| 
            மீள்பிரசுரம்:  
            http://inioru.comஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்  
பாகம் 14 -
 பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஐயர்
 
   [ஐயரைப் 
போன்ற முன்னாள் போராளிகள் மத்தியிலிருந்து சுய விமர்சனத்துடன் கூடிய 'ஈழப் 
போராட்டத்தில் எனது பதிவுகள்:' போன்ற விமர்சனங்கள் எழுவது ஆரோக்கியமானது. அதற்காகவே 
மேற்படி 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்:' பதிவுகளைப் பதிவுகளில் பதிவு 
செய்கின்றோம். -- பதிவுகள் -] தமிழீழ விடுதலைப் புலிகளின் கனவு என்பதே பலம் மிக்க இராணுவத்தைக் கட்டமைப்பது தான். 
இதன் அடிப்படையே ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி முகாமொன்றை உருவாக்குவது என்பதிலிருந்தே 
ஆரம்பிக்க முடியும் என நாம் கருதினோம். இதற்குரிய முழுமையான திட்டத்துடன் பிரபாகரன் 
முன்வருகிறார். திட்டமிட்டபடி மாங்குளத்தில் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்படுகிறது. 
இது வரையில் எழுந்தமானமாக சந்தர்ப்பம் கிடைக்கின்ற வேளைகளிலெல்லாம் நாம் 
பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தோம். துப்பாகிகளைச் சுட்டுப் பழகுவது போன்ற சிறிய 
இராணுவ நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டோம். 
 79 இன் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில் தான் திட்டமிட்டு 
ஒழுங்கமைக்கப்பட்ட இரணுவப் பயிற்சி ஆரம்பமாகிறது. முகாம் துல்லியமாகத் திட்டமிட்டு 
அமைக்கப்பட்டது.
 
 பாதுகாப்புடன் கூடிய இராணுவ முகாம்களில் பங்கர்கள் வெட்டப்பட்டு, மண்மூடைகள் 
அடுக்கப்பட்டு ஒரு சிறிய இராணுவ முகாம் போலவே காட்சிதருகின்ற பயிற்சிக்களம் 
தயாரிக்கப்பட்டது. முதல் தடவையாக இராணுவப் பயிற்சிக்கென்றே சீருடைகள் 
தயாரிக்கப்படுகின்றன. பயிற்சி வழங்கப்பட்ட அனைவருக்கும் சீருடைகள் 
வழங்கப்படுகின்றன. இராணுவப் பயிற்சி ஒழுங்கு முறைகள் கூடப் பிரபாகரனால் 
தயாரிக்கப்படுகின்றன. அவரின் நீண்ட நாள் இராணுவக் கனவோடு கூடிய திட்டங்கள் முதலில் 
நனவானது.
 
 அரச இராணுவம் மக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அமைக்கப்படுகிறது. இதன் உள் 
நோக்கம் இராணுவத்தின் மனிதாபிமான,மென்மையான உணர்வுகளை முற்றாகத் துடைத்தெறிந்து, 
மக்களையும் அழிக்கவல்ல அரச இயந்திரத்தின் அலகாக உருவாக்குவது என்பதே. இதில் 
விசித்திரமானது என்னவென்றால் மக்கள் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிய நாங்களே 
எம்மையும் அறியாமல் மக்கள் பற்றற்ற இராணுவத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை 
மாங்குளத்தில் கட்டியெழுப்ப முனைந்தது தான்.
 
 அனைத்திற்கும் மேலாக ஹிட்லரின் இராணுவ ஒழுங்கு முறைகளாலும் இராணுவ வெற்றிகளாலும் 
ஆளுமை செலுத்தப்பட்டிருந்த பிரபாகரன், ஜேர்மனிய இராணுவத்தின் ஒழுங்கு முறைகளை 
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பயிற்சிகளில் புகுத்த முற்படுகிறார். 
ஹிட்லரின் இராணுவம் கட்டுக்கோப்பானதாகவும் உறுதியானதாகவும் அமைந்திருந்தமையால் 
மட்டும் தான் வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்கிறது என்று கூறுகிறார். .
 
 இராணுப் பயிற்சி ஒழுங்குமுறையின் முதல் பகுதியாக பயிற்றப்படுகின்ற அனைவரும் 
ஹிட்லரின் இராணுவம் போல அதே முறையில் சலூயுட் செய்ய வேண்டும் என்று உத்தரவு 
பிறப்பிக்கப்படுகிறது. ஹிட்லரின் இராணுவத்தின் ஒழுங்குமுறையையும் கட்டுக்கோப்பையும் 
மிகவும் மதித்திருந்த பிரபாகரன் அதன் தமிழீழப் பிரதியாக விடுதலைப் புலிகளின் 
இராணுவம் அமைந்திருக்க வேண்டும் என்று விருப்பியிருந்தார். அதனை நானும் 
நிராகரிக்கவில்லை
 
 இவ்வேளையில் தான் முதல் தடவையாக பிரபாகரனுக்கு எதிரான எதிர்ப்பலைகள் தோன்றுகின்றன. 
சில உறுப்பினர்கள் ஹிட்லரின் சலூயுட் முறை என்பது தேவையற்றது என வாதிட்டனர். 
பிரபாகரன் அவர்களுக்கு எதிராக வாதிடுகிறார். கட்டுக்கோப்பான இராணுவம் அமைய 
வேண்டுமானால் அதற்கான வழிமுறைகளும் அமைந்திருக்க வேண்டும் என்கிறார். அதன் ஆரம்பமே 
இந்த ஹிட்லர் முறை என்று வாதிடுகிறார். குறிப்பாக, பிற்காலத்தில் விடுதலைப் 
புலிகளால் கொல்லப்பட்ட குமணன் இதை எதிர்க்கிறார். அவரும் பயிற்சி முகாம் 
ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் விவாதங்களில் பங்குகொண்ட வேளையிலேயே இந்த விவாதம் 
ஏற்படுகிறது. இறுதியில் பிரபாகரன் முன்வைத்த அடிப்படையில் ஹிட்லர் முறை 
ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுதப்படுகிறது.
 
 கைப்பற்றப்பட்ட இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் தவிர, நாம் இந்தியாவில் சில 
இயந்திரத் துப்பாகிகளையும் சிறிய ரக ஆயுதங்களையும் வாங்கியிருந்தோம். ஒரு 
ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்தின் பயிற்சி முகாம் போன்று அமைந்திருந்த எமது முகாமின் 
இராணுவ அணிவகுப்பு, முறையான உடற்பயிற்சி போன்றவற்றுடன் துப்பாகிகளால் 
சுட்டுப்பழகுதல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்தோம்.
 
 மக்கள் இராணுவம் உருவாகி வளர்ச்சியடைகின்ற நிலையில் நிலையான இராணுவமும் 
பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட சரியான சூழல் உருவாகும் என்கிறது மாவோவின் 
இராணுவப்படைப்பு. நாம் நிலையான இராணுவத்தை எல்லாவற்றிற்கும் முன்னமே உருவாக்கிக் 
கொள்கிறோம். அதற்கான அனைத்து ஒழுக்கங்களும் ஒரு அரச இராணுவத்திற்கு ஒப்பானதாகத் 
திட்டமிடப்பட்டது.
 
 மத்திகுழு உறுப்பினர்களில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா, பேபி சுப்பிரமணியம் 
ஆகியோர் இந்தியா சென்றுவிட்டதால் நானும் பிரபாகரனும் மட்டுமே பயிற்சி முகாம் 
குறித்த முடிவுகளுக்கு வருகிறோம். இந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் முழுவதும் 
இராணுவ மயப்படுத்தப்படுகிறது. இன்பம் செல்வம் என்ற இரண்டு இளைஞர்கள் இராணுவத்தால் 
சுட்டுக்கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகள் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் 
அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
 
 பயிற்சி முகாமிற்கு கிட்டு, செல்லக்கிளி, சாந்தன்,ஜோன், சித்தப்பா, குமரப்பா, மாத்தையா 
போன்ற முன்னணி உறுப்பினர்கள் அழைக்கப்படுகின்றனர். பிரபாகரன் பயிற்சி வழங்குகிறார். 
இவருக்கு ஹிட்லர் இராணுவ முறையில் வணக்கம் செலுத்துவதும் திட்டமிட்டபடி 
இடம்பெறுகிறது.
 
 இந்த வேளையில் இயக்கத்தினுள் இன்னொரு பிரச்சனையும் உருவாகிறது. வல்வெட்டித்துறையைச் 
சேர்ந்த ரகு. வீரவாகு என்ற இருவரைப் பிரபாகரன் பண்ணைகளில் பயிற்றப்படாமல், அவர்கள் 
குறித்து எந்த முன்னறிதலுமின்றி முகாமிற்குக் கூட்டிவருகிறார். பயிற்சி 
முகாமிற்குக் கூட்டிவரப்பட்ட இவர்களிருவருக்கும் ஏனைய முக்கிய உறுப்பினர்களுடன் 
இணைத்துப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து பிரபாகரன் நான் உட்பட யாருடனும் 
ஆலோசிக்கவில்லை. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் 
அனைவரும் பண்ணைகளில் நீண்டகாலம் பயிற்றுவிக்கப்பட்டு, அவர்களின் உறுதித் தன்மை 
பரிசோதிக்கப்பட்ட பின்னரே இயக்கத்தின் பயிற்சி மட்டத்திற்கு உள்வாங்கப்படுவது 
வழமையாக இருந்தது. ஏற்கனவே பண்ணைகளில் பல உறுப்பினர்கள் நீண்டகாலம் இராணுவப் 
பயிற்சிக்காகக் காத்திருக்கும் வேளையில் திடீரெனெ இருவரைப் பிரபாகரன் கூட்டிவந்தது 
குறித்து சர்வாதிகாரப் போக்கு என்ற கருத்து எழுகிறது. இந்த நடைமுறைக்கு 
பிரபாகரனிடம் எந்த உறுதியான காரணமும் இருக்கவில்லை. பலர் இந்த பிரபாகரனின் இந்த 
நடவடிக்கை குறித்துக் கேள்வியெழுப்பிய வேளைகளில் அவரிடம் அதற்குரிய பதில் 
இருக்கவில்லை.
 
 வல்வெட்டித்துறைச் சேர்ந்த இந்த இருவரும் குண்டுகள் செய்வதற்கான இரசாயனப் பொருட்களை 
அவர்கள் கல்விகற்றுக்கொண்டிருந்த ஹாட்லிக் கல்லூரியிலிருந்து திருடிய 
சம்பவத்திற்காகப் பொலீசாரால் தேடப்படுகின்றனர். பொலீசாரல் தேடப்படுவதால் இவர்கள் 
தலைமறைவாகவே வாழ்கின்றனர். குமணன், மாதி, ரவி போன்ற உறுப்பினர்கள் ஏனையயவர்கள் 
புறக்கணிக்கப்பட்டு இவர்களை இயக்கத்தினுள் உள்வாங்கியது குறித்து பலத்த 
ஆட்சேபனைகளைப் பிரபாகரனுக்கு எதிராக முன்வைக்கின்றனர்.
 
 சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கல்விகற்றுக்கொண்டிருந்த சிறுவனான வீரவாகு 
இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்துகொள்கின்றனர். 
இது தெரியவரவே குமரப்பா,மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்புகொள்ளும் அவரது 
குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகின்றனர். 
வீரவாகுவும் வீட்டிற்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பிவைக்கிறார். 
வீட்டிற்குச் சென்ற அவர் பொலீசில் சரணடைந்துவிடுகிறார். இந்த நிகழ்ச்சி பிரபாகரன் 
மீதான அதிர்ப்தியை மேலும் அதிகரிக்கிறது. இதன் பின்னர் பிரபாகரனின் தன்னிச்சையான 
போக்கு குறித்துப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பிக்கின்றனர். பிரபாகரனின் 
இராணுவ மனோபாவமும் அதற்குரிய சர்வாதிகாரத் தன்மையும் சிறுகச் சிறுக இயக்கத்தின் 
நிர்வாகத்துள் நுழைய ஆரம்பிக்கிறது. அதற்குரிய எதிர்வினைகளை எம்மோடிருந்த 
போராளிகளின் முன்னேறிய பகுதியினர் அவ்வப்போது ஆற்றத் தவறவில்லை.அனைத்து 
வாதப்பிரதிவாதங்களோடு பயிற்சி முகாம் சில நாட்கள் நடைபெறுகிறது. சில காலங்களின் 
பின்னர் பயிற்சி முகாம் முடிவடைந்தது என்று கூறி நிறுத்தப்படுகிறது.
 
 
  இந்தக் காலப்பகுதியில் காந்தீயத்தில் அகதி நிவாரண வேலைகளை மேற்கொண்டிருந்த 
சந்ததியார் தானும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் 
தெரிவிக்கிறார். பிரபாகரனைத் தொடர்புகொண்டு பேசுகிறார். பிரபாகரனும் சந்ததியாரும் 
பல தடவைகள் சந்தித்துக் கொள்கிறார்கள். அவரை புலிகளின் முக்கிய பொறுப்பில் 
இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரபாகரன் விரும்புகிறார். 
 உமாமகேஸ்வரனூடாக எமக்கு ஆதரவாக வேலைசெய்த முதல் பெண் ஊர்மிளா பொலீசாரால் 
தேடப்படுகிறார். கொழும்பில் வாழ்ந்த அவர் தலைமறைவாக வடக்கு நோக்கி வருகிறார். பெண் 
என்பதால் இலகுவாக அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுவிடலாம் என அச்சம் 
நிலவியது.
 
 லண்டனில் வசித்துவந்த கிருஷ்ணன் என்பவருடைய தலைமையில் எமக்கு ஆதரவாகச் சிலர் 
இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அன்டன் பாலசிங்கத்திற்குத் தொடர்புகள் 
இருந்தன. அன்டன் பாலசிங்கம் இந்தியாவிற்கு வந்து எம்மைச் சந்திக்க விரும்புவதாக 
எமக்குத் தகவல் வருகிறது. இதற்காகப் பிரபாகரனும் இந்தியா செல்ல விரும்புகிறார். 
பயிற்சி முகாம் மூடப்பட்டுவிட்டதால் இந்தியா சென்று பாலசிங்கத்தைச் சந்திக்கவும், 
ஊர்மிளாவை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லவும் இது சரியான சந்தர்ப்பம் என எண்ணிய 
பிரபாகரன் இந்தியா செல்ல ஏற்பாடுகளை மேற்கொள்கிறார். அப்போது சந்ததியாரைத் 
தொடர்புகொண்ட பிரபாகரன்,அவரோடு முன்னரே இணைந்து வேலைசெய்த உமாமகேஸ்வரனை 
இந்தியாவிற்கு தன்னோடு வந்து சந்திக்குமாறு அழைக்கிறார்.
 
 சந்ததியாரும் இதற்கு இணங்கவே, பிரபாகரன், ஊர்மிளா,சந்ததியார், கலாபதி ஆகிய 
நால்வரும் எமது விசைப்படகில் இந்தியா செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ரவியும் 
பாலாவும் இந்தியா செல்கின்றனர்.
 
 
 
உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் 
– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் பாகம் 15 - ஐயர் -
  இந்தியா சென்ற எமது உறுப்பினர்கள் முதலில் மதுரைக்குச் சென்று மதுரையில் சில 
நாட்கள் தங்கியிருந்த பின்னர், செஞ்சி ராமச்சந்திரனின் உதவியுடன் எம்.எல்.ஏ 
விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு ஏனையோரும் தங்கியிருந்தனர். அங்கு (திராவிடர் 
கழகம்) தி.க விலிருந்த பலர் எமது இயக்கத்திற்கு அறிமுகமாகின்றனர். தமிழ்த் தேசியம் 
என்பது தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. 
திராவிடக் கொள்கையின் மறு முகம் தமிழ்த் தேசியமாக அமைந்திருந்தது. தமிழ் நாட்டைப் 
பொறுத்தவரை இது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியாகக் கூடச் செயற்பட்டது. 
திராவிடக் கொள்கையின் தலித்தியக் கூறுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த பொதுத் 
தளமும் இருந்ததில்லை. ஆனால் எம்மைப் பொதுவாக அவர்கள் சமூகப் போராளிகளாகவே கருதினர். 
பல திராவிட இயக்கத் தொண்டர்கள் எம்மோடு இணைந்துகொள்ள விரும்பினர். 
 எமது உறுப்பினர்கள் தங்கியிருந்தது செஞ்சி ராமச்சந்திரனின் விடுதி என்பதால் அங்கு 
அனைவரும் தங்கியிருக்க வசதியீனம் காணப்பட்டதால் தண்டையார்பேட்டையில் ஒரு வீடு ஒன்றை 
வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். பூபதி என்ற சேலத்தைச் சேர்ந்த எமது ஆதரவாளர் 
மூலம் அந்தவீடு வாடகைக்கு அமர்த்திக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் எம்.எல்.ஏ 
விடுதியிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறித் தங்கியிருக்க ஆரம்பித்தனர்.
 
 1979 இன் ஆரம்பக் காலப்பகுதியில் நடந்த இச்சம்பவங்கள் குறித்த தகவல்களைப் 
பெரும்பாலும் இலங்கையிலிருந்த எனக்கு கடித மூலமும் நேரடிச்சந்திப்புகள் மூலமும் 
தெரிவித்துக்கொள்வார்கள். அப்போது தமிழ் மன்னன் என்ற சென்னைத் தமிழர் ஒருவர் எமக்கு 
நிறைய உதவிகள் செய்வார்.தவிர மேகநாதன் என்ற தமிழ் உணர்வாளரும், தி.கவின் 
உறுப்பினருமான ஒருவர் முழு நேர ஊழியராக எமது இயக்கத்தில் இணைந்து கொண்டார் சில 
காலங்களில் வீரமணி என்ற ஒருவரும் இந்தியாவிலிருந்து பகுதி நேரமாக எம்மோடு 
இணைந்துகொண்டார்.
 
 உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கவும் ,தேடப்படுபவர்கள் இலங்கையில் இருந்து இந்தியா 
நோக்கி வரவும் இருப்பிடத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தஞ்சாவூரிலும் 
ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். ஈழத்திற்கு தேவையான தளபாடங்களைச் 
சேர்த்து அனுப்பவும், அங்கிருந்து வருகின்றவர்களை தற்காலிகமாகத் தங்க 
வைப்பதற்காகவும் இந்த வீடு பயன்படுத்தப்படுகிறது.
 
 இலங்கையிலிருந்து பிரபாகரனும் அவரோடு புறப்பட்ட மூவரும் சென்னையிலிருந்த 
தண்டையார்பேட்டை வீட்டிற்கே வந்து சேர்கின்றனர்.
 
 அவ்வேளையில் இங்கிலாந்திலிருந்து அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேல் 
பாலசிங்கத்துடன் சென்னையில் எம்மைச் சந்திப்பதற்காக வந்து சேர்கிறார். அவர் 
வந்ததுமே புலிகளின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரன் மற்றும் பிரபாகரன் உட்பட 
அனைவருடனும் பேசுகிறார். மார்க்சிய அரசியல் வகுப்புகளும், வெளியீடுகளும் அவசியமானவை 
என்று கூறுகிறார்.
 
 பாலசிங்கம் தமிழ் நாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே துண்டுப்பிரசுரம் ஒன்றைப் 
புலிகளின் பேரில் நாடு முழுவதும் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 
முன்வைக்கிறார். ‘சோசலிசத் தமிழீழத்தை நோக்கி…’ என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் 
புலிகளின் முதலாவது துண்டுப்பிரசுரம் பாலசிங்கத்தால் எழுதப்பட்டு இந்தியாவில் 
அச்சிடப்படுகிறது. அதன் பிரதிகள் இலங்கையில் வினியோகம் செய்யப்படுவதற்காக எனக்கு 
அனுப்பி வைக்கப்படுகிறது. துண்டுப் பிரசுரம் எமக்குக் கிடைத்ததும் நாம் வேறுபாடுகளை 
மறந்து புதிய உற்சாகத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறோம்.
 
 இதே காலப் பகுதியில் இலங்கையில் இனவாதத்தை வெளிப்படையாகவே பேசிய சிங்கள அரசியல் 
வாதிகளில் இலங்கை அமைச்சர் சிறில் மத்தியூ மிகப்பிரதானமானவர்.
 
 சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை மேலும் நஞ்சூட்டிய குறிப்பிடத்தக்க தலைவர்களில் 
சிறில் மத்தியூவும் ஒருவர். இவர் ‘சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுச்சி 
கொள்ளுங்கள்’ என்ற நூலை எழுதியவர். ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் அரசில் அரசவை அமைச்சராகப் 
பணிபுரிந்தவர். ‘யார் புலிகள்’ என்ற துண்டுப் பிரசுரம் 1979 இல் இவர் தபால் 
தலைப்புடன் அனைத்து பொது அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. ‘தமிழர்கள் 
இலங்கையை அழிக்க வந்தவர்கள்’ என்று வெளிப்படையாகவே பேசிவந்தவர். இவரது மகன் நத்தா 
மத்தியூவும் பல அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர் என்பதோடல்லாமல், மகிந்த ராஜபக்ச 
அரசில் ஊவா மாகாணத்தின் ஆளுனராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 குமணன் மனோமாஸ்டர் போன்ற ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து நாமும் சிறில்மத்தியூவின் 
அதே தபால் தலைப்பைப் பயன்படுத்தி துண்டுப்பிரசுரத்தை அரச திணைக்களங்களுக்கும் அதன் 
மையங்களுக்கும் அனுப்பிவைப்பதாகத் தீர்மானித்து அவரின் இலச்சினை பொறிக்கப்பட்ட 
தபால் உறையை பிரசுரித்துக் கொள்கிறோம். இது அரச திணைக்களங்களுக்கு கிடைக்கும் அதே 
வேளை குறித்த நேரத்தின் அனைத்து வாசிக சாலைகள் பொது மையங்கள் பாடசாலைகள் போன்ற 
இடங்களுக்கு இருவர் கொண்ட அணிகளாகப் பிரிந்து தமிழ்ப் பகுதிகளில் வினியோகம் 
செய்வதற்காக பண்ணையிலிருந்தவர்களைத் தயார் செய்கிறோம்.
 
 திட்டமிட்டபடி பிரசுரம் பெரியளவில் அனைத்து மட்டங்களையும் சென்றடைகிறது. ஒரு 
‘அதிரடி’ நடவடிக்கை போன்று அமைந்த இந்த நிகழ்வின் பின்னர் புலிகள் குறித்து தமிழ் 
மக்கள் பரவலாகப் பேசிக் கொள்வதையும் அவர்களிடம் புதிய நம்பிக்கை துளிர்விட்டதையும் 
காணக்கூடியதாக இருந்தது.
 
 பிரசுரம் பரவலாகக்ச் சென்றடைந்த சில நாட்களில் அது குறித்து இலங்கை உளவுப் பிரிவு 
மிகுந்த அச்சம் கொள்கிறது. குறைந்தது ஆயிரம் பேர் இணைந்து திட்டமிட்டுத் தான் இப் 
பிரசுரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று கணிப்பிட்ட இலங்கை இரகசியப் 
பொலீசாரின் அறிக்கையை இலங்கையின் அனைத்து நாளிதழ்களும் பிரசுரிக்கின்றன.
 
 சிறி லங்கா அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களும், இன அடக்கு முறையும் இராணுவ 
வடிவங்களாக உருவாகிக்கொண்டிருந்த வேளையில் பிரசுரம் மக்கள் மத்தியில் புதிய 
நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது.
 
 அவ்வேளையில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா போன்றோர் மிகத் தீவிரமாக 
இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் உறங்குவதற்காக மட்டுமே தங்குமிடங்களுக்கு வருகின்ற 
அளவிற்கு மிகவும் தீவிர இயங்கு சக்திகளாகத் தொழிற்பட்டனர். உமாமகேஸ்வரன், நாகராஜா 
ஆகிய இருவருமே மிகுந்த அர்ப்பண உணர்வோடு செயலாற்றுபவர்கள். இவர்கள் சென்னையில் 
ஆரம்பித்து தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் இயக்கத்தின் தேவைகளுக்கான பல தொடர்புகளை 
ஏற்படுத்திக் கொண்டனர். அந்த வேளையில் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு 
உமாமகேஸ்வரனிடம் இருந்ததது.
 
 பிரபாகரன் சென்னைக்கு வந்த பின்னர் தளத்தில் பண்ணைகளை நிர்வகிப்பதிலிருந்து அனைத்து 
இயக்க வேலைகளும் நான் மட்டுமே கவனிக்க வேண்டிய சுமை எனது தோளகளில் விழுகிறது. 
எனக்கு உதவியாக ஏனைய போராளிகளும், குறிப்பாக குமணன் மனோ மாஸ்டர் போன்றோர் 
ஒத்துழைக்கின்றனர். மத்திய குழு உறுப்பினர்களும் பிரபாகரனும் களத்தில் இருந்து 
வெளியேறியதன் சுமையை உணரக் கூடியதாக இருந்தது. தனியே முடிபுகளை மேற்கொண்டு 
வேலைகளைச் செய்வது இது முதல் தடவை அல்ல. ஆனால் முன்னைய சந்தர்ப்பங்களைப் போல 
இலகுவானதாக இருக்கவில்லை. போராளிகளதும் பண்ணைகளதும் தொகை அதிகரித்திருந்தது. 
அத்தோடு கூடவே புதிய பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வுகாணவேண்டிய பழுவும் 
அதிகமானது.
 
 இலங்கையில் பிரபாகரன் பயிற்சி முகாமில் இருந்தவர்கள் மீது தன்மீதான அதிர்ப்தியை 
விட்டுச்சென்றிருந்தார். பிரபாகரனின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து பல 
உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் குரலெழுப்பினர். வீரவாகு ரகு தொடர்பான 
பிரசனைகளை தொடர்ந்தும் சலசலப்பிற்கு உள்ளாகியிருந்தது. இவற்றையெல்லாம் சமாதானப் 
படுத்தி உறுப்பினர்களை ஒழுங்கிற்குக் கொண்டுவரவேண்டிய நிலையில் நான் இருந்தேன்.
 
 பிரபாகரன் தமிழகம் சென்றதும் இயக்கதினுள் புதிய பிரச்சனை ஒன்று தலை தூக்குகிறது. 
பொதுவாக அனைவரும் சென்னையில் தண்டையார் பேட்டை வீட்டில்தான் தங்கியிருப்பது வழமை. 
அங்கே போராளிகள் அனைவரும் இரவு நீண்ட நேரம் இயக்க நடவடிக்கைகள் குறித்துப் 
பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கச் செல்வார்கள். அவ்வேளையில் ஊர்மிளாவும் அங்குதான் 
தங்கியிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்த பின்னர் மொட்டை மாடியில் சென்று 
உறங்குவார். முகுந்தனும் (உமாமகேஸ்வரன்) பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கும் 
வேளையில் அவரும் மொட்டைமாடிக்குச் சென்றுவிடுவார். உமாமகேஸ்வரனின் இந்த நடவடிக்கை 
குறித்து கலாபதிக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
 
 பலருக்கும் உமாமகேஸ்வரன் – ஊர்மிளா குறித்த சந்தேகங்கள் நீண்டகாலமாகவே 
இருந்துவந்தது. உமாமகேஸ்வரன் பலஸ்தீன இராணுவப்பயிற்சிகுச் செல்கின்ற வேளையில் விமான 
நிலையத்தில் அவர்கள் காதலர்கள் போல நடந்துகொண்டதாக அவ்வேளையில் விமான 
நிலையத்திலிருந்த நாகராஜா பிரபாகரனிடம் கூறினார். நாகராஜா வழமையாகவே சந்தேகப்படும் 
சுபாவம் உடையவராதலால், பிரபாகரன் அவரைத் திட்டியிருக்கிறார். தவிர அவர்களுடைய உடல் 
மொழி குறித்து வேறு உறுப்பினர்களும் கூடப் பேசியிருக்கின்றனர். குறிப்பாக 
பிரபாகரனிடம் இவை குறித்து முறையிட்ட போதிலும் பிரபாகரன் முகுந்தன் மீது சந்தேகம் 
கொள்ளவில்லை.
 
 இவ்வாறான சந்தேகங்கள் ஏற்கனவே பேசப்ப்ட்டதால் நாகராஜாவும் கலாபதியும் ஒரு நாள் 
அனைவரும் உறங்கச் சென்றபின்னர் மொட்டைமாடிக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே 
ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் ஒன்றாக உறங்குவதைக் கண்டிருக்கிறார்கள். மறு நாள் காலை 
இவர்களிருவரும் பிரபாகரனிடம் இது குறித்துக் முறையிட்டிருக்கிறார்கள்.
 
 பின்னதாக நாகராஜாவும் பிரபாகரனும் உமாமகேஸ்வரனை அழைத்து இது தொடர்பாகக் 
கேட்டிருக்கிறார்கள். உமாமகேஸ்வரன் பெரிதாக எதுவும் உடனடியாகச் சொல்லவில்லையெனினும் 
இதுதவிர நான் வேறு ஏதாவது தவறிழைத்திருக்கிரேனா என அவர்களைக் கேட்டிவிட்டுச் 
சென்றுவிட்டார்.
 
 உமாமகேஸ்வரனின் நடவடிக்கையும் அதற்கான பதிலும் உறுப்பினர்களிடையே பெரும் 
கொந்தளிப்பையும்,கோபத்தையும் ஏற்படுத்துகிறது. நாம் அனைவருமே அரசியலைத் தனிமனிதத் 
தூய்மைவாததிலிருந்து தன் புரிந்துகொண்டவர்கள். அதிலும் தலைமைப் பொறுப்பிலிருந்த 
உமாமகேஸ்வரனின் இந்தப் பதில் அவரின் உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த 
நடவடிக்கைகள் தூய்மையான, கட்டுக்கோப்பான இராணுவ அமைப்பை உருவாக்குவதற்கான கனவில் 
ஈடுபட்டிருந்த எம்மவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகுகிறது.
 
 ஒழுக்கமான இரணுவ அமைப்பில் இவ்வாறான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்பது 
அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகவே கருதினர். அதுவும் தலைமைப் பதவியிலிருக்கின்ற 
ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்களை மிகுந்த கோபம்கலந்த வெறுப்புடனேயே நோக்கினர்.
 
 சில மணி நேரங்களில், ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வந்த உமாமகேஸ்வரன், 
அனைத்தையும் மறுக்கிறார்.இது தன்மீது திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டு 
என்று கூறுகிறார். உமாமகேஸ்வரன் சாட்சிகளுடன் கூடிய சம்பவம் ஒன்றை மறுத்த போது அது 
மேலும் அவர்மீதான வெறுப்புணர்விற்கு வித்திடுகிறது. பொதுவாக அங்கிருந்த அனைத்து 
உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனுக்கு எதிரானவர்களாக மாறுகின்றனர்.
 
 இவ்வேளையில் முன்னர் கென்ட்பாமில் தங்கியிருந்த ரவி, இவர்களிடையேயான தொடர்பு 
முன்னமே அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான் என்று சொல்கிறார். தவிர, கொழும்பில் 
ஊர்மிளா – முகுந்தன் தொடர்பு என்பது ஓரளவு அறியப்பட்ட விடயம் தான் என்றும் 
சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் அறிந்துகொண்ட பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் 
உமாமகேஸ்வரனைத் தலைமைப்பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கோருகின்றனர்.
 சாதாரண உறுப்பினர்களுக்குப் பாலியல் தொடர்புகளிருப்பதைப் பலதடவைகள் நாங்கள் 
கண்டுகொள்வதில்லை. செல்லக்கிளிக்கு பெண்களுடன் தொடர்புகள் இருப்பதாக அவர் 
பண்ணைகளில் எம்மிடம் பல தடைவைகள் கூற முனைந்த வேளைகளில் நானும் ஏனையோரும் 
அதுபற்றியெல்லாம் இங்கு பேசவேண்டாம் என்று தடுத்திருக்கிறோம்.
 
 பிரபாகரனுக்குக் கூட இது தொடர்பாகத் தெரியும். தவிர,செல்லக்கிளி மீது யாரும் 
கோபப்படுவதில்லை. அவரை துடிப்பான குறும்புக்கார இளைஞனாகவே அனைவரும் கருதினர். ஆக, 
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உமாமகேஸ்வரனை தலைமைப்பதவியிலிருந்து இறங்கி சாதாரண 
உறுப்பினராகச் செயற்படுமாறு கோருகின்றனர்.
 
 அதே வேளை ஊர்மிளாவை பெருஞ்சித்தனார் வீட்டிற்கு மாற்றிவிடுகிறார்கள். உமாமகேஸ்வரன் 
தண்டையார்பேட்டை வீட்டிலிருந்து எம்.எல்.ஏ விடுதிக்கு மாறுகிறார். கூடவே ஏனைய 
உறுப்பினர்களுடனான தொடர்புகளை மட்டுப்படுத்திக் கொள்கிறார்.
 இந்த வேளைகளில் அன்டன் பாலசிங்கமும் அவரது மனைவியும் சென்னையில்தான் இருக்கின்றனர். 
அவர் சென்னைக்கு வந்து சில நாட்களிலேயே இயக்கத்தின் தலைவராகவிருந்த 
உமாமகேஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
 
 
  பாலசிங்கமும் இந்தப்பிரச்சனை தொடர்பாக ஏனையோரிடம் பேசுகிறார். இந்தப் பிரச்சனையைப் 
பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதுதான் பாலசிங்கத்தின் கருத்தாக 
அமைந்திருந்தது. . இவையெல்லாம் ஒரு புறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க தமிழ் நாட்டில் 
உமாமகேஸ்வரனின் முரண்பாடு கூர்மையடைகிறது. தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு 
முன்வைத்த கோரிக்கையை அவர் நிராகரிக்கிறார். உமாமகேஸ்வரன் தொடர்ச்சியாக தான் அவ்வாறு எந்தத் தொடர்பையும் ஊர்மிளாவுடன் 
கொண்டிருக்கவில்லை என மறுக்கிறார். இறுதியில் மத்திய குழு கூட்டப்பட வேண்டும் 
என்றும், மத்திய குழுவின் முடிவிற்குத் தான் கட்டுப்படுவதாகவும் கூறுகிறார்.
 
 மத்திய குழு உறுப்பினர்களில் நான் மட்டும்தான் இலங்கையில் இருந்தேன். உமாமகேஸ்வரன் 
என்னையும் இணைத்துத் தான் மத்தியகுழு முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற 
கோரிக்கையை முன்வைக்க அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, என்னை 
இலங்கையிலிருந்து வரவழைத்து அதன் மத்திய குழு ஒன்று கூடலை நிகழ்த்திய பின்பே இறுதி 
முடிவிற்கு வருவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
 
 இன்னும் வரும்
 
            ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (1 - 13) 
            மீள்பிரசுர 
            http://inioru.com/?p=12329பதிவுகள் 13: ஈழப் போராட்டத்தில்<
 எனது பதிவுகள்! 
            - ஐயர் -
 
  [ஐயரைப் போன்ற முன்னாள் போராளிகள் மத்தியிலிருந்து 
            சுய விமர்சனத்துடன் கூடிய 'ஈழப் போராட்டத்தில் எனது 
            பதிவுகள்:' போன்ற விமர்சனங்கள் எழுவது ஆரோக்கியமானது. அதற்காகவே 
            மேற்படி 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்:' பதிவுகளைப் பதிவுகளில்
            
            பதிவு செய்கின்றோம். -- பதிவுகள் -]
            அவ்ரோ விமானக் குண்டுவெடிப்பு, அதுவும் இலங்கையில் தமிழர்களின் அடிமைச் 
            சாசனம் அங்குராட்பனம் செய்யப்ப்பட்ட நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் 
            எமது தன்னம்பிக்கையை இரட்டிப்பக்கியிருந்தது. எதையும் சாதித்துவிடலாம் 
            என்ற மனோபாவம் எம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது. இனிமேல் இயக்க 
            நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டிக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து 
            ஆராய்கிறோம். 1978 ஆம் ஆண்டு தனது இறுதியை எட்டிக்கொண்டிருந்தது. 
            மார்கழி மாதம் ஆரம்பித்திருந்தது. கிழக்கில் சூறாவழியின் கோரத்தில் 
            பெருந்திரளாக மக்கள் உயிரிழந்த சம்பவமும் அப்போது தான் அதிர்வுகளை 
            ஏற்படுத்தியிருந்தது. அரச உதவிகள் எதிர்பார்த்த அளவில் கிழக்கிற்குப் 
            போய்ச் சேரவில்லை என்பது தமிழ் மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் 
            மேலும் அதிகப்படுத்டியிருந்தது. இப்போது திருநெல்வேலி பல்கலைக்கழக 
            வளாகத்திற்கு அருகிலுள்ள மக்கள் வங்கியைக் கொள்ளையிடுவதற்கான திட்டம் 
            தீட்டப்பட்டாயிற்று. வங்கியின் உள்தொடர்புகள் ஊடாக பணம் பரிமாறப்படும் 
            நேரம் என்பன துல்லியமாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இக்கொள்ளையை 
            மேற்கொள்வதற்காக பிரபாகரனும் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. தவிர, 
            எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 
            வல்லமையுடைய ரவி, துணிச்சல் மிக்க போராளியான செல்லக்கிளி, ஜோன், 
            உரும்பிராய் பெற்றோல் நிலையக் உரிமையாளரைக் கொலைசெய்தபின்னர் எம்மோடு 
            இணைந்துகொண்ட பாலா, ராகவன் ஆகியோர் செல்வதாகவும் தீர்மானிக்கப்படுகிறது 
            .......உள்ளே |