| 
  'உயிர்த்தெழல்'
 - முல்லைஅமுதன் -
 
 
  சுல்பிகாவின் மற்றுமொரு கவிதை நூல் இதுவாகும்.'விலங்கிடப்பட்ட மானுடம்' எனும் 
  நூலை ஏற்கனவே வெளியிட்டுள்ள சுல்பிகா 
  வீச்சுள்ள கவிதைகளை அச்சு ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் எழுதி 
  வருபவர்.கல்வி/சமூகச் சூழல் இவரைக் கவிஞராக்கி 
  இருக்கலாம்.80ற்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்களில் சுல்பிகாவும் 
  குறிப்பிடத்தக்கவர். யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞானப் 
  பட்டதாரி.திறந்த பல்கலைக் கழககல்வியியல் முதுமானி பட்டம் பெற்றவர்.கல்வித் 
  தகைமைகளுக்கப்பால் இவர் வகிக்கின்ற பதவி கூட 
  பலருடன் பழகும் வாய்ப்பு கிடைப்பதால் அனுபவங்கள் வழியாக நல்ல கவிதைகளை நாம் 
  தரிசிக்க முடிகிறது. பெண்ணியம்,விடுதலை 
  சார்ந்த சிந்தனைகள் அவர் பார்வையில் நமக்கு சொல்கிறார்.அழகியல் சார்ந்த 
  விசயங்களில் அதிக கவனம் செலுத்தி எழுதப் 
  பட்டுள்ளதாகவே உணர்கிறேன். முஸ்லீம் ஆராய்ச்சி செயல் முன்னனி இந் நூலை 
  வெளியிட்டுள்ளது. மனிதநேயம் மிக்கவர் என்பதையும் 
  கவிதைகள் மூலம் உணர்த்துகிறார்.இந்நூலில் 22 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.எல்லாக் 
  கவிஞர்கள் போலத்தான் உணர்வு சார்ந்து 
  சிந்திக்கிறார்.ஒவ்வொரு கவிஞனின் மன உணர்வுகள் மோதும் போது நல்ல கவிதைகள் 
  கிடைக்கின்றன.உணர்வுகளும், அழகியலும் 
  இணைந்து தரப் படும் கவிதைகள் காலம் வென்று நிற்கும். 
 'கொட்டிக் கிடக்கிறது
 பெண்ணின் பாலியல்
 மடி முட்டுமளவுக்கு நீ
 வட்டி கொள்ளலாம்
 குற்றமொன்றும்
 உன் மேலே வராது
 குற்றம் செய்தது
 கொட்டிக் கிடந்த
 பெண்ணின் பாலியல் தான்'
 உன்னைக் குதறி
 உயிர் குடித்தோர்
 எங்கெங்கு
 குதுகலமாயுள்ளாரோ
 அங்கெல்லாம் என் ஒலி
 எதிரொலிக்குமா?
 உன்னையோ யோனியாக்கி
 உன் யோனியைப் புண்ணாகிய
 காமுகக் கயவர்களின்
 காது பறைகள்
 வெடித்துச் சிதறுமளவிற்கு
 என் ஒலி எங்கும்
 எதிரொலிக்குமா?'
 
 காமுகர்களால் வதை படுகின்ற பெண்களின் வலிகளை அவர் மொழியில் நமக்கு சொல்கையில் 
  நமக்கும் வலிக்கிறது. தனி நபர்களின் 
  காமுகச் சேட்டைகளுக்கப்பால் இரானுவம்/துணைக்குழுக்கள் மூலம் வதைபடுகின்றவர்கள் 
  பற்றியும் இவர் சொல்ல வேண்டும்.ஏனெனில் 
  நமது இன விடுதலை/போராட்டம் பற்றிய சிந்தனை வேறாக வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய 
  பகுதிகளில் வாழ்கிற கவிஞர்கள் 
  வெளிப்படுத்தியது குறைவு.
 
 'இலங்கையரென நாம்
 இனி இணைவோம்
 இணைவதில் பெருமிதம்
 கொள்வோம்.
 துணிந்து பல சாதனை
 செய்வோம்-பிறர்
 துயர் துடைக்க
 வழி செய்வோம்.'
 'ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு
 அவரவர் அடிப்படைகள்
 முக்கியமானவை.
 தேக(சிய)வாதிகளுக்கு
 மூளையின் ஆளுகை மையங்கள்
 முக்கியமானவை.
 பல்தேசியக் கூத்தாடிகளுக்கு
 நோயாளியின்
 இரண்டும் கெட்டான் நிலை
 அவசியமானது.'
 சில சமயம் வருத்தம் எனக்குண்டு.வார்த்தைகளை முறித்து எழுதுவதனால் அவை கவிதையாகி 
  விடுமா?
 'மனித மன அழுக்குகளை
 அகற்ற முடியாத புத்தொளி
 அழுக்குகளின் அரிப்புக்குள்ளிருந்து
 தெறித்து வருமபிவிருத்திப் புத்தொளி
 அது கொண்டு வரும்விடியல்
 இதுவல்ல
 நான் தேடிய விடியல்'
 'கிழிக்கப்பட்ட என் புன்னகையும்
 நெரிக்கப்பட்ட என்
 குரல்வளையின் ஒலிகளும்
 எங்கும் பரவுகின்ற
 மனித மன அழுக்குகளை
 அகற்றுகின்ற
 சொர்க்க வெளிச்சம் எங்கும் பரவுகின்ற
 அந்தக் காலையின் விடியல்
 அது தான்
 நான் தேடுகின்ற விடியல்.'
 அவர் எதிர் பார்க்கின்ற விடியல் வசந்தமா?சுபீட்சமா?
 
 போராடாமல்,இன முரண்பாட்டு நெருப்பு வேலிக்கப்பால் நின்று எழுதுவதால் விடுதலை 
  பற்றிய சிந்தனையை சரியாக உள்வாங்கியதாக 
  சொல்லமுடியாது. எனினும் அவரின் மனித நேயம்,வாஞ்சையை நம்மாலும் உணர முடிகிறது.மனித 
  நேயம் மிக்கவரான பாரதியினால் 
  தானே சுதந்திரம் வேண்டி நின்ற மனிதத்தின் விடுதலை பற்றி பாட முடிந்தது.
 
 'தரித்திரம் பிடித்த நாரை
 கெழுத்தியை விழுங்கி விட்டது.
 நாரைகளின் சந்ததிகள்
 கெழுத்தி முட்களைப்
 பிரசவிக்கத் தொடங்கியுள்ளன
 எங்கும் கெழுத்தி முட்களின்
 கொடுமை தலை விரித்தாடுகின்றது....
 ஆக
 தரித்திரம்
 உயிர்த்தது
 மறுப்பிலிருந்து தான்...
 மறுத்தலை வெறுத்தல்
 இயல்பாக நடந்ததுதான்
 மறுத்தலை வெறுத்தல்
 மகிமையுடயதுதான்
 அதன் முள் வடிவம்
 மாசற்றதல்ல'
 
 எதையோ சொல்ல வருகிறார்.சொல்லாமலேயே உவமையாகி விட்டு தப்பி விடுகிறார்.
 
 'இப்போதெல்லாம்
 தெருவில் செல்வது கடினம்
 கற்கள் இட்டறவில்லை
 காயங்கள் இடறுகின்றன
 வெள்ளம் கடக்கவில்லை
 குருதிவெள்ளம் பாய்கின்றது...
 வெடிமருந்து நாறல் எடுக்கும்
 பூங்காற்றின் மெல்லிசையில்
 விமான இரைச்சல் எரிச்சலூட்டும்.
 
 இவருக்கு எரிச்சலூட்டுகிற சமாச்சாரங்கள் போருக்குள் வாழ்பவர்க்கு வாழ்வை 
  நிர்ணயிக்கிற செயல்பாடுகள். அன்றைய பொழுதை 
  நிச்சயமாக்குவதே பெருமபாலும் போர்விமானங்களே.தூரமாய் நின்றபடி எழுத முடியாத 
  வாழ்வுப் பயணங்கள் அவர்களது.வெறுமனே 
  பலஸ்தீனத்தையும்,வியட்நாமையும் துணைகழைக்க முடியாத உவமானங்கள் இங்கு எடுபடாது. 
  எனவே 51 பக்கங்களில் வந்துள்ள 
  'உயிர்த்தெழல்' நூல் (சுல்பிகாவின் கவிதைகள்)நமக்கு சில செய்திகளை சொல்லி 
  சென்றுள்ளது.அடுத்த நூலில் நிறைய 
  எதிர்பார்க்கின்றோம். வாழ்த்துகளுடன்,
 
 
  சந்திரவதனாவின்-'மனஓசை'
 - முல்லைஅமுதன் -
 
 
  ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா 
  பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி 
  வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.
  ஈழத்தின் கல்வி,மேலைநாடுகளின் இலக்கிய வருகை,திராவிட எழுத்துகளின் பயிற்சி, 
  தென்னிந்திய சஞ்சிகைகளின் ஆக்கிரமிப்பு, 
  இயல்பாகவே நடைமுறை வாழ்வியலின் ஏதுநிலை என நமது பெண் படைப்பாளர்களின் வருகை 
  நிகழ்ந்துள்ளது. ஆமை நகர்வது போலவே பெண் படைப்பாளர்களின் வருகை 80 இற்குப் பிறகு நிகழ்ந்த அதிசயம் 
  அதிக பெண் படைப்பாளர்களின் 
  படைப்புக்களை நாம் படிக்க வாய்ப்பாகியது. மீனாட்சி நடேசையர் ,கோகிலம் சுப்பையா, 
  குறமகள், பவானி ஆழ்வாப்பிள்ளை, யாழ்நங்கை, 
  குந்தவை, கோகிலா மகேந்திரன், மண்டூர். அசோகா, நயீமா சித்தீக், தாமரைச்செல்வி... 
  எனத் தொடங்கி சந்திரவதனா ,சந்திரா ரவீந்திரன் 
  வரை நீள்கிறது. உள்ளக, வெளியக இடப்பெயர்வுகள் இவர்களது புதிய சிந்தனை 
  விரிவாக்கத்துக்கு உதவியது. 83இற்கு பின்னரான 
  இனக்கலவரம்,போராட்ட உணர்வு அல்லது போருக்குள் வாழ்கின்ற சூழல் இவர்களையும் 
  ஆகர்சித்ததில் வியப்பில்லை. 
  இங்கு சந்திரவதனாவின் தாய்-தந்தையரின் அறிவூட்டல் இவருக்குள் ஒரு எழுத்தாளரை 
  உருவாக்கியிருக்கலாம். சூழலை அனுபவித்து, 
  வாழ்க்கையை சரிவர உள்வாங்கி அதனை படைப்பில் தந்திருப்பது உண்மையில் பாராட்டத்தான் 
  வேண்டும். எழுத்தும் வாழ்வும் ஒன்றாகி 
  இவர் தருகின்ற பதிவுகள் சமூக வட்டத்தின் வரம்புகளை மீறாமல் வார்த்தைகள் சிதறாமல் 
  எங்களுக்கு தந்த ‘மனஒசை’ இல் சிறப்பான 
  சிறுகதைகளை வாசிக்க முடிந்திருக்கிறது. ஏற்கனவே ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வாசித்த 
  உணர்வு இன்றும் என்னுள் ஞாபக விதைகளை
  விதைத்ததை உணரமுடிகிறது. என் தந்தையுடன் அவர் மாற்றலாகி சென்ற இடங்களில் நானும் 
  என் தங்கைகளும் சிறு சிறு 
  அசைவுகளையும்/ அமைவுகளையும் அனுபவித்து நுகர்ந்த நிகழ்வை நினைத்துப் பார்க்க 
  வைத்த கதைகள் அனேகம். ஒவ்வொரு 
  கதைகளை வாசிக்கும் போதும் என்னுள் எழுகின்ற உணர்வு என் வாழ்வின் கதைகளைப் 
  போலுள்ளதாக உணர்கையில் எல்லா
  யாழ்ப்பணத்துக் கிராமங்களின் கதைகளே என உணர்த்தப்படுவது புரிகிறது. பருத்தித்துறை 
  தொடங்கி நாகொல்லாகம ஊடாக ஜெர்மனி 
  வரை தொடர்கிறது. பழகிய பாத்திரங்கள், ஊர்த் திருவிழா ஞாபகங்கள் வித்தியாசமான 
  சிந்தனை, வார்த்தைகளை லாவகப்படுத்தும்
  திறமை இவருக்கு எல்லாமே கைகொடுத்திருக்கிறது. இதுவரை வாசித்த கதைகளூடாக 
  நம்பிக்கையும், ஆரோக்கியமாகவும் ஈழத்து பெண் 
  படைப்பாளர்கள் எழுதுகிறார்கள். இங்கு இவரும் அப்படியே. மொழிக்கு முழு உரிமையும் 
  எழுத்தில் தந்திருக்கிறார். வாய்மொழிச் சொற்கள் 
  ஆளுமையுடன் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. கனவு/கனவு காத்த வாழ்வு.. அது 
  தருகின்ற சோகம் /வலிகள் என் போன்ற வாசகர்களை 
  உள்வாங்குகின்ற நிகழ்வு நடந்திருக்கிறது.
 
 இன்றைய பெண்களின் பெண்ணியம் சார்ந்த தவறான சிந்தனைகள் மீது எனக்கு அவநம்பிக்கை 
  உண்டு. எனினும் வரம்புகள் மீறாமல் 
  எழுதியது ஆறுதலைத் தந்துள்ளது.
 
 ரயில் பயணம் அலாதியானது. அன்றைய யாழ்ப்பாணத்து யாழ்தேவி / மெயில் ரயில் பயணம் 
  சுவாரஷ்யம் நிறைந்தது. வழியில் 
  தெரிகின்ற மரங்கள், மனிதர்கள், தரித்து நிற்கிற போது வந்து முண்டியடித்த படி 
  ஏறுகிற வியபாரிகள்/பயணிகள், சுதந்திரமாக 
  பத்திரிகையை விரித்தபடி தூங்குகிற மனிதர்கள் அவ் அனுபவம் இப்போது இல்லை. ஐ டி 
  கேட்டு பயமுறுத்தும் இராணுவம், ஆங்கங்கே 
  பதிவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.. இப்படி நிறைய அனுபவ வெளிப்பாடுகள் 
  கதைகள் நம்மை உலுக்கிப் பார்க்கின்றன. 
  சுதந்திரமாக எதுவும் இல்லைதான். முன்னால் நகர்கிற எதுவும் நீ அன்னியன் என்பதை 
  சொல்லாமல் சொல்லுகிற செய்திகள்.
 
 மனிதர்களால் நிச்சயிக்கப்பட்டு இணைகிற மனங்களுள் எழுகின்ற விரிசல்கள் ஒரு பேதையை 
  மரணிக்க வைக்கிறது ‘வேஷங்கள்’ இல்.
  புலம்பெயர் சூழலில் இயல்பாகவே ஆகிவிட்ட உறவுப் பிறழ்வு உமா மூலம் சாட்சியமாக்கப் 
  பட்டுள்ளது.
 
 சின்னச் சின்ன அனுபவ வெளிப்பாடுகளை, சில பயணங்களில் ஏற்படுகின்ற எரிச்சலூட்டுகிற 
  சம்பவங்களை கோகிலா என்ற பாத்திரத்தின் 
  மூலம் ‘பயணம்’கதையில் சொல்கிறார்.
 
 ‘கண்டவற்றை நாளும் கனவிற் …திண்டிறலிற் கென்னோ…’ திருவருட்பயன் தருகின்றதாயினும் 
  உண்மையே. கண்முன்னே நிகழ்ந்த 
  சம்பவங்களையே மனதிருத்தி எழுத்தில் தந்து எம்மைத் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
 
 இன்றைய பெண் படைப்பாளர்களின் சிந்தனை விரிவு பட்டிருக்கிறது. அனுபவம் என்பதே 
  நேரடி/பிறரின் என வகைப்படுத்துகையில் இங்கு 
  சந்திரவதனா தன் அனுபவங்களை ஆழமாக உள்வாங்கியிருப்பது சிறப்பைத் தருகிறது.
 
 பெண் என்பவளே மென்மையானவள் தான். அந்த பெண்மையிலும் சீரிய சிந்தனைகள் பூக்கும் 
  தான். இங்கு சிறுகதைகளாய்ப் 
  பூத்திருகிறது.
 
 தேனீர் குடிக்க வரச் சொல்லுகிறவனிடம் நாசூக்காய் நழுவுகின்ற கோகிலாவின் 
  சாமர்த்தியம் புலம்பெயர் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு 
  தமிழ்ப் பெண்ணும் அனுபவ வாயிலாகப் பெற்றிருக்கிறார்கள். ஊரில் ஊசியும், கொஞ்சம் 
  மிளகாய்த் தூளும் அவர்களின் கைப் பையில் 
  கொண்டு செல்லும் நம் ஊர் பெண்களை நினைத்துப் பார்கிறேன். இங்கு வாழ வேண்டிய 
  சூழலில் தம்மை பழக்கப் படுத்திக் 
  கொண்டுள்ளார்கள்.
 ச
 உயரத்தில் இருந்து வீழ்ந்து மரணிக்கும் பெண்ணிலிருந்து பிற கதைகள் மாறினாலும் ஒரு 
  மையப் புள்ளிக்கே வந்து நிற்கிறார்கள்.
 
 பெண்ணின் மன வலி அவளுக்குத் தான் தெரியும். முகம் தெரியா ஆணுக்கு மாலை இடுவதும் 
  அவனின் எல்லா சுகங்களுக்கும் / 
  துக்கங்களுக்கும் அனுசரித்துப் போகின்றவளாக, விட்டுக்கொடுத்தபடி யாரோ வகுத்த சமூக 
  வட்டத்துள்ளிலிருந்து வெளி வரமுடியாமல்
  தவிக்கின்ற பெண்ணின் மன நிலைக்கேற்றவாறு, ஊர் மாதிரி அம்மா வீட்டுக்கு பொதிகளுடன் 
  வந்து இறங்காமல் தன் முடிவை தானே 
  எடுக்கின்றவளாகவும், மகனுக்காக வாழ முடிவெடுக்கிறவளாகவும், முகம் தெரியாத ஊரில் 
  யாரோ பொருத்தம் பார்த்து பார்சல் 
  மனைவியாக வந்த ஒருத்தியின் வாழ்நிலை சிதறுகிற நிலையிலும் நிதானமாக முடிவெடுத்த 
  பெண்ணின் மன உளைச்சல் அழகாக படம் 
  பிடித்துக் காட்டப் பட்டிருக்கிறது. சங்கர்- கோகுல்- இந்து மூன்று 
  பாத்திரங்களூடாக நம்மையும் நிமிர வைக்கிறார்.
 
 ஊரின் நிகழ்வுகளுக்குள்/ இராணுவக் கெடுபிடிகள், இதர அச்சுறுத்தல்கள் இவற்றுக்குள் 
  மத்தியில் தன் அக்கா பேசிய மாப்பிள்ளையுடன்
  வந்த சங்கவிக்கு தன் கணவன் சேகரின் இன்னொரு பக்கம் தெரிய வர, முதலில் தன்னைத் 
  தானே சிறைப்படுத்தி வாழுதலில் இருந்து 
  நிதானமாக தன் நாளை தீர்மானிக்கிறவளாக சங்கவி மாறுகையில் வரம்புகளை உடைக்க வைக்கிற 
  சிந்தனை தெளிவு படைப்பாளரிடம் 
  நிறையவே தெரிகிறது. வர்ணனைகள் அளவாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னொரு சேதியாக 
  இளமையான புகைப்படங்களூடாக
  பெண்ணையும் அவள் சார்ந்த உறவுகளையும் ஏமாற்றுகிறதாக சேகர் பாத்திரமூடாக 
  கோடிட்டுக் காட்டுகிறார். நிறைய கனவுகளுடன் 
  வருகின்றவள் தன் வாழ்வு பற்றிய கனவுகள் உடைகையில் சீற்றம் கொள்வதை அழகாக 
  புரியவைக்கிறார்.
 
 தங்களின் வாழ்வுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த தாய் தந்தையரை புலம்பெயர் 
  தேசத்துக்கு அழைத்து வந்து விட்டு 
  அவர்களின் சுகதுக்கங்களை மறந்து உபகாரப்பணத்துக்காக வருத்துகின்ற கொடுமைகள் சோகம் 
  தருகிறது. பாத்திரங்களை உள்வாங்குகிற 
  அனுபவங்கள் அதை எழுத்தில் தருகிற ஆற்றல் எம்மை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. 
  மொழியைக் கைக்குள் அடக்குகின்ற வல்லமை 
  எதிர்கால சிற்பியின் இன்றைய தரிசனம் நமக்கு ‘மனஒசை’யைத் தந்துள்ளது.
 
 mullaiamuthan_03@hotmail.co.uk
 |