| 
பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டத்துக்கு 
ஆலோசனை கோருகிறார் செ.பத்மநாதன் - 
05 யூன் 2009 - 
 தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு 
பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் 
ஒன்றிணைந்து செயற்படுவதே 
இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக 
உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
 தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய 
யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது 
ஆகும்.
 
 தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து 
வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும்
 போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் 
தமது வாழ்விடங்களில் விரைவாக 
மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன 
செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை 
இழந்திருக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பவையே எங்கள் 
முன்னால் இன்று உள்ள தலையாய 
கடமையாகும்.
 
 அதன் தொடர்ச்சியாக - தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தேசிய தன்னாட்சி 
உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் 
தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான நிரந்தரமான ஒரு அரசியல் 
தீர்வைக் காணுதல் என்பதும் எங்கள் 
முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும்.
 
 இந்தப் பணிகளை நிறைவேற்றி - நாம் கடந்துசெல்ல வேண்டிய பாதை மிகவும் நீண்டதும் 
சவால்கள் நிறைந்ததும் ஆகும்.
 
 தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள 
தமிழர்கள் அனைவரும் ஒரு பொது 
வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.
 
 சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து - ஒரே நாடு என்ற 
கோட்பாட்டின் அடிப்படையில் - தமிழீழ 
மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் 
பார்க்கிறது.
 
 தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது 
தேசிய தனித்துவத்தினைப் பேணிக்
கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது.
 
 சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது.
 
 முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் தமது தனித்துவத்தினையும் 
அடையாளத்தினையும் பேணிக்கொள்வதற்கும் 
எதிரானது.
 
 சிறிலங்கா அரசின் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத் திணிப்பை எதிர்த்துப் போராட 
இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள்
அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய 
அவசியம் இப்போது உருவாகிவிட்டது.
 
 சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் 
செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க 
வேண்டும். அந்தப் பட்டறிவிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
 
 நடந்து முடிந்த இனப் படுகொலையை எம்மால் தடுத்துநிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும் 
தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த
போராட்டங்களை தமிழர்கள் நடத்தினோம். எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் 
மேற்கொண்டோம்.
 
 இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் 
முடியவில்லை.
 
 நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் 
படுகொலையை தடுத்து நிறுத்தவோ 
அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.
 
 ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து 
சமுத்திரப் பிராந்திய புவிசார் 
அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை 
கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது 
தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய் நகர்த்தல்களின் பின்புலத்திலேயே 
தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா
நடத்தியது.
 
 தற்போதும் - இதே அணுகுமுறையினைப் பின்பற்றியே - மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் 
ஆணைக்குழுவின் சிறப்பு அமர்விலும் சிறிலங்கா அரசு வெற்றி ஈட்டியது.
 
 தொடர்ந்தும் - அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்கள மேலாண்மையை தமிழ் 
மக்கள் மீது திணிக்கவே
சிறிலங்கா அரசு முயல்கிறது.
 
 நமது அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற 
முடியாது. நமது தேசத்திற்கு ஆதரவாக உலகை 
எவ்வாறு திருப்பப் போகிறோம்?
 
 நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு 
தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற
அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.
 
 இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது எவ்வாறு?
 
 இதற்கு நமக்கு உள்ள வாய்ப்புக்கள் எவை?
 
 நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எத்தகையவை?
 
 இவை பற்றி நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்க வேண்டும். வேகமாய் இயங்கிக் 
கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து 
கொண்டே இருக்கும்.
 
 இந்த மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற 
நிலைமைகளை உருவாக்கும்.
 
 அந்த நம்பிக்கையுடன் - நமது விடுதலைத் தாகம் தணிந்துவிடாமல் - நமது விடுதலைச் சுடர் 
அணைந்துவிடாமல் - தமிழ்நாடு மற்றும் 
உலகத் தமிழ் மக்களின் துணையுடனும் நியாயத்தின் பக்கம் நிற்கும் உலக மக்களின் 
ஆதரவுடனும் நமது அடுத்த கட்டப் போராட்டத்தை 
நாம் முன்நோக்கி நகர்த்த வேண்டும்.
 
 யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய 
காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள 
நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும்.
 
 நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது 
கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் 
அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.
 
 இந்தத் தொடர்புக்கு வழிசமைக்கும் முகமாக மக்கள் தொடர்புக்கான மின்னஞ்சல் 
முகவரியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
 
 இந்த முகவரிக்கு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தமிழிலோ 
அல்லது ஆங்கிலத்திலோ 
அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
 மின்னஞ்சல் முகவரி: 
prdinternational@gmail.com
 
Courtesy: http://www.puthinam.com/
 வெற்றிக் களிப்பில் மேலும் குற்றங்களை செய்து விடக்கூடாது; போர்க் குற்றங்களை 
விசாரிக்க வேண்டும்: சிறிலங்கா அரசுக்கு பான் கி 
மூன் வலியுறுத்தல்- 06 யூன் 2009-
 
 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் 
மேலும் குற்றங்களைச் செய்யாமல் போரினால் 
ஏற்பட்ட காயத்தை போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்
செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியிருக்கின்றார். 
போரின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை 
நடத்தப்பட வேண்டும் என்ற உலக 
நாடுகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பான் கி 
மூன் கேட்டுக்கொண்டுள்ளார். 
 இலங்கைப் போரின்போது சிங்களப் படையினர் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் 
அதிகமான மேற்பட்ட தமிழ் மக்கள் 
இனப்படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கான அகதிகள் 
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13
ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போயிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் 
எழுந்ததையடுத்து அது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் 
சபையின் பாதுகாப்புச் சபையின் கூட்டம் இந்திய நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை 
நடைபெற்றது.
 
 இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கலந்துகொண்டு 
இலங்கையில் தாங்கள் மேற்கொண்ட பயணம் 
குறித்தும் அங்கு நடைபெற்ற போரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் 
சபையின் பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக 
உள்ள 15 நாடுகளின் தூதுவர்களுக்கு விரிவாக விளக்கினார்.
 
 பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய பான் கி மூன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான 
போரில் கிடைத்த வெற்றியை சிறிலங்கா 
கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
 
 இந்த கொண்டாட்டங்களின்போது செய்யப்படும் குற்றங்கள், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் 
போரினால் ஏற்பட்ட காயங்களைப்
போக்குவதற்காக சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்கள், அனைத்துலக சமுதாயம் ஆகியவை இணைந்து 
மேற்கொண்டு வரும் 
நடவடிக்கைகளை பாதிக்கும்.
 
 எனவே போர் வெற்றியைக் கொண்டாடாமல், போரால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த சிறிலங்கா 
அரசாங்கம் பாடுபட வேண்டும். 
தேசிய அளவிலான இணக்க முயற்சி மற்றும் விரிவான அரசியல் பேச்சுக்கள் ஆகியவற்றின் 
மூலம் போர்க் காயங்களை போக்க 
சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை தயாராக 
உள்ளது என்றார்.
 
 விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் 
மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர்க் 
குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முறையான, வெளிப்படையான விசாரணை 
நடத்தப்பட வேண்டும்.
 
 இது தொடர்பாக உலக நாடுகள் விடுத்துள்ள வேண்டுகோள்கள் ஏற்கப்பட வேண்டும். போரால் 
பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் 
மக்களுக்கு உதவி செய்வதற்காக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் 
செல்ல நிவாரண உதவிக் குழுக்களுக்கும் ஐக்கிய 
நாடுகள் சபைக்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என அவர் 
வலியுறுத்தினார்.
 
 இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே 
அளித்த உறுதிமொழிகளை சிறிலங்கா 
அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் பான் கி மூன் கேட்டுக்கொண்டார்.
 
 இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் 
என்று ஐக்கிய நாடுகள் சபையின் 
மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை உட்பட உலகம் ழுவதும் உள்ள தலைவர்கள் 
வலியுறுத்தியுள்ளனர்.
 
 இந்நிலையில் இதே கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் 
வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 Courtesy: http://www.puthinam.com/
 
 இலங்கை மனித உரிமை மீறல்கள் மீது அனைத்துலக விசாரணை: ஐ.நா. சபையில் நவநீதம்பிள்ளை 
மீண்டும் வலியுறுத்தல் - 05 யூன் 2009 -
 
  இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் 
குறித்து அனைத்துலக விசாரணை
நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான 
ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் 
வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை 
சபையின் கூட்டத்தில் உலக அளவிலான மனித உரிமைகளின் நிலைமை குறித்து அறிக்கை 
சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் 
இதனை மீண்டும் எழுப்பினார்.
 
 அனைத்து ஆயுத மோதல்களிலும் அப்பாவி மக்கள்தான் துன்பத்துக்கு ஆளாகின்றனர். அடிப்படை 
மனித உரிமைகள் 
புறக்கணிக்கப்படுகின்றன.
 
 மக்கள் பாகுபாடான முறையில் நடத்தப்படுகின்றனர். எனவேதான் பாதிக்கப்பட்ட மக்களின் 
மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது 
மிகவும் அவசியமாகிறது என்றார்.
 
 உண்மைகளைக் கண்டறிய வேண்டியதும், மோதல் பகுதிகளில் சுதந்திரமான மனித உரிமை 
கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் 
இருக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானது.
 
 ஆனால் இலங்கையில் மோதல் பகுதிகளுக்கோ, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 
முகாம்களுக்கோ சுதந்திரமான பார்வையாளர்கள் 
செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
 
 எனவே இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிவதற்கு ஒரு 
விரிவான நடைமுறை 
மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வழியில், ஒரு சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்த 
வேண்டும் என்று நான் 
வலியுறுத்துகிறேன்.
 
 கடந்த 2 ஆம் நாள் இந்த சபையில் உரையாற்றிய சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மனித 
உரிமைகள் விவகார அமைச்சர் 
மகிந்த சமரசிங்க, இணக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா அரசு உறுதி பூண்டிருப்பதாகக் 
கூறியிருக்கிறார். அது வரவேற்கத்தக்கது என்று 
நவநீதம்பிள்ளை கூறினார்.
 
 மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டியதுதான், 
இலங்கையில் நீதியும் நல்லிணக்கமும் 
ஏற்படுவதற்கான முன்தேவை என்றும், நிலைத்த அமைதி உருவாவதற்கான அடித்தளம் என்றும் 
நான் நம்புகிறேன் என்று அவர் 
குறிப்பிட்டார்.
 
 போரில் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு 
மனிதநேய உதவிக் குழுக்கள் தடையின்றிச் 
சென்று வருவதற்கும், முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் 
அனுமதியளிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது 
என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் 
நவநீதம்பிள்ளை வலியுறுத்தினார்.
 
 ourtesy: http://www.puthinam.com/
 |