| கண்ணீர் 
விழுதுகள் ....!
 - மட்டுவில் ஞானக்குமாரன் -
 
 
  
சலுகைக்காற்று வீசும் திசைபார்த்து நீச்சலடிக்கும்
 பாய்மரத்து ஓடங்களாகிப்போன
 ஊடகங்கள்...!
 
 தலை கொய்யப்பட்டது கூட
 அறியாமல்
 தலைப்புச் செய்திக்காக
 காத்திருக்கும் வானொலிகள்...!
 
 இடி
 இடிப்பதைக் கூட
 அவசரச் செய்தியாக்கிவிடுகிற(டிசநயமiபெ நெறள)
 தொலைக்காட்சிகள்
 
 இப்படி
 ஊர் எரியும் போது கூட
 உறைப்புப் பணியாரம் சுடுவது பற்றிய
 விவாதத்தை
 சிரித்தபடி நீங்கள் நடாத்தும்போது
 
 கன்னத்திலே படரும்
 இந்தக் கண்ணீர் விழுதுகளை
 எந்தக்கை தான் வந்து
 துடைத்திட
 நீழும் ...
 
 இன்னொரு கண்ணீர் விழுது ....!
 
- மட்டுவில் ஞானக்குமாரன் -
 
  
கண்ணீர் விழுதுகள் தெரியாதபடிக்கு கண்கள் பழுதுகளாகிவிட்ட
 பார்வையாளர்கள் ....
 
 கண்ணீர்
 விட்டுக்கவிதை எழுதினால் கூட
 தண்ணீர் போட்டுவிட்டு
 தடவிப் பார்க்கும்
 பண்டிதர்கள் ....
 
 இலக்கியக் கப்பல் ஓட்டி விளையாட
 கண்ணீர் கடல் தேடும்
 கலைஞர்...
 
 கிரிக்கெட் சூதாட்டம் வெல்வதற்காக
 தொலைக்காட்சிக் கடவுள் முன்பாக
 தவமிருக்கும்
 இளைய சமூகம்...
 
 வலியின்
 வதைகளைப்பற்றிச்
 சொல்லும்போது கூட
 வாலியின்
 கவிதைகள் போல
 வலிமையாய் இல்லையே என
 நீங்கள் நிராகரிக்கும் போது
 கன்னத்திலே படரும்
 இந்தக் கண்ணீர் விழுதுகளை
 எந்தக்கை தான் வந்து
 துடைத்திட
 நீழும்
 
 maduvilan@hotmail.com
 
 என் முனியம்மா..
 
 - புதியமாதவி (மும்பை) -
 
 
  
பாரதிக்குகண்ணன் என் சேவகன் மாதிரி
 எனக்கு எங்கள் முனியம்மா.
 
 காய்கறி நறுக்குவது முதல்
 துணிமடிப்பது வரை
 எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
 ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
 நாங்கள் இருவருமே
 இந்தியாவும் இலங்கையும் மாதிரி.
 
 ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
 எழுதப்படாத ஷரத்துகள்
 எங்கள் இருவருக்குமே
 ரொம்பவும் முக்கியமானவை
 அதைத் தொடர்வதால்தான்
 என்றும் தொடர்கிறது
 எங்கள் இருவருக்குமான
 கைகுலுக்கல்கள்.
 
 எல்லார் வீட்டு செய்திகளையும்
 அவள் சொல்லச்சொல்ல
 நான் விருப்பத்துடன் கேட்பது போல
 ம்ம் கொட்ட வேண்டும்.
 பதிலுக்கு நான் சொல்லும்
 இலக்கிய அரசியல் கதைகளை
 அவளுக்குப் புரியாவிட்டாலும்
 அவள் கேட்டாக வேண்டும்.
 
 இப்போதெல்லாம் நம் தமிழர்
 எழுச்சிக்கதைகளை
 முத்துக்குமரன்களின்
 உயிர்த்தியாகங்களை
 ஈழத்தமிழருக்காய்
 நடக்கும் கூட்டங்களை
 பேரணிகளை
 மனிதச்சங்கிலிகளை
 நித்தமும் நித்தமும்
 நம் தலைவர்கள் பேசிய
 வீரவசனங்களை
 சொல்லிச்சொல்லி
 பூரித்துப்போனேன்.
 தேர்தல் வந்தது
 கூட்டணி பிறந்தது.
 
 முனியம்மா கேட்கிறாள்
 என்னமா இது..?
 யாரு கூட யாரெல்லாம்?
 ஈழத்தமிழர் போராட்டம்
 அது இதுனு சொன்னீகளே
 இவுக மாறிமாறி
 அங்கேயும் இங்கேயுமா
 நிக்கத பாத்தா
 ஏ தாயி...
 அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
 இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
 இவனெல்லாம்
 சோத்துலே உப்பு போட்டு தின்னான
 இல்ல..
 
 முனியம்மா அடுக்கிக்கொண்டே
 இருக்கிறாள்
 நான் மவுனமாய்...
 வழக்கம் போல
 ம்ம்ம் கொட்டிக்கொண்டு.
 
 நகம்
 - புதியமாதவி (மும்பை) -
 
 
விதம் விதமாக வண்ணம் பூசி
 அழகுப்பார்த்த காரணத்தாலேயே
 வெட்டாமல் இருக்க வேண்டும்
 என்பதல்ல.
 கவனமாக வெட்ட வேண்டும்.
 ஆழமாக வெட்டினால்
 ரத்தக்கசிவு வரலாம்
 கவனிக்காமல் விட்டுவிட்டால்
 வீங்கி சீழ்ப்பிடித்து
 விண் விண் என்று
 வலி கொடுக்கும்
 பிராண அவஸ்தையை
 அனுபவிக்க வேண்டிவரும்.
 
 வளர்ப்பது தற்காப்புக்கு
 என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம்
 வளர்ந்து வளைந்திருக்கும்
 இடுக்குகளில்
 தங்கிவிடுகிறது
 தேடிவந்த அழுக்கும்
 தேகத்தின் அழுக்கும்.
 சமைப்பது சாப்பிடுவது
 அழுக்குகள் சேர்த்துதான்
 என்றாலும்
 பழகிவிட்டது
 இரப்பையும்
 இறைப்பையும்.
 
 இரவில் வெட்டினால்
 தரித்திரம் என்று
 பாட்டி சொன்னதையே
 அம்மாவும் மறக்காமல்
 சொல்கிறாள்.
 
 வெட்ட வெட்ட வளருமாம்
 உன் நினைவுகளைப் போலவே
 நகமும் .
 செத்த உடம்பிலும்
 நகம் வளருமாமே
 சொல்லுகிறார்கள்
 உண்மையா?
 அதனால்தான் உயில் எழுதுகிறேன்
 விரல்களைப் புதைக்காதீர்கள்
 எரித்துவிடுங்கள் என்று.
 
 puthiyamaadhavi@hotmail.com
 
 வேரான மொழி.
 
 - வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்.) -
 
 
  
மொழி அழகிய மலராக விரியும்.மொழி அழகிய பழமாக இனிக்கும்.
 அன்பு மொழி, ஆசை மொழி,
 பண்பு மொழி, பாச மொழி
 கனிந்த மொழி, காதல் மொழி,
 கருத்தான மொழிகள் பன்மை.
 
 உயிரும் மெய்யுமாய் உயர்வாகப் பயிரிட்டு
 உயிர்ப்பித்த மொழி உயிர்மூச்சான மொழி!
 வல்லினம், மெல்லினம் இடையினமாய் வளர்ந்த
 இனத்தின் வேர் மொழி! தனம். தகவுடைத்து!
 
 மொழி ஊர்வலத்தில் பொழியுமதன் இதத்தில்
 விழி பூரித்திடும் குளிர் சாரலாகும்.
 பழியான துன்ப மொழிகளைத் தூரவிலக்கினால்
 மொழித் தேர் அழகில் விழியகல விரியும்.
 
 மொழியின் தித்திப்புக் குமிழ்கள் அழகாய்
 வழிந்து சந்து பொந்துகளிலும் புகுந்து
 அழகிய பந்துகளாய் உருண்டு தவழட்டும்.
 அமிழ்தெனத் தேனாய் எப்போதும் இனிக்கட்டும்.
 
 உடையும், உணவும் உரித்தான பழக்கங்களும்
 உடைந்தாலும் வேரான மொழியைக் காத்திடு!
 மொழி எம் விழி! கற்பது இனத்திற்கும் ஒளி!
 அழியாமல் பாதுகாப்பது இழிவல்ல! உயர்வே!
 
 vetha@stofanet.dk
 
 அவள்
 
 ராம்ப்ரசாத், சென்னை.
 
 
  
முழுக்க நனைந்தபின்முக்காடெதற்கு?
 ஒத்துக்கொள்கிறேன்..
 உன் பார்வை
 பெய்த மழையில் நான்
 முழுக்க நனைந்த பிறகும்,
 முக்காடாய் உன் பர்தாவை
 விலக்கவில்லையே நீ
 இன்னும்...
 
 கண்மணி உன்னருகே
 வந்தமர ஆசையெனக்கு..
 உன்னிரு விழிமீன்கள்
 நீரின்றி நீந்துமழகை
 கிட்டத்தில் கண்டு
 ரசிக்கத்தான்...
 கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த
 எட்டப்பனை அடியோடு
 வெறுத்த என்னால்,
 கருப்புத் திரைதாண்டி
 அழகுப்பதுமை உன்னை
 காட்டிக்கொடுக்கும் அந்த
 இரட்டைப்பிறவிகள் உன்னிரு
 கண்களை மட்டும்
 விரும்பாமலிருக்க முடியவில்லை
 என்னால்...
 
 www.ramprasathkavithaigal.blogspot.com
 ashwin_i1980@yahoo.co.in
 
 
 இப்படியும் ஒரு.......!!!!
 
-தூத்துக்குடி துரை.ந.உ.
 
  
விடியல் தினமும் வந்து போனபோதும்
 இருள் இன்னும் நீங்காத
 இருண்டுபோன தேசம்
 
 ஏன்? எதற்கு?
 என்ற கேள்விகள்
 தடை செய்யப்பட்டுள்ள
 தடுமாறும் தேசம்
 
 எங்கே? எத்தனை பேர்?
 என்ற விபரங்கள் மட்டும்
 பெருமையாய் வெளியிடும்
 போதையிலிருக்கும் தேசம்
 
 கணக்கு காட்ட
 தனது மக்களையே
 கொன்று குவிக்கும்
 குழப்பத்திலிருக்கும் தேசம்
 
 பத்திரிக்கையாளன்
 பரபரப்பு செய்திகளை
 பத்திரிக்கையில் தெரிந்துகொள்ளும்
 பரிதாபமான தேசம்
 
 பத்திரிக்கை சுதந்திரம்
 படுகுழியில் தள்ளி
 அதிபர் மாளிகை
 அன்றைய செய்தி வெளியிடும்
 அற்புதம் நிறைந்த தேசம்
 
 சுண்டு விரல்
 சூப்பும் பிள்ளையையும்
 குப்பி சப்பும் போராளியென
 பயந்துபோய் செல்லடிக்கும்
 பதட்டத்திலிருக்கும் தேசம்
 
 அபயம் தேடிவரும்
 அப்பாவி மக்களையும்
 பாதுகாப்பு வலையத்திற்குள்
 படுகொலை செய்யும் தேசம்
 
 புள்ளி விபரங்களால்
 புளங்காகிதப் பட்டு
 புல்லரித்துப் போயிருக்கும்
 செல்லரித்த தேசம்
 
 உள்ள நிலவரம் புரியாமல்
 உண்மை நிலைமை தெரியாமல்
 தன் முதுகை தானே
 தட்டிக்கொள்ளும் தேசம்
 
 நாட்டுக்கு உழைக்கும் பிள்ளைகள்
 நாளை செயிக்கும் போது
 நல்லோர் முன் மண்டியிடப் போகும்
 நன்றி கெட்ட தேசம்
 
 albertgi@gmail.com
 |