| 
  
			
              உயிர்மெய் (பெண்கள் காலாண்டிதழ்)! உயிர்மெய் (பெண்கள் காலாண்டிதழ்)இதழ்-1 ; தை-பங்குனி 2006
 தொகுப்பாசிரியர்கள்: பானுபாரதி, தமயந்தி
 வருடச் சந்தா: 200 குரோணர்கள்; 
ஏனைய நாடுகள்: 20யூரோ.
 வங்கிக் கணக்கிலக்கம்: 0539 4365272 Postbank
 தொடர்புகளுக்கு: UYIRMEI, P.Boks - 2114, 6028 
Alesund, NORWAY
 மின்னஞ்சல்: 
editor.uyirmei@hotmail.com
 
 
  பெண்கள் காலாண்டிதழாக 'உயிர்மெய்' சஞ்சிகை பானுமதி, தமயந்தி ஆகியோரைத் 
தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு நோர்வேயிலிருந்து
வெளிவந்திருக்கிறது. சஞ்சிகையில் பெண்கள் விடுதலை, அவர்கள் பல்வேறு சமூக, அரசியல், 
பொருளாதாரச் சூழல்களில் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்களைப் பற்றிய கட்டுரைகள், 
கதைகள், கவிதைகள் காணப்படுகின்றன. கட்டுரைகள் நோர்வேயில் பெண்கள் இயக்க வரலாறு 
பற்றிய, மற்றும் இன்றைய நோர்வேயில் பெண்கள் மீது இடம்பெறும் வன்முறைகள் பற்றிய 
பானுபாரதியின் மொழிபெயர்ப்பு மற்றும் சுய கட்டுரைகள், உள்நாட்டு யுத்தம், வறுமை, 
சுனாமி போன்ற இயற்கை அழிவுகளால் இலங்கையின் கிழக்கு மாகாணத்துப் பெண்கள் படும் 
துயர் பற்றிய சமுத்திரனின் கட்டுரை, நோர்வேயில் ஆணாதிக்கத்திற்கெதிராகக் குரல் 
கொடுத்த பெண் கவி இங்கர் ஹாகருப் பற்றிய சியாமளாவின் கட்டுரை, சகியின் 
'பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களின் பலியெடுப்புக்கள்' கட்டுரை, மற்றும் 
ஆர்த்தியின் கொலைப்பட்டியலின் முதலிடத்தில் Ayaan Hirshi Ali
என்னும் நெதர்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் 
சோமாலியப் பெண் பற்றிய கட்டுரையெனக் காணப்படும் கட்டுரைகள் பல்வேறு நாடுகளில் 
வாழும் பெண்களின் நிலைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பான விடயம் (மேற்படி 
சோமாலியப் பெண்ணான Ayaan Hrshi Aliயின் 
குடியுரிமையினை அந்நாட்டுக் குடிவரவு, குடியகழ்வு அமைச்சரான இன்னுமொரு பெண்மணி 
அண்மையில் அகதி விண்ணப்பத்தில் தவறான தகவல்களைத் தந்ததன் காரணமாகப் பறித்ததானது 
காலத்தின் கோலம்). 
 இதுதவிர சஞ்சிகையில் காணப்படும் சிறுகதைகளைச் சாரங்கா தயாநந்தன் ('சிறகு'), கவிதா 
('துன்பம் நேர்கையில்..') ஆகியோர் எழுதியிருக்கின்றனர். கவிதாவின் சிறுகதை 
புலம்பெயர்ந்த சூழலில் ஒரு தம்பதியினரின் வாழ்வைப் பற்றியும், கருக்கலைப்புப் 
பற்றியும் கூறினால் சாரங்காவின் 'சிறகு' சிறகு வெட்டப்பட்ட பறவையாக வளைய வரும் ஒரு 
பிராமணப் பெண்ணைப் பற்றி வீட்டு வளர்ப்புக்காக வாங்கப்பட்ட புறாவினூடு ஆராய்கிறது. 
கவிதைகளில் இரண்டினை நோர்வேப் பெண்கவியான இங்கர் ஹாகருபின் கவிதைகளிரண்டினை தமிழில்
சியாமளா வழங்கியிருக்கின்றார். இதுதவிர திலகபாமாவின் 'தாலி கட்டாத தாமரை', சாரங்கா 
தயாநந்த்தனின் 'சிறு சோடிப் பாதங்களுக்கு ஒரு சலங்கை' ஆகிய கவிதைகள் 
வெளியாகியுள்ளன. எல்லாப் பருவத்துக் குளத்து நீருடனும் உறவாடி, சம்போகித்துப் புதிய 
வேர்களையும், மொட்டுக்களையும் பிரசவிக்கும் தாலி கட்டிக் கொள்ளாத தாமரைகளின் 
புத்துயிர்ப்புப் பற்றித் திலகபாமாவின் கவிதை பேசுகிறது. சஞ்சிகையின் இறுதிப் 
பக்கத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகள் சிலவற்றை 
ஆர்த்தி தொகுத்துத் தந்துள்ளார். அவற்றில் சில: சுமார் 20 இலட்சம் பெண்கள் பால் 
உறுப்புகள் சிதைவுக்கு வருடாவருடம் ஆளாகின்றார்கள்; ஏழு இலட்சம் பெண்கள் உள்ளூர்ப் 
பால்வினைத் தொழிற் சந்தையில் விற்கப்படுகின்றார்கள்; நோர்வேயில் மட்டும் 
8000-9000 வரையில் பெண்கள் வருடாவருடம் பாலியல் வல்லுறவுக்கு 
ஆளாகின்றார்கள்; 40 இலட்சம் பெண்கள் 
பால்வினைத் தொழிலுக்காகவோ அல்லது திருமணத்துக்காகவோ விற்கப்படுகின்றார்கள்; 
வருடத்தில் 5000 பெண்கள் சொந்தக் 
குடும்பத்தினரால் புனிதக் கொலை செய்யப்படுகின்றார்கள்; உலகம் முழுவதும் மூன்றிலொரு 
பகுதி பெண்கள் வன்முறைக்கு ஆளாகின்றார்கள்.
 
 இதுதவிர அண்மையில் மறைந்த புஷ்பராஜனின் 'விடைபெறக் காத்திருக்கின்றேன்' என்னும் 
ஆனந்தவிகடன் கட்டுரையும், 'பழி சுமந்த
மண்' என்னும் கவிதையும் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. குண்டுச் சட்டிக்குள் 
குதிரையோட்டாமல் பெண்கள் பிரச்சினைகள் பற்றிய 
கட்டுரைகள் எல்லைகளைக் கடந்து ஆராயப்பட்டுள்ளமையானது சஞ்சிகையின் முக்கியமான 
சிறப்பியல்பெனலாம். இப்பொழுதுதானே 
வெளிவந்திருக்கின்Raது. வரும் இதழ்கள் மேலும் காத்திரமானதாக அமையுமென 
எதிர்பார்ப்போம். ஆயினும் 'உயிர்மெய்'யின் உயிர்ப்பு 
மெய்மையுடன் பெண்கள் பெண்கள் பற்றிய விடயங்களை முன்வைக்கிறதென்பதில் எந்தவிதச் 
சந்தேகமுமில்லை. வாழ்த்துகிறோம்.
 
 - ஊர்க்குருவி -
 |  |