| இழப்பு 
 குரு அரவிந்தன்
 
 
  சிகப்பு 
  மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி 
  அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது.  என்னவோ ஏதோவென்று 
  மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். காவுவண்டிக்கு பாதுகாப்பாய் வந்த 
  இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட 
  என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு 
  மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள். 
 ‘டாக்டர் எங்கே..?’ அதிகாரக்குரலில் மிரட்டினான் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த 
  இராணுவ சிப்பாய்.
 
 பயத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கவே, அவள் மருத்துவரின் அறையை நோக்கிக் கையை 
  நீட்டினாள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் கதவை உதைந்து தள்ளித் திறந்து 
  கொண்டு உள்ளே நுழைந்தான்.
 
 ‘டாக்டர் ரொம்ப அவசரம், உடனே வாங்க, எங்க காப்டனுக்கு உடனே சத்திர சிகிச்;சை 
  செய்யணும்.’ என்றான்.
 
 ‘என்னாச்சு..?’ வைத்திய கலாநிதி சிவகுமாரன் பதட்டப்பட்டார்.
 
 ‘கிளைமோர் குண்டு வெடிச்சதாலே எங்க காப்டன் ஆபத்தான நிலையில இருக்கிறார். உடனே 
  வாங்க..!’ அவசரப்படுத்தினான் சிப்பாய்.
 
 கடமை அழைத்த வேகத்தைவிட, துப்பாக்கி முனையின் அழைப்பு அவரை உடனே எழுந்திருக்க 
  வைத்தது. இப்படியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் 
  என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அதிகம் அலட்டிக் கொள்ளாது, 
  சத்திர சிகிச்சை அறைக்குள் சென்றபோது, அவரது உதவியாளர்கள் இராணுவ அதிகாரிக்கு 
  செலைன் கொடுத்து, அவசரமாக செய்யவேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்கள்.
 
 மரணத்தின் பிடியில் அகப்பட்டுத் தவிப்பவன்போல, வேதனையில் முனகிக் கொண்டிருந்தான் 
  அந்தநோயாளி. மரணபயம் குறித்த அவனது வேதனையில் அவனது முகம்; சகிக்கமுடியாதபடி 
  அப்படியே இறுகிப் போய்;க்கிடந்தது. நிறைய இடங்களில் இரத்தம் வழிந்து இராணுவ 
  சீருடையில் ஆங்காங்கே கறை படிந்திருந்ததிலிருந்து அந்த முனகலின் தேவை கருதிய 
  வெளிப்பாடு என்னவாய் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்து போயிற்று. அவரவர் 
  சுயமாக அனுபவிக்கும் போதுதான் இப்படியான வலியும் வேதனையும் எப்படிப்பட்டது என்பது 
  அவர்களுக்குப் புரியும் என்பதைத் தனது தொழில் ரீதியான அனுபவத்திலிருந்து அவர் 
  நன்கு தெரிந்து வைத்திருந்தார். உதவியாளர்களிடம் அவனுடைய சீருடையை அகற்றி சத்திர 
  சிகிச்சைக்குரிய உடையை அணிவிக்கச் சென்னார். சீருடையில் நடமாடும் வெறிபிடித்த 
  இந்த வக்கிரங்கள் எல்லாம், அந்த சீருடை இல்லாவிட்டால் வெறும் பூஜ்யங்கள்தான் 
  என்பதில் அவருக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை! ஒன்றா இரண்டா, துப்பாக்கி ரவைகள் 
  துளைத்ததுபோல பட்ட இடமெல்லாம் சின்னச் சின்னக் காயங்கள். அவசரமாக எக்ஸ்றே 
  எடுத்து, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள்.
 
 கையுறையை மாட்டும்போதுதான் கவனித்தார், துப்பாக்கியோடு உள்ளே நின்ற சிப்பாயை! 
  அவனை வெளியே போகும்படி சைகையிலே காட்டினார். வெளியே போகாவிட்டால் சத்திர 
  சிகிட்சையைத் தொடங்கமாட்டார் என்பதை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும், வேறு 
  வழியில்லாமல், பரம விரோதிபோல அவரை முறைத்துப் பார்த்து விட்டு அவரைத் தனது 
  மொழியில் நன்றாகத் திட்டிக் கொண்டே வெளியேறினான்.
 
 சின்னஞ் சிறிய ஆணிகள், பிளேட்டுத் துண்டுகள், சைக்கிள் பால்சுகள் என்று 
  அத்தனையும் காப்டனின் உடம்பைப் பதம் பார்த்திருந்தன. சத்திர சிகிச்சை மூலம் 
  ஒவ்வொன்றாக அவற்றை வெளியே எடுக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தவரின் மனதை 
  அதிர்ச்சியும், ஆச்சரியமும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இதை வெடிக்க 
  வைத்தவனின் மனதிலே எவ்வளவு கோபமும், பழிவாங்கும் வெறியும் இந்த ஆக்கிரமிப்பு 
  ராணுவத்தின் மேல் இருந்திருக்க வேண்டும், இந்தத் தருணத்திற்காக எத்தனை நாட்கள் 
  ஊனுறக்கம் இல்லாமல் அவன் தவம் கிடந்திருப்பான் என்று உடலைக் கீறி வெளியே எடுத்த 
  ஒவ்வொரு பொருளையும் பார்த்தபோது, தனக்குள்ளே கணக்குப் போட்டுக் கொண்டார். 
  எங்கேயாவது சைக்கிள் பால்சுகளைக் கண்டால் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏன் 
  வெருண்டடித்துப் பயந்து ஓடுகிறது என்ற உண்மையும் அவருக்கு இப்போது புலனாகியது. 
  உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் வேற்று இனத்தவனான அந்த அதிகாரி உயிர் தப்புவானா 
  இல்லையா என்ற இறுதி முடிவைக் காலன், தமிழரான இவரது கையிலே ஒப்படைத்திருந்ததை 
  நினைத்துப் பார்க்க அவருக்கே வியப்பாக இருந்தது.
 
 தமிழ் இனத்தையே கூண்டோடு அழிக்கப் போவதாக சவால் விட்டு விட்டு வந்து, இந்த நாடே 
  தங்கள் இனத்திற்குத்தான் சொந்தம் என்ற ஆணவத்தோடு, ஆயுத பலத்தால் தமிழரின் 
  பாரம்பரிய மண்ணை ஆக்கிரமித்து, அந்த புனிதமண்ணில் நிலை கெண்டிருக்கும்; 
  ஆக்கிரமிப்பு ராணுவத்தின் அதிகாரிதான் இவன் என்பது எல்லோருக்கும் தெரியும். 
  மண்ணாசையாலும், பெண்ணாசையாலும் வெறி பிடித்தலையும் இவனைப் போன்றவர்களைக் 
  காப்பாற்றுவதிலேயோ, அல்லது உயிர் தப்பவைப்பதிலேயோ அவருக்கு எந்தவித ஈடுபாடும் 
  மனதார இருக்கவில்லை.
 
 ‘பாரம்பரியமாய் நாங்கள் வாழ்ந்து வந்த எங்கள் தாய்மண்ணை ஆக்கிரமித்து, எங்கள் 
  இனத்தையே அழித்தொழித்து, இந்த மண்ணிலே தங்கள் இனத்தைக் குடியேற்றும்; பரமஎதிரி 
  இவன். இவனைப் போன்ற இனவாதிகள் எல்லாம் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து 
  போயிருந்தால் எங்களுக்குச் சற்று நிம்மதியாவது இருந்திருக்கும்’ என்று மனசுக்குள் 
  நினைத்துக் கொண்டார். இப்போ நோயாளியாக இவரிடம் வந்தபின், தனது கடமையில் இருந்து 
  நழுவ அவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. தன்னை நம்பி வந்த ஒரு நோயாளி இவன் என்ற 
  கடமை உணர்வோடு, இனமத பேதம் எல்லாவற்றையும் மறந்து விரைவாகச் செயற்பட்டார்.
 
 கடினமான உழைப்பில், நேரம் நீண்டு கொண்டு போனதே தெரியவிலிலை. கடிகாரத்தைப் 
  பார்த்தார். மருத்துவபீடத்தில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் தனது மகனை, 
  வகுப்பு முடிந்ததும் அங்கு சென்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாக 
  உறுதியளித்திருந்தார். இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நகரவேமுடியாது, 
  எப்படியாவது அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு மீண்டும் நோயாளி மேல் 
  கவனம் செலுத்தினார்.
 
 நேரகாலம் இல்லாமல் இப்போதெல்லாம் சத்திர சிகிட்சை ஒரு சாதாரண நிகழ்வாய்ப் 
  போய்விட்டது. இராணுவம் வலிந்து ஆக்கிரமித்த மண்ணில் தினமும் இப்படி ஏதாவது 
  அசம்பாவிதங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. முன்பெல்லாம் வாழ்ந்து, அனுபவித்த 
  முதியோர்தான் தேவை கருதி அடிக்கடி வைத்திய சாலைக்கு வருவார்கள். இப்போ நிலைமை 
  ரொம்பவும் மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பலதரப்பட்ட 
  வைத்தியத்திற்காகவும் வருகிறார்கள். இந்த வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்குப் 
  பொறுப்பாக இருந்த மற்றவைத்தியர் சமீபத்தில் மாற்றலாகிப் போய்விட்டபடியால் இவர் 
  மட்டும்தன் அங்கே மிஞ்சியிருந்தார். எனவே இங்குவரும் எல்லா அவசரசத்திர 
  சிகிச்சையையும் அவரே தனியே கவனிக்க வேண்டியிருந்தது. யுத்தப் பிரதேசத்தில் தொழில் 
  செய்ய யாருமே விருப்பப்படவில்லை. இப்படியான நேரங்களில் ராணுவத்தையும் 
  போராளிகளையும் சமாளிக் வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது. ‘ஏன் சிகிச்சை 
  செய்தாய்’ என்று மிரட்டல்கள் வரும்போதெல்லாம் ‘கடமையைத்தான் செய்தேன்’ என்று 
  துணிந்து சொல்ல வேண்டும். இல்லாவிட்hல் இடமாற்றம் எடுத்துக் கொண்டு எங்கேயாவது 
  கண்காணாத இடத்திற்குப் போகவேண்டும், அல்லது வேலையை இராஜினாமா செய்துவிட்டு 
  வீட்டிலே சிவனே என்று உட்கார்ந்து இருக்க வேண்டும். இத்தனை பிரச்சனைகளுக்கு 
  மத்தியிலும், மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டில் படிக்கும் மகனின் படிப்பு 
  முடியட்டும் என்ற எண்ணத்தோடுதான் பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை எண்ணிக் 
  கொண்டிருந்தார். தன்னைப் போலவே அவனும் இந்த மண்ணில் படித்து ஒரு புகழ்பெற்ற 
  மருத்துவராக வந்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற படித்த சாதாரண 
  பெற்றோருக்கு இருக்கும் ஆசைதான் அவருக்கும் இருந்தது.
 
 சத்திர சிகிட்சை அறையைவிட்டு வெளியே வந்தபோது, தாதி அவரைநோக்கிப் பரபரப்பாக ஓடி 
  வந்தாள். முகத்திலே கவலை தோய்ந்து இறுகிப்போயிருந்தது.
 
 ‘என்ன..?’ என்றார்.
 
 ‘சத்திர சிகிச்சை முடிஞ்சுதா டாக்டர்..?’
 
 ‘ஆமா, நோயாளி தப்பிப்பிழைச்சிட்டான்.’
 
 ‘பிழைச்சிட்டானா..? காப்பாற்றிவிட்டீங்களா..?’ இனம்புரியாத வெறுப்பு, அவளின்; 
  பெருமூச்சில் கலந்திருந்ததை அவர் அவதானித்தார். அவளது அந்த வெறுப்பு 
  நியாயமானதுதான், இது அவளின் தனிப்பட்ட வெறுப்பல்ல, ஒட்டு மொத்தமாக அங்கேயுள்ள 
  ஊழியர்களின் வெறுப்பையும் உள்வாங்கித்தான் அவள் பிரதிபலிக்கிறாள் என்பதையும் அவர் 
  அறிவார். நாட்டு நடப்பும் அப்படித்தான் இருந்தது.
 
 ஆத்திரப்பட்டு அறிவிழந்து விடாமல் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, எங்கள் 
  முன்னோரின் அறிவுரையின்படி சந்தர்ப்பத்திற்கு ஏற்பநடந்து கொள்வதில் எந்தத் 
  தப்புமில்லை என்பது அவரது வாதமாக இருந்தது. திருவள்ளுவர்கூட ‘காலம் கருதி 
  இருப்பர் கலங்காது ஞாலங் கருதுபவர்’ என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். 
  எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரையும் காலம் 
  கனியட்டும் என்று விழிப்போடு காத்திருப்பதே சிறந்தது. இதை எங்கள் இனத்தின் 
  பலவீனம் என்று ஆக்கிரமிப்பு இராணுவம் தப்பாக நினைக்கக்கூடாது, அப்படி நினைத்து, 
  இனவொழிப்பு நடவடிக்கையில் மீண்டும் இறங்கினால் அதுவே அவர்களுக்கு அவர்களாகவே 
  தோண்டிய புதைகுழியாய்க் கூடப் போய்விடலாம். எடுத்துக் கொண்ட குறிக்கோளை முக்கிய 
  லட்சியமாய்க் கொண்டு, சாதிக்க வேண்டியது இன்னும் நிறையவேயிருக்கிறது, எனவே தேவை 
  கருதிப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை நினைத்துப் பார்த்து விட்டு 
  அவர் சொன்னார்,
 
 ‘ஓரு வைத்தியருக்குரிய என்னுடைய கடமையைத்தானே நான் செய்தேன். என்னுடைய கையில் 
  எதுவுமில்லை, நான் ஒரு காரணி அவ்வளவுதான், எல்லாம் அவன் செயலே!’ என்றவரின் குரல் 
  கம்மியது.
 
 ‘எது கடமை..?’ அவள் எதையோ சொல்லத் தயங்குவது தெரிந்தது.
 
 தான் செய்த காரியத்தில் அவளுக்குத் தொடுகிலும் சம்மதமிருக்காது என்பது அவருக்குத் 
  தெரியும். அவளும் தொடக்கத்தில் மனிதாபிமானத்தோடு சேவை மனப்பான்மையோடுதான் தாதியாக 
  சேவை செய்தாள். ஆனால் இந்த சீருடை அணிந்தவர்கள் கிருசாந்தி என்ற பாடசாலை மாணவியை 
  கதறக்கதற பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிவிட்டு, அதை மூடி மறைப்பதற்காக அவளைக் 
  கொன்று புதைத்ததைக் கேள்விப்பட்டதில் இருந்து அவளுக்குச் சீருடை அணிந்து கொண்டு 
  திரியும் இவர்கள்மேல் சொல்லமுடியாத வெறுப்பு. அது போன்ற பல சம்பவங்கள் அதன்பின் 
  நடந்தேறிவிட்டன. அந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடுதான் இது என்பதை அவர் 
  ஊகித்துக் கொண்டார்.
 
 ‘என்ன ஒரே பதட்டமாய் இருக்கிறாய்?’ அசதியோடு அவளிடம் கேட்டார்.
 
 ‘வந்து.., அவசர சிகிச்சைக்காக காவுவண்டியிலே இரண்டு, மூன்று நோயாளியைக் கொண்டு 
  வந்தாங்க, வாசலிலே காவலுக்கு நின்ற இராணுவ சிப்பாய்கள் உள்ளே அனுமதிக்க 
  மறுத்திட்டாங்க!’
 
 ‘அப்படியா..? இப்போ எங்கே அவங்க..?’ கடமை உணர்வோடு கேட்டார்.
 
 ‘ரொம்ப நேரம் காவுவண்டி வெளியே காத்திருந்திட்டு, வேறு வழியில்லாமல் எங்கேயாவது 
  வேறு வைத்தியசாலைக்கு கொண்டு போகமுடியுமா என்று முயற்சி செய்யப்போவதாக சொல்லித் 
  திரும்பிப் போயிட்டாங்க!’
 
 ‘ரொம்ப ஆபத்தான நிலையில் இருந்தாங்களா?’
 
 ‘ஆமா, துப்பாக்கிச் சூட்டுக்காயம், இரத்தசேதமாம்! அவசர சத்திர சிகிச்சை செய்தால் 
  எப்படியும் அவங்க தாப்பிவிடுவாங்க என்று சொன்னாங்க.’
 
 ‘எங்கே இருந்து கொண்டுவந்தாங்க? சத்திரசிகிச்சை செய்யக்கூடிய வேறு வைத்தியசாலை 
  ஒன்றும் அருகே இல்லையே!’
 
 ‘மருத்துவகல்லூரிக்கு முன்பாகத்தான் கிளைமோர் குண்டு வெடிச்சதாம். அதிலேதான் 
  நீங்க சத்திர சிகிச்சை செய்து பிழைக்கவைத்த இந்த இராணுவ காப்டன் 
  அகப்பட்டிருக்கிறார்.’
 
 ‘மருத்துவக் கல்லூரிக்கு முன்பாகவா? அங்கேயா நடந்தது?’ டாக்டரின் குரல் 
  பதட்டத்தில் சட்டென்ற அடைத்துக் கொண்டது.
 
 ‘ஆமா, கப்டன் காயமடைந்த ஆத்திரத்தில் கூடவந்த இராணுவத்தினர் மருத்துவக் 
  கல்லூரிக்குள்ளே புகுந்து கல்லூரி மண்டபத்திற்கு தீவைச்சது மட்டுமல்ல, அங்கே 
  நின்ற மாணவர்களையும் நோக்கிச் சாரமாரியாகச் சுட்டிருக்கிறாங்க. அதிலேதான் அந்த 
  மாணவங்க காயப்பட்டாங்களாம்!’
 
 ‘மருத்துவக் கல்லூரி மாணவங்களா..?’ வார்த்தைகள் தேங்கி வெளிவர மறுத்தன.
 
 ‘ஆமா டாக்டர்..!’
 
 ‘எத்தனை பேரைக் கெண்டு வந்தாங்க? அவங்க முகத்தையாவது நீ பார்த்தியா?’ பதட்டத்தோடு 
  எழுந்து நின்றார் சிவகுமாரன்.
 
 ‘இல்லையே டாக்டர், உயிருக்குத் துடிச்சிட்டு இருப்பதாக கொண்டு வந்தவங்க சொல்லி 
  மன்றாடினாங்க, ஆனால் அவங்களை உள்ளே கொண்டுவர சிப்பாய்ங்க விடவேயில்லை!’
 
 ‘ஏன்..? ஏன் தடுத்தாங்க..?’ கடமையைச் செய்ய முடியாமல்போன ஏமாற்றமும் அதுசார்ந்த 
  இயலாமையும் அவரை வாட்டத் தொடங்கின.
 
 ‘காப்டனின் சத்திரசிகிச்சை முடியாமல் யாரையும் உள்ளே விடமாட்டோம் என்று சொல்லித் 
  தடுத்திட்டாங்க. அதுமட்டுமல்ல காப்டனுக்கு ஏதாவது ஆச்சுதென்றால் எங்களையும் 
  சுட்டுப் பொசுக்கி விடுவோம் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாங்க.’
 
 ‘உண்மையாவா..? எனக்கு இதெல்லாம் தெரியாமல் போச்சே..!’
 
 இங்கே எல்லாமே துப்பாக்கி முனையில் தான் நடக்கிறது என்பதை நினைக்க, குழப்பமும் 
  அது சார்ந்த கவலையும் அவரைச் சூழ்ந்து கொண்டது. அதன் தாக்கத்தால் மனம் உடைந்துபோன 
  சிவகுமாரன், தலையிலே கை வைத்தபடி அருகே இருந்த நாற்காலியில் யோசனையோடு 
  உட்கார்ந்தார்.
 
 இந்த நேரம் பார்த்து மேசையில் இருந்த தொலைபேசி அலறியது. இராணுவ மேலிடத்தின் 
  அழைப்பாக இருக்கலாம், எடுக்காவிட்டால் அது குறித்த பிரச்சனைகள் இன்னும் 
  பூதாகரமாய் வெடித்துவிடும் என்ற நினைப்பில் வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காதில் 
  வைத்தார்!
 
 என்றுமில்லாதவாறு கத்திக் குழறியழும் மனைவியின் அவலக்குரல் மறுபக்கத்தில் செவி 
  வழி புகுந்து அவரை அப்படியே உறைய வைத்தது!
 
 kuruaravinthan@hotmail.com
 |