கண்ணீர் அஞ்சலி ...!
- மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) -

              எங்கள் தலைகளுக்கு 
              முட்கிரீடங்களாலேயே 
              தினம் முடி சுட்டப்படுகிறது
              
              கண்ணீர்த் துளிகள் கொண்டு 
              ஆடைகள் நெய்வதே 
              அதிஸ்டம் 
              என்கிறது உலகம்.
              
              வரலாறு 
              எச்சங்களாகவும் 
              மீதி மிச்சங்களாகவும் தந்ததெல்லாம் 
              கல்லறைகளும் 
              காய்ந்து போன குருதிக் 
              கறைகளும் தானே ...!
              
              படைகளிலே 
              சிறுவர்களை சேர்க்காதே என்றவர்கள். 
              தானே பாடைகளிலே 
              அவர்களை தூக்கி இருக்கிறார்கள்....
              
              எங்கள் 
              பிள்ளைகளை
              தீயிலிட்டு தாலாட்டுச் சொல்லவும் 
              கள்ளிப்பாலை 
              ஊட்டிக் கொல்லவும் 
              கம்பளம் விரிக்கிறது உலகம். 
              
              தண்ணீர் 
              தடைப்பட்டதென்று போர்தொடுத்தவர்கள் 
              தோண்டித் திறந்ததென்னவோ 
              தமிழரின் 
              கண்ணீர் கடலைத்தானே .
              
              சுனாமி கூட 
              ஒரு முறை தானே விழுங்கியது எமை 
              இவர்களோ 
              எமை அன்றாடம் விழுங்குகிறார்களே.
              
              எனது 
              எழுது கருவி மட்டும் 
              துப்பாக்கியாக மாறியிருக்குமானால் 
              உனது கழுத்தை குறிபார்ப்பதை விட்டு 
              தாள்களைத் 
              தடவிக்கொண்டிருக்காது ...!
              
              இதற்க்காக 
              யாரும் கடை அடைப்பை 
              செய்ய வேண்டாம்
              தோழர்களே 
              கடை அடைப்பை செய்ய வேண்டாம்
              
              தடை உடைத்தொரு
              படை எடுப்பைச் செய்யுங்கள்;
              அது ஒன்று தானே 
              இனி 
              நம்மைக் காக்கும் ...
              
              maduvilan@hotmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




