| மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்! உலக விடுதலை வரலாற்றின் ஒரு முக்கிய கட்டமாக அமைந்த அக்டோபர் புரட்சி! 90 
  வருடங்களின் பின்னர் அதுபற்றிய ஒரு சிந்திப்பு!
   -பேராசிரியர் கார்த்திகேசு 
  சிவத்தம்பி-  
   உலக 
  வரலாற்றின் திசைதிருப்பக் கட்டங்களாக சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுதல் 
  வரலாற்றிலே காணப்படும் ஒரு மரபாகும். குறிப்பாக ஐரோப்பிய வரலாற்றினை 
  நோக்கும்பொழுது 1553 இல் ஏற்பட்ட கொன்ஸ்தாந்தி நோப்பிளின் வீழ்ச்சி, 1789 இல் 
  ஏற்பட்ட பிரஞ்சுப் புரட்சி ஆகியன சில மைல்கற்கலாகும். இந்தப் பட்டியலிலே 1917 இல் 
  ரஷ்யாவில் ஏற்பட்ட அக்டோபர் புரட்சியும் இடம்பெறும். 
 ஏறத்தாழ 1905 ஆம் ஆண்டிலே தொடங்கிய ஒரு வரலாற்றோட்டம் ரஷ்ய சூழ்நிலைகளிலே பல 
  மாற்றங்களை ஏற்படுத்தி 1917 பெப்ரவரியில் ஒரு முக்கிய கட்டத்தை எய்தி நிறைவாக 
  1917 அக்டோபரில் போல்ஷிவிக் கட்சியினரின் தலைமையில் அப்புரட்சி வெற்றிகரமாக 
  நிறைவேறிற்று. இப்புரட்சி நடந்த காலத்திலே இச்சம்பவம் பற்றிப் பாடியுள்ள 
  பாரதியார் `இடிபட்ட சுவர்போலே கலி வீழ்ந்தான், கிருதயுகம் எழுக மாதோ!' பாடலின் 
  தொடக்கத்திலே பாரதி `ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி' என்று கூறுவதை 
  மனங்கொளல் வேண்டும்.
 
 
  பாரதியின் 
  கூற்றிலேவரும் இரண்டு குறிப்புகள் மிக முக்கியமானவையாகும். ஒன்று அக்டோபர் 
  புரட்சியை அவன் யுகப் புரட்சி என்றமையாகும். அடுத்த குறிப்பு கலிவீழ்ந்தான் 
  கிருதயுகம் எழுக மாதோ என்று வருவதாகும். இது ஒரு மிக முக்கியமான குறிப்பாகும். 
  கலியுகம் என்பது கேடுகளும் தீங்குகளும் நிறைந்த யுகமாகும். நீதி, நியாயம் 
  தலைகீழாக நிற்கும் காலமாகும். (வர்த்தமான யுகத்தை கலியுகம் என்பது இந்து மரபு) 
  கிருதயுகம் என்பது வரவிருக்கும் புதிய யுகமாகும். அந்தயுகத்தில் நன்மைகளைத் தவிர 
  வேறொன்றும் இடம்பெறா என்பது இந்துமத நம்பிக்கையாகும். பாரதியின் கருத்துப்படி 
  அக்டோபர் புரட்சி உலகிலே கலியுகம் வீழ்ந்து கிருதயுகம் எழுந்துள்ளது என்பதாகும். 
  இவ்வாறு அக்டோபர் புரட்சியை இந்து மரபு நிலை நின்று கிருதயுகமெனப் போற்றியமைக்கான 
  பிரதான காரணம் அது உலகின் முதலாவது சமதர்மப் புரட்சி (Socialist Revolution) 
  ஆகும். 
 பிரஞ்சுப் புரட்சி விடுதலை, சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றைப் 
  பிரதானப்படுத்திற்றெனினும் அது சமூக நிலைப்பட்ட வாழ்வியற் சமத்துவத்தை 
  ஏற்படுத்தவுமில்லை. தனது முக்கிய இலட்சியங்களிலொன்றாகக் கொள்ளவுமில்லை.
 
 1917 இல் குறிப்பாக லெனின் தலைமையில் நடந்தேறிய சமதர்ம புரட்சி நாட்டு மக்கள் 
  ஒவ்வொருவரிடத்திலிருந்தும் அவர்களது திறமைக்கேற்ற பங்களிப்புகளைப் பெற்று, 
  அவர்களின் தேவைக்கேற்றனவற்றை, குறிப்பாக சமூக, பொருளாதார தேவைகளைப் 
  பூர்த்திசெய்வதாகும். இன்று பின்னோக்கிப்
 பார்க்கின்றபொழுது அக்டோபர் புரட்சியின் வழியாகக் கிளம்பிய சோவியத் ஒன்றியம் தனது 
  கருத்துநிலைநின்றும் வழுவி உடைந்துபோய் விட்டது. சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்ற 
  குடியாட்சிகள் இன்று தனித்தனி அரசுகளாக மாறியுள்ளன. போல்க்கன் பிரதேசத்தில் சிறு 
  பிரச்சினைகள் உள்ளனவெனினும் அங்கும் தனித்தனி அரசுகள் மேற்கிளம்பியுள்ளன.
 
 சோவியத் யூனியனின் உந்துதலையும் முன்னுதாரணத்தையும் கொண்டு நடத்தப்பெற்ற கிழக்கு 
  ஐரோப்பிய சோஷலிஸ்ட் அரசுகள் இன்று சீர்குலைந்து போயுள்ளன. கிழக்கு ஐரோப்பா மேற்கு 
  ஐரோப்பாவின் மேலாண்மைக்குள்ளே படிப்படியாக வந்துகொண்டிருக்கின்றது.
 
 இந்தத் தோல்வியையும் உடைவையும் கம்யூனிஸத்தின் உடைவாகவும் தோல்வியாகவுமே அமெரிக்க 
  மேற்கு ஐரோப்பிய நாடுகள் காட்டியுள்ளன, காட்டிவருகின்றன.
 
 கம்யூனிஸம் (பொதுவுடைமை) என்பது ஒரு குறிப்பிட்ட பொருளாதாரக் கோட்பாடு 
  மாத்திரமல்லாது அதுவோர் `அரசியல் அதிகார முறைமையாகவும்' 1917-88 - 89 காலத்தில் 
  வளர்ந்திருந்தது. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அது ஓர் அரசியற் 
  சர்வாதிகாரமாகவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
 
 ஸ்ராலினுடைய ஆட்சிக்கால நடைமுறைகள் வாய்ப்பான உதாரணங்களாக மாறின. சோவியத் 
  உடைவினதும் பொதுவுடைமை வீழ்ச்சியினதும் பின்புலத்தில் 60 கள் 90 வரை உலக 
  முதலாளித்துவத்துக்கும் சமதர்ம கருத்து நிலைக்குமிடையே நடந்த கருத்துநிலை யுத்தம் 
  மிக முக்கியமானதாகும். ஏனெனில், இன்றும்தான் மேற்குலக ஊடகங்கள் சோவியத் உடைவை 
  பொதுவுடைமைக் கொள்கையின் உடைவாகவே சித்திரிக்கின்றன.
 
 
  இது 
  மாத்திரமல்லாமல் பொதுவுடைமைக் கோட்பாட்டினையும் அதனது அரசியல் நடைமுறையினையும் 
  ஜனநாயகத்துக்கு விரோதமானவை என்ற கருத்தினையும் வலுவாக முன்வைத்துள்ளன. சேவியத் 
  யூனியனின் உடைவும் சோவியத் யூனியனின் ஆட்சிமுறையில் ஏற்பட்ட சில திரிபு நிலைகளும் 
  உண்மையானவையே. இவையாவற்றுக்கும் வழிவகுத்த அக்டோபர் புரட்சியினை எவ்வாறு 
  நோக்குவது என்பது அச்சாணியான ஒரு வினாவாகின்றது. அக்டோபர் புரட்சியின் யுகநிலை 
  முக்கியத்துவம் அது வெறுமனே அரசியல் ஜனநாயக வரலாற்றில் மாத்திரமல்லாமல் சமூக 
  ஜனநாயக வரலாற்றுக் கோட்பாட்டிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. சமூக 
  ஜனநாயகம் என்பது ஒரு முக்கியமான அரசியல் எண்ணக்கருவாகும். அதாவது சமூக வாழ்வில் 
  சமூக இருப்பில் மக்களிடையே ஒரு ஜனநாயகத்தன்மை நிலவுவதாகும். அரசியல் நிலையிலே 
  கிடைக்கும் ஜனநாயகம் சமூக ஜனநாயகமாக மாறுவதில்லை. சமூக அமைப்பிலே நிலவும் அதிகாரப்படிநிலைகள் (Hierachies) சமவீனங்கள் 
  ஒழிக்கப்பெற்று மக்களிடையே உண்மையான சமூக சமத்துவம் நிலவுவதாகும். இதனைச் 
  சாதிப்பதற்கு ஒவ்வொருவரையும் அவரவர் ஆற்றல்களுக்கேற்ப வளர்த்து அவரவர்களின் 
  தேவைகளுக்கேற்ப அவர்களின் வாழ்க்கை முறைக்கு உதவுவதாகும்.
 
 உண்மையில் அக்டோபர் புரட்சியை முன்னின்று நடத்திய பொதுவுடைமைக் கட்சியினரின் 
  பெயர் (SocialDemocrats) சமூக ஜனநாயகவாதிகள் என்பதே ஆகும்.
 
 இன்று சர்வதேச நிலையில் கியூபா போன்ற நாடுகளைத் தவிர்ந்த நாடுகளின் சமூக ஜனநாயகம் 
  என்ற கோட்பாடே இல்லாமற் போய்விட்டது. உண்மையில் இலங்கையைப் பொறுத்தவரையிலும் கூட 
  நமக்கு ஏற்பட்டுள்ள மிகப் பாரிய பாதிப்பு சமூக ஜனநாயகம் என்கின்ற கோட்பாடு இங்கு 
  வளர்க்கப்படாது போனமையாகும்.
 
 அக்டோபர் புரட்சியின் உலகப் பொதுவான முக்கியத்துவம் பற்றி நோக்குவதற்கு முன்னர் 
  சோவியத் ஒன்றியத்தின் நிலையிலும் கிழக்கு ஐரோப்பிய நிலையிலும் ஏற்பட்ட 
  வீழ்ச்சிகளுக்கான காரணங்களை மிகச்சுருக்கமாக இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும். 
  அக்டோபர் புரட்சி அடிப்படையில் ரஷ்யாவிலே ஏற்பட்ட புரட்சியே, ரஷ்ய நாட்டில் 
  குறிப்பாக புதிய மத்தியதர வர்க்கங்கள் மேற்கிளம்பிய நகரப்பகுதிகளிலேயே 
  ஆட்சியெதிர்ப்பு முதலிற் கிளம்பியது. ரஷ்யப் பேரரசின் அதிகாரத்துக்குக் 
  கீழ்ப்பட்டிருந்த பிரதேசங்களிலே (மத்திய ஆசிய பிரதேசங்களில்) மக்கள் கிளர்ச்சி 
  என்ற எண்ணக்கருவே
 பெரிதும் பேசப்படவில்லை. ஆனால் மொஸ்கோ, பெத்ரோகிறாட் பிரதேசங்களில் மாத்திரமே 
  அந்த எழுச்சி வலிமையுடன் காணப்பட்டது. மொஸ்கோவில் நிலவிய ஆட்சி வீழ்ந்ததும் 
  புதிதாக அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட அரசு ரஷ்யப் பேரரசு முழுவதிலும் தனது ஆட்சியை 
  நிலைநிறுத்தியது. இதனால், மிகப்பெரியதொரு மக்களுணர்வுச் சமவீனம் காணப்பட்டது. 
  அத்துடன் ரஷ்யப் பேரரசின் கீழ்வந்த ரஷ்யாவுக்கு அப்பாலான பிரதேசங்களில் 
  மிகப்பெரிய
 நிர்வாக மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், சோவியத் ரஷ்யாவுக்குள்ளே ஒரு 
  மிகப்பெரிய அரசியற் சமவீனம் காணப்பட்டது. ஸ்ராலின் ஆட்சியானது சோவியத் ஒன்றியம் 
  முழுவதற்கும் பொதுவான ஆட்சியானது ஒருங்கமைப்பை நிலை நிறுத்த முயன் றதன்றி 
  அப்பிரதேசங்களிலே மக்களி டையே யாட்சியூகத்தை ஏற்படுத்த வில்லை.
 
 இந்தச் சமவீனம் இறுதியில் சோவியத் யூனியனின் உடைவுக்குக் காரணமாயிற்று.
 
 கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் இரண்டாவது உலகப் போரின் இறுதியிலே 
  நடந்த `நேசநாடுகளின்' தீர்வுக்கியைய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனின் 
  மேலாண்மைக்குக் கீழே கொண்டு வரப்பட்டன. அவ்வாறு கொண்டு வரப்பட்டாலும் ஹங்கேரி, 
  கிழக்கு ஜெர்மனிபோன்ற நாடுகளில் சோவியத் யூனியனுக்கு இருந்த மேலாண்மை 
  யூகோஸ்லாவியாவிலிருந்து கிடைக்கவில்லை.
 
 இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது ஸ்ராலினது ஆட்சிபற்றிய விமர்சனங்கள் 
  ரஷ்யாவுக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்டனவெனினும் , சோவியத் ஒன்றியத்தின் 
  நிலைபேறுடைமைக்கும் சர்வதேச முதலாளித்துவத்துக்கு எதிரான ஓர் அமைப்பினைப் 
  பேணுவதிலும் ஸ்ராலினின் காலம் முக்கியத்துவமுடையதாகும்.
 
 அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிர்நிலையான ஒரு சோசலிசக் குழுமத்தைப் பேண 
  ஸ்ராலினின் ஆட்சி உதவியது. ஸ்ராலின் நிறுவிய பொருளாதாரத் தளத்தின் வலிமை 
  இன்றுங்கூட உணரப்படுகின்றதெனலாம்.
 
 இவ்வாறு கூறும் பொழுது பொதுவுடைமை ஆட்சி சோவியத் யூனியனில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த 
  முறைமையினுள்ளேயே பல பிரச்சினைகள் தொக்கி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது. 
  குறிப்பாக ஒரு கட்சி அரசாங்கம் (One party Govermment) நடைமுறைப்படுத்தப்படும் 
  போது ஏற்படக்கூடிய
 மக்கள் பங்கு கொளல் பற்றிய பிரச்சினைகள் முக்கியமான விவாதத்துக்கு இடமளித்தன. 
  யாவற்றுக்கும் மேலாக வரலாற்றிலே தனிநபருக்குள்ள பாத்திரம் யாது ஆளுமை வழிபாடு ( 
  Personality cult) பற்றிய பிரச்சினைகள் மிக முக்கியமானவையாகும்.
 
 சோவியத் யூனியனின் வரலாறு பற்றிய பிரச்சினைகள் அக்டோபர் புரட்சியின் உலகநிலை 
  முக்கியத்துவத்தை எவ்விதத்திலும் குறைக்க முடியாது. அக்டோபர் புரட்சியின் அதி 
  முக்கியமான சர்வதேச சாதனை, அது கார்ள்மார்க்ஸ் பிரடெறிக் ஏஞ்செல்ஸ் ஆகியோரால் 
  கட்டமைக்கப் பெற்று 19 ஆம் நூற்றாண்டின் கடைசி ஐந்து தசாப்தங்களிலும் பிரான்ஸ், 
  ஜேர்மனி ஆகிய நாடுகளில் அரசியல் இயக்க முக்கியத்துவம் கொண்ட ஓர் அரசியல் 
  சித்தாந்தம் அது சுட்டிய மானுடத்தளை நீக்கப்பண்பு காரணமாக ஒரு நாட்டின் ஆட்சி 
  மாற்றத்துக்கும் புதிய ஆட்சி முறைமைக்குமான அரசியல்
 தளமாகக் கொள்ளப்பட்டதேயாகும். அதாவது மார்க்ஸீயம் புதிய அரசியல் விடுதலைக்கான 
  சித்தாந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டமையாகும்.
 
 இவ்வாறு ஓர் அரசியற் சித்தாந்தத்தை தனது இலக்காகவும் அது கூறும் நடைமுறைச் 
  செயற்பாடுகளை தனது வழிகாட்டியாகவும் ஒரு நாட்டினால் மேற்கொள்ளப்படுவது இதுவே 
  முதற்தடவையாகும்.
 
 ரஷ்யாவில் புரட்சிகர மாற்றங்கள் தோன்றத் தொடங்குவது ஏறத்தாழ 1905 இலிருந்தே 
  காணப்படுகின்ற தெனினும் பெப்ரவரி 17 இல் ஓர் ஆட்சி மாற்றமே ஏற்படுகின்றதெனினும் 
  (கெரன்ஸ்சியின்) இடைக்கால அரசாங்கம் ஏற்படுகின்றதெனினும் அக்டோபர் புரட்சியே அந்த 
  ஆட்சிமாற்ற நடைமுறையின் சிகரமாக அமைந்தது. அந்த வகையில் 1917 இன் அக்டோபர் 
  புரட்சி உலக விடுதலை வரலாற்றின் ஒரு முக்கிய கட்டமாக அமைகின்றது.
 
 இந்தச் சாதனை ஏற்படுத்தப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர். விளாடிமீர் இலிச் லெனின் 
  என்பவராவார். அக்டோபர் புரட்சிக்கு அவர் வழங்கிய தலைமை மிக முக்கியமானதாகும்.
 
 இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களெனப் 
  போற்றப்படவேண்டியவர்கள் இருவராவர் - ஒருவர் மகாத்மா எனப்போற்றப்பட்ட மோகனதாஸ் 
  கரம்சற் காந்தி, மற்றவர் லெனின் ஆவர். இவர்களிருவரும் தத்தம் நாட்டின் 
  விடுதலைக்காகப் போராடியவர்களாவர். இவர்கள் இருவரும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட 
  அரசியல் யுக்திகளைக் கையாண்டவர்களாவர். சத்தியாக்கிரகம் எனும் நடைமுறையை 
  காந்தியும், மார்க்சிய புரட்சிகர முறைமையை லெனினும் கையாண்டனர். அடிப்படையை 
  நோக்கும்பொழுது இரண்டு நாடுகளும் வேண்டி நின்ற விடுதலைகள் வெவ்வேறு 
  நிலைப்பட்டவைகளாகும். ஒன்று காலனித்துவ ஆட்சிக்கெதிரான சுதந்திரப் போராட்டமாகும். 
  மற்றது அந்நாட்டின் ஆட்சிமுறையே எனினும் அதன் கொடுங்கோன்மை காரணமாக 
  எதிர்க்கப்பட்டதாகும். இருதலைவர்களுமே தமது கொள்கைகள் இலட்சியங்களுக்கேற்ப 
  போராட்ட முறைமைகளை வகுத்துக் கொண்டனர்.
 
 காந்தீயம் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்க முனைந்தது. ஆனால், அவ்விளைவு 
  பெருவெற்றியை ஈட்டியது என்று கூறிவிடமுடியாது. சுதந்திர இந்தியாவிலே காந்தீயத்தை 
  ஓர் அரசியல் நடைமுறையாகக் கொள்வதிலே பல சிக்கல்கள் ஏற்பட்டன. காந்தியினுடைய மிக 
  நெருங்கிய சிஷ்யரான நேருவினாலே கூட காந்தீயத்தை ஓர் அரசியல் நடைமுறையாக்க 
  முடியவில்லை. ஆனால் லெனினை எடுத்துக் கொண்டால், லெனின் கையாண்ட
 நடைமுறை லெனினது மறைவின் பின்னரும் போற்றப்பெறுகிறது.
 
 உலக வரலாற்றில் லெனினுக்குரிய இடம் அவர் மார்க்ஸீயத்தை செயல் சாத்தியமான அரசியல் 
  நடைமுறை ஆக்கியமையாகும். அரசியற் சித்தாந்தங்கள் பற்றி மார்க்ஸ் குறிப்பிடும் 
  பொழுது தத்துவஞானிகள், உலகின் இயல்புகளை விளக்கியுள்ளனர். இங்கு முக்கியப்படுவது 
  யாதெனில் உலகை மாற்றுவதாகும். மார்க்ஸீயம் எனும் சித்தாந்தத்தைக் கையேற்று அதனை 
  ஆட்சி முறைநின்ற யதார்த்தமாக்கியது லெனினின் செயற்பாடுகளேயாகும். இதனாலேயே 
  சோவியத் ஒன்றியத்தின் தோற்றத்தின் பின்னர் தத்தம் நாடுகளிலே மார்க்ஸிய ஆட்சியைக் 
  கொண்டு வர விரும்பிய தலைவர்கள் மார்ஸீயம், லெனினிஸம் இன்று இரண்டையும் இணைத்தே 
  கூறுவர்.
 
 லெனினது சாதனை மார்க்ஸீயத்தைப் புரட்சிப் போராட்ட நிலையிலும் புரட்சி 
  நிறைவேற்றப்பட்ட பின்னரும் அதனை ஒரு சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கான 
  செயற்றிட்ட நடைமுறைக் கோவையாக்கியதாகும். இது ஒரு முக்கியமான பங்களிப்பாகும். 
  ஏனெனில், மார்க்ஸீய சித்தாந்த நிலையிலே கூறப்பெற்றிருந்த பலவற்றை லெனினது தலைமை 
  ரஷ்யாவின் தேவைகளுக்கேற்ப திரிபு எதுவும் ஏற்படாமல் நடைமுறைப் படுத்தியதாகும். 
  உண்மையில் லெனின் மறைவின் பின்னரே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சிமுறை பற்றிய 
  விமர்சனங்கள் ஏற்படத் தொடங்கின.
 
 ஏற்கனவே கூறியபடி மார்க்ஸீஸம் லெனினிஸமானதும் அது செயற்சாத்தியப்பாடுடைய ஒரு 
  புரட்சிகர நடைமுறையானது. உண்மையில் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுப் போக்கை 
  நிர்ணயிப்பவர்களுள் லெனினது இடம் மிகப் பெரியதாகும்.
 
 அக்டோபர் புரட்சி சோவியத் யூனியனிலே வலுவிழந்த நிலையிலே உள்ளதெனினும் உலக 
  நாடுகளுக்கு குறிப்பாக மூன்றாவது உலக நாடுகள் கவனத்திற் கொள்ள வேண்டிய 
  ஒருவரலாற்றுப் பாடமாக அமைகிறது.
 
 தென்னாசியச் சூழலில் காலனித்துவ அனுபவங்களினாலே பாதிக்கப்பட்ட நாடுகளிலே 
  பொதுவுடைமைக் கட்சி மேலாண்மை மிக முக்கியமான ஓர் அம்சமாகவுள்ளது. அதுவும் 
  அந்தந்தப் பிரதேச மக்களின் நிலப்பகிர்வு வழியாகத் தோன்றிய பிரச்சினைகள் 
  கூர்மையடைந்தவிடத்து பொதுவுடைமைக் கட்சிகள் நிர்வாக அதிகாரத்தைப் பெறும் நிலைமையை 
  அடைந்தன. இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் ஏறத்தாழ ஒரு கால் நூற்றாண்டுக்கும் 
  மேலாக
 மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே தொடர்ந்து நடைபெறுகிறது. கேரளத்தில் 
  பொதுவுடைமைக் கட்சியின் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அடிக்கடி மாநில 
  நிர்வாகத்தை நடத்திவந்துள்ளது.
 
 அக்டோபர் புரட்சியின் ஆசிய ஆபிரிக்க தாக்கத்தைப் பற்றிப்பேசும் பொழுது 1960 களின் 
  பிற்பகுதி 1970 களின் தொடக்கத்தில் அமெரிக்க
 ஏகாதிபத்தியத்தின் இறுகிய பிடியைத் தளர்த்துவதற்காக சோவியத் யூனியன் மேற்கொண்ட 
  அணிசேரா நாடுகளின் அரசுகளுக்கு வழங்கிய அடிநிலை ஆதரவு அணிசேரா நாடுகளிலே 
  செயற்பட்ட பொதுவுடைமைக் கட்சிகளுக்கு அந்தந்த அரசுகளை ஆதரிக்க வேண்டிய 
  நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.
 
 இப்படியான பல சம்பவங்களின் திரட்சி காரணமாக பல்வேறு நாடுகளில் பொதுவுடைமைக் 
  கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டது. இது சோவியத்சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் 
  சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற அடிப்படையிலே வேறுபாடுகள் ஏற்பட்டன. 
  அந்தந்த நாடுகளின் புரட்சிப் போராட்ட நிலைமை வர்க்க உணர்வு நிலைமை ஆகியவற்றிலும் 
  பார்க்க சோவியத் யூனியன் அல்லது சீனா அந்த நாட்டின் அரசியலில் பெற்றிருந்த 
  இடத்தைக் கொண்டு தீர்மானிக்கப்படுபடுவதாயிற்று. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் 
  இது இடது சாரிக் கட்சிகளின் ஒற்றுமைக்கு வழிவகுத்த
 அதேவேளையில் அரசாங்கக் கட்சிகளாக விருந்த சக்திகளை ஆதரிக்க வேண்டிய நிலைமையை 
  ஏற்படுத்தியது.
 
 இந்தியாவிலேயும் இப்பண்பு காணப்படுகின்ற தென்றாலும் அங்கு நிலவும் மாநில, மத்திய 
  அரசுகளின் வேறுபாடுகள் அடிநிலைப் பொதுவுடைமை இயக்கத்தைப் பெரிதும் பாதிக்கவில்லை. 
  இதற்கான நல்ல உதாரணம் இந்திய லோக் சாபாவிலுள்ள இடதுசாரி ஐக்கிய முன்னணியாகும். 
  ஏறத்தாழ அறுபதிற்கும் மேற்பட்ட இடதுசாரி எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் இலங்கையில் 
  இத்தகையவொரு கூட்டுறவு பொதுவாக இடதுசாரிக் கட்சிகளையும்
 தாக்கியுள்ளது. இப்பொழுதுள்ள பாராளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பெற்ற 
  இடதுசாரி எம்.பிக்கள் எவருமிலர். ஆனால் ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன்னர் குறைந்த 
  பட்சம் 20,25 இடதுசாரி எம்.பிக்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
 
 இலங்கையின் அரசியலின் இன்றைய நிலைமையில் இலங்கையின் இனக்குழும யுத்தம் பற்றிய 
  அடிப்படைப் பிரச்சினைகள் பற்றித் தீர்க்கமான தீர்மானங்களைக் கொண்டிருக்கவில்லை 
  என்பது நன்கு புலனாகின்றது.
 
 இலங்கைத் தீவின் ஒருங்கு நிலைப்பட்ட ஒற்றுமை பற்றி நோக்கும்பொழுது சிங்கள 
  நிலைப்பாடு அதன் எதிர்விளைவான தமிழ் நிலைப்பாடு என அரசியற்களம் இரண்டு கூறுகளாகக் 
  கிழிக்கப்பெற்றுள்ளது என்ற உண்மையை மறைத்து விட முடியாதுள்ளது. இத்தகைய ஒரு 
  சூழலில் மார்க்ஸியக்
 கட்சிகளே சிங்களவர்களையும் தமிழர்களையும் சகதோழர்களாகப் பேணும் அமைப்புகளை 
  கொண்டவர்களாக விளங்கக்கூடியவர்களாவர். இந்த அமைப்புகள் இன்று முற்று முழுதாக 
  அரசாங்கத்துடன் நிற்பதுமல்லாமல் தமிழர் நிலைப்பட்ட தேசப் பிரச்சினைகளுக்கு 
  தமக்கெனத் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. 
  சர்வகட்சி மாநாட்டுக்குக்கூட சமசமாஜக்கட்சியினரும் பொதுவுடைமைக் கட்சியினரும்
 தத்தமது நிலைப்பாடுகளைத் தெளிவாகக் கூறவில்லை. இத்தகைய ஒரு சூழலிலேதான் 1917 
  அக்டோபர் புரட்சியும் அதுலெனின் வகித்த இடமும் மிக முக்கியமாகின்றன.
 
 
  அக்டோபர் 
  புரட்சியில் இடம்பெற்ற ஒரு சுலோகம் இலங்கைக்கு இன்று பொருத்தமாகவுள்ளது. அது 
  கஞுச்ஞிஞு, ஃச்ணஞீ, ச்ணஞீ ஆணூஞுச்ஞீ என்பதாகும். சமதானம், நிலம், உணவு என இதனை 
  மொழிபெயர்க்கலாம். இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு இலங்கையிலுள்ள சகல 
  இனத்தினரும் இலங்கையர் என்றவகையில் உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் உரியவர்களாவர். 
  அக்டோபர் புரட்சியின் வரலாறு சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றில் இதனைச் 
  சத்தியமாக்கிற்று. அத்தகைய ஒரு நடைமுறையை மேற்கொள்வது அக்டோபர் புரட்சியின் 
  வரலாற்று முக்கியத்துவத்தினை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரினதும் பணியாகின்றது. 
 http://www.thinakkural.com/news/2007/11/8/articles_page39834.htm
 07 / 08 - November - 2007
 |