| குற்றமும் தண்டனையும் -மொழியாக்க அனுபவம்!
 - எம்.ஏ. சுசீலா (புதுதில்லி) -
 
 
  [கட்டுரையாளர் 
  எம்.ஏ.சுசீலா மதுரை,பாத்திமாக்கல்லூரியில், தமிழ் விரிவுரையாளராக..1970 
  முதல்,2006 வரை பணியாற்றி இணைப் பேராசிரியராக ஓய்வு பெற்றவர். பியோதர் 
  தஸ்தயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்' என்னும் புக்ழ்பெற்ற ருஷ்ய நாவலினை 
  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்தவர். மேற்படி மொழிபெயர்ப்பு 
  அண்மையில் தமிழகத்தில் 'பாரதி புத்தக நிலையத்தால்' வெளியிடப்பட்டுள்ளது 
  குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்] 
 அண்மையில் படைப்பாக்க முயற்சிகள் பலவற்றுள், மொழிபெயர்ப்புச்செய்வதும் ஒரு கலை 
  என்று அறிந்திருந்தாலும்,ஒரு சில கவிதைகளையும்,நாடகங்களையுமே இது வரை முயன்று 
  பார்த்திருந்த எனக்கு நீண்டதொரு நாவலை மொழிபெயர்க்கும் அனுபவம் மிகவும் 
  புதுமையானது.அதிலும் குறிப்பாக உலகப்பேரிலக்கியங்களில் ஒன்றான பியோதர் 
  தஸ்தயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" என்னும் இப்படைப்பை மொழிபெயர்த்தபோது 
  எனக்குக்கிட்டிய அனுபவம் வார்த்தைகளால் விண்டுரைக்க முடியாத அளவுக்கு மிக 
  மிகப்பரவசமானது.
 
 மதுரை,பாரதி புத்தக உரிமையாளரான திரு துரைப்பாண்டியன் அவர்கள் எனக்களித்த 
  இவ்வாய்ப்பு,அப்போதுதான் 36 ஆண்டுக்கால
 பேராசிரியப்பணியை நிறைவு செய்திருந்த எனக்கு,அப்பணியிலிருந்து விலகியிருக்க 
  நேர்ந்ததால் விளைந்திருந்த வெறுமை
 உணர்வைப்புறம் தள்ளி விரட்டியதோடு, தஸ்தயெவ்ஸ்கி என்ற மாமேதையின் வரிகளுக்குள் 
  -அவரது எழுத்துக்களுக்குள், உருகி,
 உட்கலந்து, கசிந்து.கண்ணீர் மல்கி என்னையே காணாமல் போகவும் செய்து விட்டது. 
  மொழிபெயர்ப்பின் தெளிவுக்காகப்பல முறை,-பல
 பதிப்புக்களை ஒப்பிட்டுப்படித்தபோது,"நவில்தொறும் நூல் நயமாக " இந்நாவல்,தன்னுள் 
  பொதிந்தது வைத்திருந்த மர்ம முடிச்சுக்களை
 ஒவ்வொன்றாக அவிழ்த்துக்கொண்டே வந்தது.ஒரு கட்டத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்னுள் 
  புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே
 எழுதிக்கொண்டு போவது போன்ற மனமயக்கம் கூட என்னுள் ஏற்பட்டதுண்டு.தஸ்தயெவ்ஸ்கி 
  சொல்ல விரும்பிய
 கதையை, உணர்வுகளைத் தமிழில் முன் வைக்க நானும்,என் எழுத்தும் கருவிகள் மட்டுமே 
  என்ற உண்மையை அப்போது நான்
 விளங்கிக்கொண்டேன். மொழி இனம்,நாடு என்று செயற்கையான எல்லைக்கோடுகள் பலவற்றை 
  வகுத்துக்கொண்டாலும்- தனி மனித
 உணர்வுப் போராட்டங்களும், அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் உறவுச்சிக்கல்களும் 
  உலகின் எந்த இடத்திலும், எந்தக்காலகட்டத்திலும் சாஸ்வதமாகக் காணக்கூடியவை என்னும் 
  வாழ்வியல் உண்மையை "குற்றமும் தண்டனையும்"நாவல் தெளிவாக முன் வைக்கிறது. 
  தஸ்தயெவ்ஸ்கியின் கண்களுக்கு முழுமையான நல்லவர் என்றோ,...முழுமையான தீயவர் என்றோ 
  எவருமில்லை. காமுகனாகச்சித்தரிக்கப்படும் ச்விட்ரிகைலோவிடமும் கூட மர்மேலோதோவின் 
  அநாதரவான குழந்தைகளின் பால் அன்பு
 சுரக்கிறது.கண்டிப்பாக செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்பிரி 
  பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கொல்நிகொவ் மீதுதோழமை
 ஜனிக்கிறது. ரஸ்கொல்நிகொவ் ,ரசுமிகின் ஆகிய அறிவுஜீவிகளின் உரையாடல் படம் 
  பிடிக்கப்பட்டிருப்பதில் வியப்பில்லை.ஆயின்
 அதற்க்கு நேர் மாறான தளத்தில் இயங்கும் -வீடே உலகமென வாழும்-பல்கேரியா 
  அலெக்சென்றோவ்னா, கத்தரீனா இவாநோவ்நா ஆகிய பெண்களின் மன உணர்வுகளையும் 
  துல்லியமாகச்சித்தரிப்பதிலேயே நமக்கு படைப்பாளியின் மீது வியப்பு விளைகிறது. 
  தானும் கூட கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ் தயெவ்ஸ்கி படைப்புக்களில் 
  மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டார்.மனித மனங்களின் இருள் படர்ந்த 
  மூலைகளில் எல்லாம் பயணம் செய்து,இண்டு இடுக்குகளை எல்லாம்
 கூடத்துழாவி, அங்கே மண்டிக்கிடக்கும் சபலங்களை,ச லனங்களை,அழுக்குகளை, 
  ஆசாபாசங்களை, அன்பை, அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து விடும் 
  அவரது எழுத்தை முழுமையாக வாசிக்கும்போதுதான் நீட்ஷேயின் கூற்றிலுள்ள உண்மை 
  துலங்கும்.
 
 மூலத்தைப்படிக்கும்போது கிடைக்கும் பேரனுபவத்தில் ஒரு சிறு பகுதி அனுபவமாவது 
  இம்மொழிபெயர்ப்பால் கிட்டுமெனில் அதுவே
 இச்சிறு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக அமையும்.
 
 நாவல்: குற்றமும் தண்டனையும்
 மூலம்: பியோதர் தஸ்தயெவ்ஸ்கி
 தமிழில் :எம்.ஏ.சுசீலா
 வெளியீடு, பாரதி புத்தக நிலையம்,
 D-28-மாநகராட்சி வணிக வளாகம்,பெரியார் பேருந்து நிலையம்,
 மதுரை-625001
 
 susila27@gmail.com
 http://masusila.blogspot.com/
 |