- பட்டுக்கோட்டை தமிழ்மதி -

              O
              தமிழ்தாய் வாழ்த்துப் பாடி
              நாட்டுப்பண் பாடும்
              நாட்கள்...நாட்கள்...
              
              O
              மூவண்ணக் கொடி
              உச்சிபோய் அவிழ
              உதிரும் பூக்கள்...
              
              O
              கொடிக் கம்பத்தின் கீழே
              கோடுகிழித்து வைத்த புள்ளிகளாய்
              பள்ளிப்பிள்ளைகள்...
              ஆடாமல் அசையாமல்
              நிற்கும் முல்லைகள்...
              
              O
              அண்ணாந்துப் பார்க்க
              ஆகாயமாய் கொடி
              அது
              இதயத்தின் மடி...
              
              O
              அது அன்றைய
              எங்கள் கிராமத்துப் பள்ளியின்
              இனிப்பு சுதந்திரதினம்.
              அதில் இப்பவும்
              நினைப்பாய் இருக்கிறது மனம்.
              
              O
              எங்கள் தாயகமே...
              
              O
              முகம் எங்கோ
              முகாமிட்டிருக்கும் போதும்
              எங்கள்
              அகம் உன்னிடம்தான்
              அகப்பட்டிருக்கிறது.
              
              O
              திரைக் கடலோடி திரவியம்
              தேட வந்தாலும்
              தேட கிடைக்காத
              திரவியம் உன்னிடம்தான்
              
              O
              நாங்கள்
              வளர்ந்த நாடு நீ.
              நாங்கள்
              வளரும் நாடு நீ.
              
              O
              கணக்குப் பார்க்க
              பூச்சியத்தை கண்டுபிடித்த நாடு நீ
              பூச்சியமாய் போகாமல்
              உன்
              வளர்ச்சி விகிதம்.
              
              O
              எங்கள் தாயகமே
              
              O
              உன்
              அடிமை விலங்குகள் உனக்கு
              அழகென
              அணியவைத்து பார்த்து
              ஆனந்த கூத்தாடியது ஒரு கூட்டம்
              அன்று.
              O
              உன்
              விலங்கொடித்து
              விடுதலையானாய் நீ.
              
              O
              உன்
              சுதந்திரம்
              சுத்த தங்கமா என
              உரசிப்பார்க்கப் போய்
              உன்னில்
              தீக்குச்சிகளாய்
              தீய்கிற தலைகள் சில
              இன்று.
              
              O
              பூக்கள் முள்ளோடு
              பூப்பதுவும் சரி என்று
              அரவணைக்கும் அன்னை உனக்கு
              ஆயுதங்களின் காவல்.
              
              O
              என்ன செய்ய
              உன்
              சுதந்திர நாளில்
              நீ
              ஊரடங்கு உத்தரவில்.
              
              O
              எங்கள் தாயகமே...
              
              O
              இரத்ததானம் செய்கிறோம்
              அது
              கயவனை காப்பாற்றி
              களவாடவைக்குமென எண்ணுவதில்லை.
              
              O
              கண்ணைத் தானம் செய்கிறோம்
              அது
              கண்மூடித்தனமானவனை
              கட்டவிழ்த்து விடுமென எண்ணுவதில்லை.
              
              O
              ஆனால்
              இப்போது எண்ணுகிறோம்
              நீ
              உன் ரேடார் கண்களை
              இன்னொரு நாட்டுக்கு
              தானம் செய்ததினால்.
              
              O
              ஆம்.
              மண்ணை பண்படுத்துவார்கள் எனச்சொல்லி
              மனிதர்களை வெட்டிப் புதைப்பவர்களுக்கு
              நீ
              மண்வெட்டி கொடுக்காதே.
              
              O
              இன்று
              உன் பள்ளிப்பிள்ளைகள்
              எழுந்து நின்று
              தேசியகீதம் பாடும்போது
              கரைத்தாண்டி
              கத்தும்குரல் கேட்கிறது...
              
              O
              உன்
              ரேடார் கண்கள் பார்த்துக் கொண்டிருக்க
              விமான குண்டுவீச்சில்
              வீழ்ந்துக்கிடக்கிறார்கள்...
              அங்கே
              பள்ளிப் பிள்ளைகள்.
              சின்னஞ் சிறார்கள்.
              
              O
              இன்று
              தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி
              நாட்டுப்பண் பாடுகையில்
              நிற்காமல்
              நிலைக்கொள்ளாமல் கால்கள்
              அலைகின்றன எங்கோ...
              
              O
              ஓ எங்கள் தாயே
              எழுந்து நிற்கவை
              அதோ
              விழுந்து கிடக்கும்
              எங்கள் கால்களை.
              
              பட்டுக்கோட்டை தமிழ்மதி
              tamilmathi@tamilmathi.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




