| அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்! 
 - கவிஞர் புகாரி 
 
  அன்புடன் 
கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு 
நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை. (ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை 
வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.) கவிதையின் தனித்துவப் பண்பு சுருங்கச் 
சொல்லிச் சுவையை அளித்தல். கவிதைகள் சில நமக்குக் கதை சொல்லுகின்றன! சில நாடகமாய் 
கண்முன் நடக்கின்றன! சில புயல்போல் நெஞ்சைத் தாக்குகின்றன! சில தென்றல் போல் 
மேனியைத் தழுவுகின்றன! சில கவிதைகள் நெஞ்சில் முள்ளாய்க் குத்துகின்றன! 
வாழ்க்கையின் உண்மைக் காட்சிகளை அன்ன நடையிலோ, அல்லது புயல் வேகத்திலோ 
சொல்லுகின்றன. மகாகவியின் கவிதையில் உலக மெய்ப்பாடுகள், தத்துவங்கள் ஒளிவீசும். சில 
கவிதைகளில் ஓரிரு வரிகளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும்! முடிவு 
புதிராக மாறிப் புரியாமல் போகும். சொற்கள் எளிதாக இருந்தாலும், தெளிவாகத் 
தெரிந்தாலும் வரிகளின் முழுத் தோற்றம் ஒட்டு மொத்தமாய் என்ன உரைக்கின்றது என்று 
புரியாமலும் போகும்! 
 கவிதைகளின் வரிச் சொற்கள் செங்கல் சுவர்போல் அணிவகுத்துக் கட்டப் படாமல், தெளிந்த 
சிற்றோடை போல் சிரித்தோட வேண்டும். கலைத்துவ மணம் பரப்ப வேண்டும். வரிகளின் மொழிகள் 
நளினமாக நடனமாடி நாதசுரக் கீதம் போலும், வீணையின் நாதம் போலும் ஒலித்து நெஞ்சில் 
அரங்கேற வேண்டும்.
 
 கவிதையைப் பற்றிக் கவிஞர் வைகைச் செல்வி கூறுவது:
 
 பாலும், தெளி தேனும், பாகும் பருப்புமிவை
 நாலும் கலந்துருக்கி,
 வார்த்தை விதை ஒன்று,
 மூளைக்குள் தெறிக்க,
 முளை விட்டு உணர்வுக்குள்
 கணுக் கணுவாய்ப் பயிர் வளர,
 செங்குருதிப் புனல் பாய,
 மண்ணுக்குள் அடிக்கரும்பாய்,
 மனசெல்லாம் சர்க்கரையாய்,
 நெஞ்சுக் குழிக்குள்ளே,
 இறங்கி வழிந்தோடி
 உறங்கும் உயிர்ப் பந்தை,
 புரட்டுவது கவிதை.
 
 சர்க்கஸ் விளையாட்டு போல் வார்த்தைகளை பல்டி அடிக்க வைத்து, அந்தரத்தில் தொங்கும் 
வளையங்களில் தாவி ஊஞ்சல் ஆடுவதா கவிதை ? வார்த்தைகளின் வயிற்றைக் கிழித்துக் குடலை 
உருவி மாலை போட்டுக் கொள்வதா கவிதை ? இரண்டு மணிநேரம் சர்க்கஸ் ஆட்டத்தைக் கண்டு 
நாம் பிரமித்தாலும், வெள்ளித் திரையில் உள்ளத்தைத் தொடும் ஓர் உன்னதக் கலைக் 
காட்சிபோல், சர்க்கஸ் ஆட்டம் பல்லாண்டு காலம் மனதில் நீடிப்ப தில்லை! சுருங்கச் 
சொல்லிக் கதை புனையும் கவிதை ஒரு குட்டித் திரைப்படம். கருத்தாட்சி [Theme], 
சொல்லாட்சி [Word Power], நடையாட்சி [Style], அணியாட்சி [Simile, Metaphor, 
Allegory, Alliteration, Antithesis, Irony, Personification (Figure of Speech)] 
மூலம் உள்ளத்தைக் கவர்ந்த கவிதைகள், நமது நினைவில் அழியாதவாறு ஓட்டிக் கொண்டு 
விடுகின்றன! அத்தகைய உன்னதக் கலைப் படைப்புகள் ஆக்கும் நியதிகளைக் கையாண்டு, 
ஆழமாய்ச் சிந்தித்து எழுதப் பட்டவையே. கால வெள்ளம் அடித்துச் செல்லாது, கரையான் 
தின்று செறிக்காது, நிலைத்து நிற்கும் கலைப் படைப்புகள் யாவும் இராப் பகலாய்ச் 
சிந்தித்து ஆக்கப் பட்டவையே.
 
 "ஒலிக்கவிதைகள்" எனத் தலைப்பு இருந்தாலும் அவை யாவும் முதலில் எழுத்துக் 
கவிதைகளாகத் தோன்றியவைதான். கவிதைகளை வாசிக்கக் கேட்டாலும், அவற்றை ஒப்பிட்டுத் 
திறனாய்வு செய்யும் போது எழுத்துரு வரிகளைக் கண்ணாலும், கருத்தாலும் திரும்பத் 
திரும்பப் பலமுறைப் படித்துதான் முடிவு செய்தேன்.
 
 ஆரஞ்சுப் பழம், ஆப்பிள் பழம், மாம்பழம், பலாப் பழம், வாழைப் பழம் ஆகியவற்றின் 
சுவைகளை ஆராய்ந்து எந்தப் பழம் சுவை மிக்கது என்று சொல்லுங்கள் என்று 
மதிப்புக்குரிய சேதுக்கரசி, புகாரி, பிரியன் மூவரும் என்னை வேண்டிக் கொண்டார்கள். 
நான் பலாப் பழமே மிக்கச் சுவையானது என்று சொன்னால், போட்டியில் பங்கெடுத்த 
கவிஞர்கள் தங்கள் பேனா முனைகளால் என்னைக் குத்த ஓடி வாராதீர்கள். ஒலிம்பிக் ஓட்டப் 
பந்தயத்தில் தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் மூன்றையும் 
பரிசாகப் பெற்றிடும் தனித்தனி மாந்தரின் கால வேறுபாடுகளைப் பார்த்தால் மிகச் சில 
மில்லி விநாடிகளே தெரியும். ஆகவே முதற்பரிசு, இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசுகள் 
ஆகியவற்றில் உள்ள ஒப்புமை வேறுபாடுகள் அதிகமில்லை, மிகச் சிறிய கவித்துவக் 
கருத்தமைப்புகளே.
 
 பரிசு பெற்ற ஒலிக்கவிதைகள்
 
 முதற்பரிசுக் கவிதை
 
 எனது ஆய்வுப் பார்வையில் << இருட்டிலே ஒரு மெழுகுவத்தி >> என்னும் ஒலிப்பா முதற் 
பரிசுக்குரிய கவிதையாக தீர்மானம் செய்யப்பட்டது. அதே முடிவை எனது இணைத் தேர்வு 
நடுவர் கவிஞர் இக்பால் அவர்களும் தெரிவித்தார். முதற்பரிசு மட்டுமல்ல, இரண்டாம் 
பரிசு, ஆறுதல் பரிசு முடிவுகள் அனைத்திலும் இருவரது ஏகோபித்த உடன்பாடுகள் உள்ளன.
 
 உலகமே இருள் சூழ்ந்தது! பரிதி அதன் கண்மூடித் திறக்கும் மெழுகுவத்தி! விண்வெளியே 
இருள் சூழ்ந்தது! ஆங்கே மின்மினி போல் விண்மீன்கள் கண்சிமிட்டும் மெழுகுவத்திகள். 
விரிந்து செல்லும் பிரபஞ்சத்தில் இருள்வெளியே பேரளவானது. ஒளிமீன்கள் விடும் 
வெளிச்சங்கள் மின்மினிப் பூச்சிகள் வீசும் நுண்ணொளி போன்றவைதான்.
 
 இருட்டைப் போக்கும்
 எத்தனையோ மெழுகுவத்திகள்
 வெளிச்சத்தைப்
 பார்த்ததே யில்லை
 
 ஒரு மெழுகுவத்தி
 மகாத்மாவாக
 மாறியபோது தான்
 உலகம் அகிம்சையைப்
 புரிந்து கொண்டது
 
 ஒரு மெழுகுவத்தி
 ரோஜாவாக மாறியபோது தான்
 விடுதலைப் பத்திரம்
 இங்கே எழுதப்பட்டது
 
 வெளிச்சத்தை நாங்கள்
 விலைகொடுத்து
 வாங்கும் போதெல்லாம்
 கதவுக்கு வெளியே
 இருள் தானே காத்திருக்கிறது
 
 ஆனால்
 மனிதநேயம்
 மரணப் படுக்கையில் இருக்கும்போது
 வெளிச்சத்தைப் பார்க்கவே
 எங்களுக்கு
 விளக்கு வேண்டும்
 
 முதற்பரிசு பெற்ற கவிதையின் இந்த முத்துச் சுடர் மொழிகள் என் மனதை முற்றுகை 
செய்கின்றன. உலகத் தத்துவம், வரலாறு, மெய்ப்பாடுகள் சில வரிகளில் மின்னுகின்றன
 
 
 இரண்டாம் பரிசுக் கவிதை
 
 << உன்னை நினைக்கையிலே >>
 
 முதற்பரிசுக் கவிதை பிரபஞ்ச இருளையும், மின்மினி மெழுகுவத்தியையும்
 விளக்கும் போது, இரண்டாம் பரிசுக் கவிதை காதலர் உலகில் ஒளியேற்றுகிறது.
 
 முட்டிமுட்டிக் குடிக்கும்
 கன்றினைப்போல்
 உன்னைச் சுற்றிச் சுற்றியே
 நினைவு.
 
 உன்னில் நானா
 என்னில் நீயா
 யாரோடு யார் கலந்தோம்?
 ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
 பள்ளிப் பாடக் கணக்கில்
 ஒன்றும் ஒன்றும் ஒன்றே யானது
 நம் பள்ளியறைக் கணக்கில்.
 
 நீயும் நானுமில்லாத
 உலகைக் கண்டேன்
 அங்கு காற்றே இல்லை
 நீயும் நானுமில்லாத
 நிலவைப் பார்த்தேன்
 அதில் ஒளியே இல்லை
 நீயும் நானுமில்லாத
 கவிதை புனைந்தேன்
 அதில் ஜீவனே இல்லை.
 
 உள்ளத்தைத் தேனாக்கும் உன்னதக் காதல் வரிகள் இவை.
 
 ஆறுதல் பரிசுகள்:
 
 1. << அன்புடன் அபலை >>
 2. << பிடிமானம் >>
 
 
 1. << அன்புடன் அபலை >> ஏழ்மையில் வாழ வகையற்ற மாதொருத்தி உடலை விற்று உயிரைக் 
காப்பாற்றிக் கொள்ளும் ஒரு சிறு கதையைக் கூறுகிறது.
 
 யாசிக்கின்றேன்
 அன்பை
 யோசிக்கிறார்கள்
 
 ஆண்களுக்குத் தேவை
 உடல்
 பிற
 பெண்களுக்குத் தேவை
 பணம்
 எனக்குத் தேவை
 மனம்
 
 அமாவாசை
 இருளில்
 சிறகு விரிக்கும்
 மின்மினியின்
 ஒளி போல
 நெஞ்சத்தில்
 புதைந்து கொண்ட
 சின்னச் சின்ன
 ஆசைகள்
 
 அஸ்திவாரத்தோடு
 நின்றுபோன கட்டிடங்கள்
 போல
 அனாதரவாய்
 மன ஊஞ்சலில்...
 
 குத்து விளக்காய்
 குளிர்ந்து நிற்கும்
 என் மன அழகு
 உண்மை..
 
 திருமண அழகு
 தேடும்
 பலாச்சுளை போன்ற
 என் இனிய பெண்மை
 உண்மை..
 
 விலை போகாத
 பொற்சிலை நான்..
 
 
 2. << பிடிமானம் >> என்னும் கவிதையும் காதல் உலகில் சஞ்சரிக்கிறது.
 
 உளியாய் வந்தாய்
 உருகும் உள்ளமறிந்து .
 சிதிலமாய்க் கிடந்த கல்லெடுத்து
 செதுக்கிச் செதுக்கி சிற்பம் செய்தாய்
 
 காற்றாய் வந்தாய்
 காதலில் கசிந்துருகி
 எங்கோ கிடந்த தக்கையையெடுத்து
 புல்லாங்குழலாய் கீதமிசைத்தாய்
 
 மீட்சியின்றித் தவித்தாலும்
 வாழ்கிறேன்
 வீழக்கூடாதென்ற உன்சொல்லினைப்
 பிடிமானமாய்ப் பற்றிக்கொண்டு...
 
 கவிதையில் வரும் கல் சிற்பம், கசிந்துருகும் புல்லாங்குழல், அண்டத்தின் சிகரம் 
ஆகியவை பாரையே புதுப் பார்வைக்கு அழைத்துச் செல்கின்றன.
 
 அன்புக்கடல் தமிழ்மணிகளே! ஒலிக்கவிதைகள் அனைத்தையும் வாசித்து முடிவில் கூறுங்கள்: 
மாம்பழம், பலாப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப் பழம் ஆகியவற்றில் எது எல்லாவற்றிலும் 
சுவையாக இருக்கிறது ? எங்களுக்கு நூறு சதம் தீர்மானமாக ஆய்ந்து தெரிவிக்க 
முடியவில்லை! அவற்றை எல்லாம் ஆழ்ந்து ஒப்பிட்டு எங்கள் தராசில் நிறுத்து, எங்கள் 
உள்ளம் முடிவு செய்த ஒலிக்கவிதைகளைப் பரிசுக் கவிதைகளாக உங்கள் முன் வைக்கிறோம்.
 
 அன்புடன்,
 சி. ஜெயபாரதன்
 
 அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
 http://groups.google.com/group/anbudan
 
ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு 
நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை(ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.). 
கவிதைப் போட்டி நடத்துவதன் பயன்கள் பற்றி மீண்டும் எனக்கு நினைவூட்டுவதுபோல 
அமைந்தது இந்தப் போட்டி. பல்வேறு சிந்தனைகளை தங்களுக்கு முடிந்த அளவில் மிகச் 
சிறந்த சொற்களைக் கொண்டு பலரும் படைக்க வழிசெய்வதால் போட்டி நடத்துபவர்களையும் 
அதில் பங்கெடுத்துக் கொள்ளும் கவிஞர்களையும் வாழ்த்தி வணங்கிப் பாராட்ட வேண்டும்.
 
 எத்தனை அருமையான கவிதைகள் மலர்ந்து விட்டன இந்தப் போட்டியின் மூலம் ! எல்லாக் 
கவிதைகளையும் படிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், திரு மாலன் தேர்வுசெய்து தந்த 
கவிதைகளைப் படிக்கும் போது போட்டியின் பயன் நன்கு புரிந்தது.
 
 போட்டி நடக்காமல் இருந்தால் இந்தக் கவிதை மணிகள் நமக்குக் கிடைத்திருக்குமா ! 
கவிஞர் புகாரி, சேதுக்கரசி, விக்கி ஆகியோரை இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
 
 இதுவரை நான் அறியாதது இந்த ஒலிக்கவிதைப் போட்டி. வரவேற்க வேண்டிய புது முயற்சி. சில 
வாசிப்புகளைக் கேட்ட பின்னர், மீண்டும் அந்தக் கவிதைகளைப் படித்துச் சுவைக்க 
வேண்டும் என்னும் ஆர்வம் ஏற்பட்டது.அவ்வளவு அருமையாக, உணர்வுகளைக் கொட்டிய 
சங்கீதமாகச் சிலருடைய வாசிப்பு இருந்தது.
 
 கவிதையை வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசித்தால், ஒவ்வொரு அசையும், சொல்லும், வரியும் 
என்னென்ன உணர்வுகளையெல்லாம் தூண்டும் என்பதை இந்த ஒலிக்கவிதைப் போட்டி அனுபவிக்க 
வைத்தது.
 
 'ஒலிக்' கவிதைப் போட்டிக்கு வந்தவற்றில் ஒன்றிரண்டு மரபுக் கவிதையேனும் இருக்கும் 
என்னும் எதிர்பார்ப்புடன் இருந்தேன். இல்லாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. 
பரிசுக்குத் தேர்வு பெற்ற கவிதைகள் பற்றி நண்பர் கவிஞர் ஜெயபாரதன் அவர்கள் சொல்லி 
விட்டார்கள். அதுவே என் கருத்தும்.
 
 வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 அன்புடன்
 இக்பால்
 
 அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
 http://groups.google.com/group/anbudan
 
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - ஒலிக்கவிதைப் 
பிரிவு
 நடுவர்கள்: கவிஞர் ஜெயபாரதன், கனடா; கவிஞர் கதுமு. இக்பால், சிங்கை ஒலிக்கவிதை - 
கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.
 
 *
 
 முதல் பரிசுக்குரிய கவிதை
 
 
 "இருட்டிலே ஒரு மெழுகுவத்தி"
 
 
 நெருப்பே
 நீ மெழுகுவத்தியைத்
 தின்றபோது தான்
 இருள் இங்கே விலகியது
 
 ஆனால் நீ
 வெடிகுண்டாய் வந்தபோது
 வெளிச்சம் கூட வெட்கப்பட்டது
 
 நெருப்பை நெருப்பால்
 அணைத்தபோது தான்
 இருள் கதவு
 இங்கே விலகியது
 
 வெளிச்சம் தரும்
 சூரியன் கூட
 அண்டவெளியில்
 இருட்டில் தானே கிடக்கிறது
 
 இருட்டைப் போக்கும்
 எத்தனையோ மெழுகுவத்திகள்
 வெளிச்சத்தைப் பார்த்ததேயில்லை
 
 ஒரு மெழுகுவத்தி
 மகாத்மாவாக மாறியபோது தான்
 உலகம் அகிம்சையைப் புரிந்துகொண்டது
 
 ஒரு மெழுகுவத்தி
 ரோஜாவாக மாறியபோது தான்
 விடுதலைப் பத்திரம் இங்கே எழுதப்பட்டது
 
 வெளிச்சத்தை நாங்கள்
 விலைகொடுத்து
 வாங்கும்போதெல்லாம்
 கதவுக்கு வெளியே
 இருள் தானே காத்திருக்கிறது
 
 வெளிச்சம் வீட்டுக்குள் வருமென
 அறிவுக் கதவுகளைத் திறந்தால்
 மதக்கொடிகளுக்குக் கீழே
 இருள் தானே ஊர்வலம் வருகிறது
 
 இங்கே பள்ளத்தில் விழுவதற்கு
 ஏணிகள் செய்கிறார்கள்
 விழுவதைக் கூட
 பறப்பதாய்ச் சொல்கிறார்கள்
 
 இன்பம் அங்கே இருக்குமென்றால்
 இரவும் பகல் தான்
 
 இருட்டிலே ஒரு மெழுகுவத்தி
 இருந்துவிட்டுப் போகட்டும்
 
 ஆனால்
 மனிதநேயம்
 மரணப் படுக்கையில் இருக்கும்போது
 வெளிச்சத்தைப் பார்க்கவே
 எங்களுக்கு விளக்கு வேண்டும்
 
 - மு. பாண்டியன்
 நெய்வேலி
 
 (முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
 
 *
 
 
 இரண்டாம் பரிசுக்குரிய கவிதை
 
 
 "உன்னை நினைக்கையிலே"
 
 
 உன்னை நினைக்கையிலே
 உல்லாசத் துள்ளலில்
 முன்நிற்கும் நெஞ்சத்தை
 எந்த முகப்படாமிட்டு
 மறைப்பதென்று தவிக்கையிலே
 மலையாக உன் நினைவே
 முன்னின்று எதிர்கொள்ளும்.
 
 முட்டிமுட்டிக் குடிக்கும்
 கன்றினைப்போல்
 உன்னைச் சுற்றிச்சுற்றியே
 நினைவு.
 
 வழிப்பாதை இடைஇடையே
 பொதி சுமக்கும் கழுதையின்
 முரண்டாய் பிடிவாத நினவுகள்,
 ஆக்கிரமிக்கும் தன் ஆளுமையை.
 ஒப்பனைக்குப் பின்னும்,
 என் கண்ணில்
 உன் முகமே தெரிவதாக
 தோழி சொல்கிறாள்.
 
 உன்னில் நானா
 என்னில் நீயா
 யாரோடு யார் கலந்தோம்?
 ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
 பள்ளிப்பாடக் கணக்கில்
 ஒன்றும் ஒன்றும் ஒன்றேயானது
 நம் பள்ளியறைக் கணக்கில்.
 
 நீயும் நானுமில்லாத
 உலகைக் கண்டேன்
 அங்கு காற்றே இல்லை
 நீயும் நானுமில்லாத
 நிலவைப் பார்த்தேன்
 அதில் ஒளியே இல்லை
 நீயும் நானுமில்லாத
 கவிதை புனைந்தேன்
 அதில் ஜீவனே இல்லை.
 
 - ஷைலஜா
 பெங்களூர்
 
 *
 
 
 ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 1
 
 
 "பிடிமானம்..."
 
 
 உளியாய் வந்தாய்
 உருகும் உள்ளமறிந்து
 சிதிலமாய்க் கிடந்த கல்லெடுத்து
 செதுக்கிச் செதுக்கி சிற்பம் செய்தாய்
 
 காற்றாய் வந்தாய்
 காதலில் கசிந்துருகி
 எங்கோ கிடந்த தக்கையையெடுத்து
 புல்லாங்குழலாய் கீதமிசைத்தாய்
 
 வண்ணமயமாய் தீட்டினாய்
 வீணே கிடந்த சீலையையெடுத்து
 வானமளக்கச் செய்தாய்
 விரியும் சிறகுகள் விரித்து
 
 அன்பளித்து அன்பளித்து
 அன்பின் ஊற்றாக வந்தாய்
 அண்டத்தின் சிகரம் காண
 அழைத்துச் சென்றாய்
 
 பாரையே புதுப் பார்வையால்
 காணவைத்த நீ
 பார்வையிழக்கச் செய்து
 கண்காணா தொலைவில் மறைந்தபடி
 போர் தொடுக்கிறாய்
 
 மீட்சியின்றித் தவித்தாலும்
 வாழ்கிறேன்
 வீழக்கூடாதென்ற உன்சொல்லினைப்
 பிடிமானமாய்ப் பற்றிக்கொண்டு...
 
 - மதுமிதா
 சென்னை
 
 *
 
 
 ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 2
 
 
 "அன்புடன் அபலை"
 
 
 நான் பலமுறை
 விற்றிருக்கிறேன்
 உடலை
 
 யாசிக்கின்றேன்
 அன்பை
 யோசிக்கிறார்கள்
 
 அந்தியில்
 கடை விரிக்கும் போது
 சந்தியில்
 முகம் பார்த்தழைக்கும்
 ஆடவரும்
 
 பணப்பந்திக்கு
 முந்தி வந்து
 கையேந்தும் பெண்டிரும்
 யோசிக்கிறார்கள்
 
 ஆண்களுக்குத் தேவை
 உடல்
 பிற
 பெண்களுக்குத் தேவை
 பணம்
 எனக்குத் தேவை
 மனம்
 
 கற்பை
 கரையும் வியர்வையில்
 கரைத்தவர்களும்
 பகலிலும் இரவிலும்
 கனவில் கூடிக்கூடிக்
 களித்துக் களைத்தவர்களும்
 
 என்னைக் கற்பிழந்தவள்
 என்கிறார்கள்.
 
 அமாவாசை
 இருளில்
 சிறகு விரிக்கும்
 மின்மினியின்
 ஒளி போல
 நெஞ்சத்தில்
 புதைந்து கொண்ட
 சின்னச் சின்ன
 ஆசைகள்
 
 அஸ்திவாரத்தோடு
 நின்றுபோன கட்டிடங்கள்
 போல
 அனாதரவாய்
 மன ஊஞ்சலில்...
 
 தோள் கொடுக்க
 வாரீரோ
 என அழைத்தால்
 படுக்கைப் பந்தியென
 கடுகவே விரைகிறார்கள்...
 
 சித்திரத்துத்
 தாமரை போல்
 நான் கொள்ளும்
 பொய்ச்சிரிப்பும்
 
 மங்கலமாய்
 சிவந்து நிற்கும்
 அந்தி வானமாய்
 என் பெண்மையின்
 பொய் நாணமும்..
 
 ஆடித்தள்ளுபடிக்கு
 மக்களை ஈர்ப்பது போல்
 ஈர்க்கிறது.
 
 குத்து விளக்காய்
 குளிர்ந்து நிற்கும்
 என் மன அழகு
 உண்மை..
 
 திருமண அழகு
 தேடும்
 பலாச்சுளை போன்ற
 என் இனிய பெண்மை
 உண்மை..
 
 செயற்கையைச்
 சந்தையில்
 வைத்து
 வயிறு கழுவும் நான்
 சிந்தையில் வைத்த
 உண்மையைச்
 சந்தைப்படுத்த இயலாது.
 
 சந்தைக்கு வாராத
 பொருட்கள்
 விலை போகாது
 
 விலை போகாத
 பொற்சிலை நான்..
 
 தூசு ஏறி
 மதிப்பிழந்து
 
 தூசைத் துடைப்பவன்
 பாக்கியவான்
 மரபை உடைப்பவன்
 பாக்கியவான்.
 
 ஈரேழு
 சென்மமாயினும்
 அவனுக்காகக் காத்திருப்பேன்
 
 காத்திருக்கும் காலம்
 கற்பிழந்த சமுதாயத்தைப்
 புறந்தள்ளி
 இல்லற வேள்வியில்
 எனை
 ஆகுதியாய் இட்டிட
 என்னைச் செப்பனிடுவேன்...
 
 உடற்பசியைத்
 தணித்திட்ட நான்
 என் பசித்தீயில்
 எரிய நேரிடினும்
 மகிழ்வாக மடிவேன்
 
 மடிந்த பின்னாவது
 மடி கிடைக்குமா? ஆதரவாக
 காலச் சக்கரம்
 போல் என் ஆசைகளும்
 சுழலும்....
 
 ஆசைகளோடு,
 அபலை.
 
 
 - V. லஷ்மணக்குமார்
 மதுரை
 
 *
 அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
 http://groups.google.com/group/anbudan
 |