| 
முதுகுமுறிய 
பொதிசுமக்கும் ஒட்டகங்கள்!-துவாரகன் (அல்வாய், யாழ்ப்பாணம்) -
 
 
  
நாங்கள் பொதி சுமக்கும் ஒட்டகங்கள்முதுகு முறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்
 
 மூச்சிரைக்க இழுத்துச் செல்லும்
 வண்டில் மாடுகள் போல்
 நாங்கள்
 முதுகுமுறிய பாரம் சுமக்க தயாராய் இருக்கிறோம்.
 சாட்டையும் விரட்டும் இலாவகமும்
 உங்களிடம் இருக்கும் வரை
 நாமும் சுமந்துகொண்டே இருப்போம்.
 
 செல்லும் தூரமோ,
 பொதிகளின் அளவோ
 எதைப் பற்றியும் நீங்கள்
 கணக்கிடத் தேவையில்லை.
 ஏனெனில் சுமக்கப் போவது நாங்கள்தானே.
 
 ஓய்வு கிடைக்கும்போது அசைபோடவும்
 நீர் கண்டபோது நிரப்பவும்
 பாலைவனம் கடப்பதற்கு உம்மைச் சுமக்கவும்
 நாங்கள் ஒட்டகங்கள் தயாராய் இருக்கிறோம்.
 
 இன்னமும் வானம் பார்க்கும் கூரையும்
 சில்லறை பொறுக்கும் கரங்களும்
 கூடவே எங்களுடன்தான்.
 
 என்றாலும் நீங்களும் நாங்களும்
 சாப்பிடுவது ஒரு சாண் வயிற்றுக்குத்தானே.
 
 mskwaran@yahoo.com
 
தங்கப் பெண்ணுக்கொரு 
தமிழ் தாலாட்டு! 
- கனிஷ்கா, தென்காசி - 
 
 
 
 
 ஆராரோ பாடிடுவேன்! அமுதே எனப் போற்றிடுவேன்!
 தாலாட்டுப் பாடிடுவேன்! தங்கமே நீயும் கண்ணுறங்கு!
 செந்தமிழ்ப் பெண்ணே! என் சிங்காரக் கண்ணே!
 செந்தாழம்பூவே! என் செங்காந்தள் மலரே!
 ஆராரிராரோ! அரி ஆராரிராரோ!
 
 தத்தி நடக்கையிலே தங்கக் கொலுசு மாட்டிடுவேன்
 துள்ளித் திரிகையிலே வெள்ளிக் கொலுசு பூட்டிடுவேன்
 மான்போல துள்ளி நீயும் மயில்போல ஆடு!
 கிளிபோல கொஞ்சி நீயும் குயில் போல பாடு!
 
 ரோசாப்பூ உடுப்புப் போட்டு! தாழம்பூ தலையில் சூட்டி!
 முல்லைப்பல் சிரிப்புக்காட்டி! செல்லமே நீ நடந்தால்
 செவ்வானம் வெளுக்கும்! அந்த சூரியனும் திரும்பும்!
 செந்தமிழ்ப் பெண்ணே! என் சிங்காரக் கண்ணே!
 ஆராரிராரோ! என் கண்ணே நீ உறங்கு!
 
 பட்டுப்பாவாடை கட்டிக்கிட்டு பதக்கம் ஒன்னு மாட்டிக்கிட்டு
 பாரிஜாதம் சூட்டிக்கிட்டு பாதையோரம் நடந்து வந்தால்
 தெய்வம் என்று எண்ணி கோயில் தேரும் வந்து நிற்கும்!
 மலர்க்கூட்டமென்று எண்ணி அந்தப் பட்டாம்பூச்சி சுற்றும்!
 
 பள்ளிக்குச் செல்கையிலே பவளக் கொலுசு மாட்டி நீயும்
 துள்ளிவரும் ஓசைகேட்டு தூவானம் தரையிறங்கும்
 மலர்போல சிரித்து முழு மதிபோல ஒளிரு!
 செந்தாழம்பூவே! என் செங்காந்தள் மலரே!
 ஆராரிராரோ! என் அழுகுச் செல்லம் உறங்கு!
 
 தாவணி போட்டு நீயும் தாரகைபோல் நடந்து வந்தால்
 தரிசு நிலம் செழித்துவிடும் தங்கமணி நெல் விளையும்
 ஏழுகலம் விளையும்! இங்கே கோபுரப் போர் ஏறும்!
 அந்த நிலமகளும் நீயே! எங்கள் அலைமகளும் நீயே!
 
 சோலையில் நீ நடந்தால் சொரிந்து விழும் பூக்களெல்லாம்
 நதியோரம் நீ நடந்தால் நாடிவரும் மீன்களெல்லாம்
 உன் அழகு விழிகள் பார்த்து அந்தக் கயல்கள் நீந்த மறக்கும்!
 உன் காந்த விழிகள் பார்த்து அந்த நதியும் திசையை மாற்றும்!
 ஆராரிராரோ! என் தங்க மகளே உறங்கு!
 
 ஆற்றிலே நீராடி! அழகுக் கூந்தல் அலையாடி!
 காற்றோடு உறவாடி! கருங்கூந்தல் விளையாடும்!
 அதைக் கார்மேகம் கண்டு இங்கே கண்ணீர்விடும் வந்து!
 அந்த மயிலும் தோகை விரித்து மழை வருமே என்று ஆடும்!
 
 வட்ட முகமழகு! மஞ்சள் சிவப்பழகு!
 நெத்திப் பொட்டழகு! நெத்திச்சுட்டி உனக்கழகு!
 அந்த முழுமதியும் வந்து உன் முகம் பார்த்து நிற்கும்!
 அந்த வானவில்லும் வந்து உன் வண்ணம் கண்டு சொக்கும்!
 ஆராரிராரோ! என் அருமை மகளே உறங்கு!
 
 அருவிக் கரையோரம் அழகாக நீ நடந்தால்
 ஆர்ப்பரிக்கும் அருவிக்கூட்டம் ஆனந்தக் கூத்தாடும்!
 சந்தன வாசம் கொண்டு அங்கே சாரல் மழை பொழியும்!
 தென்றலும் அங்கே நின்று உன் தேகம் தொடத் துடிக்கும்!
 
 சட்டங்கள் படித்திடுவாய்! பட்டங்கள் வாங்கிடுவாய்!
 திட்டங்கள் போட்டிடுவாய!; தீயவற்றை விரட்டிடுவாய்!
 அந்தக் கலைமகளும் வந்து உந்தன் நாவில் குடி புகுவாள்!
 அந்த மலைமகளும் வந்து வெற்றிமாலை உனக்குத் தருவாள்!
 ஆராரிராரோ! என் தெய்வ மகளே உறங்கு!
 
 பெரியோரை மதித்திடணும்! பேருபல பெற்றிடணும்!
 சான்றோரை துதித்திடணும்! சாதனைகள் புரிந்திடணும்!
 தமிழ்ப் பண்பாடு காத்து நீயும் பார்போற்ற வாழு!
 செந்தமிழ்ப் பெண்ணே! என் சிங்காரக் கண்ணே!
 
 பெண்ணுக்கொரு இழிவு வந்தால் எதிர்த்து நீ நின்றிடணும்
 தமிழ்ச் சொல்லுக்கொரு குறையும் வந்தால் ஏனென்று கேட்டிடணும்!
 
 பெண்ணுரிமை காத்து தமிழ்ப் பெண்ணாக வாழு!
 அந்தப் பாரதியும் கண்ட புதுமைப் பெண்ணே நீ வாழ்க!
 ஆராரிராரோ! என் வீர மகளே உறங்கு!
 
 மாலையிட உனைத்தேடி மன்மதனும் வந்திடுவான்
 மஞ்சள் முகமெல்லாம் நாணத்தால் சிவந்திடுமே!
 மேளதாளம் முழங்கும்! அங்கே தோரணங்கள் ஜொலிக்கும்!
 மாமன்மார் சீரும் அணிவகுத்து வந்து நிற்கும்!
 
 புகுந்தவீடு போற்றிடணும்! குலப்பெருமைக் காத்திடணும்!
 கொண்டவனை மதித்திடணும்! குழந்தை ஒன்றைப் பெற்றிடணும்!
 தங்கமகனைப் பெற்றுத் தமிழ்த் தாலாட்டுப் பாடு!
 முத்து மகனைப் பெற்று முத்தமிழில் நீயும் போற்று!
 ஆராரிராரோ! என் செல்ல மகளே உறங்கு!
 
 பெண்ணுக்கொரு உறக்கமில்லை! கண்ணே நீ தெரிந்து கொள்வாய்!
 இறுதிவரை இல்லை உறக்கம் இன்று மட்டும் உறங்கிவிடு!
 பாடுகளும் அங்கே படை எடுத்துவரும் முன்னே!
 துன்பங்ளும் அங்கே உன்னைத் துரத்திவரும் பெண்ணே!
 பொறுமையதைக் கொண்டே வாழ்வை வென்றிடணும் நீயே!
 மனஉறுதியதைக் கொண்டே வெற்றி பெற்றிடணும் கண்ணே!
 ஆராரிராரோ! என் பொன் மகளே உறங்கு!
 
 kalpa2011@gmail.com
 |