| 
அம்பை : நவீன தமிழிலக்கியத்தில் மிகவுயர்ந்து 
ஒலித்த பெண்ணியக் குரல்
 -தேவகாந்தன்-
 
 [வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காகக் 
கனடாவில் இயங்கும் இலக்கியத் தோட்டம் அமைப்பு வருடாவருடம் வழங்கும் 2008ம் 
ஆண்டுக்கான "இயல்'' விருது 'அம்பை'க்கு ( சி.எஸ்.லஷ்மிக்கு ) 
வழங்கப்பட்டிருக்கிறது. அதன்பொருட்டு வெளிவரும் கட்டுரையிது.]
 
 ஒரு விருது பற்றிய அறிவிப்புக்குப்; பின்னால் அது குறித்த சலசலப்போ சர்ச்சையோ 
தவிர்க்க முடியாதபடி எழுந்தே வந்திருக்கிறது. எங்கேயும்தான்;. இலக்கியத் 
தோட்டத்தின் இயல் விருது இவ்வாண்டு அம்பைக்குக் கிடைத்திருப்பதான அறிவிப்பு 
வெளிவந்தபோது அபூர்வமாக அவ்வாறான சலப்பையோ சர்ச்சையையோ அவதானிக்க முடியவில்லை. நவீன 
தமிழிலக்கியத்தில் தெளிவுடன் மிகவுயர்ந்தொலித்த பெண்ணியக் குரலாக அவரது 
எழுத்துக்கள் (மற்றும் செயற்பாடுகளும்) ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் அந்த 
சலனமின்மையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். 
 அம்பையை எனக்கு நேரில் பழக்கமில்லை. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சிறிதுகாலம் 
கடிதத் தொடர்பு கொண்டிருந்தது மட்டும்தான். அதுவும் நான் ‘இலக்கு’ சிற்றிதழை 
நடாத்திய காலத்தில் இதழ்கள் அனுப்பியதாலும், கட்டுரை கேட்டு கடிதம் எழுதியதிலும் 
ஏற்பட்ட தொடர்பே. மே 1996 இல் ‘இலக்கு’வின் ஆறாவது இதழ் தி.ஜானகிராமன் சிறப்பு 
மலராக வந்தது. நான் கேட்டதற்கு உறுதி அளித்திருந்தபடி அம்பை தி.ஜா.நினைவு மலருக்கு 
கட்டுரை அனுப்பியிருந்தார். ‘பசு, பால்,பெண்: தி.ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில 
சிந்தனைகள்’ என்பது அக் கட்டுரையின் தலைப்பு. ‘மரத்துப் போன பசு, மரத்தால் ஆன பசு 
என்று பால் வற்றிப்போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு 
பொருள்படும்படி பெண்ணை உவமித்துக் கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை 
பெண்பாலைப்பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் 
கட்டப்படட்ட பாதை’ என்று தொடங்கியிருக்கும் அந்தக் கட்டுரை.
 
 கணையாழியில் ரசித்து வாசித்த அம்பையின் சிறுகதைகள், எழுத்தின் பொருள் குறித்த 
தன்மையாலும் மற்றும் நடையாலும் ஓர் அவதானிப்பையும் ஆதர்~த்தையும் ஏற்கனவே நான் 
ஈழத்தில் இருந்தபோதே ஏற்படுத்தியிருப்பினும், இவரது ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கி 
1976இல் வெளிவந்த ‘சிறகுகள் முறியும்’ தொகுப்பினை 1984இன் பின் தமிழகத்தில் 
இருந்தபோது வாசித்த பின்னால் என்னளவில் இவரை முக்கியமான எழுத்தாளராக ஆக்கியது. 
பெண்ணியம் சார்ந்த கருதுகோள்களை கட்டுரைகள் மூலமாகவன்றி, அம்பையதும் அம்பை 
போன்றோரதும் படைப்பிலக்கியமூடாகவே ஆரம்பகாலத்தில் அறிய முடிந்திருந்தது என்போன்ற 
பலருக்கும். அதனால் தி.ஜா.நினைவுமலருக்கான அம்பையின் கட்டுரை மரப்பசு நாவலை 
அலசியவிதம், ஒரு நாவலாக அது என்னை வசீகரித்திருந்தபோதிலும் அது கருத்தாடலில் 
முரண்கொண்டிருந்ததை ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டது. ஒரு நாவலை வாசக ரசனைக்கப்பால் 
சென்றும் அதன் உள்ளார்ந்திருக்கும் அர்த்தத்தை, அரசியலை அறியவேண்டிய அவசியத்தை, 
தெரிதாவின் கட்டவிழ்ப்பு வாதம்பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னாலேயே 
செய்தது அம்பையின் மரப்பசு நாவல்பற்றிய கட்டுரை என்பதாய் இப்போது நினைவுகொள்ள 
முடிகிறது.
 
 இந்தக் கட்டுரை முக்கியமானது. பெண்ணியல் குறித்த சொல்லாடலை தமிழ்மரபில் 
நிலைநிறுத்தி வைத்த முக்கியமான பெண் படைப்பாளின் கட்டுரைகளில் ஒன்று. சோரன் 
கீர்க்கேகார்ட் (ளுழசநn முநைசமநபயயசன 1813 – 1855) என்ற ஆரம்ப பெண்ணிலைவாதத்தின் 
தத்துவவாதி காலத்திலிருந்து, பெண்ணிய தத்துவங்கள் பரந்துபட்டனவாய், பலதரப்பட்டனவாயே 
இருந்துவந்திருக்கின்றன. ஒவ்வொரு தத்துவத்தின் பின்னாலும் தனிப்பட்ட 
அனுபவங்களினதும், அறிகைகளினதும் தாக்கம் இருந்துகொண்டிருந்தது. அறுதியான ஒரு முடிவை 
அடைய இவை தடைக்கல்லாக இருந்தன என்ற வேளையில், தவிர்க்கப்பட முடியாதனவாய் விரிந்த 
சிந்தனைக் களத்தை உருவாக்கின என்பதும் நடந்தது. இந்தத் தளத்திலிருந்து 
செயற்பாட்டுக்கான தத்துவங்கள் வகிர்ந்தெடுக்கப்பட்டன. இன்றைய பின்நவீனத்துவ, 
ஜனநாயக, இடது சிந்தனை மரபுகளிலிருந்து ஒரு பொதுத்தள அமைப்பு காணப்பெற்று அந்த 
அமைப்பிலிருந்தான ஒரு செயற்பாட்டுத்தளம் இயக்கம்பெற்றிருக்கிறது. இச் 
செயற்பாட்டுத்தள இயக்கத்திலிருந்து அம்பையின் கருதுகோள்கள் உருவாகியுள்ளன என்பது 
ஒரு சரியான முடிவாக இருக்க முடியும்.
 
 
  காமம் என்ற முழுநிலையில் பெண்ணுடல் கொண்டிருக்கும் பங்கு ஒருபக்கச் சார்பாகவே 
அர்த்தபாவனையாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெண்ணுடலின் விடுதலையை 
முதன்மையாக்கி, அதனைப் புரிந்துகொள்வதின்மூலம் தொடரும் விடுதலைகளின் நிர்மாணத்தைச் 
சாத்தியமென்று அக் கட்டுரை தெளிவாகவே பேசுகிறது. அம்பை சொல்கிறார்: 
‘உடலிலிருந்தும், அதன்மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிருந்தும் விடுபட 
உடலையே ஒரு பிரதிபோல் பாவித்து மறுவாசிப்புச் செய்ய வேண்டிய அவசியம் 
ஏற்பட்டிருக்கிறது.’
தி.ஜா.வின் சிறந்த நாவல் ‘மோகமுள்’ என்பாருளர். எம்.ஏ.நுஃமான் தனக்குப் பிடித்தமான 
தி.ஜா.வின் நாவலாக மோகமுள்ளை எடுத்துக்கொண்டு அதை விமர்சன ரீதியில் அணுகிய கட்டுரை 
அவரது ‘இலக்கியமும் திறனாய்வும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலிலே உண்டு. எனக்கு 
‘மோகமுள்’ளும் பிடிக்கும், ‘செம்பருத்தி’யும் பிடிக்கும். ஆனால் ‘மரப்பசு’ மிகவும் 
பிடிக்கும். நான் பல தடவைகள் வாசித்த பிரதி அது. தி.ஜா.வின் ‘அம்மா வந்தா’ளை 
விடவும். கட்டிறுக்கம், பாத்திர வார்ப்பு, அது வட்ட அலைகளில் விரிந்துசென்று பல 
களங்களையும், பல அர்த்தங்களையும் பல அடுக்குகளையும்கொண்டு வாசகனை ஒரு மவுனத்தில் 
உறையவைத்து முடிந்திருக்கும். இப்போதும் தி.ஜா.வின் நாவல்களுள் எனக்குப் பிடித்ததாக 
‘மரப்பசு’வைச் சொல்ல எனக்குத் தடையில்லை. ஆனால் அதன்மீதான கவுரவம் அன்றிருந்ததுபோல் 
இன்றில்லை என்பதையும் சேர்த்தே நான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு அம்பையின் கட்டுரை 
அதனை ஒரு முழுக்கட்டவிழ்ப்புக்குள் உள்ளாக்கியிருந்தது. அம்பையேகூட அது தன் 
வாசிப்பின் வெளிப்பாடு, மற்றும்படி அதில் கட்டவிழ்ப்பு என்று 
எதுவுமில்லையென்றாலும், அது கட்டவிழ்ப்புத்தான். விமர்சக கட்டவிழ்ப்பு 
இல்லையெனினும், வாசக கட்டவிழ்ப்பு. 
 அம்பை கட்டுரையின் ஓரிடத்திலே கூறுவார், ‘(நாவலின்) இரண்டாவது சறுக்கல் 
மீறல்ஷசுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க 
விரும்பவில்லை அம்மணி. தான் புணரவேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் 
புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல்பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு 
முன்னர், ‘ஆயிரம் யோனிகள் உடையவள் நான்’ என்று தன் உடலின் எல்லைகளை 
விஸ்தரித்துக்கொண்டு, உருவகரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளைய வந்தவள் 
அக்கமகாதேவி எனும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் 
முறிக்கப்படுவது ஏற்கவேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது 
நிலைகொள்ள அவகாசம் எடுப்பதுபோல, உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட 
எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்ப கட்டம்தான். விடுபடும் 
குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல் இதுவும் ஒரு கட்டம்தான். 
இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. 
ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். 
உடம்;பையும், தன்னையும். உலகையும், விண்ணையும், வானையும் புரிந்துகொள்ளும் ஒரு 
கட்டம். இப்படியெல்லாம் இதைப் பார்க்க தி.ஜா.வுக்கு முடியவில்லை. காரணம் இவர் 
எல்லாவற்றையும் ஏற்கனவே உள்ள கச்சிதமான அடைப்புகளுக்குள் போட விரும்புகிறார்.’
 
 
  இந்த விமர்சனரீதியிலான முடிவைச் சுலபமாக ஒரு கட்டவிழ்ப்பில் கண்டடைந்துவிட 
முடிகிறதுதான். அல்லது புணர்ச்சி விடுதலையோடு பெண்ணின் மொத்த மன, உடல் 
விடுதலைகளினைக் கண்டடையும் சாத்;தியத்தின் நம்பிக்கை பெறப்பட்டுவிடுகிறதுதான். ஒரு 
சுளுவான வழியாகக்கூட இது முதற் பார்வைக்குத் தோன்றக்கூடும். ஆனால் படைப்பில் 
இதற்கான மொழியைக் கண்டடைவது சாதாரணமான காரியமாகி விடுவதில்லை. பெண்மொழியென்பது 
பெண்ணின் அனுவங்களினூடாகக் கண்டடையப்படும் பெறுமானங்களை வெளிப்படுத்துவதற்கான ஊடகம் 
மட்டுமல்ல. அனுபவங்களையே மொழியாக்கிப் பகிர்வது. அது தமிழல்லாத அல்லது தமிழில்லாத 
வார்த்தைகளின் அடைதல் அல்ல என்பது மிகச் சரியான வரையறையே. ஒரு மீறலைச் செய்யாமல் 
அதன் எல்லைகள் அடைதற்கூடியனவல்ல என்பதே பெண்மொழி அடைதலின் சூக்குமம். அதை 
படைப்பாக்க முயற்சியொன்றின்போதே சிரமசாத்தியங்களில் தரிசிக்க முடிகிறது 
படைப்பாளியினால். 
தமிழில் கவிதைச் சாத்தியங்கள், பல பெண் கவிஞர்களுக்கும் ஓரோர் எல்;லைவரையில் 
கைகூடியுள்ளமை தம் அனுபவ வெளிப்பாட்டுக்கான ஒரு மொழியின் கண்டடைதலின் விளைவே என்பது 
நூற்றுக்கு நூறு சதவீதமும் உண்மை. அதை வெகு சில குரல்களே திசைகாட்டும் கருவியாய் 
நின்று வழிகாட்டியிருக்கின்றன. அவற்றினுள் ஒன்று அம்பையினது என்பதில் எனக்கு 
மாறுபட்ட கருத்தில்லை.
‘சிறகுகள் முறியும்’ தொகுப்புக்குப் பிறகு அம்பையின் மேலும் இரு சிறுகதைத் 
தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. 1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) 2. 
காட்டில் ஒரு மான் (2000). இவை ஒற்றைத் தொகுப்பாக்கப்பட்ட ஒரு வெளியீடும் ‘அம்பை 
சிறுகதைகள்’ என்ற பெயரில் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இத்தனை கதைகளையும் 
வைத்துப் பார்த்தால் ஆண்டுக்குச் சராசரியாக ஒரு சிறுகதையையே அம்பை படைத்திருப்பது 
தெரியும். தன் ஆளுமைக்கான இவரின் வேறு துறை ஈடுபாடுகள் இதற்குக் காரணமாக 
இருக்கமுடியுமெனினும், ஏறக்குறைய ஐம்பது சிறுகதைகளில் தன் நோக்கில் 
வெளிப்படுத்தப்படவேண்டிய கருத்துநிலைகளை இவர் வெளிப்படுத்திவிட்டதாகக் 
கொள்ளமுடியும். எனினும் தான் வற்புறுத்திய பெண்மொழியில் படைப்பாக்க முயற்சியின் 
உதாரணத்துக்கு இவர் எழுதியுள்ள ‘கைலாசம்’ சிறுகதையை எடுத்துக்காட்டலாம். 
 மீறல் செயற்பாட்டினை மீறல் இல்லாத மொழியின் மூலம் வெளிப்படுத்திவிட முடியாது. 
முலைகளும், யோனியும், புணர்ச்சியும், விந்துவும், ஸ்கலிதமும், கொட்டைகளும் 
ஆண்களினதில் மட்டுமில்லை, பெண்களது படைப்புக்களிலும் இன்று நிறையவே 
வெளியாகிக்கொண்டிருக்கின்றன. குட்டி ரேவதியின் ஒரு கவிதைத் தொகுப்பின் பெயர் 
‘முலைகள்’. பெருமாள் முருகன் எழுதிய ‘பீக்கதைகள்’ போல இது மீறலின் ஓர் 
அடையாளம்தான். நாம் ஒரு மொழியைக் கண்டடையாமல் ஒரு புதிய உபாயத்தைப் பேசிவிடவே 
முடியாதென்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். தலித்துக்களுக்கான ஒரு மொழி இருப்பதுபோல, 
பெண்களுக்கான ஒரு மொழி இருக்கிறது. தத்தம் உணர்வுகளை அந்தந்த மொழியில் 
வெளிப்படுத்துகைக்கான பிரக்ஞை அந்தந்தப் படைப்பாளிகளுக்கு இருக்கவேண்டியது 
நியதியாகும். 2006 ஒக்-டிச. ‘உயிர்நிழல்’ இதழில் வெளிவந்த அம்பையின் ‘கைலாசம்’ 
சிறுகதை இந்தப் பிரக்ஞை தவறாத, அதேவேளை கலாநேர்த்தி குறையாத, படைப்பின் சிறந்த 
உதாரணம்.
 
 ‘கட்டிலில் சிகந்தர் நிர்வாணமாகக் கிடந்தான். போர்வை காலடியில் கிடந்தது. அவன் 
நீண்ட குறி ஒரு பக்கம் மடங்கி விழுந்திருந்தது. அவள் பார்க்கும் முதல் ஆண்குறி. 
சுன்னத்து செய்த குறி. சுதாவுக்கும் அது முதல் முறையாம். சுதா ஓடிப்போய் தன் 
பைனாகுலரை எடுத்துவந்தாள். இருவரும் வெகு அக்கறையுடன் அந்தக் குறியைப் பார்த்தனர். 
அதை மட்டும் பெரிதாக்கிப் பார்த்தபோது, அவன் உடலிலிருந்து விலகிய ஒன்றாய், ஒரு 
குட்டிப் பாம்பாய் அது பட்டது. சாதுப் பாம்பு. அவன் உடல் அசைவுகளுக்கு ஏற்ப அங்கும் 
இங்கும் மடங்கி விழுந்த பாம்பு’ என்று எழுதுவதற்கு முன்னர் ஒரு மரபை அம்பைக்கு 
முறிக்கவேண்டியதிருக்கிறது. இடக்கரடக்கலை ஓர் இலக்கணமாகச் சொல்லியிருக்கும் 
மொழியில், குறிகளுக்கான குறிப்பான்களை எளிதில் பிரத்தியட்சப்படுத்திவிட 
முடிவதில்லை. அது ஒரு தொடர்ந்தேர்ச்சியான முயற்சியிலேயே சாத்தியத்தை அடைகிறது. 
சிலவேளை யுத்தங்களில். தனக்கான ஒரு மொழியைக் கண்டடைய அம்பைக்கு எவ்வளவு காலம் 
தேவைப்பட்டிருக்கும்? அதற்கான முன்மாதிரி எழுத்துக்களுக்கு எவ்வளவு முயற்சி 
செலவாகியிருக்கும்?
 
 ‘மோகம் புரிவது எளிது. காதல் அப்படியல்ல. பெண்-ஆண் உறவு மிகவும் சிக்கலானது. 
அதில்தான் எத்தனை நெருக்கம், எத்தனை விலகல்? எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை? 
எத்தனை வன்முறை, எத்தனை மென்மை? எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு? எத்தனை ஆதூரம், 
எத்தனை ஆவேசம்? காதலிக்கும் நபரையே வி~ம்வைத்துக் கொல்லலாம் என்று ஆத்திரம் 
வருகிறது. தணிகிறது. பந்தம்போல் கட்டிப்போடுகிறது. கூடுபோல் ஆசுவாசம் தருகிறது. 
தகிக்கிறது. குளிர்விக்கிறது. என் உடலை ஒரு பிரதியாகப் பார்க்கும்போது அது ஒரு 
நிலைத்த பிரதியாக இல்லை, கைலாசம். அது மாறியபடி இருக்கிறது. அதன் தோற்றமும் 
அர்த்தங்களும் மாறியபடி உள்ளன. என் முலைகள் தளர்ந்து, சற்றே கீழிறங்கி உள்ளன. என் 
தொடைகளில் பச்சை நரம்போடுகிறது. கால்களிலும் கைகளிலும்கூட. என் அல்குல் ஒரு பழுத்த 
இலைபோல் இப்போது இருக்கிறது. என் ஐது மயிர் முன்போல் அடர்த்தியாக இல்லை. 
கருமையாகவும் இல்லை. நரைத்து இருக்கிறது. ஈரமில்லாமல் உலர்ந்து இருக்கிறது’ என்று 
நடுத்தர வயதைக் கடந்த கமலம் நினைக்கிறாள் கதையிலே. அது காதலையும் காமத்தையும், 
ஒருவகையில் தன் உடலையும்தான், கண்டடைய ஒரு பெண் எடுத்த தீரா முயற்சிகளின் அனுபவ 
வெளிப்படுத்துகை. கற்பு, பரத்தமை என்பன இல்;லாத ஒருவெளி தேடிய நன்கு படித்த, வேலை 
பார்க்கின்ற ஒரு பெண்ணின் கண்டடைவு. அதிலே இரக்கம் இருக்கிறது. அறம் இருக்கிறது. 
அன்பு இருக்;கிறது. கூடிவாழ்தலின் சமூகப் பிரக்ஞை இருக்கிறது. இந்த உணர்வின் 
வகைப்பாட்டைக் கண்டடைதலிலேயே என்றென்றைக்குமான பெண்மொழியின் முயற்சிகள் 
உற்சாகத்தோடு ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒருபோது நதிநீராக, ஒருபோது காட்டாறாக. 
இன்னொருபோது மெல்லென உதிரும் மழைத் தாரைகளாக உதிர்வின் பரவசம் கிளர்த்தியபடியும்.
 
 பெண் எழுத்துக்களில் ஒரு கோபம் எப்போதும் முகங்காட்டிக் கொண்டிருக்கின்றது என்ற 
ஆணுலகக் கூற்று உண்மையானதுதான். அதை அவசியமானது என்றே நான் நினைக்கிறேன். அது 
அவ்வாறுதான் தன் ஆரம்பதசையில் இருக்கவும் முடியும். அம்பையின் சுகந்தி 
சுப்பிரமணியனின் மறைவுக்கான மார்ச் 2009 ‘காலச்சுவ’ட்டில் வெளிவந்த இரங்கற் கடிதம் 
முக்கியமானவொன்று. அது தன் முழுக் கோபத்தையும் அடங்கிய தொனியில் 
வெளிப்படுத்தியிருந்தது. யாரையென்று குறிப்பாய்க் குறைசொல்ல முடியாது, 
சம்பந்தப்பட்ட அனைவரையும், அனைத்தையும் அது வெய்து தீர்த்ததாயிருந்தது. அது 
குறித்து சிறிய சர்ச்சையொன்றும் யமுனா ராஜேந்திரனுக்கும் அம்பைக்குமிடையே 
ஏற்பட்டிருந்தது. அது மறக்கப்பட்டுப்போன சர்ச்சையாக ஆகிவிட்டிருந்தாலும், அம்பையின் 
கடிதம் கொண்டிருந்த சமூகத்தில் பெண்கள் அடக்கவும் ஒடுக்கவும் படுவதான 
நிலைமையின்மீதான கோபம் மனத்தில் சாசுவதமாகியிருக்கின்றது. அக் கடிதத்தின் தலைப்பே 
‘புதையுண்ட சுகந்தி’ என்று ஒரு அநீதியின் கதையாக விரிந்துகொண்டிருக்கும்.
 
 கடிதத்தில் அம்பை மேலும் இவ்வாறு எழுதுவார்: ‘தன் வாழ்க்கைபற்றி பெரும் 
அதிர்ச்சிதரும் தகவல்களை அவள் என்னிடம் கூறியிருக்கிறாள். அவை உண்மை என்று 
நிரூபிக்கத் தன்னிடம் சாட்சிகள் உண்டு என்பாள். அவள் கூறிய அத்தனை திடுக்கிடும் 
தகவல்களும், மனப்பிறழ்வால் ஏற்பட்ட அதீத கற்பனைகள் என்று அவள் கணவர் கூறுகிறார். 
இருக்கலாம். அவள் அன்னை கணவனைவிட்டு இன்னொருவருடன் வாழ்ந்தவர். இதனாலேயே பாட்டியால் 
மிகவும் வன்முறை கலந்த கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவள். அதன் பிறகு வன்முறை அவள் 
வாழ்க்கையின் ஓர் அங்கமாகிப்போயிற்று….அவள் ஒரு நல்ல மனைவியாகவோ, ஒரு நல்ல தாயாகவோ 
இருந்தாளா என்று எனக்குத் தெரியாது. அவள் வதைபட்ட பெண்.’
 
 இந்த ஆக்ரோ~ம் முக்கியமானதல்லவா? இதுவில்லாமல் பெண்நிலை வாதத்தை வெறுமனே 
பேசுவதாலும் எழுதுவதாலும் என்ன ஆகிவிடப்போகிறது? மேலும் படைப்புக்கே இதுதானே 
மூலக்கனலும்!
 
 தலித்தியம், பெண்ணியம் என்பன தமிழின் இன்றைய வளங்கெழு புதிய கிளைகள். நவீனத்துவச் 
சொல்லாடலுக்கான பாரிய களங்களைக் கொண்டவை இவை. ஒருவகையில் மரபுரீதியிலான காலகால 
இலக்கிய வகைமைகளுட்படாமல் தனித்து நிற்பவைகூட. இந்தவகையில் செம்மைசார்ந்த இலக்கிய 
முயற்சிகளுக்கு இதுவரை முன்னுரிமை அளித்துவந்த இலக்கியத் தோட்டம், இவ்வாண்டு 
அம்பையை இயல் விருதுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பதன்மூலம், தன் பரப்பினை 
விசாலப்படுத்தியுள்ளமை பாராட்டுக்குரியது. அம்பைக்கான விருது அவரது இலக்கிய 
முயற்சிகளுக்கானது மட்டுமில்லை. அவரது இசை நடன ஆர்வங்களுக்கும், அதனாலான இசை நடன 
பெண் கலைஞர்களின் அனுபவப் பதிவுகளுக்கும், ஸ்பாரோ அமைப்பின் தோற்ற வளர்ச்சிப் 
பணிகளுக்காகவும், அவரது விவரணப் பட ஈடுபாட்டினுக்குமானதுதான். எனினும் ஓர் 
இலக்கியவாதியாய் அதை இலக்கியம் சார்ந்த விருதாகப் பாவிப்பதே எனக்கு உவப்பாக 
இருக்கமுடியும்.
 
 bdevakanthan@yahoo.com
 |