கல்யாண்ஜி மனிதன் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைக் கண்டு மகிழத் தொடங்கிய அன்றே அழகுணர்ச்சியும் அரும்பியது எனலாம்.    அழகு என்ற சொல்லாட்சியின் வீச்சும், பயன்பாடும் பரந்துபட்டது. அழகு என்ற சொல், பொருள் வரையறைக்கு உட்படாதது. ""அழகு என்பது காண்டலும் கற்பனை அனுபவமுமே''1 என்று அழகியல் கொள்கையாளர் கூறுவர். (அப்ப் க்ஷங்ஹன்ற்ஹ் ண்ள் ண்ய் ல்ங்ழ்ஸ்ரீங்ல்ற்ண்ர்ய் ர்ழ் ண்ம்ஹஞ்ண்ய்ஹற்ண்ர்ய்) இந்த அடிப்படைக் கருத்தை இடைக்கால உரையாசிரியரான "பேராசிரியர்' மிகவும் தெளிவாய்க் கூறியுள்ளார் அவர், ""திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை, நோக்கம் என்றது அழகு''2 ஆகும் என்று கூறுகின்றார்.    அழகியல் என்ற சொல் அழகான பொருளை மட்டும் குறிப்பதன்று. ஒவ்வொருவரின் பார்வையிலும் அழகு வேறுபடலாம். ""அழகு என்பது ஆழந்த பொருளில் இல்லை; ஆழந்த உள்ளத்தில் இருக்கிறது'' 3என்று வாழ்வியல் களஞ்சியம் பொருள் தருகிறது.  மேலும்,    ""அழகு என்பது அனுபவமே அல்லாது அநுபவிக்கப்படும் பொருள் அன்று. அது காணப்படும் பொருளில் இல்லை. காண்பவர் தம் கருத்தில் இருக்கிறது...''4 என்பர். அழகியல் இன்பமயமான உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துவது. புனையப்படும் பொருளின் அழகையோ, அழகின்மையையோ சார்ந்ததன்று; தனிப்பட்ட மனிதனின் உள்ளத்தைச் சார்ந்தது. அத்தகையவனைக் கலைஞன் என்று கூறுவர்.

அழகின் நிலைக்களன்கள்:
அழகினை வேண்டுவோர் இயற்கை வாழ்வு வாழ வேண்டும் என்ற விளக்கத்தை அடிப்படையாகக் கொள்வர் என்று கூறலாம். அழகின் தன்மையையும் பயனையும், ""உள்ளதை உள்ளவாறு கூறுவதும் உள்ளதை உள்ளவாறே ஏற்பதுவம் அழகியன் அடிப்படை. இங்கே உள்ளது, உள்ளவாறு எனப்படுபவை உணர்த்தும், உணர்ந்தவாறும் ஆகும். எனவே அழகு என்பது உண்மை; உண்மை நன்மையே தரும். நன்மை இன்பம் தரும். இன்புறுத்துவது அழகாகும்'' 5என்பர்.

அழகியல் இருவகைக் கண்ணோட்டங்களை நிலைக்களன்களாகக் கொண்டுள்ளது. அவை, வாழ்வியற் கண்ணோட்டம், கலைக்கண்ணோட்டம் என்பனவாகும். வாழ்வியற் கண்ணோட்டம்:
வாழ்வை அதன் அழகிற்காகவே போற்றுவது; அதன் உண்மையை உணர்த்துவது என்பதையே வாழ்வியற் கண்ணோட்டம் எனலாம். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சித்தாந்தம் உடையவர்கள் சென்ற காலத்தையும், எதிர்கால நிகழ்வுகளையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. ""வாழ்வை ஒரு போராட்டமாகக் கருதாமல் நாடகமாக் கருதுவது, தன் உணர்வுகளைக் கூட ஒரு நாடகமாகப் பார்ப்பது''6 என்பர். ஆனால் கல்யாண்ஜி கவிதைகளில் வாழ்வை நோக்குகின்ற முறை மாறுபட்டதாக, முரணாக அமைவதைக் காணமுடிகின்றது. வாழ்க்கையை வாழவும் முடியாமல் அதனைவிட்டு விலகிச் செல்லவும் முடியாமல் தவிப்பதைக் கவிஞர்,


""இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்''


என்று வெளிப்படுத்துவதன் வழி அறிய முடிகின்றது.

கலைக் கண்ணோட்டம்:
வாழ்வின் ஒரு கூறு கலை ஆகும். வாழ்வியற் கண்ணோட்டம், கலைக் கண்ணோட்டத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது எனலாம். ""அழகியல் கொள்கையின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் எளிமையாகவும், சுருக்கமாகவும் திரட்டிக் கூறும் மேற்கோள் உரை ஒன்று உண்டு "கலை கலைக்காகவே' என்பதே அந்த வாசகம்''7 என்பர். கலைக் கண்ணோட்டத்தில் இன்றியமையாத இடம் பெறுவது உருவமும், உள்ளடக்கமும் ஆகும். அவை இரண்டும் பிரிக்க முடியாதவை எனலாம். ஒரு படைப்பைக் காண்பதில், அவ்வுண்மையைத் தெரிந்து கொள்ளலாம். உருவமும் உள்ளடக்கமும் கல்யாண்ஜி கவிதைகளில் ஒன்றிக் காணப்படுகின்றன எனலாம். ""தோற்றம்'' என்ற கவிதையில் அவர்,

""வாழ்க்கை சிக்கலானது
அல்லது சிக்கலானது போல் தோன்றுவது
சுலபமானது
அல்லது சுலபமானது போல் தோன்றுவது
நான் உண்மையானவன்
அல்லது உண்மையானவன் போலத்
தோன்றுபவன்
என் கவிதை பாசாங்கற்றது
அல்லது போலத்  தோன்றுவழ
இதுஇது
அல்லது
இது போலத் தோன்றுவது''

அதாவது, தோற்றம் என்பதை இதுதான் என்று உறுதியாகக் கூற இயலாது என்றும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகவே தோற்றம் காட்சி அளிக்கும் என்றும் அவர் கூறுகின்றார்.

அழகு நோக்கு:
அழகு என்பது காணும் காட்சியில் இன்பம் தரும் தோற்றப் பொவேயாகும். இயற்கையின் ஒவ்வொர் அசைவிலும் அழகினைக் கண்டு இன்புற்றவர் கல்யாண்ஜி எனலாம். முருகியல் கொள்கையை, ""அழகைக் கண்டனுபவிப்பதுவும் அதனை உணர்ந்து பிறருக்கு உணர்த்துவதுமே இலக்கியத்தின் பண்பு. இதனை முருகியல் கொள்கை என்பர்'' 8அத்தகைய முருகியல் தன்மையின் பதிவாகக் கல்யாண்ஜியின் கவிதைகள் அமைகின்றன எனலாம். மழைக்காலம், விண்மீன், மரம், வெயில், விடிவெள்ளி, கடல், தீராத தீ, கானகம் போன்ற ஒவ்வோர் இயற்கைப் பொருளும் கல்யாண்ஜி கவிதையால் அழகுணர்ச்சியை ஏற்படுத்துவதை அறிய முடிகின்றது.

மழைக்காலம்:
மனிதன் செயற்கையாய் அவனுடைய வசதிகளைப் பெருக்கிக் கொண்ட போதிலும் இயற்கை பல வழிகளில் அவனுக்கும் பயன்படுகின்றது. அவற்றுள் மழையும் ஒன்றாகும் எனலாம். அத்தைகய மழையைப் பாரதிதாசன்,

""கானல் தணிக்க நல்ல மழையே வா & நல்ல
நாடு செழிக்க வைக்க மழையே வா
ஆன கிணறுகுளம் ஏரி எல்லாம் & நீ
அழகுபடுத்த நல்ல மழையே வா''9

என்று வரவேற்கின்றார். மேலும் பாரதியார் மழை பெய்யும் அழகினைச்,

""சட்டசட சட்டச்சட டட்டா & என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையு மிடிய & மழை
எங்ஙனம் வந்தத டா, தம்பி வீரா!''10

என்னும் கவிதையின் வழி வெளிப்படுத்துகின்றமையைக் காண முடிகின்றது. கல்யாண்ஜியும், அவருடைய கவிதையில்,

""மழைக் காலத்தில் பெய்யும்
மழை அழகானது
மனதை மீட்டும் ஈரமுடையது
மழை பெய்யும் சப்தம் கேட்கவும்
மழைக் கொப்புளம் தரையில்
பார்க்கவும் கொடுத்து வைக்க வேண்டும்''

என்று மழையின் அழகினைக் குறிப்பிடுவதைக் காண முடிகின்றது.

விண்மீன்:
நிலவு காட்சியின்பத்துடன் உலகத்திற்குக் குளிர்ச்சியையும் தந்து மகிழ்விக்கக் கூடியது எனலாம். அத்தகைய நிலவுடன் விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாத் தோன்றிப் பின்னர் வான்நிறைந்து காட்சி அளிப்பதைக் காண முடிகின்றது. அந்த அழகினைப் பாரதிதாசன்.

""மின்னாத வானில்
மின்னுகின்ற மீன்கள்
சின்ன சின்ன வயிரம்
தெளித்த முத்துக்கள்
புன்னைகயின் அரும்பு
பூக்காத முல்லை
என்ன அழகாக
இருந்தன மீன்கள்''
11

என்று கூறுகின்றார். அத்தகைய விண்மீன்களின் அழகைக் கல்யாண்ஜி,

""காகிதப் பரீட்சை
முடிந்த தினம்
பார்க்கும் போஸ்டர் மீதெல்லாம்
மையை உதறிப் பூப்போட்டுச்
செல்லும் ரகளைப் பையன் போல்&
வானம் எங்கும்
நட்சத்திரக்
கோலம் உதறி உதறித்தன்
நீலக் கருப்புத் தெரு வழியின்
ஒரம் செல்லும் கீற்று நிலா
எந்தப் பரீட்
சை
எழுதிற்று?''

என்று பாடி அழகைச் சுவைக்க வைப்பதைக் காண முடிகின்றது.

காலத்திற்கு அழைப்பு:
அழகு காட்சி தரும் பொருள்களிலும் அவற்றைக் காண்பார் கருத்திலும் குடிகொண்டிருக்கின்றது எனலாம். கல்யாண்ஜி காலத்தைத் தன்னுடன் இருந்து இளைப்பாற வரும்படி அழைக்கும் விதமாக,

""மேக நிழல்
ஊர்ந்து விடும் & முன்
ஒடுகிற காலமே என்
உடனிருந்து இளைப்பாறு''

என்று பாடுவதில் அழகு வெளிப்படுவதை அறிய முடிகின்றது. ஒய்வு என்ற சொல்லையே அறியாத "காலத்தை' இளைப்பாற அழைக்கும் கல்யாண்ஜியின் கருத்தில் அழகு வேறுபட்டு அமைந்துள்ளதை அறிய முடிகின்றது.

விடிவெள்ளி:

கடற்கரையில் கதிரவனின் தோற்றத்தைக் காணக் காத்திருக்கும் மக்களுக்கு விடிவெள்ளியின் அழகு புலப்படவில்லை. புகைப்படக் கருவியுடனும், கறுப்புக் கண்ணாடியுடனும் கதிரவனின் தோற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். அத்தகைய மக்களிடம் விடிவெள்ளியைக் காண ஞான விழிகள் இல்லை என்பதை அவர்,

""தன்னந்தனியாக
நட்சத்திரங்களுக்கு
நீலாம்பரி பாடிவிட்டு
உதயத்திற்குக் கட்டியம் கூறிப்
பூத்திருக்கிற
ஒற்றை வெள்ளியைப்
பார்க்க
உங்களுக்கு
ஞான விழிகள் இல்லையா?''

என்று குறிப்படுகின்றார். தமிழன்பனும் அவருடைய கவிதையில்,

""வைகறையைக் கிழக்கு
எப்படி வரைகின்றது என்று பார்க்க
வந்து நின்றது
விடிவெள்ளி!''12

என்று விடிவெள்ளியின் வரவைக் கூறுகின்றார். ஆனால், அதனைக் காண மக்கள் இல்லை என்பதை,

""கடல் பார்த்தது
விடிவெள்ளியை
.பூமி பார்த்தது
விடிவெள்ளியை
இவை இரண்டைத் தவிர
இந்த கவிதை மட்டுமே பார்த்தது
விடிவெள்ளியை!''13

என்று அவர் எடுத்துரைக்கின்றார்.

வெயில்:
இக்காலத்தில் வெயின் கொடுமை மிகவும் கடுமையாக உள்ளது. அதனைத் ""தற்காகம்'' என்னும் கவிதையில் கல்யாண்ஜி பதிவு செய்யும் தன்மை அழகியல் சிறப்புடையது எனலாம். வெயின் செயலைப் பாரதிதாசன்,

""தேன் செய்யும் மலரும் தீயும்!
செந்தீயும் நீறாய்ப் போகும்!
கான், செய், ஊர், மலை, காடு, ஆறு
கடலெலாம் எரிவ தோடு
தான் செய்த தணல் தானும்
எரிகின்றான் பகலோன்!     அங்கு
வான் செய்த வெப்பத்தால் இவ்
வையத்தின் அடியும் வேகும்''14
என்று கூறுகின்றார். மேலும்,
""குட்டை வறண்டது தொட்டது சுட்டது
கோடை மிகவும் கெட்டது கெட்டது''15

என வெயிலின் தன்மையைக் குறிப்பிடுகின்றார். கல்யாண்ஜியும்,

""வைக்கோற் படப்படியில்
மழை விழுந்து சில நாளில்
முளைக்கும் நெல்மணியின்
பசுந்தளிரை மேய &
தும்பறுத்துத்
துள்ளிவரும்
புதுவெய்யில்''

என்று கூறி வெயிலும் அழகியலை வெளிப்படுத்துகின்றமையைக் காண முடிகின்றது.

மரம்:
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ், என்பது போல மரமில்லா ஊருக்கு மழை பாழ் என்று கூறலாம். மனிதனின் வாழ்வு தழைக்க மரங்கள் தழைக்க வேண்டும். தூங்கி எழும் மரம் அரத்தின் அழகினைக் கல்யாண்ஜி,

""தூங்கி மரங் காணும்
காலைக் கனவுகள்
கிரணங்கள்
தொட்டுக் கலையும்
அணில்களின்
உசுப்பல் பூஞ்
சோம்பல் உதிரும்''

என்று கூறுகின்றார். மேலும் பென்சில் சீவுகின்ற பொழுது மரங்கள் சரிவதாக உணர்ந்து அவர் வேதனை அடைவதைப்,

""பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொர மொரவென
மரங்கள் எங்கோ சரிய''

என்ற கவிதையின் வழி வெளிப்படுத்துகின்றார். மரத்தின் பயன் குறித்து,

""மனிதர்கள்
வாங்கி வைக்காத
மண்ணின் விசிறிகள்!''16
என்று கூறும் மேத்தா அவை மனிதர்கள் கையில் அகப்பட்டு கைதிகள் என்னும் பொருளில்,
""மானுடர் கரங்களில்
அகப்பட்டுக் கொண்ட
மண்ணின் கைதிகள்''17

என்றும் கூறியிருப்பதைக் காண முடிகின்றது.

தங்க அரளிப் பூவின் விருப்பம்:
ஒரு பூவின் விருப்பத்தைக் கல்யாண்ஜி ""குரங்குகளின் குரங்குளால் குரங்குகளுக்காக'' என்னும் கவிதையில் அழகியல் பார்வையுடன் எடுத்துரைத்துள்ளதை அறிய முடிகின்றது. ஒவ்வொரு காலையும் மக்களுக்குக் குரங்குகளால் துன்பம் ஏற்படுமோ என்ற பயத்துடனே விடிகின்றது. அதனால் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் ஒளித்து வைக்கின்றனர். அத்தகைய சூழல் தங்க அரளிப் பூக்கள் மட்டும் தேன் குடிப்பதற்காகக் குரங்குகளை எதிர்பார்க்கின்றமையைக் கல்யாண்ஜி,

""பயத்துடன் விடியும் காலை
குரங்குகள் வருமோ என்று''
எனவும்,
""கண்ணாடி, கண்மை டப்பி
சிணுக்கோரி, ஜன்னலோரச்
சாந்தெல்லாம் ஒளிந்து கொள்ள
தங்கரளிப் பூக்கள் மட்டும்
எதிர்பார்க்கும் தேன் குடிக்க''

என்றும் கூறுகின்றார். மேலும் மேத்தா ""அரளிப்பூ அழுகிறது'' என்னும் கவிதையில் இறைவனுக்குப் பூமாலையாக இயலாத அதனுடைய கவலையைப்,

""பூக்களிலே நானுமொரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலும்
பொன்விரல்கள் தீண்டலையே!
பொன் விரல்கள் தீண்டலையே நா
ன்
பூமாலை யாகலையே!''18

என்று பாடியுள்ளமையிருந்து அறிய முடிகின்றது.

கலையின் அழகு:

இன்றைய மக்களிடம் கலை ஈடுபாடு குறைந்து மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை பெருகியுள்ளதைக் காண முடிகின்றது. கலைப் பெருக்கம் மக்களிடம் வேண்டும் என்பதைப் பாரதியார்,

""வெள்ளத்தின் பெருக்கைப் போல்
கலைப் பெருக்கும், கவிப் பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும்
குருடரெல்லாம் விழிபெற்று பதவி கொள்வார்''19

என்று குறிப்பிடுகின்றார்.

கோயின் கலை அழகினைக் காணாது கற்சிலையை வணங்கவே மக்கள் செல்கின்றனர் என்பதைக் கல்யாண்ஜி,

""தேர்க் குதிரைகளின் விரைத்த குறியையும்
பிரகார விசாலத்தில் மயங்காமல்
யாழியின் அற்புதச் செதுக்கலையும்
கும்பிடத் தோன்றாமல்''
என்னும் கவிதையின் வழி குறிப்பிடுவதை அறிய முடிகின்றது.

காடு:
விலங்குகளுக்கு இயற்கை குடிலாகத் திகழ்வது காடு எனலாம். அதில் முட்புதர்கள் நிறைந்த தரையும், கருங்கற்களும், ஆறு, மரம் போன்றவையும் இருப்பதைப் பாரதிதாசன்,

""வானிடை ஒர் வானடர்ந்த வாறு & பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு! & நல்ல
தேனடை சொரிந்ததுவும்
தென்னைமரம் ஊற்றியதும்
ஆறு & இன்பச்
சாறு!''20

என்று கூறுகின்றார். அவ்வாறே சூரிய ரேகை கூட நுழையாத கானகத்தைக் கல்யாண்ஜி,

""காலம் காலமாய்
ரீரிய ரேகைகளின்
நுழைவையே மறந்த
கானகம் எங்கோ
உள்ளடங்கி இருக்கிறது''

என்று குறிப்பிடுகின்றார்.

தீராததீ:
மனிதன் வாழ்க்கைப் பாதையில் குகை இருட்டில் கண்டறிந்த தீயின்றி இன்றைய உலகம் இயங்காது எனலாம். பட்டினத்தார் தன் தாயின் உடலுக்கு கொள்ளி வைத்த பொழுது,

""முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே
யானும் மிட்ட தீ மூள்க மூள்கவே!''21

என்று பாடியுள்ளமையைக் காண முடிகின்றது. அத்தகைய தீயின் இயல்பினைக் கல்யாண்ஜி,

""நேரடியாக
குகை இருட்டில்
மூங்கில் காட்டில்
வெடித்த சிக்கி முக்கித் தீயின்
வெளிச்சத்தைத் தரசிக்கவில்லை
வெப்பத்தை ஸ்பரிசிக்கவில்லை
அதன் அணையாத யாத்திரையை
நம்புகிறேன் ஆனால்
அடுத்த யுகங்களின் குகைகளுக்கும்
வெளிச்சம் தரும்
வீரியம் உண்டு அதற்கு
தீயின்றித் தீராது உலகம்
தீயும் தீர்ந்து விடாது''

என்று பாடியுள்ளதன் வழி அறிய முடிகின்றது.

அழகியல் ஒத்துணர்வு:

கலைப்படைப்பின் பிறப்புக்கு ஒத்துணர்வே (நஹ்ம்ல்ஹற்ட்ஹ்) அடிப்படையானது எனலாம். இதனை,
""அழகியல் ஒத்துணர்வு என்பது, உள்ளார்ந்த போன்மை ஆக்கத்தை (ண்ய்ய்ங்ழ் ண்ம்ண்ற்ஹற்ண்ர்ய்) அதாவது போலச் செய்தல் என்பதற்குரிய ஒர் உந்துணர்வை நம் உள்ளத்தே தூண்டி விடுகிறது'' 22 என்பர். கவிஞன் தன்னைத் தானே மறந்து கட்டுப்பாடற்ற முறையில் கருவிப் பொருளோடு ஒன்றிப் போய்  விடுகிறான். ஒரு மரமாகப் பிறந்து குலுங்கக்குலுங்கப் பூக்க வேண்டும் என்று கல்யாண்ஜி கூறுவது அழகியல் ஒத்துணர்வை வெளிப்படுத்துகின்றது எனலாம். அதனை,

""எனக்கும் அந்த வாரம்
அருந்திருக்க வேண்டும்
ஒரு குடம் நீரில்
நானும் மரமாகி
குலுங்கக் குலுங்கப்
பூத்திருக்க வேண்டும்
நெஞ்சு நிறைகிற என்
பூக்களுக்காக என்னை யாரோ
மணந்திருக்க வேண்டும்'
'

என்ற கவிதையில் கல்யாண்ஜி குறிப்பிடுகின்றார். அவரைப் போன்றே மற்றொரு கவிஞரும்,

""மரங்கள் போல் வாழ்வு என்று கிடைக்கும்
மோனமும் அழகும் அங்கு கூடி நிற்கின்றன
கவலை இல்லை
விபத்தும் நோயியும் வறுமையும் உண்டு
கவலை இல்லை''23

என்று கூறிகின்றமையைக் காண முடிகின்றது.

அழகியலுக்கான வாழ்வியல் தடை:

அழகினைக் கண்டால் வாழ்வில் பேரின்பம் அடையலாம். அத்துடன் நல்லழகு வசப்பட்டால் துன்பமே இல்லை எனலாம். அத்தகைய அழகின் சிறப்பைப் பாரதிதாசன்,

""அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன்
பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்!
பழமையினால் சாகாத இளையவள் காண்!
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை''24

என்று கூறுகின்றார். அழகினைக் கண்டு இன்பம் அடைய இயலாது வாழ்க்கைச் சிக்கல்கள் நசுக்குகின்றன என்பதைக் கல்யாண்ஜி,

""நட்சத்திரங்களின் வைரச் சொட்டு
சிந்தாமல் சிந்துவதைப் பார்க்க
ஒரு பரபரப்பு வருகையில்
அகற்ற முடியாத துருப்பிடித்த
தாழ்ப்பாள்கள் உங்களை நசுக்குகிறதா?''

என்னும் கவிதையின் வழி எடுத்துக் காட்டுகின்றார்.

தொகுப்புரை:
அழகியலின் பதிவாக அமையும் கல்யாண்ஜியின் கவிதைகளில் வாழ்வியல் கண்ணோட்டத்தையும், கலைக் கண்ணோட்டத்தையும் காண்பதோடு மட்டுமல்லாமல் மழை, விண்மீன், விடிவெள்ளி, வெயில், மரம், தங்க அரளிப்பூ, காடு, தீ போன்றவற்றில் காணலாகும் அழகுகளையும் அழகியல் உணர்வுடன் கவிஞர் பாடியுள்ள திறத்தினையும் இக்கட்டுரையின் வழி அறிய முடிகின்றது.

குறிப்புகள்:
1.கைலாசபதி,இலக்கியமும் திறனாய்வும்,ப.,62.
2.மேலது,ப.,63.
3.வாழ்வியற் களஞ்சியம்,தொகுதி-1,ப.,890.
4.கைலாசபதி,மு.நூ.,ப.65.
5.மீனாட்சி முருகரத்தினம்,அழகியல்,ப.,55.
6. மேலது,ப.,63.
7.கைலாசபதி,மு.நூ.,பக்.,63,34.
8.மேலது,ப.,55
9.பாரதிதாசன்,இளைஞர் இலக்கியம்,ப.,7.
10.பாரதியார் கவிதைகள்,ப.,470.
11.பாரதிதாசன் கவிதைகள்,ப.,1098.
12.ஈரோடு தமிழன்பன்,பனிபெய்யும் பகல்,ப.,81
13.மேலது,ப.,84.
14.பாரதிதாசன் கவிதைகள்,ப.,432.
15.மேலது,ப.,1093.
16.மு.மேத்தா,கண்ணீர்ப் பூக்கள்,ப.,38.
17.மேலது,ப.,39.
18. மேலது,ப.,42.
19.பாரதியார் கவிதைகள்,ப.,34.
20.பாரதிதாசன் கவிதைகள்,ப.,158.
21.ம.பொ.சிவஞானம்,திருக்குறளிலே கலை பற்றிக் கூறாததேன்?,ப.,150.
22.தி.சு.நடராஜன்,திறனாய்வுக் கûலை,ப.,92.
23.பெ.சு.பாசு சந்திர போசு,எது புதுக்கவிதை?ப.,54
24.பாரதிதாசன் கவிதைகள்,ப.,413.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.'

*கட்டுரையாளர்: - முனைவர் திருமதி நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -