செங்கை ஆழியான்எழுத்தாளர் செங்கையாழியான் அமரராகிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாசகம்தான் நினைவில் வந்தது. யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவராக இருந்த குணராசா என்ற இயற் பெயர் கொண்ட இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புவியியல் பட்டதாரியான இவர் புவியியல் சம்பந்தமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஈழத்து எழுத்தாளர்களில் அதிக படைப்புக்களைத் தந்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. ஆய்வு நூல்களாக நல்லை நகர், யாழ்ப்பாண அரசர் பரம்பரை, ஈழத்தவர் வரலாறு போன்ற இவரது ஆய்வு நுல்கள் வெளிவந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் தென்னிந்தியப் புத்தகங்களின் வருகையைத் தடைசெய்த காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரபலமாயிருந்தன. வீரகேசரி பிரசுரங்கள் மூலம் இவரது நாவல்கள் அப்போது பிரசுரமாகியிருந்தன. இவரது எழுத்தில் இருந்துதான் வழுக்கை ஆற்றைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். மாணவனாக நான் இருந்தபோது ஒரு முறை செட்டிகுளத்தில் அரச உத்தியோகத்தராக இருந்த அவரைச் சந்தித்திருந்தேன்.  இவர் கனடா வந்தபோது எங்கள் வீட்டிற்கும் விருந்தினராக வந்திருந்தார். அப்போது பல இலக்கிய முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினோம். இவரது வாடைக்காற்று என்ற நாவல் படமாக்கப்படபோதும், எனது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரில் மதிவாசனால் படமாக்கப்பட்ட போதும் அமரர் கே. எஸ். பாலச்சந்திரன்  நடித்திருந்தார்.

இச் சந்தர்ப்பத்தில் செங்கையாழியானின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>