| 
பதிவுகள் கவிதைகள்! 
    
 செம்மதியின் 
கவிதைகள்! 
 1. இறைமையின் பெயரால்
 
 இராணுவப்பிரங்கிகளுக்குள்
 அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர்
 குருதிச்சுனையில்
 புதைந்த கவசவண்டிகள்
 அப்பாவிகளின் பிணங்களின் மேல்
 நகர்த்தப்பமகின்றன
 துப்பாக்கிகளின் ஒவ்வோரு தோட்டாக்களிலும்
 மனிக உயிர்கள் குடியிருந்தன
 நாளைய பகல்கள்
 இன்றைய இரவுகளைக் கொடுத்து
 வேண்டப்பட்டுக்கொண்டிருந்தன
 நாளைய தீபாவளிக்கு
 பட்டாசு வெடிக்கும் கனவுடன் துங்கிய
 பிஞ்சுகளை
 எறிகணைகள் பட்டாசுகளாய்
 பிய்த்துப் போகிறது.
 குழந்தைகள் வெடிகுண்டுச்சிதறல்களுடன்
 விளையாடிக்கொண்டிருந்தனர்
 பதுங்கு குழிகளுகுள்
 ஒரு தேசம் குடியிருந்தது
 வெடிகுண்டுகளுக்குப்பயந்தவையாய்
 மழை வெள்ளமும் பதுங்கு குழிக்குள்
 பதுங்கிக்கொண்டது
 கால்களுக்குக்கீழ் மழை வெள்ளம்
 தலைக்குமேல் கந்தக முளையர் கக்கும்
 உலோகச்சிதறல்கள்
 உவர்ப்பு நீரிலும் சிவப்பு நீரிலும்
 கரைந்து போனது ஏதிலிகள் வாழ்வு
 அகதிகளின் உணவுத்தட்டுக்களில்
 ஆயுதங்கள் இடப்பட்டிருந்தன
 பிணங்கள் நிலங்களை
 விழுங்கிக்கொண்டிருந்கன
 ஆவிகள்போரில் நிற்பதாய்
 படைகளின் துணைவியற்கு
 சம்பளம் வழங்கப்பட்டது
 ஏழைகள் ஏலம்விடப்பட்டனர்
 இறைமையின் பேயரால்
 
 
 2. கானலும் கண்ணீரும்
 
 
  அவர்கள் 
புறப்பட்டுவிட்டார்கள் போகும் இடம்
 அவர்களுக்கே தெரியவில்லை
 நடந்த பாதையில் சுவடுகள்
 கேள்விக்குறிகளாய்க் கிடக்க
 கச்சைகளைக் களற்றி
 மகுடமாக்கிச் சூட்டப்போகிறார்கள்
 
 பயிர் வளர்க்கச் சென்றவர்கள்
 வேலியைப் பிரித்துவிட்டு
 பயிரையும் பிடுங்கி எறியப் போகிறார்கள்
 உடம்பிற்குள் கெட்ட ஆவி புகுந்ததுபோல
 ஆக்குரோசமாகப்பேசுகிறார்கள்
 பயிரை எப்படி அழிக்கலாம் என்பதுபற்றி
 உரமாகிப்போனவரின்
 உணர்வுகளை மிதித்து
 பகட்டையும் பணத்தையும்
 தேடிப்போகிறார்கள்
 
 நல்ல தீன் கிடைக்குமென்று
 முட்டைக் கோழியாகப் போகிறார்கள்
 இட்டுமுடிந்ததும்
 இறச்சிக் கோழியாவதற்கு
 பல்லக்கில் செல்வதாய்
 பாடையில் ஏறிவிட்டார்கள்
 உயிர் உள்ள பிணங்களாகி
 கானல் நீரில் நீச்சலடித்து
 கண்ணீரில் மூழ்கடிக்கப்போகிறார்கள்
 
 chemmathy@gmail.com
 
 மாமதயானையின் காதல் கவிதைகள்
 
 
  இப்பொழுது நினைத்தாலும்
 சிரிப்புதான் வருகிறது
 என்மனதை
 படிக்கத்தெரியாத உனக்கா
 நிறையப்புத்தகங்கள் பரிசளித்தேன்
 
 உன் கூந்தல்
 காற்றில்
 அசைந்து எழுதும்
 அற்புதமான
 கவிதைகளை விடவும்
 சிறப்பான கவிதைகளை
 ஒரு பொழுதும் என்னால்
 எழுதிவிட முடியாது
 
 உனக்கு
 பரிசுப்பொருளாகத்தர
 என்னிடம் எதுவும் இல்லை
 என் பரிசுத்த இதயத்தைதவிர
 
 எந்தப்பெண்ணை
 பார்த்தாலும்
 அவர்களுக்கு
 பின்னேயே செல்கிறது
 என் கவிதை மனம்
 
 வருங்காலத்தில்
 என்ன ஆகப்போகிறாய்
 ஆசையுடன் கேட்கிறேன்
 நம் குழந்தைகளுக்கு
 அம்மாவாகப் போகிறேன் என்று
 வெட்கத்தோடு சொல்கிறாய்
 
 manisen37@yahoo.com
 
 சென்ரியூ-நகைப்பாக்கள்
 
 மாமதயானை
 
 
  சீமானின்மாளிகை 
இடிந்தபிறகு நன்றாகவே தெரிகிறது
 ஏழைகளின் குடிசைகள்
 
 அமைச்சருக்கு போட்ட துண்டு
 எப்படி விழுந்தது
 பட்ஜெட்டில்
 
 பால் காய்ச்சித்தான்
 குடித்தனம் போகவேண்டும்
 சாராயம் காய்ச்சுபவனும்
 
 நிறைய மிட்டாய்கள்
 வாங்கித்தரும் தாத்தாவிற்கு
 பாவம் பல்லேஇல்லை
 
 தமிழ் நாட்டில்
 சாதிக்கவும் தடை
 சாதி
 
 யாருடைய ஆசியோ ?
 உயர்ந்து கொண்டேபோகிறது
 விலைவாசி
 
 பகுத்தறிவு இல்லாதவனின்
 உலக அனுபவம்
 வெங்காயம்
 
 சுருக்கமாக
 பேசிமுடித்தார்
 விரிவுரையாளர்
 
 தன்னம்பிக்கையை
 இழக்கவில்லை
 விபத்தில் கைஇழந்தவன்
 
 வெற்றியை
 நெருங்கிவிட்டான்
 பலமுறை தோற்றவன்
 
 சலனமில்லாத குளம்
 துண்டிலில் மீன்சிக்குமா
 சலனத்துடன் மனம்
 
 இதயம் பலவீனமானவர்கள்
 திடப்படுத்திக்கொள்ளுங்கள்
 பாடகர் பாடப்போகிறார்
 
 வீடு முழுக்க நிறைந்திருக்கிறது
 விடுமுறைக்கு வந்துபோன
 பேத்தியின் சிரிப்புசத்தம்
 
 ஆதிக்க வர்க்கத்தின்
 ஆட்டத்தை அடக்கவே
 அதிர்கிறது பறை
 
 நிறைய பொம்மைகள்
 இருந்தும் அழகாயில்லை
 குழந்தைகள் இல்லாத வீடு
 
 manisen37@yahoo.com
 
 சென்ரியூ-நகைப்பாக்கள்
 
 மாமதயானை
 
 
  அம்மா 
குளிக்கப்போகின்றோம் ஆற்றங்கரைக்கு போகின்றோம்
 
 அன்பைத்தருவது நீயம்மா
 ஆற்றல் மிக்கது அறிவம்மா
 
 இசையுடன் பெய்யும் மழையம்மா
 ஈகையால் சிறக்கும் வாழ்வம்மா
 
 உரலைப்போல் உடல்வலுவம்மா
 ஊச்சல் ஆடும் வயசம்மா
 
 எண்ணம் முழுவதும் நீயம்மா
 ஏற்றம் காண்பது மனசம்மா
 
 ஐயம் இல்லா உலகம்மா
 
 ஒன்றேகுலமென உணரம்மா
 ஓதல் நமக்கு உயர்வம்மா
 
 ஓளவை சொல்லைக்கேளம்மா
 
 - மாமதயானை
 
 
  சிறுவர் 
பாடல்கள் இசைப்பாடல் 
 அக்கா -ராமு தம்பி விறுவிறுப்பாக எங்கே போறிங்க
 நீங்க எங்கே போறிங்க
 தம்பி – பக்குவமாக பாயை விரித்து படுக்கப்போறங்க
 அக்கா படுக்கப்போறங்க
 
 அக்கா – மாலை உறக்கம் உடலுக்கு தீங்கு தெரியாத தம்பி
 உனக்கு தெரியாத தம்பி
 தம்பி - உறக்கத்தை தவிர வேறெதுவும் தெரியதே அக்கா
 எனக்கு தெரியதே அக்கா
 
 அக்கா – விளையாட்டு
 தம்பி – விளையாட்டா
 விளையாட்டென்றால் என்ன என்ன விளையாட்டு
 அக்கா விளையாட்டு
 அக்கா – தம்பி நானும் சொல்வேன் நீயும் கேட்டு
 தலையாட்டு
 தம்பி தலையாட்டு
 
 ஒற்றைக்காலைமடக்கி ஓடுபவனை பிடித்தால் அது
 நொண்டி நொண்டி
 
 தம்பி – அக்கா நொண்டி நொண்டி
 
 அக்கா – தம்பி நொண்டி நொண்டி
 
 அக்கா – ஆளைத்தாண்டித்தாண்டி ஆடுவது பாண்டி பாண்டி
 
 தம்பி – அக்கா பாண்டி பாண்டி
 
 அக்கா – தம்பி பாண்டி பாண்டி
 
 அக்கா – கோலைவைத்து ஆடினால் அது கோலாட்டம்
 குரங்கைப்போல தாவினால் அது குரங்காட்டம்
 
 தம்பி – கோலாட்டம் அக்கா குரங்காட்டம்
 
 அக்கா – கண்ணை மூடி ஆடினால் அது கண்ணாமுச்சி
 
 தம்பி – அக்கா கண்ணாமுச்சி
 
 அக்கா – தம்பி கண்ணாமுச்சி
 மறைந்து மறைந்து ஆடுவது அது ஐசுபரி ஆச்சி
 தம்பி - அக்கா ஐசுபரி ஆச்சி
 அக்கா - தம்பி ஐசுபரி ஆச்சி
 அக்கா –கில்லி தாண்டு கோலிகுண்டு நிறைய ஆட்டம் உண்டு
 தம்பி நிறைய ஆட்டம் உண்டு
 நீயும் ஆடி உடலைக்காத்தால் அதுவே என்றும் நன்று
 தம்பி அதுவே என்றும் நன்று
 அக்கா - ராமு தம்பி விறுவிறுப்பாக எங்கே போறிங்க
 நீங்க எங்கே போறிங்க
 தம்பி – ஆட்டம் போட்டு ஜொராய் நானும் விளையாடப்போறங்க
 அக்கா விளையாடப்போறங்க
 அக்கா – இராமு தம்பி
 தம்பி – நன்றி அக்கா
 
 manisen37@yahoo.com
 
 
 சென்ரியூ - நகைப்பாக்கள்
 
 மாமதயானை
 
 
  தேர் 
வராத சேரிக்குள் தேசமே வரும்
 தேர்தல் நேரம்
 
 இறந்த பிறகும்
 பிறர் கதைகளில்
 கதை சொல்லும் பாட்டி
 
 ஊர் சுற்றும் பிள்ளையின்
 வேலைக்காக
 கோயில் சுற்றும் அம்மா
 
 கண் சிமிட்டாமல்
 சிரித்துக்கொண்டிருக்கிறாள்
 ஒவியத்தில் அவள்
 
 கழுதைக்கு முதுகில்
 வண்ணானுக்கு மனதில்
 சுமை
 
 நீண்ட கூந்தல் பெண்
 எழுதிக்கொண்டிருக்கிறாள்
 மொட்டைக் கடுதாசி
 கள்ளக்காதலியின் முத்தம்
 காய்வதற்கு முன்
 மனைவியின் நினைவுகள்
 
 மது விலைக்குறைந்தும்
 பலனில்லை
 சாமி சரணம்
 
 அடிக்கடி வருவார்
 அம்மாவின் வார்த்தைகளில்
 இறந்துபோன அப்பா
 
 manisen37@yahoo.com
 
 
 என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?
 
 சக்தி சக்திதாசன்
 
 
  கேள்விகளை 
நான் கேட்பேன் அது என் கடமை
 பதில்களைத் தருவது
 உன் திறமை.
 
 பத்துநாளாய்ப் பட்டினி
 பாடிக் கொண்டே கையை நீட்டும்
 பாலகன் அவனையும் இறைவா
 பசியுடன் படைத்தது நீயா ?
 
 நோயினில் தவித்திடும் அத்தாய்
 பாயினில் உறங்கிடும் அவள் பதி
 கோலங்கள் பலவாய் மாற்றிக்
 கொடுத்ததும் நீயா சொல் ?
 
 பொழுது போக்க பள்ளிக்கு
 போகும் சில செல்வச் சிறார்
 பள்ளிவாசலில் கண்ணீரொடு
 பார்த்து நிற்கும் சின்னஞ் சிறுவன்
 பாரதன் ராஜ்ஜியத் தலைவனும் நீயா ?
 
 கண் மூடும் போதும், விழிக்கும் போதும்
 கடவுள் உன்னை கண்பதே பணியென
 கடமை தன்னை கடவுளாய்ப் புரியும்
 கர்மவீரன் கண்களில் கண்ணீர்
 காலத்தின் கோலத்தை வரைவது நீயா ?
 
 பெண்களாய்ப் பிறந்த காரணத்தால்
 பொன் கேட்கும் உலகின் பேராசையால்
 வாழ்வின்றித் தவிக்கும் கன்னியரின்
 வதைப்பைப் போக்கும் வகையில்லா
 வாழ்வை வகுத்த வள்ளலும் நீயோ ?
 
 உழைத்து, உழைத்து தம்முடலை
 உருக்குலைத்த மக்கள் வாழ்வினில்
 உயர்ச்சி என்பதே இல்லா நிலமை
 உனது உலகம் இதுவோ சொல் ?
 
 நீயில்லை என்பார் வரிசையில்
 நானில்லை என்று அறிவாய் இறைவா
 ஏனில்லை உலகில் நியாயம் என்றே
 ஏக்கம் நெஞ்சில் தோன்றுது அத்னால்
 எழுந்தன கேள்விகள் பதிலென்ன சொல்?
 
 http://www.thamilpoonga.com
 ssakthi@btinternet.com
 
*** *** ***
 குன்னக் குடி வைத்தியநாதன்
 
 - மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) -
 
 
  
பொட்டு வைத்த குயிலின் மூச்சும்
 குன்னக்
 குடியின் வயிலின் பேச்சும்
 நின்று கொண்டது….
 
 இவன்
 பெயர் வைத்தியநாதன்
 தொழிலினிலும்
 இவன் வைத்தியன் தான்
 வித்தியாசம் என்னவெனில்
 இவன் மட்டும் தான்
 மருந்து கொடுக்காமேலயே
 நோய்களைக் குணமாக்கியவன்.
 
 இவன் வயலின் பாட்டிசைத்தால்
 பாடல்கள் பூப்படையும்
 இவன் விரல்கள் தழுவினால்
 வயலின் நரம்புகள்
 மூப்படையும்
 
 
இவனால் காற்றும்
 இசையைக் கற்றது.
 இவன் கூற்றும்
 இசைப் பேறு பெற்றது.
 
 
இவன்வயலினுக்காக
 எடுத்தான் ஒரு அவதாரம்
 அந்த வயலின் தான்
 இவனுக்கு
 மறுதாரம்
 
 வயலின் தான் இவனது
 நுரையீரல்
 அதனாலே தான் சுவாசித்தான்
 வயலின் தான் இவனது
 உதடு
 ஆதனால்த் தானே வாசித்தான்
 
 இரண்டையும்
 அவன் இப்போ நிறுத்தினான்.
 ஊசி முனையிலே
 எமை எல்லாம் நிறுத்தினான்
 
 maduvilan@hotmail.com
 |