முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -29.4.1891 இல் பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணிப்புரிந்தவர்.பாரதி மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.இவர் ஆத்திசூடி என்ற நூலை இயற்றியுள்ளார்.இந்நூல் 84  ஓரடி பாடல் அடிகளைக் கொண்டுள்ளது.இந்நூலில் பாரதிதாசன் எந்த ஒரு தெய்வத்தையும் நம்பாத நாத்திகர் ஆதலின் கடவுள் வாழ்த்து பாடவில்லை.ஒரு பாயிரம் பாட நூலைத் தொடங்குகிறார்.இந்த பாயிரம் பத்து அடிகளில் அமைந்துள்ளது.இனப்பற்றும்,நாட்டுப் பற்றும் உலகப் பற்றை வளர்க்கும் அடிப்படையில் அமைய வேண்டும்.பகை உணர்ச்சிக்கு அடிப்படையாக அமையக் கூடாது என்றும்  அமைதி நிலவ இந்தக் குறிக்கோள் வேண்டும் என்றும் உலகில் பொது ஆட்சி நிலவத் தன்னுடைய  நூல் பயன்பட வேண்டும் என்றும் ஒர் உயர்ந்த நோக்கத்தைப் பாயிரமாகக் கூறி பாரதிதாசன் ஆத்திசூடியை பாடத் தொடங்குகிறார். அவ்வையாரின் ஆத்திசூடியைப் போலவே அமைந்துள்ளதால் தம் நூலுக்கும் ஆத்திசூடி என்றே பெயர் வைத்ததாகச் சொல்கிறார் இதனை,

நவில் இனப்பற்றும் நாட்டுப் பற்றும்
வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன
இல்லை யாயின் இன்றிவ் வுலகில்
தொல்லை யணுக்குண்டு தொகு தொலைக் கருவி
பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை
அகற்றல் எப்படி ?அமைதியாங்ஙனம்?
உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
நிலவுதல் கருதி நிகழ்த்திய இந்நூல்
ஆத்திசூடி போறலின்
ஆத்திசூடியென் றடைந்து பெயரே        (பாயிரம்)

என்ற பாயிரப் பாடலடிகள் உணர்த்துகிறது.இந்நூலில் பல அறநெறிகள் சொல்லப்படுகின்றன இந்நெறிகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உறவினர் என்று எண்ணு
பாரதிதாசன்,சமுதாயப் பார்வை உடையவர்  ஆதலின் எடுத்த உடனேயே பொது உடைமைக் கருத்தைத் தமது உயிர் கொள்கையை வலியுறுத்தி மிக அமைதியாக முதல் அடியைத் தொடங்குகிறார் அந்த முதல் அடி

அனைவரும் உறவினர்(ஆத்தி .1) என்று தொடங்குகிறது.இதில் மக்கள் அனைவரும்  உறவினராக நினைத்து பழக வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். ஆணும் பெண்ணும் சமம்; சமுதாயத்தில் வாழும் ஆண் பெண் ஆகிய இருவரும் சமம் என்று பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.இதனை, ‘பெண்ணோடான் நிகர்’ (ஆத்தி.63) என்ற அடியால் அறியலாம்.இக்கருத்து  கிராமப்புற மக்களிடம் இன்றளவும் அவ்வளவாக  காணப்படவில்லை.

பொதுவுடைமை சிந்தனை
பாரதிதாசன் பொதுவுடைமை சிந்தனை கொண்டவர்.உலக மக்கள் அனைவரும் ஒரே ஆட்சியில் வாழும் எண்ணம் கொண்டுள்ளார்.இதனை,ஆட்சியை பொதுமை செய் (ஆத்தி.2) என்ற பாடலால் அறியலாம்.ஆட்சியை பொதுவாக்கிய ஆசிரியர் உழைப்பின் பயனால் வரும் பொருள்களையும் பொதுமையாக்கு என்று குறிப்பிடுகிறார்.இதனை  “உடைமை பொதுவே”(ஆத்தி.5)என்ற பாடலால் அறியலாம்.

ஈகை செய்

அறம் என்பதற்கு ஈகை என்று பொருள் கொள்ளுமாறு ஈகையறத்தினைச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.தனிமனித வாழ்வில் இரத்தல் இழிவாகக் கருதப்;பெறினும்,சமூக வாழ்வில் ஈகை உயர்ந்த அறமாகக் கருதப் பெற்றது.ஒருவருடைய துன்பத்திற்கு அவர் வேண்டுவன அளித்து உதவுவதே ஈகையின் பாற்படும்.எவ்விதப் பயனும் கருதாது ஒருவர்க்கு ஒரு பொருளை ஈதலே ஈகையறமாகும்.இது பற்றி,

ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்   (133:6)

என்று கலித்தொகை நவில்கிறது.பாரதிதாசன் இயற்றிய ஆத்திசூடியும் ஒருவர் ஈகை செய்வதால் இன்பம் அடையலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.இதனை, ‘ஈதல் இன்பம்’ (ஆத்தி.4)என்ற அடியால் அறியலாம்.

கல்வி

கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான “எஜிகேஸன்”  என்பதற்குத் தேர்ச்சி,படிப்பு,கல்விப்பயிற்சி, வித்தை,சிட்சை,பழக்கம் என ~வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி’ விளக்கமளிக்கிறது.(ப.420)

சென்னைப்பல்கலைக்கழகதமிழ்ப்பேரகராதிகல்விஎன்பதற்குகற்கைகல்வியறிவு, வித்தை பயிற்சி, நூல், என்று பொருள் விளக்கம் தருகிறது.இந்நூலும் கல்வியைப் பற்றி செய்திகளை எடுத்துரைக்கிறது.இதனை,

“ஊன்றுளம்ஊறும்”(ஆத்தி.6)
எழுது புதிய நூல்  (ஆத்தி.7)
‘கல்லார் நவிலார்’(13)

உள்ளமானது ஊன்றிகின்ற போது கருத்துக்கள் தோன்றும் என்றும் நாள்,கிழமை,திங்கள் தோறும் ஏடுகளை மிகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் (8) என்றும் கல்வி கற்காத சூழலில் ஒருவர் நன்றாக இருக்க மாட்டார் அவர் நலிவடைவார் என்ற செய்தியையும் வலியுறுத்தியுள்ளார்.

ஆலைகளைப் பெருக்கு
துணி நெய்யும் பொறிகளால் ஆன ஆலைகளைப் பெருக்கு என்பதை கிழிப்பொறி பெருக்கு(ஆத்தி.15) என்ற அடியால் அறியலாம்.இதன் மூலம் நெசவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது புலப்படுகிறது.இக்காலத்திலும் நெசவுத் தொழில் கரூர்,ஈரோடு மாவட்டங்களில் சிறப்பாக நடைப்பெறுகிறது.

பிறப்பால் உயர்வு தாழ்வு நினைக்க கூடாது
பிறப்பால் உயர்வு தாழ்வு நினைக்க கூடாது என்ற கருத்தை புத்தர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார் என்பதை ஆசியஜோதி என்ற நூலில் தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அனைவர் உடம்பில் ஓடும் குருதியின் நிறம் சிவப்பு என்றும்,வலியும் கண்ணீரின் சுவை உவர்ப்பு என்று கூறும் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கருத்தை பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.அதாவதுபிறப்பால் உயர்வு பேசக் கூடாது என்றும் அப்படி பேசுவோன் அறிவில்லாதவன் ஆவான் இதனை ‘கீழ்மகன் உயர்வெனும்”(ஆத்தி.16) என்ற வரியால்; அறியலாம்.

குறுகிய நினைவு அகற்று
ஒருவன் நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் .அப்படி இல்லாமல் குறுகிய எண்ணங்களைக் கொண்டிருக்க கூடாது என்பதை ‘குள்ள நினைவு தீர் (ஆத்தி17)என்ற வரியால் புலப்படுகிறது.இக்கால மக்களும் சிலர் குறுகிய எண்ணத்துடன் வாழ்க்கை நடத்துக்கின்றனர்.இது தவறானது.

நிமிர்ந்து நட
கூனி நடக்க  பழகாதே நிமிர்ந்து நடக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.இதனை,கூன் நடை பயிலேல் (ஆத்தி.18) என்ற அடியால் குறிப்பிட்டுள்ளார்.பாரதியார் இயற்றிய புதிய ஆத்திசூடியும் கம்பீரமாக நட என்று குறிப்பிடும் கருத்து மேற்கூறப்பட்டதற்கு அரண்சேர்க்கும் வகையில் அமைகிறது.

பிறரைக் கெடுக்க எண்ணக் கூடாது
ஒருவர் பிறருக்கு நன்மை செய்ய வேண்டுமே தவிர கெடுக்க நினைக்க கூடாது இக்கருத்தை ஆத்திசூடியும் குறிப்பிடுகிறது இதனை, கெடு நினை வகற்று (ஆத்தி19) என்ற வரியால் அறியலாம்.இக்கால மக்களும் பலர் பிறரைக் கெடுக்காமல் வாழ்வது சிறந்தது.

ஒற்றுமையா இரு
உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறி அதுவே அமைதிக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடுகிறார்.இதனை, ‘ஒற்றுமை அமைதி’ ( 10) குறிப்பிடுகிறார்.இக்கால சமுதாய மக்களும் ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்ற பொன்மொழிக்கு ஏற்ப வாழ்வது சால சிறந்தது.

பயனற்ற சொற்களைப் பேசாதே
பயனில்லாத சொற்களைப் பேசக் கூடாது என்பது வள்ளுவர் கருத்து. இதனைப் பற்றிய கருத்துக்களைப் பயனிலச் சொல்லாமை என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.இக்கருத்தையே  பாரதிதாசனும் குறிப்பிடுகிறார்.இதனை ‘வெறும் பேச்சுப் பேசேல்’(ஆத்தி.82) என்ற அடியால் அறியலாம்.

உணவு
பசித்தப் பின் உணவு உண்ண வேண்டும்

இவ்வுலக மக்கள் உயிர் வாழ இன்றியமையாத ஒன்றாக அமைவது உணவு.இவ்வுணவு என்னும் சொல்லுக்கு உயிர் வாழ உண்ணுவது,சாப்பாடு,ஆகாரம் (ப.133) என்று பொருள் விளக்கம் தருகிறது கௌரா தமிழ் அகராதி.இத்தகைய உணவைப் பற்றி இந்நூலும் இயம்புகிறது. ‘வேளையோடு உண்’(ஆத்தி.83) பாடலில் பசி எடுத்தப் பின் உண்ண வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.ஆகையால் சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவரும் பசி எடுத்த பின் உண்ண வேண்டும் என்று கருத்தைக் கூறி உடல்நல பேணலை எடுத்தியம்பியுள்ளார்.மக்கள்  சிலர் இக்காலத்திலும் உணவைக் கண்ட நேரத்தில் சாப்பிடுகின்றனர் இத்தகைய செயல் தவறானது.

பிறருக்கென வாழ வேண்டும்
தனக்கென வாழாமல் பிறருக்கென வாழும் பண்பை சிறந்த  பண்பு.இத்தகைய பண்பு உடையவர்களே சிறந்தவர்கள் ஆவர்.இதனைப் பற்றி “வையம் வாழ வாழ்” (ஆத்தி.84) என்ற வரியால் அறியலாம்.

ஒவியம் பயில்
ஆயக்கலைகள் 64. இக்கலைகளில் ஒன்று  ஒவியக்கலை  ஆகும். இத்தகைய ஒவியத்தொழிலைப் பயில வேண்டும்  இந்நூல் எடுத்துரைக்கிறது.

பொறாமை
ஒருவனுக்கு பொறாமைக் குணம் இல்லாமல் இருப்பது சிறந்தது ஆகும்.  பொறாமைக்    குணம் ஒருவனுக்கு பெரு நோய் ஆகும்.பொறாமைக் குணம் இல்லாமல் இருப்பது ஒருவனுக்கு சிறந்த பண்பு ஆகும்.வள்ளுவரும் பொறாமைக் குணம் வேண்டாம் என்பதற்காக அழுக்காறாமை என்ற அதிக்காரத்தை வகுத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இக்கருத்தை இந்நூலாசிரியரும் குறிப்பிட்டுள்ளார்.

கைம்மை மணம் (விதவையை மறுமணம் செய்து கொள்)
பெண்ணின் கணவன் இறந்து விட்டால் அவளுக்கு வேறொரு திருமணம் மக்கள் செய்து வைக்க வேண்டும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார் இதனை 21 ஆம் பாடலில் எடுத்துரைக்கிறார்.இதனை,கைம்மை அகற்று  (ஆத்தி.21) என்ற பாடலில் எடுத்துரைக்கிறார்.மற்றொரு பாடலில் ‘வாழாட்கு வாழ்வு சேர்’(ஆத்தி.79) என்ற பாடலில் பெண்களுக்கு மறுமணம் வேண்டும் என்ற கருத்தைப் பதிவுச்செய்துள்ளார்.இக்கால அறிஞர் பெருமக்களும் இக்கருத்தை முன்மொழிகின்ற செய்தி இங்கு குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுங்கள்
பெற்றோர்கள் தன் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்று குறிப்பிடுகிறார் இதனை, ‘சீறார் நலம் தேடு’(ஆத்தி.26) என்று கூறியிருக்கிறார்.இக்காலத்தில் வாழும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறைக் காட்டுகின்றனர்.ஆனால் வெளிநாடுகளில் இந்நிலை இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாக உள்ளது.

சொற்பெருக்காற்றும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
மக்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சொற்பெருக்காற்றும் திறன் இருக்க வேண்டும் என்று இந்நூலில் ஆசிரியர் எடுத்தோம்பியுள்ளார் இதனை ‘சொற்பெருக்காற்றல் கொள்’(ஆத்தி.33) என்று குறிப்பிட்டுள்ளார். ‘வாய் உள்ள பிள்ளைப் பிழைத்துக் கொள்ளும்’ என்ற பழமொழியை உணர்ந்து செயல்படுவோமானால் பாரதிதாசன் கூறியது போல மேற்கூறப்பட்ட ஆற்றல் மக்களிடையே நன்றாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோர்வு நீக்கு
வள்ளுவர் மக்களிடையே சோம்பல் இருக்க கூடாது என்பதற்காக மடியின்மை என்ற அதிகாரத்தை வகுத்துள்ளார்.இக்கருத்தைப் பற்றிய செய்திகளை இந்நூலாசிரியரும் குறிப்பிடுகிறார்.இந்நூலில் அமைந்த 34 ஆம் அடியில் “சோர்வு நீக்கு”(ஆத்தி.34) என்று குறிப்பிட்டுள்ளார்.இக்கால மக்களும் சோம்பல் இல்லாமல் வாழும் பண்பே கொண்டிருந்தால் வீடும் நாடும் முன்னேற்றம் அடையும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை செய்
உழுத்தொழில் செய்வதே சிறந்தது.இக்காலத்தில் உழவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் எல்லாரும் சோற்றில் கை வைக்க முடியும் என்ற நிலையை உணர வேண்டும். இதனை ;திருஎனல் உழு பயன்’ (ஆத்தி.37) என்ற அடியால் அறியமுடிகிறது.

பயன் தரும் மரங்களை நட
பயன் தரும் மரங்களை நடவேண்டும் என்று குறிப்பிடுகிறார் இதனை, ‘தீங்கனிவகை விளை’(ஆத்தி.38) என்ற வரியால் அறியலாம்.மேலும் மற்றொரு பாடலில் தெருவெலாம் மரம் வளர்  (ஆத்தி.41) என்ற பாடலில் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மக்களும் மரம் நட வேண்டும் என்று குறிப்பிடுகிறார். மரங்கள் நடுவதால் மண் அரிப்பு தடுக்கப்பட்டு மழைபொழிவு ஏற்படும் என்று அறிவியல் பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீராடல்
சுற்றுசூழலும், உடலும் தூய்மையாக இருக்க ஒவ்வொருவரும் நீராடல் வேண்டும்.இந்நூல் ஆசிரியர் நீராடும் போது எந்த நீரில் குளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை,

‘தூய நீராடு’ (ஆத்தி.40) என்ற வரியால் அறியலாம்.இது போன்ற கருத்துக்களை அற இலக்கிய நூலான ஆசாரக்கோவையும் எடுத்துரைத்துள்ளது.

தொன்மை மாற்று
எப்போதும் பழமையைப் போற்ற வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவார்கள் ஆனால் இக்கொள்கைக்கு மாற்றாக இவ்வாசிரியர் படைத்துள்ளார்.இதனை, “தொன்மை மாற்று”(ஆத்தி.44) என்ற பாடலில் அறியமுடிகிறது.

இன்றையநிலைக்குஒத்துவராதபழையபழக்கங்களையும்,பழங்கொள்ளைகளையும் முன்னேற்றத்துக்கு உரிய வகையில் மாற்றி அமைத்து கொள் என்று  ஆசிரியர் கூறும் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

அஞ்சக் கூடாது
பாரதியார் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என்று குறிப்பிடுகிறார் இதனை,நடுகல் அறியாமை (ஆத்தி.46) என்ற பாடலில் இந்நூலாசிரியரும் குறிப்பிட்டுவது இங்கு நோக்கத்தக்கது.

தீய ஒழுக்கம் கூடாது
மக்களாய் பிறந்த ஒவ்வொருவரும் நல்ல ஒழுக்கத்துடனே வாழ வேண்டும்.ஆனால் சிலர் தீய ஒழுக்கத்துடன் வாழ்கின்றனர்.இதனை நீக்க வேண்டியது சிறந்தது.இந்நூலும் இவ்வொழுக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறது.இதனை ‘நோய் தீ ஒழுக்கம்’(ஆத்தி.56) என்ற அடியில் அறியலாம்.

மானத்துடன் வாழ்
தன் நிலையில் தாழாப் பண்பே மானம் எனப்படும்.மானத்தைப் பற்றிய செய்திகள் இந்நூல் ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளார்.இதனை ‘பீடு தன் மானம்’(ஆத்தி.60) என்ற வரியால் அறியமுடிகிறது.

பாலியல் திருமணம் செய்யாதே
பெண் என்பவள் பூப்பு எய்திய உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் அதற்கு முன் அப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது தவறானது ஆகும்.இதனை, “பூப்பின் மணம் கொள்”(ஆத்தி.62) என்ற பாடலில் எடுத்துரைக்கிறார்.இக்கருத்தின் அடிப்படையிலாவது குழந்தைத் திருமணம் செய்யக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்ப்பற்றுடன் இரு
மக்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் தமிழ் உணர்வுடன் கூடிய தமிழ்ப்பற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் இதனை,தமிழின் பற்றை எடுத்துக் கூறும் வகையில் ஒரு பாடலை அமைத்துள்ளார். இதனை, ‘பைந்தமிழ் முதன்மொழி’(ஆத்தி .65) என்ற வரியால் அறியலாம்.

மதம்பற்று இருக்கக் கூடாது
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமம் என்ற உணர்வு மக்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருக்கும் மதமாகிய பேய் பிடிக்க கூடாது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்.இதனை, “பேயிலை மதமலால்”(ஆத்தி.64) என்ற அடியால் அறியலாம்.இக்கருத்தை உணர்ந்து மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

போர்தொழில் பழகு

மெய்பாடுகளில் ஒன்று வீரம்.இந்த வீர உணர்வு மக்களிடம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்நூலில் ‘போர்த் தொழில் பழகு’(ஆத்தி.67) என்ற அடியில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகமாக செலவு செய்யாதே
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று கூறுவார்கள்.இப்பழமொழிக்கு ஏற்ப கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும்.இதனை, ‘மீச்செலவு தவிர்’(ஆத்தி.71)என்ற பாடலால் அறியலாம்.

புகழுடன் வாழ்
சமுதாயத்தில் வாழும் மக்கள் நல்ல செயல்களைச் செய்து புகழுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிடுகிறார் இதனை, ‘மேலை உன் பெயர் பொறி’(ஆத்தி.75) என்ற அடியால் அறியலாம்.

வாணிபம் செய்வதில் கொள்ளை இலாபம் ஈட்ட கூடாது
வாணிபம் செய்வோர் பொதுமக்களுக்கு வருத்தம் விளைவிக்கும் செயலை செய்யக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.இதனை, ‘மொடு மாற்றுப் பொது வின்னா’ (ஆத்தி.77) என்ற அடியால் அறியமுடிகிறது.இக்கருத்தைச் சங்க இலக்கிய நூலானப் பட்டினப்பாலையும் அக்காலத்தில் குறிப்பிட்டுள்ளது.

முடிவுரை
ஆசிரியரான பாரதிதாசனின் வரலாறு அறிந்து கொள்ள முடிகிறது. அனைவரையும் உறவினர் என்று கருது , ஆணும் பெண்ணும் சமம்; என்று எண் ,ஈகை செய், பொதுவுடைமை சிந்தனையுடன் இரு, கல்வி கல், ஆலைகளைப் பெருக்கு, ஒற்றுமையாக இரு, பிறப்பால் உயர்வு தாழ்வு நினைக்காதே, குறுகிய நினைவை அகற்றிக் கொள்,மரங்களை நடு, பிறரைக் கெடுக்க எண்ணாதே, பயனற்ற சொற்களைப் பேசாதே, பசித்தப் பின் உணவு உண்,பிறருக்கென வாழ், வேண்டும், மானத்துடன் வாழ், பாலியல் திருமணம் செய்யாதே, தமிழ்ப்பற்றுடன் இரு,அஞ்சாதே, புகழுடன் வாழ், வாணிபம் செய்வதில் கொள்ளை இலாபம் ஈட்டாதே போன்ற அறநெறிகளை பாரதிதாசன் எடுத்துரைத்துள்ளதை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.இக்கருத்துக்களை இக்கால மக்களும் உணர்ந்து செயல்படுவது சாலச் சிறந்தது.

துணைநூற்பட்டியல்
1.கௌமாரீஸ்வரி                                   ஆத்திசூடி மூலமூம் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை-600014 முதற்பதிப்பு -2008 ஐந்தாம் பதிப்பு  2013 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

* கட்டுரையாளர் - சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி  -24 -