| பன்னாட்டு கருத்தரங்கு: இந்திய தேர்தல்முறை 
  சீர்திருத்த பயணத்தை நோக்கி....  - புதியமாதவி, மும்பை - 
 இடம்: வங்கதேசத்து தலைநகர் டக்காவின் ஹோப் பவுண்டேசன் கருத்தரங்க மையம்.
 நாள்: 2008, அக்டோபர் 7 - 10 வரை
 நிகழ்ச்சி ஏற்பாடு: தும்குர் கர்நாடகா, இந்தியாவில் "REDS" -( Rural education 
  for development society)
 திரு.எம்.சி.ராஜ் & ஜோதிராஜ்.
 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: அர்ச்சனா
 பங்குபெற்றவர்கள்: ஜெர்மன். தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் இவர்களுடன் 
  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும்
 பிரதிநிதிகள்.
 
 
  முதல் நாள் நிகழ்ச்சியை பாகிஸ்தானிலிருந்த வந்திருந்த தோழமை திருமிகு கலாவந்தி 
  ராஜா விளக்கேற்றி துவக்கிவைத்தார். எம்.சி.ராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் 
  எழுதியிருக்கும் "Dalitocracy" நூலை தாய்லாந்திலிருந்து வந்திருந்த முகமது 
  அப்டுஸ் சபுர் வெளியிட முதல் பிரதியை பாகிஸ்தானிலிருந்த வந்திருந்த கலாவந்தி 
  பெற்றுக் கொண்டார். சிறப்புரை ஆற்றிய வால்டர் ஹான் (Mr.vaaldar Hahn) தேர்தல் முறை 
  சீர்திருத்தம் குறித்து தெளிவான கருத்தை முன்வைத்தார். 
 தேர்தல் சீர்திருத்தம் தேவையில்லை - என்பார் சிலர். இது ஒரு பகற்கனவு - என்று 
  சிரிப்பார் சிலர். இது நல்ல திட்டம் தான் ..ஆனால்
  மாற்றத்திற்கு நீண்ட காலம் தேவைப்படும் - என்று எண்ணக்கூடும் சிலர்.
 
 இப்படி இத்திட்டம் குறித்து ஏழும்-எழ இருக்கும் பல்வேறு கேள்விகளின் ஊடாக பயணம் 
  செய்து தன் கருத்தை மிகவும் ஆணித்தரமாக 
  முன்வைத்தார் வால்டர். பாபாசாகிப் அம்பேத்கர் 1922ல் ஜெர்மனில் 6 மாதங்கள் 
  தங்கியிருக்கிறார்.எனினும் ஜெர்மனியின் தேரதல்
  முறையைப் பற்றி எவ்விதமான அவர் பதிவுகளுமில்லை. இங்கிலாந்தில் நிலவும் தேர்தல் 
  முறையை அப்படியே விடுதலைப் பெற்ற
  இந்தியாவும் ஆங்கிலேய ஆட்சியின் எச்சமாய் தன்னுள் பதித்துக் கொண்டதும் அத்தேர்தல் 
  முறையால் ஒடுக்கப்பட்ட மக்களும் 
  சிறுபான்மையினரும் அரசியல் அதிகாரத்தை இழந்து நிற்கும் அவலமும் ஏற்பட்டது என்பதை 
  நோக்கியே மூன்று நாட்கள் கருத்தரங்கும் 
  நகர்ந்தது.
 
 முனைவர் பேராசிரியர் அஷிட் டத்தா (Hannover University, Germany) அவர்கள் 
  ஜெர்மனியின் தேர்தல் முறையை விளக்கமாக புள்ளி 
  விவரங்களுடன் முன்வைத்தார். அரசியல் கட்சிகள் தங்களுக்கான நிதியில் 50% 
  அரசிடமிருந்து பெறுகின்றன என்றும் சுயேச்சே
  வேட்பாளர்கள் தேரதலில் நிற்க ஜெர்மன் தேர்தல் முறை அனுமதித்தாலும் இன்றுவரை- 
  கிட்டத்தட்ட 20, 30 வருடங்களில் அப்படி யாரும் 
  சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்திற்கு வரவில்லை என்று சில ஆச்சரியமூட்டும் 
  செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
 
 
  
  முனைவர் பேராசிரியர் வோல்கர் வோன் பிரிட்விட்ஷ் (Dr.Volkwer Von Prittwitz, 
  Berlin University, Germany) ஜெர்மனில் நிலவும் தேர்தல் 
  முறையுடன் இந்திய தேர்தல் முறையை ஒப்பிட்டு நடைமுறையில் இருக்கும் சாதக பாதகங்களை 
  அட்டவணையிட்டு விளக்கினார்,
  இந்தியாவின் ஓட்டு வங்கிகளாக இருக்கும் மக்களின் 50% க்கு மேற்பட்டோர் கல்வி 
  அறிவில்லாதவர்கள் தான் எனினும் இந்த ஓட்டு 
  முறையப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பொதுஅறிவு இல்லாதவர்கள் இல்லை. எனக்கு 
  அவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்று தன் கருத்தை எடுத்துரைத்தார்.
 
 முனைவர் சாய்நாத் செளத்திரி இந்திய தேர்தல் முறையில் எம்மாதிரியான மாற்றங்களைச் 
  செய்யமுடியும் என்று மிக நீண்ட தன் 
  ஆய்வுரையை ,முன்வைத்தார். இந்திய தேர்தல் முறையுடன் ஐரோப்பிய அமெரிக்க ஆசிய 
  நாடுகளின் தேர்தல் முறைகளில் தேர்ந்த 
  பயிற்சியுடைய சாய்நாத் அவர்களின் ஆய்வுகளும் அனுபவமும் கருத்தரங்கின் எதிர்காலத் 
  திட்ட்டங்களுக்குப் பெரிதும் துணிநிற்கும் என்று   உறுதி சொல்லமுடியும்.
 
 தாய்லாந்தின் முகமது சபுர் தாய்லாந்து நாட்டின் முடியாட்சி வரலாற்றையும் தேர்தல் 
  முறைகளையும் விளக்கியதுடன் வங்கதேசத்தவரான 
  அவர் வங்கதேசத்து தேர்தல் நிலவரம், எதிர்காலம் குறித்தும் தன் கருத்துகளை 
  முன்வைத்தார்,. சிறுபான்மையினர் அரசியம் 
  அதிகாரப்பகிர்வு இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் 
  ஏற்படுத்தியிருக்கும் பிரச்சனைகளைக் குறித்தும் பேசினார்,.
 
 பாகிஸ்தானில் நிலவும் இந்து -முஸ்லீம் பெருந்தீயில் அடையாளமின்றி போகும் தலித்திய 
  குரலை முன்வைத்தார் பாகிஸ்தானிலிருந்த 
  வந்திருந்த தோழி கலாவந்தி ராஜா. பாகிஸ்தானில் தலித்துகள் 2.7 மில்லியன் என்றும் 
  இந்து சிறுபான்மையினரில் 75% தலித்துகள் 
  என்றும் இருப்பதைச் சுட்டிக்காட்டிய கலாவந்தி சிறுபான்மையினர் என்ற தளத்தில் இட 
  ஒதுக்கீடு பெறும் இந்துக்கள் தலித்துகளுக்கான 
  இடத்தைக் கொடுப்பதில்ல்லை என்ற உண்மை நிலவரத்தையும் சொன்னார். இன்றுவரை ஒரு தலித் 
  பெண் கூட பாகிஸ்தான் 
  பாராளுமன்றத்திற்குள் உறுப்பினராக நுழையவில்லை என்ற உண்மையையும் போட்டுடைத்தார். 
  ஜினனா பாகிஸ்தான் சட்டத்துறை
  அமைச்சராக நியமித்த ஜோகேந்தர் நாத் மண்டல் ஒரு தலித் என்பதையும் நினைவு கூர்ந்து 
  அதன் பின் வந்த அரசுகளில் காணாமல் 
  போய்விட்ட தலித்துகளின் இடத்தையும் சுட்டிக்காட்டினார்.
 
 இந்திய மாநிலப் பிரதிநிதிகளும் கட்டுரைவாசித்தனர். பலர் கருத்தரங்கில் பல்வேறு 
  கேள்விகளுடன் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
 
 இந்திய தேர்தல் களத்தில் ஒட்டுமொத்தமாக 30% மேல் வாக்குகள் பெற்ற காங்கிரசு கட்சி 
  எதிர்க்கட்சியானதும் 28% வாக்குகளுக்கும் 
  குறைவாகவே வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்ததும் உலகின் மிகப்பெரிய 
  ஜனநாயக நாடு இந்தியா என்ற 
  இந்தியாவின் சர்வதேச ஜனநாயக முகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது!
 
 அதுமட்டுமல்ல.... பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிடும் ஒரு தொகுதியில் மொத்த 
  ஓட்டுகள் - 100,000 என்றால் 
  வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் : 15,000.
  மற்ற வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் முறையே 14000, 13000, 12500, 11000, 10500, 
  10000, 8500, 5500
 
 அப்படியானால் மற்றவர்களுக்கு ஓட்டுப்போட்ட 85000 வாக்காளர்களின் கருத்து முடிவை 
  இந்திய தேர்தல் முறை உதாசீனப்படுத்துகிறது!
  மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று உரக்க குரல் கொடுக்கும் இந்தியாவின் 
  மக்களாட்சி உண்மையான மக்கள் ஆட்சிதானா???
 
 இந்திய மக்களாட்சி ஒரு சில முதலாளிகளின் கைக்குள் அடங்கும் பாவையாகிவிட்டதையும் 
  இந்திய தேர்தலும் விதிமுறைகளும் 
  அவைகளுக்கு சாதகமாக இருப்பதையும் இக்கருத்தரங்கு மிகத்தெளிவாக முன்வைத்தது.
 
 இந்திய தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதில் பங்கு பெற்ற அனைவருக்கும் 
  கருத்து வேறுபாடில்லை. எனினும், எப்படி? எந்த 
  முறையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வது?எம்மாதிரியான களப்பணிகள் தேவைப்படும், 
  சிறுபான்மையினரின் கூட்டமைப்பு 
  சாத்தியமா? சாத்தியம் என்றால் அதற்கான திட்ட வரைவுகள் என்ன?
 
 இப்படி எண்ணிலடங்கா கேள்விகள் எழத்தான் செய்கின்றன. 10 ஆண்டுகள் என்று ஒரு 
  காலவரையறையை முன்வைத்து எதிர்கால
  திட்டங்களை முன்வைத்த அர்ச்சனா இத்துடன் தொடர்புடைய தேவையான பிற திட்டங்களையும் 
  ஒருங்கிணைப்பார் என்று நம்புகிறேன்.
  மீண்டும் மீண்டும் இத்தேர்தல் சீர்திருத்தம் தலித்துகளின் அரசியல் 
  அதிகாரப்பகிர்வுக்காக மட்டுமல்ல என்று ஒலித்தக் குரல் ஒரு 
  நெருடலை ஏற்படுத்தத்தான் செய்தது. என் போன்றவர்களுக்கு.. ஏனேனில் மீண்டும் 
  மீண்டும் நாம் ஏமாறக்கூடாது என்பதில் கவனமாக 
  இருக்க வேண்டும். திரு எம்.சி ராஜ் & ஜோதிராஜ் இருவரின் தலித்திய சிந்தனைகளும் 
  எழுத்தும் அந்த இணையர் இக்கருத்தில் கவனமாக 
  இருப்பார்கள் என்ற நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் நான் 
  பதிவு செய்வதில் பெருமை அடைகிறேன்.
 
 இந்திய மக்களாட்சியில் எங்கள் முகங்களுடன் எங்கள் குரல்களும் ஒலிக்கும் காலம் 
  வெகுதொலைவில் இல்லை.
 
 puthiyamaadhavi@hotmail.com
 |