| புதினம்.காம்: அக்டோபர் 11, 2007! இலங்கையில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு: லூய்ஸ் ஆர்பரிடம் மனோ 
கணேசன் வலியுறுத்தல்!
 
 
  இலங்கையில் 
கொழும்பு மற்றும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் 
கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித 
உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ 
கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் 
காணாமல் போனோரின் குடும்பத்தினரை லூய்ஸ் ஆர்பர் இன்று வியாழக்கிழமை மாலை 
சந்தித்துப் பேசினார். 
 ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளருடனான இந்த சந்திப்பில் மக்கள் 
கண்காணிப்புக்குழுவின் சார்பில் அதன் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தமிழ்த் தேசியக் 
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கிரமபாகு 
கருணாரட்ண உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது மனோ கணேசன் 
பேசியதாவது:
 
 சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடானது 20 மில்லியன் மக்களின் தாயகமாகும். 
கடந்த 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா அரச தலைவராக 6 ஆண்டு காலத்துக்கு 
பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
 கடந்த ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா 
அரசாங்கத்துக்கும் இடையேயான மோதல் தொடங்கியது முதல் அதுவரை பொதுவில் ஏற்றுக் 
கொள்ளப்பட்டிருந்த அமைதி தொடர்பிலான அனைத்தும் நொறுங்கிப் போயின. அதுவே தற்போதைய 
குரூரமான மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் சகாப்தத்துக்கு கொண்டு சேர்த்துள்ளது.
 
 பெரும்பாலும் பாதிக்கப்பட்டோர் தமிழினத்தைச் சேர்ந்தவர்களே. நாங்கள் இந்த நாட்டில் 
பின்குறிப்பிடப்படும் கொடூரமான சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறோம்.
 
 - காணாமல் போதல்கள்
 - நீதிக்கும் புறம்பான கொலைகள்
 - எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்கள்
 - தடுப்புக் காவலில் சித்திரவதைகளால் உயிரிழத்தல்
 - சித்திரவதை
 - அறவிடுதல்
 - குடியிருப்புக்களிலிருந்து வலுவில் வெளியேற்றப்படுதல்
 - காரணமற்ற கைதுகள்
 - உரிய சட்ட நடைமுறைகளின்றி கைது செய்யப்படுதலும் தடுத்து வைக்கப்படுதலும்
 - மிக மோசமான சிறைச் சூழல்கள்
 - கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்களின் போது நீதித்துறை நடைமுறைகளை 
பின்பற்றாதிருத்தல்
 - 35-க்கும் மேற்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை
 - மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான சித்திரவதை
 - உள்நாட்டில் 3 லட்சம் பேரும் வெளிநாட்டில் 1 மில்லியன் பேருமாக 
இடம்பெயர்ந்துள்ளமை
 - பலவந்தமாக மீளக் குடியேற்றுதல்
 - ஊடக சுதந்திரத்தை நசுக்குதல் மற்றும் அச்சுறுத்துதல்
 - ஊடகவியலாளர்கள் படுகொலை ஆகியவற்றுக்கு முகம் கொடுக்கிறோம்.
 
 மனித உரிமைகள் ஆணையாளர் அம்மையார் அவர்களே!
 இந்தப் பட்டியல் இன்னமும் நீளமானது. எமது நாட்டில் இன்று மிகப் பாரியதொரு துன்பியல் 
நிகழ்வாக பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் நடைபெறுகிறது. கடந்த 20 மாதங்களில் 
1,500-க்கும் அதிகாமானோர் இல்லாது போயுள்ளனர். கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் 
பகுதிகளில் மட்டும் 163 காணாமல் போதல் சம்பவங்களை எமது மக்கள் கண்காணிப்புக் குழு 
பதிவு செய்துள்ளது. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இங்கே இன்று உள்ளனர். 
மற்றவர்கள் இந்த ஐக்கிய நாடுகள் சபையின் அலுலக வளாகத்துக்கு வெளியே வீதியில் 
காத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும் பனிப்பாறையின் ஒரு துளியே இவர்கள். வடக்கு 
மற்றும் கிழக்கைச் சேர்ந்த பெருந்தொகையானோரின் குடும்பத்தினர் உரிய 
பாதுகாப்பின்மையால் இங்கு வர இயலவில்லை. வடக்கு - கிழக்கில்தான் பெரும் 
எண்ணிக்கையிலானோர் காணாமல் போயுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நாளை அந்த 
துரதிர்ஸ்டசாலிகளை நீங்கள் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை பாதுகாப்பாளர்களின் மூலமாக 
சந்திக்க உள்ளீர்கள்.
 
 இந்தக் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களுக்கும் யார்தான் பொறுப்பு என்ற கேள்வி 
எமக்குள் எழுந்தது. இந்த நாட்டின் அரச தலைவர், அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் 
செயலாளர், காவல்துறை மா அதிபர் எனப் பலரிடமும் இக்கடத்தல்கள் தொடர்பில் நேரில் 
முறைப்பாடு செய்தோம். ஆனால் எமது முறைப்பாடுகள்- வேண்டுகோள்கள் அனைத்துமே 
கேட்கப்படாத ஒன்றாகவிட்டது. ஆகையால் நாம் கடந்த ஆண்டு செப்ரம்பர் 19 ஆம் நாள் இந்த 
மக்கள் கண்காணிப்புக் குழுவை உருவாக்கினோம். எமது நிறுவனர்களில் ஒருவரான யாழ். 
மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் 
நாள் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலேயே சுட்டுப் 
படுகொலை செய்யப்பட்டார். நாங்கள் கண்காணிப்புக் குழுவை தொடங்கி 50 ஆம் நாளில் எமது 
நண்பர் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார். காணாமல் போனோர் தொடர்பிலான எமது 
பரப்புரையில் இத்தகைய எதிர்வினைகளுக்கும் நாம் முகம் கொடுக்கிறோம். 
ஆர்ப்பாட்டங்கள்- போராட்டம் நடத்தினோம்- காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் 
நண்பர்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். சிறிலங்காவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் 
தலைவர் மற்றும் கொழும்பு இராஜதந்திர சமூகத்தினர், பொதுமக்களின் அமைப்புகளின் 
பிரதிநிதிகளை அழைத்தோம். சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை 
ஈர்க்கப் பல்வேறு வழிகளை மேற்கொண்டோம்.
 
 தொடக்கத்தில் இத்தகைய காணாமல் போதல்கள் தமது நாட்டில் நடைபெறவே இல்லை என்று 
சிறிலங்கா அரசாங்கம் கூறியது. அதன் பின்னர் அரசாங்கத்தின் நன்மதிப்பைச் சீர்குலைக்க 
சில குழுக்கள் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வதாகக் கூறியது. சிறிலங்கா 
அரசாங்கத்தின் செல்வாக்குமிக்க்க சக்திகள் மற்றும் துணை இராணுவக்களின் தொடர்புகள் 
வெளியான பின்னர் பல குழுக்கள் மற்றும் விசாரணை ஆiணையங்களை அமைக்கும் நிலைக்கு 
சிறிலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டது.
 
 சிறிலங்காவில் நீண்டகாலமாக மனித உரிமை முறைகேடுகளை விசாரிக்க எண்ணற்ற 
நிறுவனங்கள்-குழுக்கள்- ஆணையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
 1. சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையகம்
 2. மனித உரிமைகள் அமைச்சு
 3. புகழ்பெற்ற நபர்களுக்கான அமைச்சரவை ஆலோசனைக் குழு
 4. மகநாம திலகரட்ன ஆணையகம்
 5. 16 நிகழ்வுகளுக்கான அரச தலைவரின் சிறப்பு விசாரணை ஆணையகம்
 6. அந்த விசாரணை ஆணையகத்தை கண்காணிக்கும் அனைத்துலக வல்லுநர் குழு
 7. காணாமல் போனோர் தொடர்பிலான அமைச்சரவைக் குழு
 
எனப் பல உள்ளன. இருப்பினும் எந்த ஒரு அமைப்பும் அல்லது 
நிறுவனமும் எதுவித முடிவையும் அறிவிக்கவில்லை. அரை மனதுடனேயே விசாரணைகள் 
மேற்கொள்ளப்படுகின்றன. வடக்கு - கிழக்கு, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் 
பகுதிகளில் கடத்தல்கள்- நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் சகாப்தம் தொடர்கிறது.
 குற்றவாளிகளை நீதிமன்றின் முன்நிறுத்துவதாகவும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் 
சிறிலங்கா அரசாங்கம் பலமுறை வாக்குறுதி அளித்திருக்கிறது.
 
 16 நிகழ்வுகள் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவரின் விசாரணை ஆணையம் விசாரணைகளை 
மேற்கொண்டு வருகிறது. ஆனால் அனைத்துலக நடைமுறைகளின் அடிப்படையில் இல்லாது இருப்பதாக 
அனைத்துலக வல்லுநர்கள் குழு தெரிவித்திருந்தது. அதற்கு அரசாங்கம் முகம் 
கொடுக்கவில்லை. ஆணையங்களின் நியமனங்களால் மட்டுமே மனித உரிமை மீறல்களால் 
பாதிக்கப்பட்டோருக்கான நீதியைத் தந்துவிட முடியாது.
 
 கடந்த 12 மாதங்களில் கொழும்பு நகரில் மட்டுமே 100-க்கும் மேலான காணாமல் போதல்கள் 
நிகழ்ந்துள்ளன. வெள்ளை வானில் வரும் ஆயுதம் தாங்கிய நபர்கள் தமிழ்ப் பெண்கள் 
மற்றும் ஆண்களைக் கடத்திச் செல்கின்றனர். கொழும்பு நகரின் ஒவ்வொரு வீதியும் 
காவலரண்களைக் கொண்ட மிகப் பாதுகாப்பானதாக இருப்பதை நீங்கள் கணாலாம். ஆனால் இந்தக் 
கடத்தல்காரர்களின் ஒரு வாகனம் கூட ஒரு காவலரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு 
கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டதாக இல்லை. அரசாங்கமும் இக்கடத்தலில் 
இணைந்திருப்பதனையே இது எடுத்துக்காட்டுகிறது. சிறிலங்காவின் தலைநகரிலேயே இந்த 
நிலைமை. வடக்கு - கிழக்கில் நிலைமை மிகவும் மோசமானது.
 
 உள்நாட்டு மற்றும் அனைத்துலக அழுத்தங்களுக்கு எதிர்வினையாக காணாமல் போனோரின் சில 
குடும்பத்தினரை மகிந்த ராஜபக்ச அரச தலைவர் செயலகத்துக்கு அழைத்து சந்தித்தார். 
மகிந்தவை சந்தித்த பலரும் இங்கே உள்ளனர். அவர்கள் என்ன நடந்தது என்று கூறுவார்கள். 
அவர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் மகிந்த அரசாங்கமானது காணாமல் போன 90 
விழுக்காட்டினர் வீட்டுக்குத் திரும்பிவிட்டதாகவும் சிலர் வெளிநாட்டுக்குச் 
சென்றுவிட்டதாகவும் அறிவித்தது.
 
 ஆனால் உண்மையில் எவருமே வீடு திரும்பவில்லை.
 
 மக்கள் கண்காணிப்புக் குழுவினரால் சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்ய 
விவரங்களை அரசாங்கத்திடம் நாம் கையளித்துள்ளோம். இதனை பெற்றுக் கொண்டதாக ஓகஸ்ட் 10 
ஆம் நாள் பிரதமர் எமக்குப் பதிலளித்துள்ளார். அதேபோல் குடியேற்றத்துறை 
கட்டுப்பாட்டாளர், காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கும் இது தொடர்பிலான விபரங்களை 
ஓகஸ்ட் 14 மற்றும் ஓகஸ்ட் 17 ஆகிய நாட்களில் கையளித்தோம். 40-க்கும் மேற்பட்ட 
சிறிலங்கா காவல் நிலையங்களிலும் இது தொடர்பில் தெரிவித்தோம். அரசாங்கம் தெரிவித்தது 
போல் காணாமல் போன எவருமே வீடு திரும்பவில்லை.
 
 வீடு திரும்பியோரின் விவரங்களை பகிரங்கமாக வெளியிட சிறிலங்கா அரசாங்கம் தயாரா என 
நாம் சவால் விடுக்கிறோம். அதேபோல் வெளிநாடு சென்றோரின் விபரங்களை வெளியிட முடியுமா 
எனக் கேட்கிறோம்.
 
 சிறிலங்காவின் தேசிய மனித உரிமை நிறுவனங்கள் மீது நாம் நம்பிக்கையிழந்து விட்டோம். 
ஆகையால் அனைத்துலக சமூகத்தினரை எதிர்பார்க்கிறோம்.
 
 தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறைகளைக் கூறிக்கொண்டே சிறிலங்கா அரசாங்கமானது 
தம்மீதான பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது. 
அனைத்துலக அவையங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஒரு உறுப்பு நாடு. கெரில்லா 
இயக்கத்துக்கும் அரசாங்கத்துக்குமான வேறுபாட்டை சிறிலங்கா அரசாங்கம் புரிந்து கொள்ள 
வேண்டும்.
 
 அனைத்துலக அளவிலான சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை கொழும்பு, 
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் 
கிளிநொச்சியில் அமைக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் 
பகுதிகள் அனைத்தும் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் 
கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாகும். மேலதிகமாக சிறிலங்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் 
சபையின் மனித உரிமைகள் ஆணையம் பலமிக்கதாக்கப்பட வேண்டியது உடனடி அவசியத் 
தேவையாகும்.
 
 யுத்தமற்ற- கடத்தல்களற்ற- நீதிக்குப் புறம்பான படுகொலைகளற்ற ஆனால் அமைதியும் 
சட்டத்தின் ஆட்சியும் நிகழக் கூடிய ஒரு பிரதேசத்தை நாம் கனவு காண்கிறோம். இதுவே 
ஒவ்வொரு இலங்கையரின் கனவாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினது ஆதரவுடன் எமது இந்தக் 
கனவு நிறைவேறும். அப்படி இல்லாது போயின் இந்தத் தீவில் வாழும் தமிழ் மக்கள் 
விரும்பியோ விரும்பாலோ பிரிவினையையே கோருவர் என்றார் மனோ கணேசன்.
 
 
  சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் 
சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை 
மீட்டுத்தருமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித 
உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் கதறலுடன் கோரிக்கை விடுத்தனர்.
 கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு இந்த 
சந்திப்பு நடைபெற்றது.
 
 ஐ.நா. அலுவலகத்திற்குள் போதிய இடவசதி இன்மையால் காணாமல் போனவர்களின் சார்பில் 
தெரிந்தெடுக்கப்பட்ட 30 பேர் இந்த சந்திப்பிற்காக ஐ.நா. அலுவலகத்திற்குள் வருமாறு 
அழைக்கப்பட்டனர்.
 
 அதன்படி தெரிந்தெடுக்கப்பட்ட 30 பேரும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் 
ஆர்பரைச் சந்தித்து தமது கவலைகளை வெளியிட்டதுடன், காணாமல் போனவர்களின் உறவினர்கள் 
அனைவரினதும் சார்பிலான கோரிக்கைகளையும் அவரிடம் தெரிவித்தனர்.
 
 காணாமல் போன உறவினர்களின் சார்பில் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் 
ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளரிடம் மக்கள் கண்காணிப்புக்குழுவினரால் 
சமர்ப்பிக்கப்பட்டது.
 
 இந்த சந்திப்பில் மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் மற்றும் காணாமல் போனவர்களின் 
சார்பில் சிலரும் உரையாற்றியதாக மக்கள் கண்காணிப்புக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 காணாமல் போனவர்களின் கண்ணீர்க் கதைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான 
அணையாளர் லூய்ஸ் ஆர்பருக்கு விரிவாக விளக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 கடத்தல்கள் மற்றும் கப்பம் கறக்கும் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்தும் இந்த 
விடயத்தில் அரசின் மௌனம் குறித்தும் அவருக்கு விரிவாக விளக்கப்பட்டதாக தெரிகிறது.
 
 கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகமானது வான் படையினரின் அலுவலகச் சுவரோடு ஒன்றித்து 
இருப்பதால் அங்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான வான் படையினர் அங்கு 
கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 
 முன்னதாக கொழும்பில் உள்ள மக்கள் கண்காணிப்புக்குழு அலுவலகம் முன்பாக இன்று 
முற்பகல் முதல் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் 
குவியத்தொடங்கினர்.
 
 அவர்களில் பலர் புதிய முறைப்பாடுகளைக் கொண்டிருந்ததால் அவர்களின் முறைப்பாடுகளையும் 
பதிவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் கண்காணிப்புக்குழுவின் பிரதிநிதிகள் 
ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரமாக அங்கு அவர்கள் காத்திருந்தனர்.
 
 கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக சுமார் 4 மணியளவில் இவர்கள் 
திரண்டனர்.
 
 அந்த மக்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு தமக்கு நீதி 
கிடைக்க வேண்டுமென அழுதுகொண்டே இருந்தனர்.
 
 மக்கள் கண்காணிப்புக் குழுவின் பிரமுகர்களும் அந்தப் பகுதியில் பிரசன்னமாகி 
இருந்தனர். மக்கள் கண்காணிப்புக்குழுவின் சார்பில் அதன் முக்கிய பிரமுகரும், 
நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மற்றும் மேலக மக்கள் முன்னணியின் பொதுச் 
செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் உட்பட மக்கள் கண்காணிப்புக் குழுவின் வேறு 
முக்கிய பிரமுகர்களும் அங்கு வந்திருந்தனர்.
 
 மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த இவர்கள் அவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித 
உரிமைகளுக்கான அணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் தெரிவிப்பதாக உறுதிமொழி வழங்கினர்.
 
 தம்மையும் இந்த சந்திப்புக்கு உள்ளே அழைத்துச் செல்லுமாறு அங்கு நின்ற பலர் 
கோரிக்கை விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
 
 இச்சந்திப்பில் திருகோணமலையைச் சேர்ந்த வாசுகி கூறியதாவது:
 
 எனது கணவரின் பெயர் அன்னரன் போல் எல்றின் மத்தியூ கொழும்பில் உள்ள சிறிலங்கா 
துறைமுக அதிகார சபையில் வேலை செய்தார். அவரைக் கடத்திய பின்னர் எனது 7 வயது மகன் 
அடிக்கடி அப்பா வருவாரா வருவாரா என்று கேட்கிறான். நான் என்ன சொல்ல 
(கதறலுடன்....தொடர்ந்தார்)
 
 எமக்கு இப்போது சரியான கஸ்டம். அவர்தான் எங்களது செலவுகளைப் பார்த்து வந்தார். 
அவரைக் கடத்திய பின்னர் எனது மகனை கல்வி கற்க அனுப்ப முடியவில்லை. அதற்குப் பணம் 
இல்லை. மதகுருமாரிடம்தான் எனது மகனின் கல்விக்கு உதவி கேட்டுள்ளளேன்.
 
 நான் ஒரு கடைக்கு வேலைக்குச் சென்று உழைத்து எனது மகனுக்கு சாப்பாடு போடுகிறேன். 
கொழும்பிற்கு ஐந்து முறைக்கும் மேலாக வந்து கணவரை மீட்டுத்தருமாறு முறையிட்டு 
விட்டேன். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. திருகோணமலையில் இருந்து வந்து போவதற்கே 3 
ஆயிரம் ரூபா வேண்டும். என்ன செய்ய? எனது கணவர் எனக்கு வேண்டும். அதற்காக எந்தளவு 
கஸ்டத்தையும் நான் அனுபவிக்கத் தயார். தயவு செய்து கணவரை விட்டுவிடுங்கள் என்றார்.
 
 கண்மணி என்ற பெண் கூறியதாவது:-
 
 எனது சகோதரனை கடத்தி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை எந்தப் பயனும் 
கிடைக்கவில்லை. அனைத்து இடத்திலும் முறையிட்டு விட்டோம். எவருமே உரிய பதிலை 
தரவில்லை.
 
 இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளருடன் சந்திப்பு 
இடம்பெறுவதாக பத்திரிகையில்தான் பார்த்ததேன். அதனால் சிலாபத்தில் இருந்து 
வந்திருக்கிறேன்.
 
 நாம், அழுது அழுது எங்களது கண்ணீர் வற்றிவிட்டது. இனியும் எம்மால் அழ முடியவில்லை. 
அரசாங்க உத்தியோகம் பார்த்த எனது சகோதரனை ஏன் கடத்த வேண்டும்?.
 
 இராணுவத்தினர்தான் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள். நான் இராணுவ 
முகாமுக்கு போய்க் கேட்க, தாங்கள் கடத்தவில்லை என்று கூறுகிறார்கள்.
 
 சி.ஐ.டி கடத்தியதாக கூறுகிறார்கள். நான் எங்கு போய் சி.ஐ.டியினரைச் சந்திப்பது? 
ஐயா, தயவு செய்து ஒரு தப்பும் செய்யாத எனது சகோதரனை விட்டுவிடுங்கள். நான் யாருடைய 
காலிலும் வீழ்கின்றேன். எனக்கு எனது சகோதரன் வேண்டும் என்றார்.
 
 நன்றி: புதினம்.காம்.
 பி.பி.சி!: இலங்கையில் காணாமல் போனவர்களின் 
உறவினர்கள் லூயிஸ் ஆர்பரைச் சந்தித்தனர்...Read 
More |