| கருவிலே 
  திருவுடையார்!
 - பராசக்தி சுந்தரலிங்கம் (ஆஸ்திரேலியா) -
 
 மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!
 மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!
 
 
  என, 
  சிலப்பதிகாரம் மழையைப் போற்றுகிறது. மழை வேண்டி இந்திரனுக்கு விழா எடுப்பது பழைய 
  மரபு. இந்த இந்திரவிழா பற்றி முத்தமிழ்க் காவியமான சிலப்பதிகாரம் மூலமும் 
  அறிகிறோம். அரங்கேற்றத்தில் அகக்கூத்துகளை ஆடிய மாதவி இந்திரவிழாவில் 
  பதினொருவகைப் புறக்கூத்துகளை ஆடுகிறாள். ஆனால், தற்காலத்தில் ஈழத்திலும் 
  வல்வையூர் இந்திரவிழாக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது என்பது எம்மில் பலருக்குப் 
  புதிய செய்தியாகும். காவிரிப்பூம் பட்டினம் நெய்தல் நிலம், வாணிகத்துடன் 
  கலைகளையும் வளர்த்தது. நெய்தல் நிலமான வல்வையும் வாணிகத்துடன் ஆடல், பாடல், 
  நாடகக் கலைகளையும் வளர்த்தது என்று, வல்வை மனோகரன் தம்பதியினரின் பிள்ளைகளான 
  கண்ணன், கீதா ஆகியோரின் அரங்கேற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த 
  அண்ணாவியார் இளைய பத்மநாதன் பெருமைப்பட்டுக் கொண்டார். 
 ஒரு கலைப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கண்ணனும் கீதாவும். ஐந்து தலைமுறையாக 
  அவர்களின் தாய் தந்தையர் வழியில் கூத்தும், நாடகமும், நடனமும் 
  வளர்ந்திருக்கின்றன. இத்தகையதோர் பின்புலத்திலிருந்து வந்த இக்குழந்தைகள் 
  தங்களின் குருவான திருமதி உஷா கருணாகரனின் சிறப்பான வழிகாட்டலில் அரங்கம் நிறைந்த 
  ரசிகர் முன்னிலையில்  27/10/2007 
  அன்று 'Hills Centre ,Sydney, Australia'வில் தமது அரங்கேற்றத்தை 
  நிகழ்த்தி எல்லோரையும்
  மகிழ்வித்துவிட்டார்கள்.
 
    
  அற்புதமான அரங்கேற்றம் - அந்த சஹிருதய உணர்வை 
  வார்த்தைகளில் வடிக்கமுடியாது. ஆனாலும், அந்த அழகியலை எல்லோருடனும் பகிர்ந்து 
  கொள்வதும் அவசியம். அண்ணனும் தங்கையும் மூன்று மணிநேரம் ஆடியது கண்ணுக்கு நல்ல 
  விருந்து. ஆடலோடு இணைந்த இசை காதுக்கு நல்ல விருந்து. முழுமையில் மனம் நிறைந்தது.
 நாதஸ்வர, தவில் இசையுடன் கண்ணனும் கீதாவும் மல்லாரியை ஆரம்பித்ததுமே ஆட்டம் 
  களைகட்டத் தொடங்கிவிட்டது. வினைகள் தீர்க்கும் விக்னேஸ்வரனைத் துதித்து 
  கிஷோர்குமார் பாடியதும், கண்ணனும் கீதாவும் இறைவன் திருமேனியைத் தோளிலே சுமந்து 
  வந்ததும், பக்திப் பரவசத்துடன் தீபாராதனை செய்து துதித்ததும், ஆடியதும், 
  கோயிலிலிருந்து அரங்கிற்கு வந்த நடனம், திரும்பவும் கோயிலுக்குப் போய்விட்டதோ 
  என்ற பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது. பொருத்தமான மேடையமைப்பும், விக்கின 
  விநாயகரும், திருவாசியும், பக்திப்பரவசத்திற்கான சூழலைக் கண்முன் கொண்டுவந்தன.
 
 ஜதீஸ்வரத்தில் தங்கள் நிருத்தத் திறமையைக் காட்டியவர்கள், தொடர்ந்து வந்த 
  வர்ணத்தில் நிருத்த, நிருத்திய, நாட்டியக் கூறுகளைச் சிறப்பாகக் 
  காண்பித்துவிட்டார்கள். ஜகம் புகழும் இராமனின் கதையான, ~தசரத ராமா ரகு ராமா| என்ற 
  வர்ணம், இருவர் ஆடலுக்குப் பொருத்தமாக அமைந்திருந்தது. அதனை ஒரு ~நாட்டிய நாடகம்| 
  போல ஆசிரியர் அமைத்திருந்தது மேலும் சிறப்பு. கண்ணனும் கீதாவும் மாறி மாறி கோதண்ட 
  ராமனாகவும், சீதா பிராட்டியாகவும், தசமுக ராவணனாகவும், தாடகையாகவும், 
  மாயமானாகவும், லக்ஷ்மணனாகவும், ஹனுமனாகவும் ஆடிய முறையில் முழு இராமாயணமும் 
  கண்முன் விரிந்தது. விறுவிறுப்பான ஜதிக் கோர்வைகளிலும், நடன அமைப்பாண்மையிலும் 
  குருவின் திறமை தெரிந்தது. இராமனின் கம்பீரம், சீதையின் பெண்மை, மற்றும் வீரம், 
  ரௌத்திரம், கலக்கம், போன்ற பாவங்களை கண்ணனும் கீதாவும் தங்களின் ஆடலில் அப்படியே 
  கொண்டுவந்துவிட்டார்கள். பாடலும் பக்கவாத்திய இசையும் வர்ணத்திற்கு மேலும் 
  மெருகூட்டிவிட்டன.
 
    
 தொடர்ந்து வந்த பதங்களிலே கண்ணன், 
  கீதாவின் அபிநயத் திறமையைப் பார்த்து இரசிக்கமுடிந்தது. தசாவதாரம் மனதிலே 
  பதியக்கூடிய ஒரு நடனம். 
 பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மேலே
 பள்ளிகொண்டான் ரங்கநாதன்
 
 என்ற ராகமாலிகைப் பதத்தைத் தொடங்க முன்,
 
 கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே
 உத்திஷ்ட நரஷார்த்தூல கர்த்தவ்யம் தைவம் ஆத்திநகம்
 
 கௌசல்யாவின் புதல்வனே காலைப் பொழுதாகிவிட்டது, புருஷோத்தமா எழுந்திரு, தெய்வீக 
  நித்திய கடமையைத் தொடங்கு (உரை) என்று, ஸ்ரீரங்கநாதரைத் துயிலெழுப்பும் 
  சுப்ரபாதம் மிகவும் அற்புதமான ஆரம்பம். அவ்வேளை கண்ணனும் கீதாவும், 
  ஸ்ரீரங்கநாதராகவும் பிராட்டியாராகவும் காட்சியளித்தது, அந்த ஸ்ரீரங்கத்தையே 
  கண்முன் கொண்டுவந்துவிட்டது. இங்கேயும் இருவருமாகச் சேர்ந்தாடியதால், 
  தொய்வில்லாமல் காட்சிகள்
 மாறிமாறி வந்ததும், பாத்திரங்கள் மாறியதும், மிகவும் அழகாக 
  அமைக்கப்பட்டிருந்தமையைக் குறிப்பிடவேண்டும். நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், 
  கீதோபதேசம், போன்றவை குறிப்பிடக்கூடிய விதமாக அமைந்திருந்தன. வர்ணத்திலும் 
  தொடர்ந்து வந்த பதத்திலும், கோதண்ட ராமனையும் தசமுக ராவணனையும் மீண்டும் மீண்டும் 
  ஒரேமாதிரியான அசைவில் பார்த்தபோது சற்றே நெருடலாக இருந்தது என்பதைக் கூறத்தான் 
  வேண்டும்.
 
 கண்ணன், கீதாவின் தனித்துவம், ஆளுமை - கண்ணனின் கம்பீரம், கீதாவின் நளினம் - 
  அவர்களின் தனி ஆடலில் மிளிர்ந்தது. ~சம்போ போசம்போ சிவசம்போ| பாடலுக்கு கண்ணன் 
  முழங்காலில் சழன்று சுழன்று ஆடிமுடித்ததில் பயிற்சி தெரிந்தது. ~வருகலாமோ ஐயா| 
  என்று நந்தனார் தன் குலப்பிறப்பை எண்ணி தில்லை நடராஜரை நினைந்து ஏங்குவதும், 
  ஒடுங்குவதும், பக்தியையும், கலக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் அங்கும் 
  இங்குமாக ஓடி ஓடி இறைவனைத் தேடுவதும், திருக்கோயிலுக்குள் செல்லக் கால் 
  தயங்குவதும் - அபாரமான ஆடலும் அபிநயமும் - கண்ணன் நந்தனாகவே மாறிவிட்டார்.
 
 கீதாவின் தனி ஆடலின் தன்மையை வார்த்தைகளில் அடக்கமுடியாது. அவருடைய நளினம், 
  பெண்மைக்கே உரிய மென்மை, முகத்தில் கொப்பளித்த உணர்ச்சி, கண்களின் துறுதுறுப்பு, 
  கால்களின் வேகம், சுழன்றதிலும், திரும்பியதிலும் இருந்த லாவகம், கம்பீரம், 
  நவரசங்களையும் மாறிமாறிக் காட்டிய விதம், அவர் காட்டிய பாவங்களில் ஏதாவது 
  தப்பிப்போய்விடுமோ என்ற ஆவலில் அவருடைய நடனத்தில் இருந்து கண்களை 
  அகற்றமுடியவில்லை.
 குறும்புக்காரக் கண்ணனாகவும், கண்டித நாயகியாகவும் அவர் மாறிவிட்டார். சில 
  இடங்களில் நடிப்பில் லோகதர்மி மிகையாகத் தோன்றினாலும் ஆடலின் அழகு அதனை 
  மேவிவிட்டது. நடிப்பும், நடனமும்; அவருடைய ஊனிலும், உடலிலும், உயிரிலும் 
  ஊறியிருக்கிறது. நல்லதொரு நர்த்தகி பிறந்திருக்கிறார்.
 
  
   பிருந்தாவனி 
  ராகத்தில அழகியதொரு தில்லானா தொடர்ந்தது. மிருதங்கம், தவில் வாத்தியங்களுக்கு 
  அமைந்த ஆடல், அரங்கேற்றத்தின் முடிவாகமட்டும் அல்ல முடியாகவும் அமைந்தது. நிறைவாக 
  எங்கும் நிறைந்த சக்தியாக விளங்கும் அந்தப் பரம்பொருளை துதித்து கண்ணன் ஆட, கீதா 
  அம்மனாக அபிநயிக்க, வல்வையூர் முத்துமாரி அம்மன் மீது பாடப் பெற்ற அழகிய துதி 
  மிகவும் பொருத்தமான மங்களம். உஷா கருணாகரனின் கம்பீரமான நட்டுவாங்கமும், பவானி கிஷோர் குமாரின் பாவபூர்வமான 
  இசையும், யாழ்ப்பாணத்திலே புகழ்பெற்று விளங்கிய மிருதங்க வித்துவான் ஏ. எஸ். 
  ராமநாதனின் மகன் கார்திகேயனின் மிருதங்க இசையும், நடனத்திற்கு உயிரூட்டின. 
  தேவராஜனின் குழலிசை, மாம்பலம் அருளானந்தத்தின் தவில், துர்க்கா பிரசாத்தின் 
  நாதஸ்வர இசை, வரலக்ஷ்மியின் வீணையிசை ஆகியன நடனத்தை மேலும் உயர்த்திவிட்டன.
 
 பிரதம விருந்தினராக வந்திருந்த அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்களின் சிறப்புரை 
  இந்நடன நிகழ்வுக்கு மகுடம் போல் அமைந்து விட்டது. ~இங்கிருந்து எங்கே| என்ற 
  தலைப்பில் நடனம் பற்றிய தேடுதலை கலைஞர்கள், இரசிகர்கள் நிறைந்த சபையில் 
  சிந்தனையைத் தூண்டும் விதமாக எழுப்பியது பொருத்தமாகத் தெரிந்தது. ~அரங்கேற்றம்| 
  ஒரு மார்க்கம், குரு சிஷ்ய பரம்பரையில் அது வருகிறது. அது தொடரட்டும், ஆனால்
 அரங்கேற்றத்தின் பின் என்ன செய்யப்போகின்றோம் என்று நடனமாடுபவர்கள் தம்மைத் தாமே 
  கேட்கவேண்டிய வேளை வந்துவிட்டது என்பதை, தன்னைத்தானே கேட்பது போலக் கேட்டார்.
 
 வெறுமனே ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் ஆடாமல், கொஞ்சம் ~அகத்தை| விட்டு வெளியே 
  வந்த ~புறத்தையும்| ஆடுங்கள், ~புதிய புறம்| படையுங்கள் என்று வேண்டுகோள் 
  விடுத்தார். தமிழ் மக்களின் சொத்து பரதம். சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 
  கூறுவதைப் பாருங்கள் - அதிலே வரும் இசை, நடன இலக்கணத்தை ஆராயும் பொழுது, 
  பரதமுனியும், நாட்டிய சாஸ்திரமும் பரதக் கலையின் தோற்றுவாயல்ல என்று துணிந்து 
  கூறமுடியும் என்றார். நாங்கள் எங்களை மீள் பரிசோதனை செய்யவேண்டிய ஒரு 
  காலகட்டத்தில் இருக்கிறோம், எங்கள் வேர்களைத் தேடிச்செல்ல வேண்டும் என்று 
  வேண்டிக்கொண்டார் (இவருடைய ~இங்கிருந்து எங்கே| என்ற சிறப்புரையை கீழே 
  தருகிறோம்).
 
 கண்ணன், கீதாவின் வளர்ச்சியைக் கடந்த எட்டு வருடங்களாகத் தாம் பார்த்து 
  வருவதாகவும், அந்தக் கலைக் குடும்பத்தில் பூத்த இரு மலர்களும் நறுமணம் பரப்ப 
  வாழ்த்திய அதேவேளை, தந்தையாரான திரு மனோகரன் அவர்களின் நீண்டகாலத் தவம்தான் இந்த 
  அரங்கேற்ற நிறைவு என்று நெகிழ்வுடன் கூறியது எம்மையும் தொட்டது. ~கனவு மெய்ப்பட 
  வேண்டும்| என்ற அந்தத் தந்தையின் வேணவாவை நிறைவு செய்த கண்ணனும் கீதாவும் 
  ~கருவிலே திருவுடையார்|.
 
 parasundha@gmail.com
 
  இங்கிருந்து எங்கே?
  
 - இளைய பத்மநாதன் -
 
 
  ~பரதநாட்டியம|; 
  என்று பெயர் சூட்டப் பெற்ற இந்த செவ்வியல் ஆடலின் நீண்டகால இரசிகர்களில் நானும் 
  ஒருவன். தமிழகத்தில் இருந்த பத்தாண்டுகளில் மிகத் தரமான ஆடல்வல்லாரின் ஆடல்களை, 
  அவர்களின் உன்னதமான காலப்பகுதிகளில் பார்க்கும் பேறு கிடைத்தது. அப்போதெல்லாம் 
  இரு கேள்விகள் என்னுள்ளே உறுத்தும். அந்தக் கேள்விகளை இத்தருணத்தில் கேட்பது 
  சற்று இசகுபிசகாக இருக்குமோ, என்ற மனக் கூச்சம் ஏற்படுகிறது. ஆனால், இதுவே நல்ல 
  தருணம் என்ற ஒரு மன உந்துதலும் உண்டு. ஆகவே, இந்தக் கேள்விகளை நான் வேறு 
  யாரிடமும் கேட்காமல், ஆடலாசிரியர்கள், கலைஞர்கள், இரசிகப் பெருமக்கள் 
  முன்னிலையில், என்னிடமே உரக்கக் கேட்கிறேன்;. 
 முதல் கேள்வி: ஏன்? தமிழர்களாகிய நாங்கள் ~பரதநாட்டியம்| என்று சொல்லப்படுகின்ற 
  இந்த ஆடலை ஏன் ஆடவேண்டும்? ஏன் என்றால், இதில் ஆடப்படும் ஆடல் தமிழர்களுடையது. 
  பெயர்தான் சற்று மாறிவிட்டது. இந்தப் பெயர் மாற்றம் எல்லாத் துறைகளிலும் 
  நடந்தேறியுள்ளது. பெயர் மாற்றத்திற்கூடாக உரிமைச் சாசனத்தையும் மாற்றி, 
  வரலாற்றையே மாற்றிவிட்டார்கள். இன்று தெருக்களின் பெயர்களையும், ஊர்களின் 
  பெயர்களையும் மாற்றி, புதிய கற்பனை வரலாறுகளைப் படைத்து, பேரின ஆக்கிரமிப்பு 
  செய்வது போல, அன்றும் நடந்துவிட்டது. ஆடலரங்கிலும் நடந்துவிட்டது. அது நீண்ட 
  வரலாறு.
 
 பரதமுனி என்ற ஒருவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்ற ~நாட்டிய சாஸ்திரம்| 
  என்பது, சமஸ்கிருத நாடகங்களை எழுதுவதற்கும், தயாரித்து அரங்கேற்றுவதற்குமான ஒரு 
  சமஸ்கிருத நாடக இலக்கணத் தொகை நூல். அன்று நாடகமும் ஆடப்பட்டதால், நடன 
  விபரங்களும் இதில் அடங்கும். நாடகர்களுக்கும், நர்த்தகர்களுக்கும் மிகவும் 
  பயனுள்ள ஒரு நூல். அவர்களால் கட்டாயம் படிக்கப்படவேண்டிய நூல். இங்கு எழும் 
  கேள்வி: இந்த
 நாட்டிய சாஸ்திர நூல்தான் தமிழர் ஆடலின் தோற்றுவாயா?
 
 இறந்துபட்டுப்போயின என நாடகத்தமிழ் இலக்கண நூல்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று 
  உண்டு. ஆனால், இன்றுவரை அந்த நூல்கள் கிடைக்க வில்லை. தமிழரின் ஆடல் 
  பாடல்கள்பற்றிப் பெயரளவில்தானும் அறிந்து கொள்வதற்கு, எம்மிடம் எஞ்சியுள்ள தொன் 
  நூல் சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் மட்டும்தான்.
 
 இருவகைக் கூத்தி னிலக்கண மறிந்து
 பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
 பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்
 விதிமாண் கொள்கையின் விளங்க வறிந்தாங்
 காடலும் பாடலும் பாணியும் தூக்கும்
 கூடிய நெறியின் கொளுத்துங் காலைப்
 பிண்டியும் பிணையலு மெழிற்கையுந் தொழிற்கையும்
 கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக்
 கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
 வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும்
 பிண்டி செய்தகை யாடலிற் களைதலும்
 ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
 குரவையும் வரியும் விரவல செலுத்தி
 
 என, சிலப்பதிகாரம் நாடகத்தமிழ்பற்றியும், இசைத்தமிழ்பற்றியும் மேலும் பல கூறும். 
  பாடல் அடிகளை விளங்கிக் கொள்வது சற்றுக் கடினம். தவறான விளக்கங்களும் 
  தரப்பட்டுள்ளன. ஆய்வு செய்து அவற்றை அறிந்து கொள்ளவேண்டும். கூத்த நூல், பஞ்சமரபு 
  என இரு இலக்கண நூல்கள் உள்ளன. அவற்றிலும் ஆடல்பற்றியும், இசைபற்றியும் பல 
  விளக்கங்களைக் காணலாம்.
 
 சிலப்பதிகாரம் கூறும் ஆடல்வகைகள், நாட்டிய சாஸ்திர நூலில் இல்லை. சிலவற்றில் 
  ஒற்றுமை இருந்தாலும், இரண்டு நூல்களுக்கும் இடையில் ஆடல் பாடல் பல்லியம்பற்றி 
  நிறையவே வேறுபாடுகளும் உள்ளன. ~காலவகையினானே| பல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. 
  அவைபற்றி இங்கு விவரிக்கில் விரியும். இச்சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான ஒன்றை 
  மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
 
 நாட்டிய சாஸ்திர நூலில், நாடக மாந்தர் அரங்கில் தோன்றுமுன் நிகழ்த்தப்படவேண்டிய 
  பூர்வரங்கச் சடங்குகளின் விபரங்கள் உள்ளன. ஆனால், ஓரு தலைக்கோலியின் தலை 
  அரங்கேற்றம்பற்றி இதில் எதுவும் கிடையாது. தலை அரங்கேற்றம்பற்றி சிலப்பதிகாரம் 
  பரக்கக் கூறும். இந்த அரங்கேற்ற மரபு தமிழருக்கு சிலப்பதிகாரம் ~அரங்கேற்று காதை| 
  ஊடாகத்தான் தொடர்கிறது. அதைத்தான் சில மாற்றங்களுடன் அரங்கேற்றங்களில் இன்றும் 
  பார்க்கிறோம்.
 
 சங்ககாலத்தில் விறலியர் ஆடல் என்றும், சிலப்பதிகாரம் கூறும் பலவகைக் கூத்துள் 
  சாந்திக் கூத்து என்றும், பின்பு சதுர் என்றும், மீண்டும் பரதம் என்றும், அறுபடாத 
  ஒரு மரபின் தொப்பூழ் கொடித் தொடர்ச்சி இந்தப் பரதக்கூத்து. ~கூவி ஆடல் கூத்தெனப் 
  படுமே|. பாடி ஆடப்படுகின்ற எல்லாமே தமிழில் கூத்து என்ற பொதுச் சொல்லால் 
  குறிக்கப்படுவன. பரதமும் கூத்துள் அடங்கும். பரதம், பரதர் என்ற ஒருவரால் 
  இயற்றப்பட்டதாகக் கூறப்படுவதால் பெற்ற பெயரும் அல்ல. பாவ, ராக, தாளம் என்ற தவறான 
  விளக்கத்தால் கொண்ட பெயரும் அல்ல. விறல், சதுர் என்பவற்றின் தொடர்ச்சி பரதம். 
  விறல், சதுர், பர என்பவற்றின் பொருள் ~உயர்ந்த| என்பதாகும். இவைபற்றி விரிவாகப் 
  பேச இதுவல்ல நேரம். உயர்ந்த ஆடலாகிய
 பரதத்தின் ஆடல் வகை தமிழ் நாட்டில் தோன்றி, தமிழ் நாட்டில் வளர்வது. பரதம் 
  தமிழர்களுடைய மரபு. தமிழர்களுடைய அடையாளங்களுள் ஒன்று. ஆகவே தொடர்ந்து பரதம் 
  ஆடுவோம். ~தமிழோடிசை| பாடி ஆடுவோம்.
 
 ஆடுவோமே பள்ளு பாடுவோமே
 ஆனந்த சுதந்திரம் அடைத்துவிட்டோம் - என்று
 ஆடுவோமே ...
 
 இங்குதான் இரண்டாவது கேள்வி எழுகிறது. என்ன? இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில்; 
  என்ன ஆடப்போகின்றோம்? ஆடல்களின் ஊடாக என்ன சொல்லப் போகின்றோம்?
 
 எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
 எல்லோரும் சமம் என்ப துறுதியாச்சு
 சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதை
 தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே
 
 என்று, விடுதலை கிடைக்குமுன்பே விடுதலைக் கீதம் இசைத்தானே பாரதி, இதை ~ஆடுவோமே 
  பள்ளு பாடுவோமே| என்றானே. இது ஒரு முன் உதாரணமாக வேண்டாமா? பயிற்சி, பயிற்சி, 
  சிறப்பு, உச்சம், உன்னதம், ஆகா, ஓகோ, அற்புதம், அழகு - இந்த அழகுணர்வு 
  மட்டும்தான் கலையின் கடமையா? அறிவூட்டல் என்ற ஒரு கடமையும் உண்டே. இன்றும், 
  அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கப் போகின்றோமா? அல்லது, இன்றைய வரலாற்றுக் 
  கடமையைச் செய்யப்போகின்றோமா?
 
 பரதத்தின் இன்றைய வரலாற்றுக் கடமை என்ன? கதைகளில் கதைப்புலம் மாறிவிட்டது, கரு 
  மாறிவிட்டது. குறும்படங்களில் இன்றைய வரலாறு பதியப்படுகிறது. கவிதைகள் புறம் 
  பாடுகின்றன. மெல்லிசைப் புறப் பாடல்கள் ஆயிரக் கணக்கில் இறுவட்டுகளில் 
  வெளிவந்துவிட்டன. ஆனால், பரதத்திலும் அதற்கான இசையிலும் கடவுள்களின் பெயரால் 
  சம்போக, விப்ரலம்ப சிருங்கார நிலைகளை ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறோம்! 
  இன்னும் எவ்வளவு காலத்திற்கு சந்தணம் அரைப்பதும், தலை முடிப்பதும், 
  பூச்சூடுவதும், முந்தானை திருத்துவதும், கடைவாயில் பார்ப்பதும்? அகக்கூத்து, 
  புறக்கூத்து என்று சிலப்பதிகாரம் கூறும் இருவகைக் கூத்துள், இவ்வகையான அகக் 
  கூத்துகளை ஆடியது இப்போதைக்குப்
 போதும். இன்றைய தேவை புறக்கூத்து. சங்ககாலப் புறநானூற்றையும் விஞ்சிய வீர வரலாறு 
  இன்று நிகழ்த்தப்படுகிறது. அந்த அற்புதங்களை ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்.
 
 அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில புற நடனங்கள் ஆடப்படுகின்றன. இல்லை என்று 
  சொல்லவதற்கில்லை. ஆனால், அவை மெல்லிசை இறுவட்டுப்
 பாடற் சொற்களுக்குப் பிடிக்கப்படுகின்ற பதார்த்த
 (பத+அர்த்த) அபிநயங்களாக அரங்கில் எஞ்சிவிடுகின்றன.
 
 பரதம் வேறு, அதற்கான இசை வேறு. அதன் கனதியே வேறு. அதிலும் இன்று வேண்டப்படுவது 
  அகம் அல்ல, புறம் - புதிய புறம். அதற்கேற்பப் பரதம் புதிய கோலம் கொள்ள வேண்டும். 
  உடலும் உள்ளமும் இரண்டறக் கலந்து தகிக்கும் புதிய தாண்டவங்கள் வேண்டும். புதிய 
  பரதர்களிடம் காலம் வேண்டிநிற்பது இதைத்தான்.
 
 அனுப்பியவர்: பராசக்தி சுந்தரலிங்கம்
 parasundha@gmail.com
 |