| அ.வெண்ணிலாவின் கவிதைகளில் 
மிதவாதப்பெண்ணியம் 
 - வி. மணிகண்டன் -
 
 அறிமுகம்
 
  இருபதாம் 
நூற்றாண்டிற்குப் பின் தமிழ்மொழி புதுக்கவிதை வடிவில் தனி ஒரு முத்திரை 
பதித்துவிட்டது. இலக்கணம், மரபு என்னும் தடைகளை உடைத்துக் கொண்டு நவீனப் போக்கில் 
பெண்கவிஞர்களின் சிந்தனைப் பெருக்கம் புதுக்கவிதைகளாக வெளிப்பட்டுள்ளது. 
புதுக்கவிதைப் பிறப்பிற்குப் பின்னர் தமிழிலக்கிய உலகில் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் நவீன நோக்கில் பெண்கள் 
படைத்துள்ளனர். அவர்களுள் தனக்கெனத் தனி முத்திரைப் படைத்தவரும், பெண்விடுதலையில் 
மிகுந்த ஈடுபாடு உடையவருமான அ. வெண்ணிலாவின் 'ஆதியில் சொற்கள் இருந்தன" எனும் 
கவிதைத் தொகுப்பே இக்கட்டுரை மிதவாதப் பெண்ணிய நோக்கில் அணுகி ஆராயப்பட்டுள்ளது.
 
 மிதவாதப் பெண்ணியம் :-
 பெண்ணியம் என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம் சமூகத்தில் பரவலாக உள்ளது. 
பெண்ணியத்தின் நோக்கம் ஆணாதிக்கத்தால் உரிமையிழந்து அடிமைகளாக வாழும் 
பெண்ணினத்திற்கு விழிப்பூட்டி, ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெற்றுத்தருதல் 
எனலாம். ச.முத்துச்சிதம்பரம் என்பவர், 'பெண்ணியம் என்பது பெண்கள் சமூகத்திலும், 
அலுவல்களிலும் வீட்டினுள்ளேயும் நசுக்கப்படுவதைப் பற்றிய
 விழிப்புணர்ச்சியும் அந்நிலையை மாற்றியமைக்க ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் 
புரிந்து கொண்டு செயல்படும் முயற்சியாகும் என்கிறார்.
 
 மேரி உல்ட்ஸ் டோன்கிராஃப்ட் மிதவாதப் பெண்ணியக் கோட்பாட்டாளராகக் கருதப்படுகிறார். 
வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் மகளிருக்கு உரிமைகளும் சந்தர்ப்பங்களும் சமமாகக் 
கிடைக்க வேண்டும் என்பது இவர்தம் கருத்தாகும். இன்று அமெரிக்காவில் மிதவாதப் 
பெண்ணியம் முதன்மைப் பெண்ணிய நீரோட்டம் என்று வழங்கப்படுகிறது. மிதவாதப் பெண்ணியம் 
தாராளவாதப் பெண்ணியம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன்
 அடிப்படைக் கொள்கைகள்
 
 1. பெண்கள் வேறுபடுத்தி அடிமைப்படுவதை ஒழித்தல்
 2. ஆண், பெண் பால்பேதங்களை ஒழித்தல்
 3. பெண்களின் பிரச்சனைகளை அறிந்து அதைத் தீர்த்தல்
 4. பெண்களுக்கு ஆண்களால் உண்டாகும் வன்முறைகளை ஒழித்தல்
 5. பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை ஒழித்தல்
 முதலிய பல கொள்கைகளைப் பெற்று விளக்குகிறது இப்பெண்ணியம்.
 
 தற்போதைய கலாச்சாரத்தில் காணப்படும் பாலியல் பங்கு என்பது இன்று புதிதாகத் 
தோன்றியதாகும். பண்டைக் காலத்திலேயே உண்டானது. பாலியல் பங்குநிலை என்பது மனிதரால் 
உருவாக்கப்பட்டது. எனவே அது மனிதராலேயே அழிக்கப்பட வேண்டும் என்பது மிதவாதப் 
பெண்ணியவாதிகளின் கருத்தாகும்.
 
 பெண்ணின் நிலை :-
 பெண்ணின் பிரச்சனை அவளுக்கே உரிய தனிப்பிரச்சனையாகவும் ஆணின் பிரச்சனை ஒட்டுமொத்த 
சமூகப் பிரச்சனையாகவும் சில தளங்களில் அணுகப்படுகிறது. பெண்உடல் எப்பொழுதும் 
கண்காணிக்கப்பட்டே வருகின்றது. அதில் சில தவறுகள் நேர்ந்து விடும்பொழுது கடுமையான 
விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவதோடு கட்டுப்பாடும் பெற்றதாக மாறி விடுகிறது.
 
 'விசப்பாம் பொன்று
 என்மீதேறி
 நிதானமாக
 கடந்து போகிறது
 புரிதலற்ற - உன்
 பார்வைகளைச்
 சந்திக்கும் பொழுதெல்லாம்"
 மேலும் மற்றொரு கவிதையில்
 'ஒவ்வொரு இரவுகள் முடிந்து
 வீடு திரும்பும் வேளையில்
 நான் இழந்தது
 ஒன்றுமில்லையென
 நிரூபிக்க வேண்டியிருப்பது
 நிரூபனத்தை
 நீ ஏற்றுக்கொள்வதும்
 நம் வழக்கங்களாய் இருப்பதையே
 ஷவாழ்தல்| என்கிறார்கள்"
 இங்கு பெண்களை எப்பொழுதும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது மனவலியோடு 
வாழும் ஒரு பெண்ணின் மனநிலை இங்கே
 எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
 
 பெண்சுரண்டல் மற்றும் வன்முறைக்கு ஆட்படல் :-
 பெண்கள் மீது ஆண்கள் அடக்கு முறையையும் சுரண்டலையும் சமூக அங்கீகாரத்துடன் 
கைக்கொண்டு வருகிறார்கள். தற்காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பல்வேறு துறைகளிலும் 
பெண்கள் தமது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். பெண்கள் பெற்றுள்ள இம்முன்னேற்றம் 
அளப்பரியது. இந்நிலையில் ஷவேலைப்பளு| ஒருபுறம் என்றால் பாலியல் சுரண்டல்| என்பது 
மற்றொரு புறமாகத் தொடர்கிறது.
 
 'களைத்துச் சலித்து
 உள் நுழைகிறேன்
 ஆடை மாற்றுகையில்
 கழன்று விழுகின்றன
 உடல் முழுவதும் பதிந்திருந்த
 பார்வைகள் -
 தீண்டல்கள் -
 தொடுதல்கள் -
 உரசல்கள் -
 
 இது தொடர்ந்து வரும் நிகழ்வாக உள்ளது. பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுதும்கூட 
கூட்ட நெரிசலைப்பயன்படுத்தி பல்வேறு பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வருவது 
அன்றாட நிகழ்வாகிவிட்டது. இங்கு தனிமனித ஒழுக்கம் கேள்விக்குள்ளாகிறது. ஆணின் 
இவ்வொழுக்கக் கேடான செயலால் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் பெண்களே உள்ளனர்.
 
 ஒடுக்கப்பட்ட பெண்ணின் குரல் :-
 சமுதாயத்தில் பெண்களின் ஒட்டுமொத்தக் குரல் ஒடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். ஆண் 
மேலாண்மைச் சமுதாயத்திலும், குடும்பத்திலும் பெண்ணின் விருப்பம் பாலியல் துய்ப்பு 
போன்ற அனைத்து நிலையிலும் அவர்களுக்கான இடம் மறுக்கப்படுகிறது.
 
 'உன் கழுத்தை
 இறுக்கி அணைத்துக் கொண்டு
 உறங்க பிடிக்குமெனக்கு
 தலைமாட்டிற்கு
 உயர்த்தி வைத்துக் கொள்ளப்படும்
 உன் கைகள்
 சொல்கின்றன
 அநேக நாட்களில்
 அது என் விருப்பமாய்
 மட்டும் இருப்பதை"
 
 ஆணாதிக்க அடக்குமுறை சமூகத்தில் பெண்ணின் எதிர்ப்பார்ப்புகளும், விருப்பங்களும் 
புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன என்பதை இக்கவிதை வரிகளின் வழி அறிய முடிகிறது. சம 
உணர்வுகளைப் பெண்கள் வெளிப்படையாகக் கூறக் கூடாது. அது ஷபுது மண் குடத்து நீர் போல| 
என்பது
 அகமரபு, இத்தகைய சூழலில் பெண் உணர்வை ஆணே புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பது 
மரபு. இந்த மரபை உடைத்தெறியும் வகையில் அ. வெண்ணிலாவின் கவிதைகள் அமைந்துள்ளன. 
மாதவிடாய் காலங்களி;ல் பெண்ணின் உடல்சார்ந்த மனம் சார்ந்த உணர்வுகளை 
வெளிப்படுத்தும்
 வகையில் கீழ்க்கண்ட கவிதை அமைந்துள்ளது.
 
 'தேதி மாறாமல்
 திட்டமிடப்பட்டதைப்போல்
 மாதமாதம் நிகழ்கிறது
 எனக்கான சுழற்சி என்றாலும்
 நிகழும் முதல்கணம்
 விபத்தொன்றை
 சந்தித்தாற்போல்
 அதிர்கிறது மனசு"
 
 எவ்வளவு காரணங்களைக் காட்டி பெண் தாழ்த்தப்பட்டாலோ அதே காரணங்கள் அவளுடைய 
உயர்வுக்கும் உரியது என்பது உண்மை. வன்மையின் பெயரால் பெண்ணை மென்மையானவளாக 
ஒதுக்குவது அவளுடைய காமத்திற்கு வேலியிட்ட செயலாகும்.
 
 முடிவுரை :-
 இன்றைய பெண் படைப்பாசிரியர்கள் பெரும்பாலும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் 
அவலங்களைக் தம் படைப்புகளில் படைத்துக்காட்டுகின்றன. அவ்வகையில் பெண் விடுதலையே 
மானுட விடுதலை என்பதை உணர்ந்து ஆதியில் சொற்கள் இருந்தன என்ற வெண்ணிலாவின் கவிதைத் 
தொகுப்பு
 அமைந்துள்ளது. பெண்ணின் அடிமைத்தனம் அகன்று ஆணும் பெண்ணும் சமமாக வாழ பெண்ணினம் 
தழைத்து ஓங்கவேண்டும். ஏனெனில் பெண்மை விடுதலைப் பெற்று வாழ்ந்தால் தான் இந்த 
சமூகம் தழைக்கும்.
 
 manisen37@yahoo.com
 |