மும்பையில் ஓர் இலெமுரியா!
- புதியமாதவி, மும்பை -

              மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் 
              மன்றம், இலெமுரியா நூல் வெளியீட்டகத்துடன் இணைந்து நடத்திய நூல்கள் 
              அறிமுக விழா மும்பை, சயான், பாரத் ரத்னா டாக்டர் 
              எம்.எஸ்.சுப்புலட்சுமி இசையரங்கில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. 
              14.10.2006 மாலை ஆறுமணியளவில் விழா துவங்கியது. வழக்கம்போல மும்பை 
              சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக அரைமணி நேரம் 
              தாமதமாக ஆரம்பித்தாலும் அரங்கு நிரம்பி இருந்தது கண்கொள்ளா காட்சியாக 
              இருந்தது. செல்வி கு.ந. சகானா தமிழ்த்தாய் வாழ்த்திசைக்க, எழுத்தாளர் 
              மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள் வரவேற்புரை 
              நிகழ்த்தினார். முதுபெரும் எழுத்தாளரும் மும்பையின் பல எழுத்தாளர்களை 
              உருவாக்கியவரும் சிறந்த பத்திரிகை ஆசிரியருமான சீர்வரிசை சண்முகராசன் 
              எழுதிய நிகழ்வுகள்-சிந்தனைகள், சுயமரியாதைச் சுடர் என்று மும்பை 
              தமிழர்களால் போற்றப்படும் திரு.சு.குமணராசன் எழுதிய 'பார்வையின் 
              நிழல்கள்', திருமிகு.நங்கை குமணராசன் எழுதிய 'பேணுவோம் பெண்ணுரிமை' 
              மூன்று நூல்களையும் விழாத்தலைவர் கி.வீரமணி - தலைவர், திராவிடர் 
              கழகம் வெளியிட நியு மங்களூர் துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் திரு. 
              பொன்.தமிழ்வாணன் (இ.ஆ.ப) முதல் படிகளைப் பெற்றுக்கொண்டார். 
              அடுத்தடுத்து முனைவர் செய்யது இஸ்மாயில், பேராசிரியர் எபிநேசர், 
              தொழிலதிபர் மதி மாத்யூ, கோடக் மகேந்திரா வங்கியின் துணைத்தலைவர் 
              கோ.மலர் அரசன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.
              
              அரங்கிலிருக்கும் அனைவரும் நூல்களை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற 
              கோரிக்கையுடன் அதற்குரிய பங்காக அரங்கிலிருக்கும் அனைவருக்குமான 
              நூற்படிகளின் விலைக்கு ஈடான தொகையை எழுதிக்கொள்ள வேண்டும் என்ற 
              வேண்டுதலுடன் தொகை குறிக்கப்படாத தன் காசோலையைக் கொடுத்து நூல் 
              வெளியீட்டு விழாவில் ஓர் இன்ப அதிர்ச்சியைத் தந்தார் திரு.கோ.மலர் 
              அரசன். இருப்பினும் அரங்கிலிருந்தவர்களில் 99% பேர்கள் நூல்களுக்கான 
              விலையைக் கொடுத்தே வாங்கினார்கள் என்பதும் மன நிறைவளித்தது. 
              இலவசங்களில் எதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மும்பைத் தமிழர்களின் 
              பெருமிதம் அதில் மின்னியது.
              
              வாழ்த்துரையில் பேசிய அலிசேக் மீரான் அவர்கள் பெரியவர் 
              சீரிவரிசையாரின் நிகழ்வுகள்-சிந்தனைகள் பழைய நினைவுகளைச் சுற்றி 
              வருகிறது, நங்கையின் 'பேணுவோம் பெண்ணுரிமை' உறவுகளைச் சுற்றி 
              வருகிறது. நண்பர் குமணனின் 'பார்வையின் நிழல்கள்' உலகத்தைச் சுற்றி 
              வருகிறது என்று மூன்று நூல்களையும் பற்றி முத்தாய்ப்பாகச் சொல்லி 
              வாழ்த்தினார். குமணனின் இலங்கை பயணத்துடன் தானும் உடனிருந்ததையும் 
              நினைவு கூர்ந்து நெகிழ்ந்தார்.
              
              பு.தி.மு.க. செயலாளர் அப்பாத்துரையார் குமணனின் கடின உழைப்பைப் 
              பெரிதும் பாராட்டினார். டாக்டர் கலைஞரின் கடின உழைப்பு மட்டுமே 
              அவருடைய இன்றைய மாற்றுக்கட்சியினரும் அதிசயிக்கும் திறமைகளுக்கு 
              காரணம் என்று புகழ்ந்துரைத்தார்.
              
              தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு பேராசிரியர் மு.பி.மணிவேந்தன் 
              அவர்கள் நங்கை குமணராசனின் புத்தக வடிவமைப்பு எவரையும் வாசிக்கத் 
              தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்றார். பல்லாங்குழி விளையாட்டில் 
              பொதிந்திருக்கும் வர்க்கச் சிந்தனையையும் அதை எளிய தமிழில் விளக்கி 
              எழுதியிருக்கும் நங்கை குமணராசனைப் பெரிதும் பாராட்டினார். 
              திருவள்ளுவர் குமரி மாவட்டத்துக்காரராக இருக்கலாம் என்ற கருத்துக்கு 
              பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் 
              தன் நிகழ்வுகள், சிந்தனைகள் நூலில் எழுதியிருக்கும் அபூர்வமான ஒரு 
              குறிப்பை எடுத்துக்காட்டினார்.
              
              'பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
              ஏதில் பிணந்தழீஇ யற்று' (குறள் 913)
              
              பிணத்துடன் உடலுறவு கொள்ளும் ஒரு தீயவழக்கம் நாஞ்சில் நாட்டுக்கு 
              அருகில் உள்ள சேரநாட்டில் நம்பூதிரி இனத்தில் இருந்து வந்தது. 
              கன்னிப்பெண் இறந்துவிட்டால் அவள் பிணத்தின் மீது சந்தணத்தைப் பூசி 
              இருட்டு அறையொன்றில் கிடத்தி விடுவார்கள். அவள் பிணத்துடன் உடலுறவு 
              கொள்ள ஒருவனைப் பணம் கொடுத்து ஏற்பாடு செய்வார்கள். அந்தப் 
              பிணத்துடன் அவன் உறவு கொண்டான் என்பதை அவனுடைய உடலில் பட்டிருக்கும் 
              சந்தனத்தின் மூலம் உறுதி செய்து கொள்வார்கள். இக்கொடிய வழக்கம் 
              வள்ளுவருக்குத் தெரியுமாதலால் இக்குறளில் அக்கருத்தைக் 
              கையாண்டுள்ளார்.
              
              திரு குமணராசனின் பயணக்குறிப்புகள் தமிழ் உணர்வு விழிகளின் பார்வை. 
              அந்நூலுக்கு தான் வழங்கியிருக்கும் அணிந்துரைக்கு அப்பாலும் நிறைய 
              சொல்வதற்கு செய்திகள் உள்ளன. அனைவரும் வாசித்து பயன்பெற வேண்டும் 
              என்று கேட்டுக்கொண்டார்.
              
              புதியமாதவி தன் வாழ்த்துரையில் நங்கை குமணராசனின் புத்தக 
              வடிவமைப்பிற்காக வடிவமைத்த பதிப்பகத்தாரைப் பாராட்டினார். ஆணின் 
              சுயநலம் என்ற கட்டுரையில் பெண்ணுரிமையின் மிகச்சிறந்தக் கருத்துகளை 
              முன்வைக்கிறார். ' தான் பலாத்காரம் செய்யப்படும்போது 
              தாக்கப்படும்போது ஆணின் துணை நாடாத ஆற்றல், பெறப்போகும் 
              பிள்ளை,கருக்கட்டுப்பாடு என்று எல்லாவற்றிலும் உரிமை' இவையே 
              பெண்ணிரிமை என்று எழுதியிருப்பதைப் பாராட்டினார். பெண்ணுரிமைப் 
              பற்றிப் பேசும் எவரும் புறந்தள்ள முடியாதவை தந்தை பெரியாரின் 
              பெண்ணியச் சிந்தனைகள் என்ற கருத்தை எடுத்துரைத்தார்.
              
              மும்பையில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய சீர்வரிசை சண்முகராசனின் 
              எழுத்துகள் காலதாமதமாகவே நூல் வடிவம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி 
              இதுவும் கடந்த தலைமுறை குறித்த ஒரு செய்திதான் என்றார். தொண்டும் 
              தொழிலும் கட்டுரையில் நூலாசிரியர் அன்றைய மாராத்திய மாநில ஆளுநராக 
              இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்த நிகழ்வை 
              எழுதியிருப்பதைப் பற்றி குறிப்பிட்டார். கவர்னரிடம் சீர்வரிசையார் 
              கேட்கிறார்.."கவர்னருகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட வேலை என்ன?" இந்தக் 
              கேள்விக்குப் பதிலளித்த சி.சுப்பிரமணியம் "வேலை செய்ய வேண்டுமானாலும் 
              செய்யலாம், சும்மா இருக்க வேண்டுமென்றாலும் இருக்கலாம்' என்று 
              சொல்லிச் சிரித்தார். இதிலிருந்து அவருக்கே தெரிகிறது , 'இது ஒன்றும் 
              செய்ய முடியாத பவிசான பதவி என்று!' இப்படி எழுதியிருக்கும் 
              சீர்வரிசையாருக்கு தெரியும் அரசியலமைப்பில் ஆளுநரின் பொறுப்பு என்ன 
              என்பது. பதில் சொன்ன ஆளுநருக்கும் தெரியும் அவருக்கான வேலை என்ன 
              என்பது. இங்கே தான் ஆசிரியர் வாசகனைச் சிந்திக்க வைக்கிறார். 
              ஆங்கிலேயர்கள் வெளியேறிவிட்டாலும் இன்றும் அவர்களின் அரசமைப்பும் 
              சட்டங்களும் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றன என்ற கருத்தை 
              வெளிப்படையாகச் சொல்லாமல் அதை நோக்கி வாசகனின் சிந்தனையை இழுத்துச் 
              செல்கின்றன இவர் எழுதியிருக்கும் நிகழ்வுகள்.. சிந்தனைகள். 
              திரு.குமணராசன் அவர்கள் பயணமும் பாதையும் என்ற தலைப்பில் 
              மும்பையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தமிழ்ப்போஸ்ட் வார இதழில் 
              வெளிவந்த பயணக்கட்டுரைகள் ஒரு சில விரிவாக்கங்களுடன் 'பார்வையின் 
              நிழல்கள்' புத்தகமாக வெளிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டி வார இதழில் 
              வெளிவந்த போதும் மும்பை தமிழ் வாசகர்களின் பேராதரவைப் பெற்ற 
              கட்டுரைகளில் ஒன்று என்றார். பயணக்கட்டுரைகள் பல எழுதிய பல்வேறு 
              எழுத்தாளர்களின் கட்டுரைகளிலிருந்து குமணராசனின் சிந்தனைகள் 
              எவ்விதத்தில் மாறுபட்டு இருக்கின்றன என்பதையும் தன் கருத்துகளில் 
              எவரிடமும் சமரசம் செய்து கொள்ளாமல் மிகவும் தெளிவாக இருக்கும் 
              அவருடைய தமிழ் உணர்வுகளையும் பாராட்டினார். இலங்கை பயணத்தைப் பற்றிய 
              குறிப்புகளை எழுதும் போது அவர் எழுதியுள்ள வரிகளை அப்படியே 
              வாசித்துக்காட்டினார்.
              
              (பக்கம் 208) " இந்திய அரசு அந்தக் காலக்கட்டத்திலும் சரி, தற்போதும் 
              சரி, தமிழர்களின் நியாயமான தமிழ் ஈழ விடுதலைக் ரிக்கையை ஆதரித்துக் 
              குரல் கொடுக்கவில்லையே என்பதுதான் நமது ஏக்கம். சரி, ஆதரவு 
              தராவிட்டாலும் தமிழர்களிடையே உருவான போராளி இயக்கங்களையாவது 
              எதிர்ப்பதைத் தவிர்த்திருக்கலாமே! ஆனால் அதுவும் நடைபெறவில்லை. 
              இந்தியாவின் ஓர் உறுப்பாக விளங்குகின்ற தமிழ்நாடும் இதைப் பார்த்துக் 
              கொண்டு அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயநிலை. அதுதான் இந்திய 
              இறையாண்மையைக் காப்பாற்றும் நிலையாம். என்ன செய்வது! மங்கி வருகின்ற 
              தமிழன் வரலாற்றில் இதுவும் ஓர் 
              அத்தியாயம்"
              
              நல்ல புத்தகம் வாசிப்பவனின் சிந்தனையைக் கிளறும். அவன் தேடலுக்கு 
              வழிகாட்டும், அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும், 
              அப்படித்தான் குமணராசன் அவர்கள் எழுதியிருக்கும் இந்த வரிகள் என்னுள் 
              பல எண்ணங்களை எழுப்பின. " அன்னை இந்திராகாந்தி அம்மையார் 
              சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட சீக்கிய இனத்துக்குப் 
              பரிகாரமாக ஒரு பிரதமரையே உருவாக்கி அழகுபார்க்கும் இந்திய தேசத்தின் 
              பெருந்தன்மையின் அளவுகோல் அகதி தமிழர் பிரச்சனையில் இல்லாமல் போனது 
              ஏன்?
              
              பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரியக் காரணமான மொழிவழி வந்த 
              இனப்பிரச்சனையில் வங்கத்தின் முஜிபுர் ரஹ்மானுக்கு தோள் கொடுத்த நம் 
              இந்திய அரசின் நியாயங்கள், இலங்கையில் சிங்கள- தமிழர் 
              இனப்பிரச்சனைக்கான தீர்வில் மட்டும் ஏன் ஊமையாக இருக்கிறது. எங்கோ 
              தொலைவிலிருக்கும் நார்வேக்கு தெரியும் நியாயம், தமிழினத்தை தன் தேசிய 
              இனங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டிருக்கும் இந்திய தேசத்திற்கு ஏன் 
              புரியவில்லை?" என்று தன்னுள் எழுப்பும் எண்ண அலைகளைப் பகிர்ந்து 
              கொண்டார் புதியமாதவி.
              
              நூல் பெற்ற பொன்.தமிழ்வாணன் அவர்கள் தன்னைப் பாதித்த பல்வேறு 
              எழுத்தாளர்களின் படைப்புகளை நூலாசிரியர்களின்
              பக்கங்களுடன் ஒப்பிட்டார்.
              
              திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் மும்பை தமிழர்களின் தமிழ் 
              உணர்வுகளைப் பாராட்டினார்.சீர்வரிசையாரின் 'நிகழ்வுகள், சிந்தனைகள்' 
              ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் தந்தை பெரியாரின் புகைப்படத்துடன் 
              அவருடைய 
              பொன்மொழிகளை இணைத்திருப்பதைப் பாராட்டினார். பெரியார் திடலில், 
              தமிழகத்தில் இந்தப் புத்தகங்களின் அறிமுகவிழா நடக்கும் என்று சொல்லி 
              வாழ்த்தினார்.
              
              விழாவுக்கு முன்னிலை வகித்த மும்பை தமிழ் அமைப்புகளைச் 
              சார்ந்தவர்கள், பம்பாய்த் தமிழ்ச் சங்கம், நவிமும்பை தமிழ்ச் சங்கம், 
              ஜெரிமேரி தமிழ்ச் சங்கம் செயலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் 
              சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் 
              அனைவரின் முன்னிலையிலும் சிறப்பாக நடந்த நிகழ்ச்சிக்கு சுந்தர 
              சுதாகரன் நன்றி தெரிவித்தார்.
              
              
              "புத்தகத்தை மனிதன் படைப்பதும்
              மனிதனைப் புத்தகம் படைப்பதும்
              மானுடத்தின் அறிவுப் பாதைக்கே"
              
              மூன்று நூல்களும் தமிழர், தமிழ் உணர்வு, தமிழர் பண்பாடு, தமிழர் 
              முன்னேற்றம் என்ற ஒரே தளத்தில் அமைந்த மூன்று மாடங்களாக மும்பையின் 
              வானளாவிய அடுக்கு மாடிகளுக்கு நடுவில் தமிழனின் பாதையைத் தனித்து 
              வெளிச்சமிட்டுக் காட்டின. விழா ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்த 
              எழுத்தாளர் மன்றம், இலெமுரியா நூல் வெளியீட்டகம் மும்பை எழுத்துலகில் 
              மீண்டும் ஒரு சாதனையைப் படைத்துவிட்டது. வாழ்த்துகள்.
              
              - புதியமாதவி, மும்பை.
              puthiyamaadhavi@hotmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




