| நீ இல்லாத அறை 
  புழுக்கமாயிருக்கிறது 
 நட்சத்ரவாசி
 
 
  
  ஒரு பழைய நினைவை இழுத்து வந்ததுமெல்லிய காற்று வெறும் பொழுதொன்றில் இதமாய்
 அதனொரு சூழலில் அறை பற்றிய
 சித்திரம் காட்சிப்படுத்தப்பட்டது
 அறை வாசலின் திரைச்சீலை
 காற்றில் படபடக்கிறது
 அதன் சுழல் திசைவழியில்
 அதனைப் பற்றிப் பிடித்தவாறு
 நின்றிருந்த அவள் சிரிப்பொலி தோய்ந்த முகம்
 மெல்ல மறைந்து ஒலிநாதமாகிறது
 படுக்கையில் கிடந்தவாறு ஏதேதோ
 பேசிய பேச்சுக்கள் வரிகளாக மிதக்கின்றன
 மெல்ல இருமை கவிந்து வெளிச்சம்
 மேலெழும்புகையில் ஓடிச்சென்றொளியும்
 அவளின் கரம்பற்றி அறைக் கதவோடு
 சாய்த்து நிறுத்தி கொடுத்த இதழ் முத்தம்
 நினைவுக்கு வெளியிலும் வெடிக்க
 உதட்டை துடைத்து நாணமுடிகிறது
 மெல்ல உயரும் அவள்
 முகத்தில் பயம் கலந்துவிட
 கரம் விட்டு ஓட எத்தனித்து
 போக முடியாமல் அதிர்ந்தெழுந்து
 அக்னியில் சமைந்தோம்
 அறை இப்போது புழுக்கமாயிருக்கிறது.
 
 mujeebu2000@yahoo.co.in
 www.natchathravasi.wordpress.com
 
 தீக்குஞ்சுகள்
 
 நட்சத்ரவாசி
 
 
  எரியும் தீயினை பாருங்கள் ஒரு சிறிய முனையின்
 சொல்லொன்று பற்றியதோ
 அக்கினியை சமைக்க
 எந்தவொரு வல்லமை வந்ததோ
 அதன் எரிதலிலும் படர்தலிலும்
 வெவ்வேறு நிறமிருக்க
 என்ன காரணமோ
 எரிந்து கொண்டிருக்கும் ஒரு பொறி
 உயர்ந்து மேலெழுந்து
 பறந்து உயர்தலிலும்
 என்ன ஒரு வேகம்
 பொடிந்து விழும்
 சிறு தீக்குஞ்சுகள்
 கண்முன்னே மரிக்க
 பதறாதோ மனம்
 அவை படபடத்து படபடத்து
 குஞ்சுகளை பொரிக்கின்றன
 எந்த ஒரு இயலாமையும்
 காட்டிக்கொள்ளாமலே
 சிறு சொல்லெடுத்து நானும்
 அக்கினி சமைக்க
 வென்று விட்டதோ உலகை
 அதனொரு தழல்.
 
 mujeebu2000@yahoo.co.in
 
 திக்கெட்டும் ஒலிக்கட்டும் தேமதுரத் தமிழோசை
 
 - ப.மதியழகன் ( மன்னார்குடி, தமிழ்நாடு)
 
 
  சொற்கள் தீயை கக்கினஅதைப் படித்தவர்கள் உள்ளம்
 விம்மி அடங்கின
 கலைத்தாயின் மகுடத்தில் வைரக்கல்லானான்
 தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில்
 தங்கமகனானான்
 வறுமையின் கோரப்பிடி
 வாழ்விலோ பசி, பிணி
 சுற்றத்தினரின் கேலிச்சிரிப்பொலி
 உள்ளத்திலோ, பரங்கியர்களால்
 நயவஞ்சகமாக பந்தாடப்பட்டதனால்
 உண்டான வலி
 சிறைக்கதவுகளால் அவனது சிந்தனையை
 சிறைப்படுத்த இயலவில்லை
 அவனது சுதந்திர தாகம் மட்டும்
 இறுதி வரை தணியவே இல்லை
 முறுக்கு மீசை கொண்டவன்
 முத்தமிழையும் ஆகாய கங்கையென
 தமிழ் மண்ணெங்கும் பாய்ந்தோடச் செய்தான்
 முண்டாசு அணிந்தவன்
 ருத்ர தாண்டவமாடினான், கவிநாதனாக
 விடுதலை எழுச்சியை தேசத்தில் தோற்றுவிக்க
 மேற்கொண்ட பெரும் முயற்சிகளில்
 அவனே வித்தானான்
 அந்த விதை அழிந்த பின்பு தான்
 புரட்சி முளைவிட்டு விருட்சமாய்
 எழுந்து நின்றது
 காணி நிலம் அவன் கேட்ட போது
 கொடுக்கவில்லை பராசக்தி
 இன்று தமிழ் மண்ணெங்கும் பரவிக்கிடக்கின்றது
 அவனது உயிர்சக்தி
 ஆழிப்பேரலையை
 நேரில் கண்டுவிட்ட நாமனைவரும்
 அஞ்சிநடுங்குகிறோம், அல்லல்படுகின்றோம்
 அன்று செந்தமிழ்ச்சுனாமி மானிடனாய்
 வாழ்ந்து காவியங்கள் பல படைத்து
 பின்பொரு நாள் மத்திம வயதிலேயே
 மாயமானதை
 காலச்சுவடுகள் மூலம் அறிகிறோம்
 கோயில் யானை பாரதியின் தேகத்தை
 தனது துதிக்கையால் வீழ்த்தியது
 கருவறையில் சயனத்திலிருந்த பார்த்தசாரதி,
 கோயிலுக்கு உள்ளிருந்து ஓடோடி வந்தானய்யா
 குவளைக் கண்ணனாய்
 மகாகவிஞனை தனது தோளில்
 சுமந்தானய்யா
 யானை அறியாமல் செய்த பிழைக்கு
 பரிகாரம் செய்தானய்யா
 பார்த்தனுக்கு மட்டுமல்ல
 பாரதிக்கும் தானொரு சாரதி - என்று
 அன்று நிரூபித்துச் சென்றானய்யா
 அவன் பிராணன் அடங்கிய போது
 சடலத்தைச் சுமந்து மாயனம் நோக்கிச் சென்ற
 இறுதி ஊர்வலத்தில்
 விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலருடன்
 இடுகாடு வரை தமிழன்னை வந்தாள்
 தனக்காக வாழ்ந்வனுக்கு
 வாழ்த்தி விடைகொடுக்க....
 
 யாதுமாகி
 
 - ப.மதியழகன் -
 
 
  எனது உள்ளக் கனலைத் தணிக்கஉனது ஓரவிழிப் பார்வை போதும்
 ஊற்றாய் தண்ணீர்
 என் நெஞ்சமெங்கும் கரைபுரண்டோடும்
 
 எனது சோர்வுகளை துரத்தியடித்து
 விரக்தியை விரட்டியடிக்க
 உனது கனிவான வார்த்தைகள் போதும்
 எமனே வந்து எதிரில் நின்றாலும்
 என் இதயம் எப்பவும் போல் ஓடும்
 
 எனது மன இருள்களை போக்கி
 பிரகாசம் பொங்கும் ஒளிதீபம் ஏற்றிட
 உனது சிறு நகத்தீண்டல் போதும்
 நிலவுக்கு தன் கிரணங்களை கடன் தரும்
 சூரியன் போல் பொன்ணொளியால்
 என் மேனி சுடர்விடும்
 
 எனது கனவுகள் நனவாக
 உனது கால்தடம்
 எனது வீட்டில் பதிந்தால் போதும்
 தடைக்கற்களாய் நிற்கும் கற்பாறைகளையே
 என் இரும்பு இதயம்
 அலட்சியமாய்ப் புரட்டிப்போடும்
 
 எனது கற்பனை, சிறகுகள் விரிக்க
 மயிலிறகாய் மனத்தை வருடும்
 உனது அன்பான சிறுசொல் போதும்
 வார்த்தைகள் வானத்திலிருந்து
 அருவியாய் வந்து
 எழுதுகோலில் குதித்து விளையாடும்
 
 எனது ஆன்மச்சுடர் அணையாமலிருக்க
 என்றென்றும் உனது அருகாமை ஒன்று போதும்
 நதிவெள்ளம் போல் பல தொலைவுகளைக் கடந்து
 லட்சியக்கடலில் ஓர் நாள் எனது ஜீவன் சங்கமித்து
 இவ்வுலகம் நிலைக்கும் வரை
 உந்தன் புகழ் பாடும்.
 
 mathi2k9@gmail.com
 
 தமிழச்சியின் கொட்டும்
 
 - புதியமாதவி -
 
 
  புரட்சிக் காற்றேநினைவிருக்கிறதா என்னை?
 சக்தியைப் பாடி
 பாரதி பக்தியைக் காட்ட நினைத்த பாட்டனே
 எங்கள் பாரதிதாசனே
 
 செந்தமிழ் நாடென்றும் - நம்
 தந்தையர் நாடென்றும்
 தேமதுரப் பாட்டெழுதிய
 உன் பாரதி
 பாரத எல்லைக்குள் நம்மைப்
 பத்திரமாகப் பூட்டிவைத்தான்-அதையும்
 பட்டா போட்டு நம்ப வைத்தான்.
 
 சிங்களத்தை தீவு என்று
 பிரித்துப் பார்த்தது அவன் பூகோளம்
 நான் தான்
 பகல்வேஷமிட்ட
 இந்திய இருட்டை
 உனக்கு அடையாளப்படுத்தினேன்.
 கஞ்சா மயக்கத்திலிருந்த
 காரிருளை மீட்டெடுத்தேன்
 அதையும்
 உன் கவிதையாலேயே
 செய்துமுடித்தேன்.
 
 தமிழனின் ஆரியமாயை காமாலைக்கு
 சஞ்சீவிப் பர்வதத்தின்
 பச்சிலைச் சாறெடுத்து
 பத்தியமில்லாமல்
 வைத்தியம் பார்த்த
 புரட்சிக் காற்றே!
 
 கட்டைவிரலை காணிக்கையாக்கிய
 ஏகலைவனின் எழுத்தாணியை
 கடனாகப் பெற்றாயோ
 காணிக்கையாய் பெற்றாயோ
 நீ தான் - உன்
 குருவைத் தாண்டி வந்தாய்- தமிழர்
 குலம் வாழ - அவர்
 குருகுலம் தாண்டி நின்றாய்.
 
 தென் திசையைப் பார்க்கச் சொன்னாய்
 அன்றந்த இலங்கையினை
 ஆண்ட மறத்தமிழன்
 என் தமிழர் மூதாதை
 என் தமிழர் பெருமான்
 இராவணன் காண்- என்று
 நம் தமிழர் வரலாற்றை
 இந்திய எல்லைக்கு அப்பாலும்
 விரித்தாய் - அதனாலேயே
 எங்கள் இதயத்தில்
 இடம் பிடித்தாய்.
 
 திங்களைப் போல் செங்கதிர்ப்போல்
 தென்றலை போல் செந்தமிழ்ப்போல்
 வாழ்க வாழ்கவே எங்கள்
 வளமார் திராவிட நாடு
 வாழ்க வாழ்கவென
 சிறுத்தைகளைப் பாடவைத்த
 சிம்புட் பறவையே
 சிறகை விரி..
 தேடு.
 இந்திய முகங்களுக்குள்
 தன் சுயமிழந்துப் போன
 என்னையும் உன் மண்ணையும்.
 
 எங்கள் போர்முரசே
 தெந்திசையைப் பார்த்து
 தோள்களெல்லாம் பூரித்ததாய்
 ஆனந்தப் பட்டாயே
 உன்னைப் போலவே
 புறநானூறு பாடிய எம்
 அகநானூற்று அவ்வைகளின்
 கல்லறைகளிருந்து
 வெடிக்கிறது
 உன் கவிதைகள் காணாத
 கண்ணிவெடிகள்
 எம் தாயின் கண்ணீர்வெடிகள்
 ரத்தம் தோய்ந்த
 புத்தனின் கரங்கள்
 எழுதுகிறது
 தமிழன் என்றால் அகதி என்று.
 
 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
 மங்காத தமிழென்று
 முழக்கமிட்ட போர்முரசே!
 உன் கவிதைகளை கனவுகளை
 அக்னிக்குஞ்சாய் நான்
 அடைகாத்தேன்
 உன்னைப் பிரசவிக்காமலேயே
 தமிழ் அமுதூட்டிய
 உன் ஆதித்தாயின்
 வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே
 அகதியானேன்.
 
 உலக அரங்கில்
 அமைதிப் புறாக்கள் பறக்கும்
 ஆகாயத்தின் கீழ்
 கதற கதற
 ரத்தம் சொட்ட சொட்ட
 நிர்வாணமாய்க் கிடக்கிறது
 எங்கள் வாழ்வும்
 தமிழன் வளமும்.
 
 உன் வீட்டில்
 உன் கவிதைகளை
 உரக்க வாசித்தே
 ஊராளும் கூட்டம்
 தப்பி வந்த என் தவப்புதல்வர்களுக்கு
 இலவசமாக பல்பொடி
 வழங்கலாம்
 போட்டிக்கு அம்மாக்கள் பால்பொடி வழங்கலாம்
 மருத்துவர்கள் மாறி மாறி
 கூட்டணி அமைத்து
 கூட்டணி உடைத்து
 தமிழனைப் பைத்தியம் ஆக்கலாம்
 காலை 10 மணிமுதல்
 பகல் 1 மணிவரை
 உண்ணா நோம்பிருக்கும்
 அதிசயங்கள் நடக்கலாம்
 பார்வையாளர் வரிசையில்
 பதுங்கி இருக்கிறது
 உறைக்குள் வாளாக
 உறங்கும் போர்ப்படை.
 
 தமிழ்த் தேசியத்தை
 தாங்கிப் பிடித்தவனே
 உன் கனவுகளைச் சுமந்த
 என் கருவறைகள் மீது
 காந்தி தேசத்தின் ராமபாணம்.
 வெடித்துச் சிதறிய - எம்
 பனிக்குடத்தின் சாட்சியாக-
 முலை வீசி எறிந்த -எம்
 கொற்றவை சாட்சியாக-
 உங்கள் ஸ்ரீஸ்ரீராமனுக்கு
 உயிர்ப்பிச்சை அளித்த
 எங்கள் முப்பாட்டன்
 இராவணன் சாட்சியாக
 கடல் கடந்து ஒலிக்கிறது
 'கொலை வாளினை எடடா
 கொடியோர் செயலறவே..
 புதியதோர் உலகம் செய்வோம்'
 
 தமிழச்சியின் கத்தி
 ரத்தம் கீறி எழுதுகிறது
 என் போர்வாளே..
 பாவேந்தன் கனவல்ல- அவன்
 பாடல்களும் கனவல்ல.
 
 (28/11/2009 மும்பை , சயான், குருநானக் அரங்கில் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் 
  மன்றம் நடத்திய கவியரங்கத்தில்
 "பாட்டுலகின் பாட்டனார்கள் " வரிசையில்.. "பாவேந்தன் பாரதிதாசன்" தலைப்பில் என் 
  உரைவீச்சு.)
 
 puthiyamaadhavi@hotmail.com
 
 
 விரிகின்ற தாமரையோ
 
 சக்தி சக்திதாசன்
 
 
  நித்தமொரு மாலையிலேமுத்தமிடும் வேளையிலே
 சத்தமின்றித் தென்றலது
 யுத்தமொன்று புரியுதன்றோ
 
 மலரொன்றின் ஏக்கத்திலே
 புலர்கின்ற மாலையிலே
 துலர்கின்ற இன்பத்தினை
 உணர்கின்ற தாக்கமது
 
 இயற்கையின் கானத்தில்
 கேட்கின்ற ராகத்தில்
 பிறக்கின்ற சாரத்தில்
 சுரக்கின்ற நாதமழை
 
 நினக்கின்ற வேளையிலே
 நனைக்கின்ற நினவுமழை
 கனக்கின்ற சுமைகளெல்லாம்
 மறக்கின்ற கோலமது
 
 சிதறுமந்த எண்ணத்துளிகள்
 சேர்ந்து ஒரு குட்டையாகி
 மலர்கின்ற கவிதையது அதிலே
 விரிகின்ற தாமரையோ
 
 http://www.thamilpoonga.com
 
 ராம்ப்ரசாத் (சென்னை) கவிதைகள்!
 
 என்னவள் ஒரு தேவதை - 1
 
   பால்கனி சுவற்றில்வெட்சி மலர் போல்
 உன் விரல்களை
 பூக்க விட்டு நிற்கிறாய்...
 உன்னருகே வந்து
 உன் இதழ் பிரியும்
 அத்தனை வார்த்தைகளையும்
 என் செவிகளில்
 ஒன்று சேர்த்து நிற்கிறேன்...
 
 மலர் தாவும் வண்டாய்
 என் விரல்கள் சுவற்றில்
 பூத்த உன் விரல்களில்
 வந்தமர முயல,
 அதை முன்பே எதிர்பார்த்தவளாய்
 கூட்டுக்குள் அடைந்த நத்தைபோல்
 உன் விரல்களை
 இழுத்துக்கொண்டு
 எதிர்திசையில் நிலாமுகம் திருப்பி
 இதழோரம் மெல்லிய
 புன்னகையை தவழ விடுகிறாய்...
 
 நீ தவழ விட்ட
 பொன்னகையில்
 மறைந்து நின்ற
 ஊடல் முத்துக்களை ரசித்தவாறே
 என் இதழ் தவறிச்
 சிந்திய நமுட்டுச்சிரிப்பை
 சேகரித்துக்கொண்டிருந்தேன்
 நினைவடுக்குகளில்...
 
 
 என்னவள் ஒரு தேவதை - 2
 
 வைகறையில் நீர்தெளித்து
 கோலமிட வாசலுக்கு
 வருகிறாய்...
 உன் வருகைக்காக
 காத்திருக்கிறோம்
 நானும் வைகறையும்...
 நீரள்ளி நீ தெளிக்கையில்
 சிதறிவிழும் ஆயிரம்
 துளிகளில் ஒவ்வொன்றிலும்
 உன் பூமுகம் தெரிய
 ஒவ்வொன்றிற்காகவும்
 ஒரு முறை மீண்டும்
 பிறக்க நினைக்கிறோம்
 நானும் வைகறையும்...
 நாளை மீண்டும்
 உன்னை தரிசிக்கவே
 பகலுக்கு வழிவிட்டு
 கடந்து போகிறது
 வைகறை...
 நாளைவரை காத்திருக்க
 மனமின்றி
 நான் மட்டும் தொடர்கிறேன்
 என் விடியலை
 உன்னை பார்த்தபடியே...
 
 என்னவள் ஒரு தேவதை - 3
 
 
  குளவிப்பூ விரல்களைவட்டமாய்க் குவித்து
 அதில் சோப்பு நீரால்
 சிலந்திவலை பிண்ணி
 உன் குவளைப்பூ இதழ்களைக்
 குவித்து காற்றில்
 ஏதோ ரகசியம் சொல்கிறாய்...
 அந்த ரகசியங்களை
 மூட்டைகட்டி காற்றில்
 பறக்கின்றன நீர்க்குமிழிகள்...
 அவைகளில்
 என்னைப்பற்றிய செய்தி
 ஏதேனும் இருக்குமாவென
 நான் ஆர்வமுடன் தேட
 ஒவ்வொன்றும்
 என் உள்ளங்கையில்
 வட்டமாய்
 சிலீரிட்டு வெடித்து
 உன் குவளைப்பூவிதழ்
 ஈரம் தான் அந்த
 ரகசியங்கள் அனைத்தும்
 என்று சொல்லாமல் சொல்லின...
 
 என்னவள் ஒரு தேவதை - 4
 
 மொழி பயின்றதென்னவோ
 உன் இதழ்கள்தான்
 எனினும்
 அதிகம் பேசுவதென்னவோ
 உன் விழிகளே...
 ஆனால்,
 இப்படி காதல் பேச
 யாரிடம் கற்றன அவைகள்
 எனக்கேட்டால் என்னையே
 காரணம் காட்டுகிறாய்...
 
 மழைக்காகத்தான் குடைகள்...
 எனினும்,
 உன் மடியில்
 நான் சாய
 இமைக்குடை விரிக்கும்
 உன்னிரு கருமீன்களின்
 கருணைப்பார்வையில்
 எப்போதும் என் கண்களில்
 மழைதான்...
 
 இனியவளே,
 நீ பேசப்பேச
 திகட்டாமல் இனிக்கிறது
 எந்த மொழியும்...
 புரியாத மொழியில்
 நீ என்ன பேசினாலும்
 எனக்குப் புரிகிறது
 அது காதல் தானென்று...
 
 என்னவள் ஒரு தேவதை - 5
 
 
  உத்திரத்தில் கயிறுகட்டிஅந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்த
 ஊஞ்சலின் மடி
 அமர்ந்திருக்கிறாய்,
 என் மடி வேண்டாமென்று
 வழக்கம்போலொரு ஊடலில்...
 அது பொய்யெனப் புரிந்தவனாய்
 உனதுருவம் பொறித்த
 தலையணையை நீயென
 பாவித்து மடியமர்த்திக்
 கொஞ்சுகிறேன்...
 என் கொஞ்சல் மொழி
 தனக்கு மட்டும்தானென
 ஓடிவந்து தலையணை விரட்டி
 உனை கொண்டு
 நிரப்புகிறாய்...
 அகவை மூவெட்டை
 தாண்டிய குழந்தையென
 உனை மடியேந்தி
 தாலாட்டுகையில் இறையிடம்
 வேண்டுகிறேன்
 இனி எப்பொழுதும்
 இப்பொழுதாய் என்றும்
 இனியதாய் கடந்திடவேண்டுமென...
 
 என்னவள் ஒரு தேவதை - 6
 
 வெந்தயத்தில் குளித்த
 உன் கூந்தல் இழைகள்
 ஒரு வேனல் மாலையின்
 சன்னலோர வெளிச்சத்தில்
 பட்டென மிளிரும்...
 
 இருள் கவியும்
 மாலையில் அதனை,
 நெய்தது போக மிச்சம்
 என்று கொள்ளும்
 சேணையர் பெண்கள்
 லாவகமாய் மடித்துவைத்து
 மறுநாளைக்கென
 எடுத்து வைக்க முயன்று
 தாங்கள் எடுக்க முயல்வது
 உன் கூந்தல் தானென்று
 பின்னேரம் உணர்ந்து
 வெடித்துச் சிரிப்பர்...
 
 இப்படியான நகைப்புக்களால்
 பூத்தே காணப்படும்
 சேணையர் கூடாரம்
 இப்படி பூப்பதற்க்கே
 உன்னைத் தங்கள்
 கூடாரத்திற்கு
 மீண்டும் மீண்டும் அழைக்கும்....
 
 என்னவள் ஒரு தேவதை - 7
 
 நீ சுவாசித்து விடும்
 மூச்சுக்காற்று போதும்
 நான் ஜீவித்திருக்க...
 
 உன்னழகைப் பார்க்க பார்க்க
 மூச்சு வாங்குகிறேன்
 உன்னருகாமை வாய்க்கப்பெற்றால்
 மூர்ச்சையாகிறேன்...
 
 உன்னைக் காணும்போதெல்லாம்
 என் மார்பு நிரைவதும்
 உன்னை தேடும்போதெல்லாம்
 என் நுரைஈரல் நனைவதும்
 உயிரியலில் இது
 எவ்வகை இயல்...
 முதல்முதலாய் எனக்கிது
 முற்றிலும் அயல்...
 
 உனக்கென பிறந்தது
 என் பிறப்பின் மூலம்...
 உனக்காக வளர்ந்தது
 என் வளர்ப்பின் மூலம்...
 இனி நீ இல்லையென்றால்
 நான் நிர்மூலம்...
 
 பெண்ணழகே என் கையில்
 நீ வந்துவிடு...
 கையில் வந்த உன்னை
 என் இதயம் தாங்கட்டும்...
 இதயம் தாங்கும் உன்னில்
 என் உயிர் நிறையட்டும்...
 
 என்னவள் ஒரு தேவதை - 8
 
 1.
 கடல் அலையில் கால் நனைத்தது
 நீதான்...
 பார்த்துக்கொண்டிருந்த
 என் நெஞ்சு
 நனைந்துவிட்டது...
 
 2.
 அடைமழையில்
 நனைந்து கொண்டிருந்தோம்
 நாம்...
 மொட்டைமாடியில்,
 ஒரே கொடியில்,
 அருகருகே
 உன் சுடிதாரும், என் சட்டையும்...
 
 3.
 நான்
 கிள்ளிய இடத்தில்
 ரத்தம் கட்டிவிட்டதென்று
 புலம்புகிறாயே...
 ரத்தம் கட்டிய இடம்
 என்னைக் கிள்ளியதை
 அறிவாயோ?...
 
 ramprasath.ram@googlemail.com
 
 சுந்தரக் கனகநிலா – வார்த்தைகள்.
 
 - வேதா இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்)
 
 
  தொடர்பு இணைப்பை மனிதருள்படர வைக்கும் வளையம்.
 இடர்கள் தீர்த்து இன்பம்
 படர்த்தும் வார்த்தைகள் பூக்கள்.
 ஓர் எழுத்தாயும் இணை
 சேர்த்துக் குழு நிலையாலும்
 வார்த்தைகளில் அர்த்தம் உயிர்க்கும்.
 வார்த்தைகள் கடல், மகா கடல்.
 
 நேர்த்தியான வார்த்தைகள் கூட்டுச்
 சேர்த்தால் இன்ப மொழிச்
 சொர்க்கம் அருகிலே - இங்கேயே.
 உதடுகள் பேசும் வார்த்தைகளை
 உயிரான கண்களும் பேசும்.
 தீர்க்கமான ஆசையில் பாசமாய்
 போர்த்திய நேசக் கனகநிலா
 வார்த்தைகள் உயிரை ஈர்க்கும்.
 
 உணர்வுகளின் தாலாட்டில் அசைந்து
 உதிக்கும் முத்துகள் வார்த்தைகளானால்,
 பேசிடும் வார்த்தையின் ஒலியும்
 உயிரை வருடும் இனிமையினால்.
 வார்த்தை ஒலி இனிமையில்
 கீர்த்தியும் நெருங்கும் அருகில்.
 வார்த்தைகள் வனப்புக் குடையாக
 நேர்த்தியான பிரசவமொரு இன்பத்தொல்லை.
 
 சிந்தனை வெள்ளத்தால் படியும்
 சுந்தர வண்டல்கள் வார்த்தைகள்.
 மந்திரமாய் சீவராசிகளை வசமாக்கும்.
 தந்திரமாக பந்தென பொய்களும்
 யந்திர வார்த்தைகளும் உருளும்.
 தூசி, பாசியுடை வார்த்தைகளால்,
 ஊசியாய்ச் சொருகும் வார்த்தைகளால்
 கூசி ஒதுங்குவோர் நல்லோர்.
 
 vetha@stofanet.dk
 |