| டிசமப்ர் 3, 2007: புதினம்.காம்!இராணுவத்தீர்வு சாத்தியமற்றது: இந்தியா, 
  ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக அறிவிப்பு!
 
   இலங்கையில் 
  இடம்பெற்று வரும் மோதல்களுக்கு இராணுவத்தீர்வு சாத்தியமாகப் போவதில்லை என்றும் 
  அதற்கு பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வைத் காண்பதற்கு எல்லா நாடுகளும் 
  ஊக்கமளிக்க வேண்டும் என்றும் இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக வெளியிட்ட 
  அறிக்கையில் தெரிவித்துள்ளன. இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற மாநாட்டின் 
  முடிவில் இருதரப்பும் கடந்த சனிக்கிழமை (01.12.07) வெளியிட்டுள்ள அறிக்கையில் 
  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
 சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட வேண்டிய காத்திரமான அதிகாரப் பகிர்வு 
  தீர்வுத் திட்டம் பல சகாப்தங்களாக இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டு 
  வருவதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
 
 இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது. இணைந்த 
  இலங்கைக்குள் எல்லாச் சமூகத்தினராலும்
 ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வு காணப்படுவதற்கு 
  அனைத்துலக சமூகம் ஊக்குவிப்புக்களை வழங்க
 வேண்டும்.
 
 காத்திரமான அதிகாரப்பகிர்வு தீர்வுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படுவது அதற்கான 
  பிரதான காரணியாகும். எல்லாத்தரப்பினரும் மனித உரிமைகளையும், அனைத்துலகத்தின் 
  மனிதாபிமான விதிகளையும் மதிக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் மனிதாபிமான உதவிகள் 
  கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
 
 2005 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் 
  இடையில் இடம்பெற்று வரும் மோதல்களை
 இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. இந்த 
  மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் பாலியாகி
 உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 இந்தியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நடைபெற்ற 8 ஆவது மாநாட்டில் 
  இந்தியத் தரப்பில் பிரதமர் மன்மோகன் சிங்,
 வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத், தேசிய 
  பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் போத்துக்கல் நாட்டின் பிரதமரும், ஐரோப்பிய ஒன்றிய 
  சபையின் தலைவருமான ஜோஸ் சொக்ரேற்,
 ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜோஸ் மனுவேல் பராசோ, ஐரோப்பிய ஒன்றியத்தின் 
  வர்த்தகதுறை ஆணையாளர் பீற்றர்
 மன்டேல்சன், போத்துக்கல் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கோமேஸ் கிரவின்கோ ஆகியோர் 
  கலந்து கொண்டனர்.
 
 நன்றி: புதினம.காம்
 
  டிசம்பர் 3, 2007: தினக்குரல்.காம்!கொழும்பு நகரெங்கும் நேற்று 3000 இற்கும் மேல் தமிழர் கைது!
 
  நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைப்பு
  
  கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 
  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு இவர்களில் பல 
  நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். அண்மைக் காலங்களில் 
  என்றுமில்லாதளவுக்கு கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினரும் 
  பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை இந்தத் தீவிர 
  தேடுதலில் ஈடுபட்டனர். 
 இதன் போது கொழும்பு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வத்தளை மற்றும் நீர்கொழும்பு 
  பகுதிகளிலும் 3000 இற்கும் மேற்பட்ட
 தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 காலி பூஸா முகாம் கடந்த இரு நாட்களில் தமிழர்களால் முற்றாக நிறைந்து விட்டதால் 
  நேற்று முழுநாளும் கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் தெற்கில் களுத்துறைச் 
  சிறைக்கும் கொழும்பிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
 
 கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்றுக்காலை வீதிகளில் 
  இறங்கியவர்கள் அனைவரும் ஏதோவொரு பகுதியில்
 படையினரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
 கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களிலும் அதிகாலை முதல் 
  பிற்பகல் வரை அனைத்து வாகனங்களும் தடுத்து
 நிறுத்தப்பட்டு அவற்றில் வந்தவர்கள் ஒருவர் விடாது பலத்த 
  சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
 
 இதனால் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை கொழும்பு நகரில் நுழைவாயில் பகுதிகள் 
  ஒவ்வொன்றிலும் பல மைல் தூரத்திற்கு
 வாகனங்கள் பல மணிநேரம் வரிசையாகக் காத்திருந்தன.
 
 கொழும்பு நகருக்குள் பிரவேசித்த தமிழர்கள் அனைவரும் தீவிர 
  சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு, 
  படையினர் அந்தந்தப் பகுதிகளில் நிறுத்திவைத்திருந்த பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு 
  செல்லப்பட்டனர்.
 
 கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது பெற்றோரும் 
  உறவினர்களும் பொலிஸ்
 நிலையங்களுக்கு படையெடுத்ததால், நேற்று முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் மறைவான 
  இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு
 விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
 
 கொழும்பின் மேற்குப் பகுதியில் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தைப் 
  பகுதிகளில் வீடுகள், வீதிகளில் கைது செய்யப்பட்ட
 நானூறுக்கும் மேற்பட்டோர் ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற்றப்பட்டு 
  கொள்ளுப்பிட்டி சென்.மைக்கல் கல்லூரிக்கு கொண்டு
 செல்லப்பட்டு நண்பகல் வரை விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பெரும்பாலானோர் 
  சிறைச்சாலைகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும்
 அனுப்பப்பட்டனர்.
 
 ஆண், பெண் வேறுபாடின்றியும் வயது வேறுபாடின்றியும் தமிழர்கள் என்ற காரணத்திற்காக 
  நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் கைது
 செய்யப்பட்டனர்.
 
 நேற்று மாலை வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள சிங்களப் பாடசாலை 
  ஒன்றுக்குள் 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மிக நீண்டநேரம் 
  தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
 
 இவர்களை விடுவித்துச் செல்வதற்காக பெற்றோரும் உறவினர்களும் மணித்தியாலக் கணக்கில் 
  காத்திருந்தனர்.
 
 இதேநேரம், கொழும்பு பாலத்துறை (தொட்டலங்கா) பகுதியிலும் பல நூற்றுக்கணக்கான 
  தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
 இந்த சோதனை நிலையமூடாக கொழும்பு நகருக்குள் நுழைய ஆயிரக்கணக்கான வாகனங்கள் 
  நேற்றுக் காலையிலிருந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தன.
 
 இதனால், கொழும்பு - நீர்கொழும்பு வீதியல் பல மைல் தூரத்திற்கு வாகனநெரிசல் 
  ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துத்
 தடையுமேற்பட்டது.
 
 கொழும்பு நகருக்குள் வரும் நுழைவாயில்களிலெல்லாம் இவ்வாறு தீவிர சோதனைகளும் 
  கைதுகளும் நடைபெற்றுக் கெண்டிருந்தபோது,
 கொழும்பு நகருக்குள் கொழும்பு-1 முதல் கொழும்பு-15 வரையான அனைத்துப் பகுதிகளிலும் 
  முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களையும் சோதனைகளையும் 
  மேற்கொண்டனர். இதன் போதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 
  பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
 
 கொழும்பு நகருக்குள் இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த 
  போது நகருக்கு வெளியே வத்தளை,
 ஹெந்தளை, மாபொல, தெஹிவளை, கல்கிசை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் 
  நடைபெற்றன.
 
 காலை, மாலையெனப் பாராது மட்டக்குளி, முகத்துவாரம், அளுத்மாவத்தை, கொட்டாஞ்சேனை, 
  கொஞ்சிக்கடை, கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் 
  நடத்தப்பட்டன.
 
 கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பஸ்நிலையம், குணசிங்கபுர தனியார் பஸ் 
  நிலையத்திலும் முப்படையினரும் இந்த
 நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அமைச்சின் விஷேட உத்தரவின் பேரிலேயே 
  இந்தத் தேடுதல்களும் சோதனைகளும்
 கைதுகளும் இடம்பெறுவதாக படைத்தரப்பு தெரிவித்தது.
 
 கிழமை நாட்களில் வெளியிடங்களிலிருந்து பெரும்பாலும் சிங்கள மக்களே கொழும்பு 
  நகருக்குள் வருவர். ஞாயிற்றுக்கிழமை போன்ற
 விடுமுறை நாட்களில் கொழும்பு நகரில் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே இருப்பதால் 
  நேற்று இந்தத் தேடுதல்களும் கைதுகளும்
 இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
 நேற்று மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக 
  தகவல்கள் தெரிவித்தன. பல்லாயிரக்கணக்கானோர் தீவிர 
  விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
 கொழும்பில் இந்தத் தேடுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நீர்கொழும்பு 
  நகரிலும் நேற்றுக் காலை தேடுதல்களும்
 சோதனைகளும் இடம்பெற்றன.
 
 
  இங்கு மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல லொறிகளில் 
  ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 
  இந்தத் தேடுதல்கள் மற்றும் கைதுகளுக்கு அஞ்சி நேற்று கொழும்பு நகரில் பெரும்பாலான 
  மக்கள் வீடுகளை விட்டு வெளியே 
  வரவில்லை. வந்தவர்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டு பலத்த விசாரணைக்குட் படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டு
  சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பி வழிவதாகத் 
  தெரிவிக்கப்படுகிறது 
 நன்றி: தினக்குரல்.காம்
 |