு முக்கியமான காரணமும் உண்டு. ஒருபோதும் அவர் பத்திரிகைகளை 
சிரமப்படுத்திய தில்லை. ஒவ்வொரு வாரமும் எந்த நாளில் தம் அத்தியாயங்களைத் தர 
வேண்டும் என்று முன்கூட்டியே கேட்டுக் கொள்வார். சரியாக அந்த நாள் காலை பத்திரிகை 
அலுவலகத்தில் அவரது அத்தியாயம் ஆசிரியர் மேசைமேல் தயாராக இருக்கும். தாம் வெளியூர் 
செல்வதானால் முன்கூட்டியே அத்தியாயங்களைத் தந்துவிட்டுச் செல்லும் பொறுப்புணர்ச்சி 
அவரிடம் உண்டு. பத்திரிகை அனுமதித்தால் ஓவியருக்கும் தாமே கதைக்குறிப்பைச் 
சொல்லிவிடுவார்.(சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியதை ப்ரூஃப் பார்க்கவேண்டும் என்று 
சொல்லிக் கேட்டு தாங்கள் எழுதியதின் இருபுறமும் ஏராளமான வாக்கியங்களைப் புதிதாக 
இணைத்து பத்திரிகை உதவியாசிரியர்களைப் படாதபாடு படுத்தி விடுவார்கள். முன்னெல்லாம் 
கைமூலமாக ஒவ்வோர் எழுத்தாக அச்சுக்கோக் கும் தொழில் நுட்பம் மட்டும் தானே இருந்தது! 
சில எழுத்தாளர்களின் தொடரைத் தயவு செய்து போடாதீர்கள் என்று கம்பாசிடர்கள் 
வேண்டுகோள் விடுப்பதுண்டு! ஆனால் பி.வி.ஆர். தொடர் என்றால் எல்லோருக்கும் லட்டு 
மாதிரி.)
 
 எப்போதும் முன்கூட்டியே எவ்வளவு அத்தியாயம் என்று ஒப்புக் கொண்டாரோ அவ்வளவு 
அத்தியாயத்தோடு கதையை நிறைவு செய்துவிடுவார். இன்னும் சில வாரங்கள் வாய்ப்புக் 
கொடுங்கள் என்று அவர் பத்திரிகைகளை வேண்டியதில்லை. கதையைத் தாம் முன்கூட்டியே 
நினைத்த அத்தியாயங்களுக்குள் அடங்குகிற மாதிரிக் கருக்கொண்டு எழுதும் படைப்பாற்றல் 
அவரிடம் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. அவர் தம்மை எந்தக் குழுவோடும் இணைத்துக் 
கொண்டதில்லை. எந்தச் சண்டை சச்சரவிலும் ஈடு பட்டதில்லை. அமைதியாக ஆனால் அழுத்தமாக 
தம் ஆற்றலைத் தாமே உணர்ந்தவர் மாதிரி அவர் எழுத்துலகில் இயங்கினார். மேடைகளுக்கு 
அவர் அதிகம் வந்ததில்லை.
 
 வெடுக் வெடுக்கென்று பேசும் அவரது பெண் பாத்திரங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் 
இருந்தார்கள். கதையைப் பெரும்பாலும் சம்பவங்களால் அல்லாமல் உரையாடலாலேயே நகர்த்தும் 
வித்தை யும் அவருக்குக் கைவந்திருந்தது. அந்த உரையாடல்கள் கச்சிதமாக வும் 
கூர்மையாகவும் நெஞ்சைத் தாக்கும் வகையிலும் எழுதப்பட் டிருந்தன.
 
 குப்பத்து சாஸ்திரிகள் என்ற தொலைக்காட்சித் தொடர் விகடனில் அவர் எழுதிய கதைதான். 
அந்தத் தொடர் தொலைக் காட்சியில் நிறைவுற்றபோது அதற்கு ஒரு விழா எடுத்தார்கள். அந்த 
விழாவில் பேசவேண்டும் என்று என்னை அழைத்தார். நான் உடனே ஒப்புக் கொண்டேன். 
எழுத்தாளர் மாலன், நடிகர் ஜெய்சங்கர், ஏ.வி.எம். சரவணன் உள்படப் பலர் அந்த விழாவில் 
கலந்துகொண்டு பேசினார்கள். நான் பேச ஒப்புக்கொண்டது பற்றிப் பி.வி.ஆர். தம் 
மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு, எங்கே நான் ஒப்புக் கொள்ள மறுப்பேனோ என்று 
தயங்கியதாகவும் கூறினார்.
 
 "எனக்கென்ன தயக்கம்? நான் உங்கள் நாவல்கள் பலவற்றைப் படித்த உங்கள் ரசிகன் தானே?' 
என்றேன். "புதுமைப்பித்தன், அழகிரிசாமி, ஜானகிராமன் என்று கொண்டாடுபவர் நீங்கள், 
என் எழுத்தை மேடையில் பாராட்டுவீர்களா என்று எனக்கு சந்தேகம் இருந்தது' என்றார். 
"பாரலல் லிட்டரேச்சர் என்று சொல்லும் வகையிலான கண்ணியமான ஜனரஞ்சக இலக்கியம் 
எப்போதும் தேவை என்ற கருத்து எனக்கு உண்டு' என்றேன். தனக்குச் சரியான இலக்கிய 
அங்கீகாரம் கிட்டவில்லை என்ற ஒரு சிறிய தாபம் அவருக்கு இருந்ததை அப்போது என்னால் 
புரிந்துகொள்ள முடிந்தது. சிறந்த குடும்பக் கதை எழுத்தாளரான லட்சுமிக்கு சாகித்ய 
அகாதமி பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. லட்சுமி பாணியில் இன்னொரு வகைச் சிறந்த 
எழுத்தாளர் பி.வி.ஆர். என்பது என் கருத்து. நான் மேடையில் அவர் இலக்கியத்தை மனமாரப் 
புகழ்ந்து பேசினேன். அன்று அவர் அடைந்த மகிழ்ச்சி இன்றும் எனக்கு நினைத்துப் 
பார்க்கும்போது நிறைவு தருகிறது.
 
 பி.வி.ஆரின் சிறந்த நாவல்களில் ஒன்று அமுதசுரபியில் முதல் பரிசுபெற்று 
அமுதசுரபியிலேயே தொடராக வெளியிடப்பட்ட வானமெல்லாம் ஆசைக் காற்றாடி. பாலக்காட்டுத் 
தமிழின் அனைத்து நயங்களையும் அந்த நாவலில் அனுபவிக்கலாம். விகடனில் அவர் எழுதி 
ஏராளமான வாசகர்களைக் கவர்ந்த ஆடாத ஊஞ்சல் நாவலும் பாலக்காட்டுத் தமிழ் நயம் 
செறிந்தது தான்.பல பரிசுகள் பெற்றவர். கலைமகளில் அவரது நீரோட்டம் நாவல் முதல் பரிசு 
பெற்றது. "வெறி வந்தது, ஆனால்' என்ற சிறுகதை கல்கியில் முதல் பரிசுபெற்றது. 80 
க்கும் மேற்பட்ட நாவல்களும் 100 க்கும் மேற்பட்ட குறுநாவல்களும் எழுதியவர்.
 
 எழுதிப் பழகிய பண்பட்ட கை ஒன்று இப்போது நிரந்தரமாய் ஓய்ந்துவிட்டது. ஆனால் அவரது 
எழுத்தை ஒருமுறை வாசித்து மயங்கிய அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் இன்னும் 
நெடுங்காலத்திற்கு அவர் எழுத்தை மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
 
நன்றி: அமுதசுரபி |