| 
    
சூறாவளியின் பாடல்!
 
- 
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை -
 
 
  பலம் 
பொருந்திய பாடலொன்றைச் சுமந்த காற்று
 அங்குமிங்குமாக அலைகிறது
 
 இறக்கி வைக்கச் சாத்தியமான
 எதையும் காணவியலாமல்
 மலைகளின் முதுகுகளிலும்
 மேகங்களினிடையிலும்
 வனங்களின் கூரைகளிலும்
 நின்று நின்று தேடுகிறது
 
 சமுத்திரவெளிகளிலும்
 சந்தைத் தெருக்களிலும்
 சுற்றித்திரிய நேரிடும்போது
 இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்
 பொத்திக்கொள்கிறது பாடலை
 
 பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்
 காத்துக்கொள்ளப்படும்
 இசை செறிந்த பாடல்
 சலித்துக் கொள்கிறது
 ஓய்வின்றிய அலைச்சலின்
 எல்லை எதுவென்றறியாது
 
 தனிமைப்பட்டதை
 இறுதியிலுணர்ந்தது
 தெளிந்த நீர் சலசலக்கும்
 ஓரெழில் ஆற்றங்கரை
 மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து
 வெளிக்கசிந்து பிறந்த நாதம்
 
 இருளுக்குள் விசித்தழும்
 பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
 அதைச் சில கணங்கள்
 அந்தரத்தில் நின்று
 பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
 ஆவேசத்தோடு கீழிறங்கும்
 
 பின்னர் பாடலை அழ வைத்த
 காரணம் வினவி
 தான் காணும்
 வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
 அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
 அடித்துச் சாய்க்கும்
 
 இயலாமையோடு எல்லாம்
 பார்த்திருக்கும் பாடல்
 இறுதியில் கீழிறங்கி
 எஞ்சிய உயிர்களின்
 உதடுகளில் ஒப்பாரியாகி
 கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்
 
 காலம்
 இன்னுமோர் பாடலை
 காற்றுக்குக் கொடுக்கக் கூடும்
 
 mrishanshareef@gmail.com
 
சுவர்ணதீப சுகானுபவம் ....... 
 - வேதா. இலங்காதிலகம்,
 ஓகுஸ், டென்மார்க் -
 
 
  
உச்சிக் கருக்கலின் மெச்சும் ஒளித் தவம்.அச்சு உடலின் அசல் திரியின் சுடர்.
 கரியாகி, கண்களின்றி அருவியாகும் கண்ணீர்
 எரித்தவனை எண்ணியா? எரித்துத் தன்னையழிக்கவா?
 
 வடிவமற்று வடியும், வாய்க்காலின்றி ஒழுகும்
 வடிவான தோற்றங்களாய் வடிந்திறுகும் அழகு.
 தீயணைக்கும் நீர், இங்கு, தீயால் நீர்வீழ்ச்சியாய்த்
 திரவமாய்ச் சொரியும், வரண்டு திடப்பொருளாகும் மாயம்.
 
 கொட்டிடும் கொதிநீராய்ப் பட்டென தோலிற்பட்டு
 சுட்டிடும,; அட்டையாய் ஒட்டிடும் உரிக்கின்ற சுவடு.
 நெருப்புச் சூரியனால் துருவப் பனிப்படலமாய்
 உருகியிறுகும் அற்புத அழகு, விரக நோயையும் கிளறும்.
 
 ஆலயத்திலும், ஆனந்தத்திலும், அமைதியிலும் உடலடக்கத்திலும்
 உயிர்த்தநாளிலும், ஊர்வலத்திலும், சனித்தநாளிலும் ஒளித்திரிச்சுடரே!
 சுபத்திலும், அவலத்திலும் சுபஒளிச்சுடர் இருளகற்றவே!
 பட்டவர்த்தனமாய், பொய்யற்ற வெட்டவெளிச்ச உண்மையொளி!
 
 சுற்றிவர ஒளிதரும் சுவர்ண தீபத்தின்
 சுகானுபவம் ஒரு தவம். மகானாக்கும் அமைதி தரும்.
 ஆயிரம் மின்விளக்கு அளிக்காத அமைதியை
 ஒரு மெழுகுதிரி தரும் பெரும் நம்பிக்கைத் திரி.
 
 22-6-2008.
 
 kovaikkavi@gmail.com
 
 ********************
 
ப.மதியழகன் (திருவாரூர் மாவட்டம். தமிழ்நாடு) கவிதைகள்!
 மஹாவாக்கியம்
 
 
  
மெய்யாகவே மெய்யாகவே
 நான் உனக்குச் சொல்கிறேன்
 பசியால் வாடுபவர்க்கு அன்னமிடு
 கிழிந்த ஆடை கட்டியவனுக்கு
 துணி கொடு மானம் மறைத்திட
 வறுமையால் கல்விக் கூடத்துக்கு
 செல்லமுடியவில்லையா
 இலவசமாக கல்வி தானம் செய்,
 அவனைப் போன்றவர்களுக்கு
 பிறந்தது முதல் அங்கஹீனமானவர்களா
 தன்னுடைய தரித்திரம் தீர்ந்திட
 ஓடிச் சென்று கைகொடுத்து உதவிடு
 பிணியால் வாடுபவர்க்கு
 இரங்கிடு மனம் இரங்கிடு
 இலவச மருத்துவ உதவி
 கிடைக்கச் செய்திடு
 அவர்கள் தங்கள் வாயால்
 நன்றி என்று சொல்லும்
 அம்மஹாவாக்கியத்தை
 கண் மூடிக் கேட்டிடு
 அந்நெகிழ்வில்
 ஆண்டவணை உணர்ந்திடு
 ஆனந்த யோகம் பயின்றிடு.
 
 ஏழைகள் நாங்கள்
 
 
  
ஐ.பி.எல் முறைகேடுகல்லூரி பெயரில்
 மாணவர்களிடம் கொள்ளை
 இது மருத்துவத் துறையையும்
 விட்டு வைக்கவில்லை
 கோடி கோடியாய்
 பணம் ஒதுக்கி
 என்னென்னவோ திட்டம்
 போடுகிறார்கள்
 தெருக் கோடியைவிட
 வேறு என்னத்த கண்டோம்
 நாங்கள்
 நகரத்தின் கட்டமைப்பு
 நன்றாக இருந்தால் போதுமா
 கிராமத்தில் மனிதர்கள்
 வாழ வழிவகைகளை
 யார் செய்வது
 பெட்ரோல் விலையை
 காரணம் காட்டி
 காய்கறி விலை ஏறிப்போச்சுது
 காய்கறிகளை கண்ணால்
 பார்த்தே
 ஒரு வருஷமாச்சுது
 நீங்கள் தலைக்கு மேலே
 விமானத்தில் பறக்கின்றீர்கள்
 அதனால் எங்கள் தலையெழுத்தை
 நீங்கள் எழுத அனுமதிக்க முடியுமா
 நாங்கள்?
 
 தீர்க்கதரிசி
 
 
  
நீலவானம் வெண்மேகம்
 தென்றல் காற்று
 வானவில்
 மண்வாசனை
 எல்லோரும் அவரவர்
 உலகத்தில் பத்திரமாய்
 என் உலகம்
 என்னை கைவிட்டுவிட்டது
 பிதாவால் கைவிடப்பட்ட
 இயேசுவின் நிலையெனக்கு
 சிலுவை தயாராகிறது
 தனிமைச் சிறையை விடவும்
 சிலுவை அறைதல்
 ஒன்றும் கொடியது அல்ல
 விடுதலைக்கு ஏங்கியழும்
 மற்றுமொரு மனுஷகுமாரன் நான்
 பிரார்த்தனை ஏறெடுத்து
 தேவனின் காலடியில்
 சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி
 தனது இயலாமையை தெரிவித்து
 திரிசங்கு நிலையைச் சொல்லி
 அழுத நேரத்தில்
 பரிசாக கிடைத்தது
 பாதி வாழ்வு
 மீதி மரணம்
 வானை எதேச்சையாக
 நோக்கியபோது
 எனக்காக தன்னுயிரை
 களப்பலியாக
 தந்துகொண்டிருந்தார்
 கடவுள்.
 
 mathi2134@gmail.com
 
 *****************
 
 நாங்க கூட...
 
 - சு.திரிவேணி,கொடுமுடி -
 
 எங்க ஊரிலயும் ஆறு இருந்துச்சு.
 ஆத்துல குளிச்சா பாவம் போவுமாம்!
 யாரு பண்ணுன பாவமோ?
 ஆறே போயிடுச்சு!
 செத்துப் போன ஆத்தைப் பாக்க
 மனசெல்லாம் எரியுது.
 
 தண்ணியில்லாம வெடிச்சுப்போன
 நிலத்துல பயிரை நட்டு வெக்கலாம்.
 அடிக்கிற வெக்கையில அஞ்சாறடி
 மனுசங்களே பொசுங்கிப் போகையில
 மூணு கால் வேர்ல உசுரை வெச்சுருக்கற
 செடி எந்த மூலைக்கு?
 
 சொட்டுத் தண்ணியில்லாம சாகறோம்
 இல்லைனா சுனாமியால சாகறோம்
 சாகத்தான் நாங்க பொறந்திருப்பமோ??
 
 பொட்டுத் தண்ணி ஊத்தி
 ஒத்தப் பயிர வளக்க முடியாம
 செத்துப் பொழைக்கறோம்.
 கலர்கலரா சாயங்கலந்து
 பாட்டில்ல ஊத்திக் குடிக்க விக்கறாங்க!
 இவங்களுக்கு மட்டும் எங்கிருந்து தான்
 இவ்வளவு தண்ணி கிடைக்குது?
 
 மண்ணப் பத்திக் கவலையில்லாம...
 மரத்தப் பத்திக் கவலையில்லாம...
 மானத்தப் பத்தியும் கவலையில்லாம...
 சொரண கெட்டுப் போயி சீவன் செத்துப்
 பொணமாப் பொழைக்குறொம்.
 
 அக்ரி படிச்சவங்களே ஆபீசுக்குதான் ஓடறாங்க.
 கசங்காத சட்டை வேர்க்காத வேலைனு
 எங்க புள்ளைங்கள நாங்களே
 கழனிய உட்டுப் போக வெச்சோம்.
 ஆத்தா ரத்தத்த உறிஞ்சிக் குடிச்சு
 அவள அனாதையா தெருவுல விட்ட மாதிரி
 எங்க பூமிய நாங்களே கை வுட்டோம்.
 ஆத்தாவோட சாபம் தான்
 சுத்தியடிக்குது போல...
 
 என்னமோ போங்க...
 நாங்க கூட இந்த வருசம்
 பொங்கல் கொண்டாடுறோம்.
 பொங்கப் பானைலருந்து அதுல
 கட்டுற மஞ்சள் வரைக்கும்
 கடன் வாங்கிச் சந்தோசமா
 பொங்கல் வெக்கிறோம்.
 
 ஏன்னா...
 எங்க ஊர்ப் பொங்கல
 டி.வி காரங்க
 படம் புடிக்கப் போறாங்களாம்!!
 
 -
 kmdveni@gmail.com
 
 *********************************
 
 உயிர் பிழைத்திருப்பதற்காக....
 
 - சோ.சுப்புராஜ் -
 
 
  
வீட்டு வாசலுக்கே கொண்டு வந்துவியாபாரம் செய்யும் கூடைக்காரிகளிடம்
 விருப்பத்துடன் வாங்குங்கள்
 பேரம் பேசியேனும்
 விலை கொஞ்சம் அதிகமென்றாலும்......!
 
 கையேந்தும் மூன்றாம் பாலினத்திற்கு
 காசு போடுங்கள் மறுக்காமல்
 அவர்களின்
 உழைப்பை மறுதலித்த சமூகத்தின்
 அங்கம் தானே நாமெல்லாம்.....!
 
 இரயில் வண்டியின் இரைச்சலையும் மீறி
 கூவிக் கூவி விற்கும்
 கண்ணொளி இல்லாதவர்களிடம்
 கனிவுடன் ஏதாவது
 வாங்குங்கள் அவ்வப்போது........
 
 வழிபாட்டுத் தலங்களுக்குப் போனால்
 கடவுளுக்குக் காணிக்கை போடாவிட்டாலும்
 வாசலில் காத்திருக்கும்
 பிச்சைக் காரர்களுக்கு
 ஏதாவது கொடுக்க மறக்காதீர்கள்.....!
 
 சின்ன இரும்பு வளையத்துக்குள்
 உடலைக் குறுக்கி ஒடித்து வளைத்து
 சிரமப்பட்டு நுழைந்து
 வெளியேறும் சிறுமியும்
 கொட்டடித்து குட்டிக்கரணம் போட்டு
 வில்லாய் உடல் வளைத்தும்
 விளையாட்டுக்காட்டும் சிறுவனும்
 தட்டேந்தி வரும்போது
 தவறாமல் காசு போடுங்கள்.....!
 
 சின்னப் பிள்ளைகளின்
 இரயில் விளையாட்டைப் போல்
 ஒருவர் கொடுக்கை
 ஒருவர் பிடித்தபடி
 நெரிசலினூடே பாடியபடிக்
 கடந்து போகும் குருடர்களுக்கு
 கண்டிப்பாய் கொடுங்கள் ஏதாவது.....!
 
 இவர்களெல்லாம்
 உலக முதலாளிகளின் வரிசையில்
 முதலிடம் பிடித்துவிடப் போவதில்லை;
 இன்னும் கொஞ்ச நாள்
 உயிர்த்திருக்க அவர்களுக்கு
 உதவலாம் உங்கள் பணம்.....!
 
 engrsubburaj@yahoo.co.in
 
 *****************
 
 பிழைப்படிமங்கள்...
 
 - ராம்ப்ரசாத் சென்னை -
 
 
  
இரவுகள் நீண்டிருப்பதாய்ஒரு குறிப்பெழுதிவிடுகிறது மனம்...
 இரவுடன் பிரயாணப்பட
 தலைப்படுகையில்...
 
 இரவுகள் இதை எண்ணியெண்ணி
 மெளனமாய் சிரிக்கின்றன
 ஆழ்பிரபஞ்சம் போல...
 
 தெளிந்த நீரோடைக்கடியில்
 தெரியும் கூழாங்கற்களை ஒத்த
 காட்சிப்படிமங்கள் காட்சிப்பிழையாகவும்
 இருக்கலாமென்பதே உண்மை...
 
 ramprasath.ram@googlemail.com
 |