ஸ்ரீபதி பத்மநாபா குடும்பத்துக்கு உதவுவோம். (*கவிஞர் மொழிபெயர்ப்பாளர், சிறுபத்திரிகையாளரான ஸ்ரீபதி பத்மநாபா சமீபத்தில் காலமானார். அவருடைய குடும்பத்திற்கு உதவும்படி கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மற்றும் பல எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து முன்வைக்கும் வேண்டுகோள் கீழே தரப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபாவின் இலக்கியப் பங்களிப்புக்கு நாம் செய்யும் பதில் மரியாதையாக அவருடைய குடும்பத்திற்கு முடிந்த நிதியுதவி செய்ய முன்வருவோம் – லதா ராமகிருஷ்ணன்)
--
அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம்! கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா இன்று நம்மிடையே இல்லை. ’மேதமைக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்னதான் உறவோ’ என்ற சு.ராவின் வரிதான் நினைவுக்கு வருகிறது. ஒரு படைப்பாளியாக ஸ்ரீபதி நிகழாது போன அற்புதம். ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டும். ஸ்ரீபதியின் அறிவுக்கு அவர் எழுதியவை குறைவு. அதற்கு எவ்வளவோ காரணங்கள். இனி அதைப் பேசுவதில் பலனில்லை.

வாழ்வெனும் இப்பெருங்கனவை விட்டுச் செல்கிறவர்கள் ஒருவழியாக நிம்மதியாகப் போய்விடுகிறார்கள். ஆனால், அந்தப் பாவப்பட்ட ஆன்மாக்களுக்கு மனைவி என்றும் குழந்தை என்றும் வாய்க்க நேர்ந்த எளியவர்கள் நிலைதான் பரிதாபம். ஊழின் கொடுங்கரங்களில் இரக்கமற்று வழங்கப்படும் அந்த எளிய ஜீவன்களை காலம் போல் கருணையற்று நாமும் பார்த்துக்கொண்டிருக்க இயலாது அல்லவா? ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா சமீபத்தில்தான் புற்றுநோய் பாதிப்பால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வந்திருக்கிறார்.

நன்கு படிக்கும் பெண்ணான பாரதி அன்னைக்குப் பணிவிடை செய்ய வேண்டி கடந்த வருட பள்ளிப் படிப்பை பாதிலேயே கைவிட்டுவிட்டு இந்த வருடம்தான் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இப்படியான சிக்கலான தருணத்தில்தான் ஸ்ரீபதி இக்குடும்பத்தையும் நம்மையும் தவிக்க விட்டுப் போயிருக்கிறார்.

இந்தத் தருணத்தில் ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா மற்றும் மகள் பாரதி இருவருக்கும் உதவ வேண்டியது, சகபடைப்பாளிகள் மற்றும் நண்பர்களாகிய நமது கடமை என்றே கருதுகிறோம்.

கடந்த சனிக்கிழமை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா அஞ்சலிக் கூட்டத்தின் இறுதியில் இதுவரை நூலாக்கம் பெறாத ஸ்ரீபதியின் படைப்புகளை அச்சாக்குவது மற்றும் ஸ்ரீபதியின் குடும்பத்துக்கு உதவுவது என்ற இரு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன் முதல் கட்டமாக வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இந்த வேலைகளை எப்படித் திட்டமிட்டு முடிப்பது யார் யாரிடம் எல்லாம் உதவிகள் கேட்பது என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

நண்பர்கள் இந்த பதிவையே அழைப்பாக ஏற்று, இது தொடர்பான கருத்துகளைப் பதிவிடவும்... மேலும், ஸ்ரீபதிக்கான உதவித் தொகை எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விரைவில் ஒரு தேதியில் ஸ்ரீபதி குடும்பத்தாரிடம் ஒப்படைப்பது என்றும் நண்பர்கள் முடிவெடுத்திருக்கிறோம். இது தொடர்பான வரவு செலவு விவரங்களை ஸ்ரீபதி குடும்பத்திடம் நிதி ஒப்படைத்த பிறகு, உடனடியாக தேதி வாரியாக வழங்கியவர்கள் பெயர் உட்பட இங்கு விரிவாகப் பதிகிறோம். ஸ்ரீபதி குடும்பத்துக்கு உதவ வேண்டியது நமது கடமை. நண்பர்கள் ஸ்ரீபதி மேலும் இலக்கியத்தில் மேலும் தங்களுக்கு உள்ள அன்பை தாராளமாகக் காட்டுங்கள். அனைவருக்கும் நன்றி!!

பி.கு: வங்கிக் கணக்கில் பணம் அனுப்புகிறவர்கள் மறக்காமல் தங்களின் பெயர், ஊர், அனுப்பிய தொகை, தேதி ஆகிய விவரங்களை என்னுடைய 98401-26614 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள் அல்லது இங்கு இன்பாக்ஸில் குறிப்பிடுங்கள். நன்றி!!

வங்கி விவரம்...
B.ELANGOVAN
S.B A/C NO.50100269201360
HDFC BANK
PERUNGUDI BRANCH
IFSC CODE: HDFC0000795


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.