| பெண்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்க 
வேண்டும்!
 - சந்தியா கிரிதர் (புது தில்லி) -
 
 
  சுதந்திரம் 
கிடைத்து அறுபது ஆண்டுகள் கடந்தும் நமத இந்தியநாடு பழமையான பண்பாட்டையும் 
வழக்கத்தையும் இன்று வரையில் மாற்றிக் கொள்ள முயற்சி எடுக்கவில்லை. நாடு பொருளாதரம் 
வளர்ச்சி பெற்றாலும், வளரும் நாடுகளில் முதலிடம் வகுக்கும் நம்மிடையே ஆணி வேராக, 
ஆழமாக பதிந்துவிட்ட மூடநம்பிக்கையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. அதனை மாற்றிக் 
கொள்ள நாட்டு மக்களின் மனம் ஒரு துளி இடம் கூட கொடுக்க மறுக்கிறது.. பணக்கார 
குடும்பத்தினர் அல்லது ஏழைக்குடும்பத்தினர் முதலில் பிறக்கும் குழந்தை 
ஆண்குழந்தையாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆண் குழந்தை பிறந்ததால் 
குடும்ப வாரிசை பெற்றதாகவும், குடும்ப கௌரவமும் பெயரையும் கட்டிக் காப்பாற்றியது போல எண்ணங்களை 
கொண்ட இந்த சமுதாயத்தை எந்த வழியிலும் தடுக்க முயல்வது கஷ்டமாகவே தோன்றுகிறது.
 
 ஆண்குழந்தை பிறந்தால் கடைசி ஈமக் காரியங்கள் நிச்சயம் நல்லபடியாக நடக்கும் என்று 
எண்ணம் கொண்டு பெருமூச்சுவிடும் சமூகத்தை திருத்த முடியாது. இந்தியக் குடும்பத்தில் 
பொதுவாக ஆண்கள் தான் குடும்பத்தலைவனாக ஏற்கப்படுகிறார்கள். வழிவழியாக காப்பாற்றி 
வந்த குலப் பெயரும், குடும்ப சொத்தும் ஆண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தச் 
சமூகத்தில் ஆண் குழந்தைக்கு கிடைக்கும் மரியாதையும், மதிப்பும் பெண்குழந்தைக்கும் 
கிடைக்குமா என்று சந்தேகம் பிறக்கிறது. இன்றைய காலத்தில் பெண்கள் படித்து பட்டம் 
பெற்று ஒவ்வொரு துறையிலும் முன்னணி வகுத்தாலும் சமூகம் அவர்களுக்கு எந்தவித 
முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறது. என்னதான் பெண்கள் சம்பதித்தாலும் அவர்கள் 
வேறுவீட்டிற்கு குடிபுகுபவள் என்று சமூகம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை
 பறிப்பதற்கு பல முயற்சிகளை கையாளுகிறது.
 
 கிராமப்புற பகுதிளில் வாழும் பெண்களின் நிலை எந்தவித மாற்றங்களையும் காண 
முடியவில்லை. சமூகம் அவர்களை போதிய படிப்பறிவு கொடுக்காமல், அதிக கவனம் செலுத்தாமல் 
வெத்து வெட்டான வாழ்க்கை வாழ வற்புறுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையை சிறிய 
வட்டத்துக்குள் அமைத்து, பிற்போக்கான எண்ணங்களைத் தணித்து இதையே பெரிய பிரச்சனையாக 
உருவாக்க வித்தாக விதைக்கப்படுகிறது.
 
 
  1970 
ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டில் ஆண் பெண் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. 
பஞ்சாப் மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 793 பெண்களும், ஹரியானாவில் 1000 ஆண்களுக்கு 
695 பெண்களும், தில்லியில் 1000 ஆண்களுக்கு 760 பெண்கள் என்று சதவிகிதம் 
கணிப்பின்படி எத்தனை பெண் சிசுக்கள் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று 
ஊர்ஜிதமாகிறது. ஏந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இதனை வளர விட்டால் இந்த சதவிகிதம் 
சரிந்து கொண்டே செல்லும். ஒரு காலத்தில் பெண் குழந்தைகள் கிடைப்பது அரிதாகிவிடும். 
அந்த நிலையையும் காண்பதற்கு வெகு தூரமில்லை. 
 கிராமப்புற 
பகுதிகளில் நிலவிவரும் பிற்போக்கான எண்ணங்கள் மாற்றுவதற்கு அரசும் தன்னார்வு 
மையமும் பாடுபட வேண்டும். பெண்ணின் படிப்பை பற்றிய நல்ல கருத்துக்களை எடுத்துரைக்க 
வேண்டும். பெண் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு
 அவர்களை தயாராக்க வேண்டும். அரசும் பெண்ணுக்கென்று கல்வி நிலையங்களையும் 
கல்லூரிகளையும் திறப்பதற்கு உதவி புரிய
 வேண்டும். மேலும் தன்னார்வு மையமும் பெண்கள் படிப்பின் நல்லவைகளை கிராமப்புற 
பெண்களுக்கு பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும். இதற்கு அரசும், தன்னார்வு மையமும் 
ஒன்று சேர்ந்து பாடுபட்டால் பிற்போக்கான எண்ணங்களை மாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
 
 கருவிலே பெண்சிசுவை அழிப்பதைத் தடுப்பதற்கு அரசு பல சட்டங்களை அமலுக்கு கொண்டுவர 
வேண்டும். கிராமப்புறங்களில்
 பெண்சிசுவை கொலை செய்வது சற்று அதிகமாகவே உள்ளன. மேலும் உயர்தர கருவிகளை கொண்ட 
மருத்துவமனைகள் தாயின் கருவில் வளரும் குழந்தையைப் பற்றிய விவரங்களை முன் கூட்டியே 
தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு எந்த 
குழந்தையாயிருந்தாலும் ஆரோக்கியமான குழந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை 
புகுத்த வேண்டும். கருவில் தரித்த குழந்தையின் விவரங்களை முன்கூட்டியே தெரிவித்த 
மருத்துவமனைகளுக்கு சட்ட விரோதமான செயலை புரிந்ததற்காக உரிய தண்டனையும் வகிக்க 
வேண்டும்.
 
 
  இறைவன் கொடுத்த ஜுவன் ஆண் குழந்தையாக இருந்தாலும் அல்லது பெண் குழந்தையாக 
இருந்தாலும் ஏற்றுக் கொண்டு மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண் சிசுவை 
சிதைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இருபது வருடங்களில் ஆறு கோடி 
பெண் சிசுக்கள் சிதைக்கப் பட்டிருக்கிறார்கள். பெண்களை படிக்க வைப்பதற்கு அரசும், 
தன்னார்வு மையமும் அதிக ஊக்கம் ஆர்வம்
எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் கல்லூரிகளை அங்காங்கே திறந்து வைக்க வேண்டும். 
அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை 
பறிபோகாமல் வாழும் வழியை வகுத்துக் கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் வாழும் 
மக்களுக்கு நாட்டில் சாதனை படைத்த பெண்களின் வரலாற்றை அறிவதற்கு முயற்சிகள் எடுக்க 
வேண்டும். சாதனையாளர்களின் துணிவு, தைதியம், தன்னம்பிக்கை உழைப்பு, விடாமுயற்சி 
போன்ற நல்ல குணங்களை எடுத்துக் காட்டி பாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். 
இதனால் பெண்கள் மனோதைரியத்தை பலப்படுத்தி விடாமுயற்சியும் உழைப்பம் கொண்டு 
நாட்டிற்கே பெரிய சாதனை படைக்கும் வல்லுநர்களாக திகழ்வார்கள். 
 sandhya_giridhar@yahoo.com
 |