சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின்
கவிதைகள் நாற்பது-4
சி. ஜெயபாரதன், கனடா
 உன்னை 
  நானும்,
உன்னை 
  நானும்,என்னை நீயும்
எரிக்கும் முயற்சியில் இறங்குவதா? .....
ரயில்பெட்டி எரித்துச்
சவப்பெட்டி செய்யலாமா? - வைகைச் செல்வி-
அச்சம் எனக்கில்லை!
தாழ்வும் எனக்கில்லை!
எதிராளி பலம் பார்த்து
போருக்கு வரவில்லை!
இந்நெருப்பில் கைவைக்க
எவர் வந்தால் என்ன? ..... வைகைச் செல்வி.
 "பலி" என்னும் கவிதையில் ஒரு பெண்மேல் விழும் பழிகளைப் பற்றி 
  வர்ணிக்கிறார். பெண்ணின் உடல் உழைப்பும், வேலை ஊதியமும் பிறருக்கு அனுதினமும் 
  பயன்பட்டாலும், புகழ் கிடைப்பதற்குப் பதிலாகப் பழியும் பாவமும், வலியும் வருவது 
  யாருக்கு? அதே அந்தப் பெண்களுக்குத்தான்! 
  
  நானிட்ட புள்ளிகளில் யார் யாரோ கோலமிடுகிறார்! நான் வரைந்த ஓவியத்துக்கு யார் 
  யாரோ வண்ணம் தீட்டுகிறார்! நான் வடித்த சிற்பத்தில் யார் உளியோ மெருகேற்றுகிறது! 
  நான் படைத்த கவிதைக்கு யார் யாரோ அர்த்தம் சொல்கிறார்," என்று குற்றங்கள் சாட்டி 
  அவரது அம்மிக் கவிதை தொகுப்பின் மீது ஆய்வுக் கட்டுரை எழுதும் எனக்குப் பாராட்டை 
  அளிக்கா விட்டாலும், பதிலாக என் முதுகில் ஓங்கி இப்படி அடிக்காமல் 
  விட்டிருக்கலாம்! 
  
  என் வீட்டு ரோஜாப்பூ
  யாருடைய வீட்டு மேஜையிலோ?
  நான் கோர்த்த மணிமாலை
  எந்தப் பொம்மை கழுத்திலோ?
  என் தோட்ட மருதாணி 
  யாருடைய விரல்களிலோ?
  என் வீட்டுத் தென்னங் கீற்று 
  யார் வாசல் தோரணமோ? 
  ஆனால் 
  யார் யாருக்கோ வரவேண்டிய 
  வலியும், துக்கமும்
  ஒட்டுமொத்தமாய் 
  (வருவது) 
  எனக்கு மட்டும்தான்!
  
  பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் புற்றுநோயாய்ப் பரவித் துயர்ப்படுத்தும் ஜாதி, 
  மத, இன, மாநில வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வு நிலைகள் மக்களிடையே உண்டாக்கிப் 
  பேரளவில் பிளவு படுத்திக், குழுவினங்கள் ஒன்றுக் கொன்று போரிட்டும், தீயிட்டும், 
  கொன்றழித்தும் பழிவாங்கும் படலங்களைப் பல கவிதைகளில் காட்டுகிறார், வைகைச் 
  செல்வி.
  
  காஷ்மீர் முதல் கன்னியா குமரி முனைவரை இந்திய மக்களுக்கு இராமன் மீதுள்ள 
  பற்றுபோல, பாரத நாட்டின் மீது பற்றுமில்லை, பாசமுமில்லை, பரிவுமில்லை. சுமார் 200 
  ஆண்டுகளாக இந்தியாவை அடிமை பூமியாக மிதித்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை 
  எதிர்ப்பதற்காக 50 கோடி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து புரட்சி செய்தோம், போராடினோம், 
  முடிவில் வெற்றி பெற்றோம். விடுதலை பெற்றோம். ஆனால் இப்போது அனைவரும் மீண்டும் 
  பிளவுபட்டு சுயநலக் குழுக்களாய் பிரிந்து கொண்டு யார் பலசாலி என்று நிரூபிக்க 
  ஒருவரை ஒருவர் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். 
  
  "நமக்குள் ஓர் வல்லரசு" என்னும் படைப்பில் நாட்டில் நச்சுப் பாம்புகளாய் முளைத்து 
  நாசம் செய்துவரும் மூர்க்க மதவாதிகளின் அநீதிக் கொலைகளைக் கேட்டு 
  கொதிப்படைகிறார். பாரத நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் தீவிர 
  அடிப்படை மதவாதிகள் சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர், தலித்துகள் போன்ற 
  அப்பாவிச் சிறுப்பான்மை மக்களை தீயிலிட்டும், கத்தி, கம்புகளால் காயப் 
  படுத்தியும், கோயில்களை இடித்தும், அவமானப் படுத்தியும், கொலை செய்தும் வருவது 
  விடுதலைப் பாரதத்தில் அநீதியான, சட்ட விரோதமான கோரக் கொடுஞ் செயல்களே! 
  
  என்னைப் பார்த்து 
  ஊர் கூடிச் சொல்கிறது:
  'நான் பள்ளத்தில் இருக்கேனாம்' 
  அவர்கள் எல்லாரும் ஏறி நிற்கையில் 
  என் தட்டு மட்டும் 
  தாழ்ந்தி ருக்கிறது! 
  நான் மறைந்து விட்டேனாம்! 
  கட்டைகள் மிதக்கையில், 
  கல்லொன்று ஆழத்தில் உறங்குகிறது!.... 
  மலைதான் என்னை இடறிற்று, 
  கூழாங்கற்கள் அல்ல! .....
  
  ஏறிக் கொண்டிருக்கையில் 
  ஏணியை எடுத்திருந்தால் 
  ஏற்றுக் கொண்டிருப்பேன்! 
  
  மேலேறி வந்து மூச்சிரைக்க நிற்பதற்குள், எட்டி உதைக்கின்ற நெஞ்சங்கள் ஏராளம் 
  என்று பெருமூச்சு விடுகிறார்! "கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு" என்று 
  கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறார். ஆணவத் தேரில் பவனிவரும் 
  ஆதிக்கவாதிகளைக் கவிதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி. 
  
  ஆணவத் தேரேறி 
  (என்னை)
  ஒடுக்கப் பார்த்தாலும், 
  கண்ணாடிக் குப்பிக்குள்
  (வெடித்து விடும் பெண்மை எனும்) 
  புயல்காற்று ஒடுங்குமோ?
  
  என்று பெண்ணென்பவள் ஒரு புயல் என்று ஆணவச் செவியில் அறைகிறார், வைகைச் செல்வி.
  
  "நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், நங்கையர்க்கு அல்ல" என்று பாரதியார் 
  அழுத்திச் சொல்வதை வைகைச் செல்வி முத்திரை அடித்து வெளியிடுகிறார். 
  
  அச்சம் எனக்கில்லை! 
  தாழ்வும் எனக்கில்லை! 
  எதிராளி பலம் பார்த்து (நான்)
  போருக்கு வரவில்லை! 
  இந்நெருப்பில் கைவைக்க 
  எவர் வந்தால் என்ன? ..... 
  தொடர்ந்து விழுகின்ற 
  சம்மட்டி அடிகள்...
  உலைக் களத்தில் புரள்கையில் ....
  வலியின் கீற்றுகள்
  உடலெங்கும் பரவும்!
  சிறகுகளை விரித்து நான் எழும்பிப் 
  பறக்கையில் 
  எனக்கெதற்கு மரக்கால்கள்?
  
  என்று கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி ஆணவத் தேரேறி ஒடுக்கப் 
  பார்க்கும் ஆதிக்கவாசிகள் மீது ஆவேசமாய்க் கணைகளை வீசி எறிகிறார். 
  
  ரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா?
  
  "இமயம் முதல் குமரி வரை மண்ணும் மாறவில்லை! விண்ணும் மாறவில்லை! ஆனால் அவற்றிடையே 
  வாழும் மனிதர் மாறிவிட்டார்! பல்வேறு மரபினர், சாதியினர், மொழியினர், மதத்தைச் 
  சார்ந்தவர் பாரதத்தில் உள்ளார். மனம் விட்டுச் சிரித்தாலும், அவரது நெஞ்சிக்குள் 
  பல்லாண்டு காலம் பகையுடன் புகையும் ஒரு நச்சுத்தீ உருவாகிக் கசிகிறது! 
  
  உணர்ச்சி முழக்கங்கள்
  தீக்குச்சி போலாகி,
  மனத்தை உரசுகையில் 
  (கனல் பற்றி எரிந்து விளைபவை) 
  ஆறாத ரணங்கள் அம்மா! ....
  சமுதாய இருட்டிற்கு
  வெளிச்சம் தேவைதான்!
  அதற்காக 
  உன்னை நானும்,
  என்னை நீயும் 
  எரிக்கும் முயற்சியில் இறங்குவதா? ..... 
  ரயில்பெட்டி எரித்துச் 
  சவப்பெட்டி செய்யலாமா? 
  
  என்று டெல்லி ரயில் நிலையத்தில் எரிந்த ரயில் பெட்டிகளில் கரிந்துபோன மனிதர் 
  மீது, மனமுருகி மரணக் காவியம் படைக்கிறார். 
  
  புத்தருக்கு அசோக மன்னர் எழுப்பிய கற்தூண்கள் போல எந்த மன்னனும் இராமனுக்கு 
  பிறந்த மண்ணான அயோத்தியா புரியில் தூண்கள் கட்டவில்லை. அங்கே மசூதி யிருந்த 
  தளத்தில் கோயிலிருந்ததாக ஒரு புனைகதை. இராமன் தன்னை அவதார நாயகனாக் கருதவில்லை 
  என்று வால்மீகி ராமாயணம் மூலம் தெரிய வருகிறது. ஆனால் இந்து மதவாதிகள், அரசாங்க 
  ஆதிக்கவாதிகள் இராமனைத் தேவனாக நம்பிக் கொண்டு, இந்துக்களையும் நம்ப வைத்துச் 
  சட்டத்துக்கு விரோதமாய், புதியதோர் ஆலயம் கட்ட இஸ்லாமியரின் மசூதியை ஓரிரவில் 
  இடித்துத் தள்ளினார்கள். புனிதன் இராமன் பிறந்த புண்ணிய பூமியே முதலில் இந்து 
  முஸ்லீம் கலவரத்துக்கு அடித்தளமாகி, பிறகு அது குஜராத்தில் கொந்தளிப்பாகி, 
  டெல்லியில் ரயில்பெட்டி எரிப்பாகி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தீயிட்டுக் 
  கொளுத்தி தற்காலத்து முற்போக்கு மாந்தர், கற்காலத்தை நோக்கிப் பிற்போக்கில் 
  சென்று, அரசியல் வாதிகளின் தூண்டுகோலில் மாட்டி நாட்டிலெங்கும் வினை 
  விதைத்தார்கள். 
  
  இனிய இந்தியனே! 
  பிறனை நேசித்துப் 
  பிறனைப் புரிந்து கொண்டால் 
  (உறுதியாய்) நமக்குள் 
  ஓர் வல்லரசு தோன்றாதா?
  
  இவ்வாறு வல்லரசு என்னும் வார்த்தையை இரட்டைப் பொருளில் விளக்குகிறார். 
  
  "உயிரின் ஒலியில்" என்னும் காதல் கவிதை அந்திம வேளையில் உயிர் அணையப் போகும் 
  மங்கை ஒருத்தியின் நேசத்தை கல்லும் உருகும்படி அன்பனுக்குக் கனிவாகச் சொல்கிறது. 
  இங்கே ஒரு சிறுகதை உருவாகிறது. துன்ப முடிவை நோக்கிப் பயணம் செய்யும் அன்பின் 
  அத்தமன நாடகம்! 
  
  உயிர் ஊசலாடுகிறது, அந்தி நேரத்தில் மங்கி அணைந்திடும் வெளிச்சம் போல். ஆயினும் 
  என் நேசத்தை நீ யின்னும் அறியவில்லை என்பது என்னை உறுத்துகிறது! அணையப் போகும் 
  விளக்கின் உயிர்த் துடிப்பு உன் செவியில் கேட்கிறதா? அன்பனே! எத்தனை முறைகள் 
  மீண்டும், மீண்டும் சொல்லி யிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன் என்று. மரணத்தின் 
  வாசலில் நுழைந்தாலும் என் நேசம் வலியது. எமனது இரும்புக் கரங்கள் என்னை இழுத்துச் 
  செல்வதற்குள், உன் விரல்களைப் பற்றி அவ்வார்த்தைகளை ஒருமுறைச் சொல்ல என் ஆன்மா 
  துடிக்கிறது. ஆனால் சொற்கள் உதடுக்குள் உறைந்து போய் விட்டன! சொற்கள் குஞ்சுகள் 
  போல் ஓட்டை உடைத்து வெளிவரத் துடிக்கின்றன. என் அன்புக்குரியவனே! இனி நேரமில்லையே 
  அதற்கு? உறுதி படைத்த நம்பிக்கை அது என்பதை ஐம்புலன்கள் உணருமா? வெண்ணிறத்தில் 
  பன்னிற வானவில் மறைந்துள்ளது ஏன் உனக்கு தெரியாமல் போயிற்று?
  
  இப்போது உடலும், உணர்வும் மௌனச் சமாதியில், நிரந்தரமாய்ச் சங்கமம் அடையப் 
  போகின்றன! மூழ்கும் படகின் மூச்சுப் நின்று பயணம் முடியப் போகிறது! உடலுக்கு 
  நங்கூரம் பாய்ச்சி உயிருக்கு விடுதலை! அந்திப் பொழுதோ கண்மூடப் போகிறது! ...தீபம் 
  அணையும் சமயம்! .. கொஞ்ச நேரந்தான். பிறகோ ஓசையும், ஒளியுமில்லா உலகில் மூழ்கிப் 
  போவேன். அதற்குள் அறைக்குள்ளே அசைந்தாடும் உன் நிழலை மட்டும் எனக்குக் 
  காட்டுவாயா? என்று அணையும் விளக்கு அதன் துணையிடம் துன்ப நாடகம் போடுகிறது! 
  
  பந்தக்கால் வேண்டாம்! சொந்தக்கால் போதுமடா!
  
  "என்ன விலை காதலே" என்னும் கவிதையில் காதலர் இல்லறத் தம்பதிகளாய் ஆகும்போது 
  ஏற்படும் தொல்லைகளை எடுத்துக் காட்டுகிறார். காதல் புரியும் ஆண், பெண் இருவர் 
  திருமணம் புரிகையில் அவரது இருதரப்புக் குடும்பத்தாருடன் அடிக்கடி உறவாடி ஒட்டிக் 
  கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேருகிறது. ஆனால் காதலிக்கும் ஆணும் பெண்ணும் 
  கல்யாணம் செய்தபின் தனியாக ஓர் உல்லாசத் தீவில் வாழத் திட்ட மிடுகிறார்! ஆனால் 
  உல்லாசத் தீவில் அன்னை, தந்தை, தமையன், தமக்கை இல்லாமல் தனியாக வாழ முடியுமா? 
  தற்காலக் குடும்பங்களில் முக்கியமாக தம்பதிகளின் வயோதிகப் பெற்றோர் பாரமாகிக் 
  கண்காணிக்கப் படாமல் புறக்கணிக்கப் படுகிறார். சகோதர, சகோதரிகள் உறவாட முடியாதபடி 
  விலக்கப் படுகிறார். தம்பதிகளின் வீட்டுப் பிரச்சனையே கைவச நிதிப் 
  பற்றாக்குறைக்குப் பிறகு, வயோதிகப் பெற்றோரைப் பேணும் பொறுப்புதான்! பொறுப்பு 
  யார் மீது விழுகிறது என்னும் தீராத போரே! பெண்ணின் பெற்றோர் அறவே வரவேற்கப் 
  படுவதில்லை! ஆனால் ஆண்டுதோறும் வேண்டும் தீபாவளிச் சன்மானங்கள் பெண் வீட்டார் 
  கொண்டு வந்தால் பேரானந்தம், பெருமதிப்பு, பெரு வரவேற்பு! தீபாவளி விளக்குகள் 
  அணைந்த பிறகு மறுபடியும் அவர்மீது பெருவெறுப்பு, அருவருப்பு, கடுகடுப்பு! இவை 
  யாவும் வீடுகளில் மீண்டும் மீண்டும் நிகழ்பவை. 
  
  பெண்ணின் பெற்றோருக்குக் கணவன் தரும் வெறுப்பு வெகுமதி போல், பலரது வீடுகளில் 
  மனைவியும் கணவனின் பெற்றோரை வரவேற்பதில்லை. புற்று நோயுடன் மருத்துவம் பெற, 
  ஊரிலிருந்து அழைத்து வந்த வயோதிகத் தாயைப் படியிலே நிறுத்தி "வீட்டுக்குள் 
  அழைத்து வரக் கூடாது, மருத்துவ மனைக்குக் கொண்டு செல்," என்று கணவனுக்கு கட்டளை 
  யிட்ட ஒரு கருணையற்ற மாதை நான் அறிவேன்.
  
  "சென்ற நிமிடம் வரை
  நீயும் நானும் காதலித்தது.... 
  உண்மை!
  (திருமணம் புரிய ஒப்புக் கொண்டோம்)
  இப்போது நீ சொல்கிறாய், 
  அண்ணன் ஒரு தண்டச் சோறு,
  அவன் வேண்டாமாம்! .... 
  அணியணியாய்க் கழற்றி 
  (பொன் நகைகள்)
  அத்தனையும் விற்று 
  என்னைப் படிக்க வைத்த 
  என்னருமை அம்மா வேண்டாமாம்!
  எட்டு விரல்களைத்
  தட்டச்சில் தாரை வார்த்து (உதவிய)
  என் அக்காள் வேண்டாமாம்!
  ஓய்வு பெற்ற பின்னும் 
  ஒன்னே கால் லட்சத்தை 
  அன்பளிப்பாய்த் தந்த 
  (என்னருமை)
  அப்பாவும் வேண்டாமாம்! 
  
  "அன்பனே! என்னைக் காதலித்த காலத்தில் அப்பாவை, அம்மாவைத் தப்பாமல் தரிசித்தாய்! 
  அக்கா, தங்கையிடம் சிரிப்போடு பேசினாய், பழகினாய்! வெள்ளித் திரைக்கு அண்ணன்தான் 
  உன் கூட்டாளி! திருமணம் என்றவுடன் அத்தனை பேர்களையும் அறுத்தெறியும் பாதகனே! 
  
  கேளடா அறிவு கெட்டவனே! 
  
  கல்யாணம் ஆகிவிட்டால்,
  கல்லாகி விடுவேனா?
  கயவர்கள் உலகத்தில் 
  சுயநலமே வாழ்க்கை யெனில் 
  எனக்குப்
  பந்தக்கால் தேவை யில்லை!
  சொந்தக்கால் போதுமடா!
  
  என்று காதலன் கன்னத்தில் பளாரென்று சொற்களால் வைகைச் செல்வி அறைவது நம் நெஞ்சில் 
  இடிச் சத்தம் போல் எதிரொலிக்கிறது! தன்னை மட்டும் நேசித்து தன்னுடன் பிறந்தாரைத் 
  தூசிக்கும் காதலன் உண்மையான காதலனா என்று ஐயுற்று அவனைப் புறக்கணிக்கிறார். 
  திருமணம் புரியும் ஒருவன் தன்னை நேசிக்கும் ஒரு தனிப் பெண்ணை மணப்பதாகத் 
  தெரிந்தாலும், மெய்யாக அவன் மணம் புரிவது ஒரு கூட்டுறவுப் பண்பில் வளர்ந்த 
  குடும்பப் பெண்ணைத்தான். ஆக திருமணச் சந்திப்பு நிலையத்தில் சேரும் இரயில் 
  தொடர்கள் இரண்டு. இருதரப்பு எஞ்சின்கள் ஒரே பாதையில் ஒதுங்கி ஓய்வெடுக்கும் போது 
  மோதிக் கொள்ளாமல் இருப்பது அபூர்வம். சந்திக்கும் போது அடுத்தடுத்த பாதைகளில் 
  இணையாக இயங்கி, மோதாமல் போதல் அறிவுடைமை. 
  
  
  (தொடரும்)
jayabarat@tnt21.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991


