த.சரீஷ் (பாரீஸ்)
    
    என்ன இது என்ற 
    இதுவரை...
    பதில் கிடைக்கப்படாத 
    கேள்வியோடு
    வளமையான பயணம்
    தொடர்கிறது இன்றும்.
    
    தினமும் இப்படித்தான்
    நெரிசல் நிறைந்த நிலையில் 
    அமைதி கலைந்த பொழுதில்
    குழப்பமான மனநிலையில்தான்
    தெளிவில்லாத பயணம்
    என்றும் எனக்கு.
    
    வாழ்க்கைபற்றி
    யாருக்குத் தெரியும்...? 
    திடீரென்று இந்தக் கேள்வி 
    என் காதுகளை வந்தடைகிறது..??!!
    
    சனநெரிசல் நிறைந்த பயணத்தில்...
    யாருடனும் அல்லாது
    தனிமையில்....
    இடைவிடாமல் ஒரே கேள்வியை 
    கேட்டுக்கொண்டே...
    ஒரு ஆபிரிக்கபெண் 
    தொடருந்தில் எங்களோடு.
    
    நான் மனசுக்குள் 
    பதில் தேடிய கேள்வி...
    அவளுக்கு எப்படி புரிந்தது...?
    
    அவசர பயணப்பொழுதில்... 
    அனைவரது மௌனத்தின் மத்தியில்
    அவளின்....
    உரத்த குரல் தொடர்கிறது.
    
    அப்பொழுது...
    மாறுபட்ட பலரது முகங்களை 
    அவதானித்தபின்பு
    என்னால் உணரமுடிந்தது.
    அவர்கள் 
    நினைத்திருப்பார்கள் போலும்
    அவள்... 
    பைத்தியக்காரி என்று...!
    
    ஆனால் அவளோ... 
    மிகத்தெளிவாகத்தான் இருக்கிறாள்
    இல்லையேல்...
    எப்படி அவளால் சொல்லமுடிந்திருக்கும்
    எதிர்காலம் எப்படியிருக்கும் என
    எவராலும் சொல்லமுடியாது என்று..!!! 
    
    த.சரீஷ்
    10.03.2006(பாரீஸ்)
    
    நாளை உன் வருகைக்காக...
த.சரீஷ் (பாரீஸ்)
நீழும் இரவுகளின் 
    ஒவ்வொரு 
    வினாடியின் முடிவிலும்
    உன் பெயர் ஒலிக்கும்
    
    காணும் கனவுகளின்
    ஒவ்வொரு 
    காட்சியின் நடுவிலும்
    உன் முகம் தெறிக்கும்
    
    விரையும் காலங்களின்
    ஒவ்வொரு 
    பொழுதின் இடையிலும்
    உன் நினைவுகள் தொடரும்
    
    தொலைவாகிப்போனபின்பு
    நீழும் பிரிவுகளாய்
    இன்னும் நீ...!
    
    மறுபடி மறுபடி
    உயிர்த்தெழுந்து... 
    இன்றும்... 
    நான் என் காதலுடன்
    நாளை
    உன் வருகைக்காக....
    
    த.சரீஷ்
    24.04.2006(பாரீஸ்)



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991


